Tuesday, October 8, 2019

ஜாதி பார்க்கும் தமிழ்தேசியம் ஹராமா?

Rajarajan RJ
2019-10-08

"இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஏன் தங்களை தமிழர்கள் என்று சொல்லாமல் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்" - என்று யோசித்து இருக்கிறேன். அதற்கு அவர்கள் மதப்பற்று மட்டுமே காரணம் என நினைத்திருக்கிறேன்.

இப்போது யோசித்து பார்த்தால், "முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொண்டாலும், சாதி சமய வெறிகொண்ட யாழ்ப்பாணத்து தமிழர்கள், இஸ்லாமியர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" - என்றே நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இப்போது நாம் தமிழர் போன்ற கட்சிகளின் "இஸ்லாமியர்களை கவனத்துடன் அணுக வேண்டும்" - என்ற பார்வையும் இலங்கையில் இருந்து இறக்குமதியானது போலத்தான் இருக்கிறது.

எப்படி இந்துத்துவவாதிகள், இஸ்லாமியர்களை "தாய் மதத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறுகிறார்களோ, அதேப்போல இந்த தமிழ்தேசியவாதிகளும் "இஸ்லாத்தையும்/ கிருஸ்துவ மதத்தையும் விட்டு விட்டு தமிழர் மதமான சைவத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

கடைசியாக ஒன்று,

உங்கள் மதம், உங்களுக்கு படிப்பை தருகிறதா!
உங்கள் மதம், உங்களை சமமாக நடந்துகிறதா! அப்படி என்றால் உங்கள் மத அடையாளம் தமிழன் என்ற அடையாளத்தைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தது இல்லை.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை கற்பிக்கும் எந்த அடையாளத்தையும் ஏற்காமல் இருப்பதே நல்லது. இஸ்லாமியன் என்றால் சாதியற்றவன் எனப்பொருள்.

"இன்னக்கிதான் அவன் இஸ்லாமியன், நேத்து அவன் அகமுடையத்தேவர்" - என்பது தமிழ் தேசியம் அல்ல. இந்து தேசியத்தின் கள்ளக் குழந்தையான சாதி தேசியம். புரிந்து கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்!

https://www.facebook.com/1671484748/posts/10213332361418145/

Monday, October 7, 2019

ஹாம் ரேடியோ - RS Prabhu

RS Prabhu
2019-10-08

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம்.

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர்.

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர்.

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர்.

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது.

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது.

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும்.

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே. அது நினைவுக்கு வரவில்லை என்றால் இந்த சுட்டியில் கேட்டுப் பாரக்கவும் (https://youtu.be/h6WUC8abUA8)

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria's Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது.

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல   குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி.

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக்  கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது.

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC,  தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது.

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 - 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி  டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy  3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம்.

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப்  பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

VHF (Very High Frequency, 30 - 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள்.  கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன.

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக  ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே.

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது.

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 - 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் நடைமுறை.  வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார்.

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும்  ஹாம் வானொலி மிகவும் அன்றாடம் இயல்பாகப்  பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப்  பெருமைப்படச் செய்யும்.

73,
பிரபு
VU3WWD

https://www.facebook.com/595298772/posts/10156948731663773/

Sunday, October 6, 2019

ஐயர் என்பதன் பொருள்

Satiyaperumal balusamy
2019-10-06

ஐ என்றால் தலைமை. தாய்வழிச் சமூகத்தில் இனக்குழுவிற்குத் தலைமையாக இருந்த பெரும் பெண்ணை ஐயை என்றனர். ஐ+ஐ.  அதாவது பெருந்தலைமை! ஐயை என்பது மதுரை புக்க கோவலன் கண்ணகியர்க்கு அடைக்கலம் வழங்கிய பெருமாட்டி-சிலப்பதிகார மாதரியின் மகளின் பெயரும் கூட. ஐயம்மாள் என்ற பெயரில் சில உறவினர்கள் இன்றும் எனக்குண்டு.

தந்தைவழிச் சமூகத்தின் தலைமையை ஆண் ஏற்ற பொழுது அவன் வெறும் ஐ. குடும்பத் தலைவனும் 'ஐ'.  தம்+ஐ = தந்தை, எம்+ஐ = எந்தை, நும்+ஐ =நுந்தை, உம்+ஐ=உந்தை.

சமூகத்தின் தலைவரான 'ஐ' யே அச்சமூகத்தின் வழிகாட்டி. அறிவுக் கருவூலம். பட்டறிவுப் பெட்டகம். போரில் முன் செலும் பெருவீரன்.  ஐ யற்ற சமூகம் மேய்ப்பனற்ற மந்தை போல. அதனால் தான் போரில் தலைவன் மாண்டதும் திகைத்துச் சிதறிவிடுகிறது படை. ஐயை ஆகிய தலைவி மாண்ட செய்தியைக் கேட்டதும் நம்பமுடியாமல் 'ஐயையோ?' என வினவி வியந்து அஞ்சினர். ஐ யாகிய தலைவன் மாண்ட போதும் 'ஐயோ' என அழுதனர்.

ஆக, ஐ என்பது தலைவரைக் குறிக்கும் சொல். அதனால் தான் திருவள்ளுவரை ஐயன் என அழைக்கச் சொன்னார் கலைஞர். நமது வீட்டின் பெரியவர்கள் மட்டுமல்ல தந்தை பெரியார் கூட நமக்கு ஐயா தான். வயதில் மூத்த பாட்டனை ஐயிரு எனப் படர்க்கையில் சுட்டினோம்.

ஆனால், பி ஏ கிருஷ்ணனைப் போன்ற தமிழ் விற்பனர்களுக்கு (சரியாகத் தான் படித்தீர்கள் ஐயன்மீர்,  விற்பன்னர் அல்ல விற்பனர் தான்)மாத்திரம் ஐயர் என்ற சொல் பார்ப்பனரைக் குறிக்கும் சொல்லாகி விடுகிறது. 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்னும் தொல்காப்பிய அடிகளில் வரும் 'ஐயர்' அவரைப் பொறுத்தவரை பார்ப்பனரைக் குறிக்கும் சொல். இப்படிப் பொருள் கோள்வது பெருநோய். இந்த நோய்க்கு மனந்திருந்தலை விடவும் வேறொரு மாமருந்தே இல்லை.

அந்தணர் என்று குறிப்பிடப்படுபவர் பார்ப்பனர் என்றால் பார்ப்பனர்கள் மிகவும் நல்லவர்களாக, அறம் பிறழாதவர்களாக, எல்லாவுயிர்களையும் சமமாக நடத்துபவர்களாக இருக்கவேண்டும் என்கிறான் எம் ஐயன் திருவள்ளுவப் பெருந்தகை. நானறிந்தவரை பார்ப்பனர்களுக்குத் தங்களைத் தவிர மற்ற தமிழரெல்லோரும் சூத்திரரே. "சூத்ரத்தி பாத்திரம் கழுவ வந்தாளோ?" "சூத்ரன் இளநீர் கொய்தானோ?" என்பதே அவர்கள் மொழி.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் என்பது திருவள்ளுவம்.

இந்த அளவுகோலை நிறைவு செய்யும் தகைமை, சென்ற தலைமுறைப் பார்ப்பனர் வரை இருந்ததில்லை. பாரதியார் உள்ளிட்ட விடுபடல்கள் பார்ப்பனர்கள் இல்லை. மனிதர்கள்!  அதனால் அந்தணர் எனும் சொல் அறம் காத்த நல்லவர்களான ஆசீவக பௌத்த சமணத் துறவியரைக் குறித்ததாகவே இருக்கவேண்டும் என்பது பனிக்கூழ்மேற் செர்ரிப்பழம்!

இந்த அளவு கோள்களை வைத்துக்கொண்டு அளந்தால் பி ஏ கிருஷ்ணனைப் போன்ற பொய்யர்களின் உயரம் பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவாகவே படும்.

அதனால், கீழடி பற்றிப் பி ஏ கிருஷ்ணன்கள் ஓயாது மாரடிக்கும் பிலாக்கணங்கள் வெறும் பிலாக்கணங்களேயன்றி வேறில்லை. அழுது தொலைக்கட்டும் அந்தப் பிணங்கள். நாம் நெஞ்சுயர்த்திச் செல்வோம். சொல்வோம் "தமிழெங்கள் உயிருக்கு நேர்"

https://m.facebook.com/story.php?story_fbid=3258934847480432&id=100000918452805

Wednesday, October 2, 2019

கால எந்திரம் - ஸ்டீபன் ஹாகின்ஸ்

#காலஎந்திரம்

ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.

ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.

இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு.
ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.

இதன் அர்த்தம் என்னவென்று பார்ப்பதற்கு, இயல்பாக, அன்றாடம் நாம் செய்யும் ஒரு கார் பயணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்துகொள்வோமாக. நேர்கோட்டில் ஓட்டிச் செல்லும்போது நிநீங்கள் ஒற்றைப் பரிமாணத்தில் பயணிக்கிறீர்கள். வலதுபக்கமோ இடதுபக்கமோ திம்பும்போது, இரண்டாவது பரிமாணத்தைச் சேர்க்கிறீர்கள். ஒரு திருகலான மலைப்பாங்கான பாதையில் மேலும் கீழும் ஓட்டிச் செல்லும்போது, உயரத்தையும் இது சேர்ப்பதால், எல்லாவித மூன்று பரிமாணங்களிலும் பயணிப்பதாக ஆகிறது. ஆனால், காலத்தினுள் நாம் பயணிப்பது எவ்வாறு சாத்தியம்? நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிப்பதற்கான வழியை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?

ஒரு சிறு விஞ்ஞானப் புனைகதைக்குள் நாம் சிறிது ஆழ்வோம். காலப்பயணத் திரைப்படங்களில், பரந்து விரிந்த, ஆற்றல்-பசி கொண்ட எந்திரம் ஒன்று தொடந்து சித்தரிப்படுவது நமக்குத் தெரியும்.நான்காவது பரிமாணத்தின் ஊடே ஒரு வழியை – காலத்தினூடே ஒரு குடைவுப்பாதையை – அந்த எந்திரம் உண்டாக்கும். காலப் பயணி ஒருவர் – தைரியமும் பெரிதும் மடத்துணிச்சலுமுள்ள தனிமனிதன் ஒருவன் – இன்னதென்று அறியா அதற்குள் செல்லத் தயாராகி, காலச் சுருங்கைப் பாதையினுள் அடியெடுத்து வைத்து, எது என்று தெரியாத இன்னொரு காலத்தில் வெளிப்படுவான். இந்தக் கருதுகோள், வலிந்து பெறப்பட்டதாக இருக்கலாம். எதார்த்தம் இதிலிருந்த மிக வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, அப்படியொன்றும் மிகப் பைத்தியகாரத்தனமானதல்ல.
இயற்பியலாளர்கள் கூட, காலத்துக்குள் போகும் சுருங்கைவழி பற்றி சிந்தித்து வந்துள்ளார்கள். ஆனால் நாம் இதற்கு, ஒரு வேறுபட்ட கோணத்திலிருந்து வரவேண்டும். இயற்கையின் விதிகளுக்குள்ளாக, கடந்தகாலம் அல்லது எதிர்காலத்துக்கான நுழைவாயில்கள் என்றாவது சாத்தியமாகுமா என்று நாம் வியக்கலாம். எதிர்பார்த்தபடியே, அப்படிப்பட்டவை உள்ளன என்று நாம் இன்று நினைக்கிறோம். அதற்கும் மேலாக, நாம் அவற்றுக்கு புழுத்துளைகள் (வா[ர்]ம் ஹோல்) என்று பெயரும் கொடுத்திருக்கிறோம். உண்மை என்னவென்றால், இந்த புழுத்துளைகள் எல்லாம் நம்மைச் சுற்றிலும் உள்ளன – ஆனால், காண முடியாத அளவு மிகச் சின்னவையாக மட்டுமே அவை உள்ளன. புழுத்துளைகள் மிக நுண்ணியவை. வெளியிலுள்ளும் காலத்தினுள்ளும் அவை, மூலை முடுக்குகளிலும் பிளவுகளிலும் காணப்படுகின்றன. இது கடினமான கருதுகோளாக உங்களுக்குத் தென்படலாம். ஆனால், என்னோடு தொடர்ந்து வாருங்கள்.
தட்டையானது அல்லது ஸ்திரமானது என்று எதுவுமில்லை. நீங்கள், போதுமான அளவு மிக நெருக்கமாக எதையும் கவனித்துப் பார்த்தால், அதனுள் துளைகளையும் சுருக்கங்களையும் கண்டுபிடிக்கலாம். இது அடிப்படையான இயற்பியல் விதி. காலத்துக்கும் கூட இதைப் பொருத்தலாம். மெத்தென்ற நீர்ப் பந்து போன்றவை கூட நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் கொண்டிருக்கும். இப்போது, முதல் மூன்று பரிமாணங்களில் இதுதான் உண்மை என்று காட்டுவது எளிதானது. ஆனால் – என்னை நம்புங்கள் – நான்காம் பரிமாணத்திலும் இதுவே உண்மை.

காலத்திலும் நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் இருக்கின்றன. மிகமிகச் சிறிய அளவில் உள்ள, மூலக்கூறுகளைக் காட்டிலும் சிறியதான, அணுவைக் காட்டிலும் சிறியதானவற்றினுள், குவாண்டம் நுரை என்று அழைக்கப்படுபவைகளுக்கான இடம் இருப்பதை நாம் அறிகிறோம். இங்கேதான் புழுத்துளைகள் இருக்கின்றன. வெளியினுள்ளும் காலத்தினுள்ளும் நுண்ணிய சுருங்கை வழிகள் அல்லது குறுக்கு வழிகள், இந்த குவாண்டம் உலகுக்குள், நிரந்தரமாக உருப்பெற்றபடி, அழிவுபெற்றபடி, மறுவடிவம் பெற்றபடி இருந்துவருகின்றன. மேலும் இவை உண்மையில், தனித்தனி இரு இடங்களையும் வேறுபட்ட இரு காலங்களையும் இணைப்பவை.

துரதிருஷ்டவசமாக, இந்த நிஜமாக வாழும் காலச் சுருங்கை வழிகள், ஒரு சென்டிமீட்டருக்கும் பில்லியன்-டிரில்லியன்-டிரில்லியன் அளவு சிறியவை. ஒரு மனிதன் உட்புகுந்து செல்லமுடியாத மிகச் சிறு வழிகள் – ஆனால், இந்த இடம்தான் புழுத்துளைக் கால எந்திரங்கள் பற்றி யோசனைக்கு இட்டுச் செல்கிறது. ஒரு புழுத்துளையைக் கைப்பற்றுவதும் அதை ஒரு மனிதனோ அல்லது ஒரு வானவெளிக் கப்பலோ கூட புகுந்து செல்வதற்கு ஏற்றவாறு, போதுமான அளவுக்குப் பெரிதாக பல டில்லியன் மடங்கு அதை உருப்பெருக்குவதும் சாத்தியமாகலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.

ஒருவேளை, போதுமான அளவுக்கு சக்தியையும் முன்னேறிய தொழில்நுட்பத்தையும் ஈந்தால், ஆகாயவெளியில் கூட, ஒரு மாபெரும் புழுத்துளையை கட்டமைக்க முடியும். இதைச் செய்ய முடியும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படிச் செய்தால், அது ஒரு உண்மையில் மகத்தான சாதனமாகத் திகழும். அதன் ஒரு முனை இங்கே பூமிக்கு அருகிலிருக்க, மற்ற முனை மிக மிகத் தொலைவில், ஏதாவதொரு தொலைதூரக் கிரகத்தின் அருகிலிருக்க வேண்டும்.

கோட்பாட்டுரீதியில், ஒரு காலச் சுருங்கையோ அல்லது ஒரு புழுத்துளையோ, மற்ற கிரகங்களுக்கு நம்மை இட்டுச்செல்வதைக் காட்டிலும் அதிகமாகவே செயல்பட முடியும். இரு முனைகளும் அதே இடத்தில் உள்ளதாய், துரத்தால் அல்லாமல் காலத்தால் பிரிக்கப்பட்டதாய் அது இருந்தால், விண்கலம் ஒன்று உள்ளே பறந்து போக முடிந்து, பூமிக்கு அருகில் அது மீண்டும் – தொலைதூரக் கடந்த காலத்தில் – வெளிப்படவும் முடியும். கலம் ஒன்று தரையிறங்கக் கீழே வந்ததைக் காண, ஒரு டைனோசார் சாட்சியாக இங்கே இருக்கலாம்.

வரவாற்றில் அப்போலோ 10 தான் மனிதரோடு சென்ற அதிவிரைவு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகததை எட்டியது. ஆனால், காலத்தினுள் பயணிக்க அதை விட 2000 மடங்கு அதி வேகத்தில் நாம் செல்லவேண்டியிருக்கும். இன்று, நான்கு பரிமாணங்களில் பயணிப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எளிதானதல்ல என்பதையும், உங்கள் தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொள்ள முடியாமல், தடுமாற வைக்கும் ஒரு கருதுகோள் இந்த புழுத்துளைகள் என்பதையும் நான் அறிவேன்.
ஆனால், கொஞ்சம் நில்லுங்கள். இன்றாவது அல்லது எதிர்காலத்திலாவது, ஓரு புழுத்துளை வழியாக காலப்பயணம் மேற்கொள்வது மனிதரால் சாத்தியமா என்பதை வெளிப்படுத்த ஒரு எளிய பரிசோதனையைச் செய்ய நான் நினைத்துள்ளேன். எளிய பரிசோதனைகளும் ஷாம்பெய்னும் எனக்குப் பிடிக்கும். ஆகவே நான், எனக்குப் பிடித்தமான இரு விஷயங்களை இணைத்து எதிர்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்குக் காலப் பயணம் செய்வது சாத்தியமா என்று பார்க்கப் போகிறேன்.
எதிர்காலத்துக் காலப் பயணிகளுக்கான ஒரு வரவேற்பு விருந்து ஒன்றை நான் நடத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், இதில் ஒரு திருகல் உள்ளது. விருந்து நடந்து முடிந்த பிறகுதான், இதைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும்படி நான் செய்யப் போகிறேன். காலத்திலும் வெளியிலும் சரியான ஒருங்கிணைப்பைத் தந்தவர்களுக்குத்தான் நான் ஒரு அழைப்பிதழை உருவி எடுத்துத் தரப்போகிறேன். அதன் பிரதிகள், ஏதாவது ஒரு வடிவில், பல் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை, அழைப்பிதழில் உள்ள தகவலை எதிர்காலத்தில் வாழ்ந்திருக்கப்போகும் யாராவது ஒருவர் ஒருநாள் கண்டுபிடிக்கப்போகிறார். எனது விருந்துக்கு ஒரு புழுத்துளைக் கால எந்திரத்தைப் பயன்படுத்தி – ஒருநாளைக்கு காலப்பயணம் சாத்தியம்தான் என்பதை நிரூபிக்கும்வண்ணம் – பின்நோக்கி வரப்போகிறார்.

இதற்கிடையில், எனது காலப்பயண விருந்தாளிகள் எந்த நிமிடத்திலும் இப்போது வரப்போகிறார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. ஆனால், நான் இதைச் சொல்லும்போது, எந்த விருந்தாளியும் வரவில்லை. என்ன அவமானம்? ஒரு எதிர்கால மிஸ் யுனிவர்ஸாவது கதவுக்கு உள்ளே அடியெடுத்து வைப்பாள் என்று நான் நம்பினேன். எனவே, ஏன் இந்தப் பரிசோதனை வேலை செய்யவில்லை? ஒரு காரணம் – இறந்தகாலத்துக்குக் காலப்பயணம் செய்கையில் ஏற்படுவது என்று எல்லோரும் அறிந்த பிரச்சனை – முரண்புதிர்கள் (பாரடாக்ஸ்) என்று நாம் அழைக்கும் ஒரு பிரச்சனை.
நினைத்துப் பார்ப்பதற்கே வேடிக்கையானவை இந்த முரண்புதிர்கள். அதில் மிகப்பிரபலமான ஒன்று – ‘தாத்தா’ முரண்புதிர். ‘பைத்தியகார விஞ்ஞானி’ முரண்புதிர் என்று ஒரு புதிய எளிய பதிப்பும் என்னிடம் இருக்கிறது.
திரைப்படங்களில், விஞ்ஞானிகளைப் பெரும்பாலும் பைத்தியம் பிடித்தவராகச் சித்தரிக்கும் விதம் எனக்குப் பிடித்தமானது அல்ல என்றாலும், இந்த விஷயத்தில் அதுதான் உண்மை. விஞ்ஞானியான அந்த ஆள், தம் லாழ்நாள் முழுதையும் இது தின்றுவிடும் என்று தெரிந்தும், ஒரு முரண்புதிரைப் படைக்கத் தீர்மானிக்கிறார் – எப்படியோ, ஒரு புழுத்துளையை, ஒரு நிமிடத்தில் இறந்தகாலத்துக்குள் செலுத்தக் கூடிய கால நுழைவாயில் ஒன்றை, அவர் கட்டமைக்கிறார். புழுத்துளை வழியாக, ஒரு நிமிடத்துக்கு முன் தான் எவ்வாறு இருந்தோம் என்பதை விஞ்ஞானியால் பார்க்கமுடியும். ஆனால் , தனது முந்திய நான்-ஐ சுட்டுவிட நமது விஞ்ஞானி தீர்மானித்து புழுத்துளையைப் பயன்படுத்துகிறார் என்றால்? அவர் இப்போது இறந்திருப்பார். ஆகவே, துப்பாக்கிக்குண்டை வெடித்தது யார்? இதுதான் அந்த முரண்புதிர். இது ஒன்றும் புரிந்துகொள்ளும்படி இல்லை. இந்தவகை நிலமைதான் பிரபஞ்சத்தோற்றவிய லாளர்களுக்கு பயங்கரக் கனவை உண்டாக்கிவருவது.
ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் ஆட்சி செலுத்துகிற அடிப்படையான ஒரு விதியை இந்தவகைக் கால எந்திரம் சீர்குலைத்துவிடும் – காரியத்துக்குமுன் காரணம் நிகழ்கிறது – முறையான வழியில் அல்லாமல். பொருட்கள் தாமாகவே அசாத்தியச் செயலை மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறவன் நான். அப்படி அவற்றால் முடியும் என்றால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ‘கயோஸ்’ நிலைக்கு இறங்குவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. ஆகவே, இந்த முரண்புதரை நிகழாமல் தடுக்க ஏதாவதொன்று எப்போதுமே நிகழும் எந்று நான் நினைக்கிறேன். தன்னைத் தானே சுட்டுவீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையை நமது விஞ்ஞானி அடையமாட்டார் என்பதற்கு எப்படியாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் – இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும் – புழுத்துளைதான் ஒரு பிரச்சனையாக உள்ளது.

முடிவில், இது போன்ற ஒரு புழுத்துளை இருந்துவர முடியாது என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டம் தான் அதற்கான காரணம். ராக் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்போதாவது போயிருந்தால் ஒன்றின்மீது ஒன்றேறி ஏற்படும் இந்த கீரீச்சிடல் சப்தத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதுதான்
பின்னூட்டம். இதற்கு என்ன காரணம் என்பது எளிதானது. மைக்ரோபோனில் ஒலி நுழைகிறது.
ஒயர்கள் வழியாக மாறுதலூட்டப்பட்டு, ஆம்ப்ளிஃபயரால் பெருக்கப்பட்ட ஒலி, ஸ்பீக்கர்கள் வழியாக வெளியே வருகிறது. ஆனால், மைகினுள் அது திரும்பச்சென்று, ஸ்பீக்கர்களிலிருந்து மிக அதிகமாக ஒலி ஏற்பட்டால், அது சுற்றிக்சுற்றி வளைய வந்து, ஒவ்வொரு தடவையும் அதிகரித்த ஒலியைப் பெருகிறது. அதைத் தடுக்க ஒன்றும் இல்லாவிட்டால், பின்னூட்டத்தால் ஒலிபெருக்கி அமைப்பே ஆழிந்துவிடும்.

இதே விஷயம்தான் ஒரு புழுத்துளையிலும் ஏற்படும் – ஒலிக்கு பதிலாக கதிர்வீச்சு. புழுத்துளை விரிவடைந்த உடனுக்குடனே, இயற்கையான கதிர்வீச்சு அதில் நுழையும். வளையமாகச் சுற்றிவருவதில் அது முடியும். பின்னூட்டம் வலிமையானதாக ஆகிவிட்டால், அது புழுத்துளையை அழித்துவிடும். ஆகவே, நுண்ணிய புழுத்துளைகள் இருப்பதாக இருந்தாலும், எதில்வரும் ஒரு குறிப்பிட்ட நாளில் அதை பெருக்குவது சாத்தியமாகக் கூடும். ஆனால், அதை ஒரு கால எந்திரமாகப் பயன்படுத்துவதற்கு போதுமான கால அளவுக்க அது நிலைத்திருக்காது. எனது விருந்துக்கு யாரும் திரும்ப வர முடியாததற்கு இதுதான் உண்மையான காரணம்.

முரண்புதிர்கள் ஏற்பட்டால் தவிர, இறந்த காலத்துக்கான எந்த வகைக் காலப் பயணமும் – புழுத்துளை வழியாகவோ அல்லது வேறு முறைப்படியோ – அசாத்தியம் என்பதுதான் நிலமை.
ஆகையால், இறந்த காலத்துக்கான காலப் பயணம் என்றைக்கும் கைகூடப்போவதில்லை என்பது தான் சோகம். டைனோசார் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம்தருவது; வரலாற்றாசிரியர்களுக்கு நிம்மதி தருவது.

ஆனால், இன்னும் கதை முடியவில்லை. இதனால், எல்லாவித காலப் பயணங்களுமே சாத்தியமில்லை என்று ஆகிவிடவில்லை. காலப் பயணம் சாத்தியம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்துக்கான காலப் பயணம். ஒரு நதி போன்று ஓடுகிறது காலம். காலத்தின் நீரோட்டத்தில், நாம் ஒவ்வொருவருவருமே இரக்கமற்று இழுத்துச் செல்லப்படுவோம் என்றே தோன்றுகின்றது.ஆனால், காலம் ஒரு நதி போன்றது என்பது இன்னொரு விதத்தில்தான். அது, வேறுவேறு இடங்களில் வேறுவேறு வேகங்களில் ஓடுகிறது. அதுதான் எதில்காலத்துக்குள்ளான பயணத்துக்குத் திறவுகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் இந்தக் கருத்து முன் மொழியப்பட்டது. காலம், வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும் இடங்களும் இருக்கும் எனபதையும் மற்ற இடங்களில் காலம் வேகத்தையும் அடையும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அவருடையது மிகச்சரியானது. சரியாக, நம் தலைக்கு மேலேயே அதற்கான சான்று இருக்கிறது. மேலே ஆகாயவெளியில்.

அதுதான், குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் அல்லது ஜிபிஎஸ். செயற்கைக்கோள்களின் தொடர்வரிசை ஒன்று, பூமி சுற்றிவரும் கோளப்பாதையில் உள்ளது. செயற்கைக்கோள் மூலமான வான்வழிச் செலவை, செயற்கைக்கோள்கள் சாத்தியமாக்கியுள்ளன. ஆனால் அவை, கீழே பூமியில் நிகழ்வதைவிட வான்வெளியில் காலம் அதிவேகத்தில் ஓடுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு விண்கலத்தின் உள்ளும் மிகத் துல்லியமான கடிகாரம் உண்டு. ஆனால் அவை மிகச் சரியாகக் கணித்தபோதிலும் ஒவ்வொரு நாளினுடைய ஒரு நிமிடத்தின் பில்லியன் மடங்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துக் கொள்கிறது. அந்த மாற்றத்தை சரிசெய்து கொள்ளும் செயல்முறை அதிலுள்ளது. இல்லாவிட்டால், அந்த துளி வித்தியாசம், எல்லாச் செயலையும் சீர்குலைத்து விடும் – ஒரு நாளைக்கு ஆறு மைல் மெதுவாகப்போகும்படி பூமியிலுள்ள ஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்தையும்பாதித்துவிடும். இப்படி இதனால் உண்டாகும் தற்காப்பற்ற முடக்கநிலையை நீங்களை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

பிரச்சனை, கடிகாரங்களில் இல்லை. கீழே இருப்பதைவிட வெளியில் காலம் அதிகரிப்பதால் அவை வேகமான ஓடுகின்றன. இந்த அசாதாரணமான விளைவுக்குக் காரணம், பூமின் பொருள்திணிவில் இருக்கிறது. காலத்தால் பொருள் இழுத்துச் செல்லப்படும்போது, ஒரு நதியின் வேகக் குறைவான பகுதிபோல், அதை வேகக் குறைப்புச் செய்கிறது என்பதை ஐன்ஸ்டீன் உணர்ந்தார். பொருள் கனமாக இருப்பதற்கேற்ப காலத்தால் அது இழுபடுவதும் அதிகரிக்கும். இந்த திடுக்கிட வைக்கும் எதார்த்தம், எதிர்கால காலப் பயணத்துக்கான சாத்தியத்துக்கான கதவை திறந்துவிட்டுள்ளது.

பால்வீதியின் சரியான மையத்தில், நமக்கு 26,000 ஒளியாண்டுத் தூரத்தில், பால்வெளிமண்டலத்திலேயே மகா கனமான பொருள் ஒன்று உள்ளது. தனது சுய ஈர்ப்புவிசையால் நான்கு மில்லியன் அளவு சூரியன்களின் பொருள்திணிவை தனியொரு புள்ளில் இறுக்கியடைத்துக் அடக்கிக் கொண்டதாய் உள்ள மகா பொருள்திணிவு கொண்ட கருந்துளை (பிளேக் ஹோல்)தான் அது. கருந்துளைக்கு அருகில் நீங்கள் எவ்வளவு நெருங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அதன் ஈர்ப்புவிசை வலிமயுடையதாய் இருக்கும். உண்மையிலேயே அருகில் போனால், ஒளிக்கதிரால் கூட தப்பிக்கமுடியாது. இந்தமாதிரி ஒரு கருந்துளை, காலத்தின் மீது விசித்திரமான விளைவை ஏற்படுத்துகிறது. பால்மண்டலத்தின் வேறு எதையும்விட அதை மிக மெதுவாகச் செல்வதாக ஆக்கிவிடுகிறது. இது அதை ஒரு இயற்கையான கால எந்திரமான ஆக்கிவிடுகிறது.

இதைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட ஒரு விண்கலம், இந்த விசித்திர நிகழ்வினைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி நான் கற்பனை செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரு விண்வெளிப் பயண நிறுவனம் இந்த செயல்திட்டத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடிந்தால், ஒவ்வொரு முழுச் சுற்றையும் முடிக்க அதற்கு 16 நிமிடங்கள் ஆவதை அவர்கள் கவனிக்கமுடியும்.

ஆனால், இந்தத் திணிவுகொண்ட பொருளின் அருகில், விண்கலத்தின் தளத்தில் உள்ள தைரியசாலிகளுக்கு, காலம் மெதுவாகக் கீழிறங்கும். பூமியின் ஈர்ப்புவிசை இழுவையைவிட,
மிக அதிக தீவிர கதியில் அதன் விளைவு இங்கே இருக்கும். குழுவினரின் காலம் பாதியாகக் குறைந்துபோகும். ஒவ்வொரு 16 நிமிட சுற்றிலும், எட்டு நிமிட நேரத்தை மட்டும்தான் அவர்கள்
அனுபவம் கொள்வார்கள்.

கூற்றிச் சுற்றி அவர்கள், கருந்துளைக்கு மிகத் தொலைவில் போகப்போக, ஒவ்வொருவரும் நேரத்தின் அரைப்பங்கையே அனுபவம் கொள்வார்கள். விண்கவமும் அதன் குழுவும் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருப்பார்கள். தம் வாழ்நாளின் ஐந்து ஆண்டுகள் அவர்கள் கருந்துளையைச் சுற்றுகிறார்கள் என்று கற்பனைசெய்து கொள்ளுங்கள். மற்ற இடத்தில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, பூமியிலுள்ள யாவரும் அவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வயதானவர்களாக இருப்பார்கள்.

ஆகவே, மகா பொருள்திணிவுகொண்ட கருந்துளை, ஒரு கால எந்திரமாக ஆகிறது. ஆனால், இது நடைமுறையில் மிகச்சரியாக நிகழமுடியாதுதான். புழுத் துளைகள் மேல் அது சலுகைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், முரண்புதிர்களை அது எழுச்சிபெறச் செய்யாது. கூடவே, பின்னூடட்டத்தின் ஒரு ‘பளிச்’சிடலால் அது தன்னையே அழித்துக் கொள்ளாது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. அதற்கு நீண்டகாலம் இருக்கிறது. எதிர்காலத்துக்குள் மிகத்தொலைவில் நம்மை அது இட்டுச் செல்லாது. அதிருஷ்டவசமாக, காலத்தில் பயணிப்பதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. இதுவே ஒரு உண்மையான கால எந்திரத்தை நாம் கட்டமைப்பதந்கு இறுதியானதும் சிறந்ததுமான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நீங்கள் பயணத்தை மிக மிக வேகமாகப் செய்யதால் போதும். கருந்துளைக்குள் உறுஞ்சப்படுவதைத் தவிர்க்கத் தேவைப்படும் வேகத்தை விடவும் அதிவேகமாகப் போக வேண்டும். பிரபஞ்சம் பற்றிய இன்னொரு விநோதமான ஒரு நடப்புத்தான் இதற்கான காரணம். ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகின்ற, நிமிடத்துக்க186,000 மைல்கள் என்பதுதான் பிரபஞ்சவெளியின் வேக எல்லை. இந்த வேகத்தை எதுவும் மீறிவிட முடியாது. அறிவியலில் மிகவும் சிறப்பாக நிரூபணம் பெற்ற ஒன்று இது. நம்பினால் நம்புங்கள், ஒலியின் வேகத்துக்கு நிகராகப் பயணம் செய்தால், அது உங்களை எதிர்காலத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

ஏன் என்று விவரிக்க, விஞ்ஞானப் புனைகதையின் பயணப்போக்குவரத்து முறையைச் சற்று கனவு சாண்போம். ஒரு அதிவிரைவுவேகத் தொடர்வண்டியின் ஒரு பாதையைப்போல், பூமியைச் சுற்றிலும் ஒரு பாதை போவதாகக் கற்பனை செய்வோம். இந்த கற்பனைத் தொடர் வண்டியை முடிந்த அளவுக்கு ஒளியின் வேகத்துக்கு நிகராகப் போக நாம் பயன்படுத்தப் போகிறோம் – அது ஒரு கால எந்திரமாக எவ்வாறு ஆகிறது என்று பார்க்க. உள்ளே பயணிகள் எதிர்காலத்துக்கான ஒருவழிப் பயணச்சீட்டுடன் இருக்கிறார்கள். தொடர்வண்டி, தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. விரைவில் அது பூமியை மறுபடியும் மறுபடியும் சுற்றிச் சுற்றி வரலாகிறது.

ஒளியின் வேகத்தை எட்டுதல் என்பதன் பொருள், அதிவேகமாக பூமியைச் சுறிற்றி வருதல். ஒரு நிமிடத்துக்கு ஏழு தடவை. ஆனால், தொடர்வண்டி எவ்வளவு அதிகமாகச் சுற்றிக்கொள்வதாயிருந்தாலும், இயற்பியலின் விதிகள் அதை ஒதுக்குவதால், அது ஒளியின் வேகத்தை என்றும் அடையவே முடியாது. மாறாக, அந்த எல்லையற்ற வேகத்துக்கு வெட்கி, அது அந்த வேகத்துக்கு நெருங்கி வருவதாகக் கொள்வோம். இப்போது ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கிறது. கலத்தின் தளத்தில் – உலகின் பிற பகுதியை ஒப்பிட – காலம் மெதுவாக ஓடத் தொடங்குகிறது; கருந்துளைக்கு அருகில் நிகழ்வதுபோல் – ஆனால் மிக அதிகமாக. தொடர்வண்டியிலுள்ள எல்லாம் மெதுவான இயக்கத்தில் (சுலோ மோஷனில்) இருக்கிறது.
வேக எல்லையைக் காப்பாற்றவே இது நிகழ்கிறது. எதனால் இப்படி என்று காண்பது கடினமானதல்ல. தொடர்வண்டியினுள் ஒரு குழந்தை ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். அவளது முன்னோக்கிய வேகம், தொடர்வண்டியின் வேகத்தோடு இணைசேர்கிறது. ஆகையால் வேக எல்லையை அவள் தற்செயலாகவாவது முந்திவிட முடியாதா? இல்லை என்பதுதான் பதில். இயற்கையின் விதிகள், கலத்தின் தளத்தில் காலம் மெதுவாகி வரும் சாத்தியக்கூறைத் தடுத்துவிடுகின்றன.
இப்போது அவள், வேக எல்லையை மீறும்வகையில் போதுமான வேகத்தில் ஓட முடியாது. வேக எல்லையைப் பாதுகாக்க, காலம் எப்போதுமே மெதுவாகிவிடும். இந்த எதார்த்தத்திலிருந்துதான், எதிர்காலத்தில் பல ஆண்டுகள் பயணிப்பதன் சாத்தியம் வெளிப்படுகிறது.

ஜனவரி 1, 2050-ல் நிலையத்திலிருந்து தொடர்வண்டி கிளம்புவதாகக் கற்பனை செய்வோம். 2150 புத்தாண்டு நாளில் கடைசியாக வந்து நிற்பதற்கு முன், 100 ஆண்டுகளாக அது பூமியைப் பல தடவைகள் சுற்றுகிறது. தொடர்வண்டியினுள் காலம் மிகவும் மெதுவாகிவிடுவதால், பயணிகள் ஒரு வாரகாலமே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்கள் வெளியே வரும்போது, தாம் விட்டுச்சென்றதை விட வேறு ஒரு உலகத்தைக் காண்பார்கள். ஒரு வாரத்தில் அவர்கள் 100 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்திருப்பார்கள். அந்த அளவு வேகத்தை எட்டும் தொடர் வண்டியைக் கட்டுவதென்பது முடியவே முடியாத காரியம்தான். ஆனால், அந்தத் தொடர்வண்டியை நிகர்த்ததான வேறொன்றை நம்மால் கட்டமுடியும் – சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சிஈஆர்என்-னின் உலகின் பெரிய அணுத்துகள் ஆக்ஸிலரேட்டர்.
படுபாதாள அறையில், 16 மைல் நீளமான வட்ட மூடுபாதையில், டிரில்லியன் நுண்ணிய அணுத்துகள்களின் நீரோட்டம் உள்ளது. சத்தி அளிக்கப்படும்போது அவை ஒரு நொடியின் ஒரு பின்னத்தில், பூஜ்யத்திலிருந்து 60,000 எம்பிகெச் வேகத்தில் முடுக்கப்படுகின்றன. சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு, அணுத்துகள்கள் வேகவேகமான, ஒரு நொடியின் 11,000 கால அளவில் மூடுபாதையில் வீசிச் செல்லும் – இது ஒளியின் வேகத்துக்கு மிக அருகிலானது. ஆனால், தொடர்வண்டி போலவே இவையும் தேவையான அளவு வேகத்தை எட்டுவதில்லைதான். அவை வேகஎல்லையின் 99.99 சதவீதத்தையே எட்டமுடியும். அப்படி நிகழும்போது, காலத்துள் அவையும் பயணிக்கத் தொடங்கிவிடும். பை-மெஸான் என்றழைக்கப்படும் மிகமிகக் குறுகிய வாழ்நாளுடைய அணுத்துகள்கள் சிலவற்றால், இதை நாம் அறியமுடிகிறது. சாதாரணமாக, ஒரு நொடியின் 25 பில்லியன் பிரிவுள் ஒன்று என்ற வேகத்தில் அவை சிதைவுறுகின்றன. ஆனால் ஒளிவேகத்துக்கு நிகராக அவை முடுக்கப்படும்போது, 30 மடங்குக்குமேல் நிலைத்துநிற்கின்றன.

அந்த அளவுக்கு அது எளிமையானது. எதிர்காலத்தில் நாம் உண்மையில் பயணம் செய்ய விரும்பினால், நாம் வேகமாகச் செல்வதே தேவை. உண்மையான வேகம். எப்போதாவது நாம் அதைச் செய்ய முடியும் என்றால், ஆகாயவெளிக்குச் செல்வதே ஒரே வழியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் அப்போலாதான், மிகவேகமாக மனிதருடன் சென்ற ஒரு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகத்தை எட்டியது. ஆனால் காலப்பயணம் செய்ய, அதைவிட 2,000 மடங்கு வேகமாக நாம் செல்லவேண்டியுள்ளது. அதைச் செய்ய மிகப் பெரிய விண்கப்பல் நமக்குத் தேவை. நிஜமாகவே பேரிய அளவிலான எந்திரம். அந்தக் கப்பல், ஏராளமான அளவு எரிபொருளை ஏற்றிச்செல்லப் போதுமான அளவு பெரிதாய், ஒளியின் வேகத்துக்கு ஏறக்குறைய உள்ள முடுகுவிசையைப் போதுமான அளவு கொண்டதாய் இருக்கவேண்டும். பிரபஞ்ச வேக எல்லையின் கீழ் சேர, முழுதாய் ஆறு ஆண்டுகளுக்கான முழுச்சக்தித்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும்.

கப்பல் கனமானதாகவும் பெரிதாயும் இருப்பதால், ஆரப்பகாலத்து முடுகுவிசை மெதுவானதாய் இருத்தல் அவசியம். ஆனால் படிப்படியாக, வேகத்தை அது பெறவேண்டும். விரைவில் பேரளவுத் தொலைவை கடக்க வேண்டும். ஒரு வாரத்தில் அது, வெளிப்புற கிரகங்களை அடையும். இரண்டு ஆண்டுகளில் அது, பாதி ஒளிவேகத்தினை எட்டும். நமது சூரிய மண்டலத்துக்கு மிக வெளியே போய்விடும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அது, 90 சதவீத ஒளிவேகத்தில் பயணிக்கும். புறப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிலிருந்து ஏறக்குறைய 30 டிரில்லியன் மைல் தூரத்தில் இருக்கும்போது, காலத்துள் பயணம் செய்யத்தொடங்கும் கப்பல். கப்பலில் காலத்தின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும், பூமியில் இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். திணிவுள்ள கருந்துளையைச் சுற்றிவரும் விண்கலமும் இதற்கு இணையான சூழலில்தான் இருக்கும்.

முழுவேகத்தில் சென்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சபட்ச வேகமாகிய 99 சதவீத ஒளிவேகத்தை அடையும். இந்த வேகத்தில், கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும்.

காலம் மெதுவாவதால் இன்னோரு பயனும் உண்டு. கோட்பாட்டுப்படி இதன் அர்த்தம், மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும் என்பதே. பால்மண்டலத்தின் எல்லைமுனைக்குப் போய்வர 80 ஆண்டுகள் ஆகும். ஆனால். நமது பயணத்தின் உண்மையான அதிசயம், பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதுதான். மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட விகிதங்களில், ஓடும் காலத்தைப் பெற்ற பிரபஞ்சம் அது. நுண்ணிய புழுத்துளைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிரபஞ்சம் அது. இறுதியாக, இயற்பியல் அறிவைக் கொண்டு, நான்காம் பரிமாணத்தின் ஊடாகச் சென்றுவரும் உண்மையான பயணிகளாக நாம் விளங்கக் கூடிய பிரபஞ்சம் அது.

ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen William Hawking (1942)
மொழிபெயர்த்தவர் காலசுப்ரமணியன்.
பதிவு தோழி பாரதி ஸ்ரீ க்காக

https://www.facebook.com/100008385648195/posts/2500980236858140/