Showing posts with label இந்து அறநிலையத்துறை. Show all posts
Showing posts with label இந்து அறநிலையத்துறை. Show all posts

Wednesday, March 28, 2018

கோவில் சொத்து ஆட்டையப்போடும் அய்யர்-அய்யங்கார்கள

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற்போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான். ‘வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்’ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.

சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்துகளும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந்தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.

கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள்தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப்படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும்போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத்துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அறநிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடைமையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.

தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன்னணி முதலான அமைப்புகள். “மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம்” என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், தமிழ்நாடு.

Monday, March 12, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 13

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Via facebook
2018-03-06

கோவில் உண்டியல் காணிக்கைகளை அதிகாரிகள் எடுத்துக்கொள்கிறார்களா? - பகுதி 13
----------------------------------------------------------------
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது. அதாவது, ஒரு கோவிலைக் குறிப்பிட்டு அந்தக் கோவிலில் உண்டியலில் காணிக்கையாக விழும் பணத்திற்கு எந்தக் கணக்கும் வைக்கப்படுவதில்லை; விழும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறியது அந்தத் தொகுப்பு. அதற்கு ஆதரவாக, கோவிலுக்குச் சொந்தமான கடையை ஆக்கிரமித்து கடையை வைத்திருப்பவரின் 'பைட்' வேறு. அந்த செய்தித் தொகுப்பை பார்த்த யாரும் அடுத்த முறை கோவிலில் காணிக்கையை செலுத்துவதற்கு முன்பாக ஒரு கணம் யோசிப்பார்கள்.

உண்மையில், கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை அப்படி கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்ள முடியுமா? உண்டியல் காணிக்கைகள் என்ன ஆகின்றன?

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் உள்ள உண்டியல்களை எண்ணுவதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கோவிலிலும் உண்டியல்களைத் திறப்பதற்கு பல்வேறு கால அளவுகள் இருக்கின்றன. பெரும்பாலும் மாதம் ஒரு முறை அல்லது உண்டியல் நிறையும் காலத்தைக் கணக்கில்வைத்து உண்டியல்கள் திறக்கப்படும். தவிர, எல்லாக் கோவில்களின் உண்டியல்களும் பசலி ஆண்டின் இறுதியில் அதாவது ஜூன் மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்படும்.

2 லட்ச ரூபாய்கு குறைவாக வருமானம் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் ஆய்வாளர் அல்லது சரக ஆய்வர் முன்னிலையில் திறக்கப்படும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் துணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட படிநிலையில் உள்ள அதிகாரி அல்லது வேறு பெரிய கோவிலின் இணை ஆணையரின் முன்னிலையில் திறக்கப்படும். 

கோவில் உண்டியல்கள் எல்லாவற்றுக்குமே இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று அந்த உண்டியலிலேயே அமைந்திருக்கும் பூட்டு. மற்றொன்று வெளியில் பூட்டப்படும் பூட்டு. இவற்றின் சாவியில் ஒன்று கோவிலின் நிர்வாக அதிகாரியிடமும் மற்றொன்று கோவிலின் தக்காரிடம் (Fit person) இருக்கும். அல்லது நிர்வாக அதிகாரி மற்றும் இணை ஆணையரிடம் இருக்கும். அல்லது இணை ஆணையரிடம் மட்டும் இருக்கும். இது கோவிலின் வருவாய், நிர்வாகப்படி நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

உண்டியல்களின் பூட்டுகள் எல்லாமே துணியால் சுற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த பூட்டுகளுக்கான சாவியும் துணியால் சுற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். இரு இடங்களிலிருந்து சாவிகள் கொண்டுவரப்பட்டு, எல்லா அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் அவை பிரிக்கப்படும்.

இதற்குப் பிறகு, முதல் உண்டியல் திறக்கப்பட்டு அவற்றில் இருக்கும் காணிக்கை டிரெங்க் பெட்டி ஒன்றுக்கு மாற்றப்படும். எந்த உண்டியல், எந்த டிரெங்க் பெட்டி, எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது என்ற விவரங்கள் ஒரு பதிவேட்டில் குறிக்கப்படும். அந்த டிரெங்க் பெட்டி நிறைந்தவுடன் அது பூட்டப்பட்டு, அடுத்த பெட்டி கொண்டுவரப்பட்டு காணிக்கை நிரப்பப்படும். அந்தத் தகவலும் பதிவேட்டில் ஏறும். இப்படியாக ஒரு உண்டியல் காணிக்கை முழுவதும் பெட்டியில் ஏற்றப்பட்டவுடன் அந்த டிரெங்க் பெட்டிகள் காணிக்கை எண்ணும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.  அது பெரும்பாலும் எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அமைந்த மண்டபமாக இருக்கும்.

அந்த மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கொட்டப்படும். அங்கே கோவிலின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் (பெரிய கோவிலாக இருந்தால்) இருப்பார்கள். காணிக்கையை எண்ணுவதற்கு தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். அவர்களது விவரங்கள் வாங்கப்பட்டு, காணிக்கையை எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் நோட்டுகள் தனியாகவும் காசுகள் தனியாகவும் பிரிக்கப்படும். பிறகு அவை எண்ணப்படும்.

ஒவ்வொரு வகை நோட்டும் பிறகு கட்டாக கட்டப்பட்டு, அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுக்கப்படும். அந்த வங்கி அதிகாரியிடம் எத்தனை கட்டு கொடுக்கப்பட்டது என்ற விவரம்கூட பதிவுசெய்யப்படும். இப்படியாக எல்லாப் பணமும் எண்ணி முடித்த பிறகு, மொத்தப் பணமும் வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு, கோவிலின் கணக்கில் வரவுவைக்கப்பட்டதற்கான சலான் கோவிலின் அதிகாரியிடம் அளிக்கப்படும். அந்த சலான் எண் கோவிலின் உண்டியல் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டவுடன் உண்டியல் எண்ணும் நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

இந்த உண்டியலில் விழுந்த உலோகங்கள் ஒரு நகை ஆசாரியின் மூலம் பிரிக்கப்பட்டு தங்கம், வெள்ளி, தாமிரம் என வகைப்படுத்தப்பட்டு, எலெக்ட்ரானிக் தராசின் மூலம் நிறுத்து கோவிலின் கணக்கில் வைக்கப்படும். நகைகள் விழுந்திருந்தால் அவையும் பதிவுசெய்யப்படும்.

இதற்குப் பிறகு மற்றொரு நாளில் ஆசாரி, கற்களை சோதிக்கும் நிபுணர் ஆகியோர் அழைத்துவரப்பட்டு உலோகத்தின் தரம் சரிபார்க்கப்படும். நகைககளில் உள்ள அரக்கு,மெழுகு போன்றவை நீக்கப்படும். இந்த நகைகளில் உள்ள கற்கள் total internal reflection முறையில் விலை உயர்ந்த கல்லா அல்லது சாதாரண கல்லா என்பது அறியப்பட்டு தரம் பிரிக்கப்படும்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட தங்கம், ஆகியவை பிறகு மும்பைக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு உருக்கி, பிஸ்கட்களாக மாற்றப்படும். அவை கோவில் கணக்கில் வரவில் வைக்கப்படும்.

இந்த விவரங்கள் எல்லாம் உண்டியல் பதிவேடு, காணிக்கைப் பதிவேடு, நகை பதிவேடு என பல்வேறு பதிவேடுகளில் பல்வேறு அதிகாரிகளின் ஒப்புதலுடன் பதிவுசெய்யப்படும். அதேபோல, உண்டியல் பணத்தை எண்ணியவர்களின் கையெழுத்துகளும் வாங்கப்படும்.
இந்த நடைமுறைகள் எல்லாமே வெளிப்படையாக, எல்லோரும் பார்க்கும் வகையிலேயே நடக்கும்.

பெரும்பாலான கோவில்களில், என்றைக்கு உண்டியல் பணம் எண்ணப்படும் என்ற விவரங்கள் முன்கூட்டியே பலகையில் எழுதிவைக்கப்படுவதும் உண்டு. அன்றைக்கு விருப்பமுள்ளவர்கள் சென்று ஆண்டவனின் பணத்தை எண்ணும் திருப்பணியில் ஈடுபடலாம்.

இதைப் படிக்கும்போதே களைப்பு ஏற்படுகிறது அல்லவா? அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் இதுதான் நடைமுறை. 'திருட்டு' திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட இந்த விதிமுறைகள்தான் கோவில் காணிக்கை, உடையவருக்குச் சேர்வதை உறுதிசெய்கின்றன.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, சிதம்பரம் நடராஜர் கோவில், சங்கர மடம் ஆகியவற்றில் காணிக்கைகள் எப்படி எண்ணப்படுகின்றன என்பதை விவரம் தெரிந்த யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு: சிதம்பரம் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருவாய் என்று சொல்லப்பட்டது. கோவில் நிர்வாகம் 2009ல் அறிநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதும் சில மாதங்களிலேயே மாத உண்டியல் வருவாய் 18 லட்சமாக இருந்தது.

அப்படியானால், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததும் பக்தர்கள் அதிக காணிக்கை செலுத்தினார்களா? இல்லை, அவர்கள் எப்போதும் போலவே காணிக்கை செலுத்தினார்கள். என்ன நடந்திருக்கும் என்பதை நாமே யூகித்துக்கொள்ளலாம்.

2014ல் இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நீங்கியது.

(H Rajaதான் டிரென்டிங் என்பதால், அவரது ப டம் ஒரு எஃபெக்டிற்காக)

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1200507546747637&id=100003652096964

இந்து அறநிலையத்துறை - பகுதி 10

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Via facebook
2018-02-20

அறநிலையத் துறைச் சட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பெரியார்; எதிர்ப்புத் தெரிவித்த சத்யமூர்த்தி அய்யர் - பகுதி 10
-----------------------------------------------------------------------------
இந்து அறநிலையத் துறை குறித்த என்னுடைய முதல் பதிவில், நண்பர் ஒருவர் இந்தச் சட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்று கேட்டபோது, என்னுடைய அறியாமையால், ஏதும் இல்லை என்று பதிவிட்டுவிட்டேன். அதனைப் பார்த்த, ம.தி.தா. இந்துக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், அந்தப் பதிவிலேயே அதனை மறுத்தார்.

"சொத்துடமைமிக்க பெருங்கோயில்களில் நிலவிய பார்ப்பன-உயர்சாதி ஆதிக்கத்தை,சுரண்டலை பெருமளவுக்குத் தடுத்த அறநிலையத்துறை சட்டம் நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு சிலகாலம் முன்புதான் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கியிருந்தார். இந்த மசோதா சட்ட-மக்கள் மன்றங்களில் விவாதத்திற்கு வரும்போது, 'இது ஏதோ காங்கிரசுக்கு எதிரான இயக்கமான நீதிக்கட்சி கொண்டு வருகிறது என அலட்சியமாக இருந்துவிடாமல், இதன் சமூக முக்கியத்துவத்தை கருதி, இதனை எந்தவகையிலும் வெற்றி பெறச் செய்தாக வேண்டும்' எனத் தனது நெருங்கிய நண்பர்களும் அப்போது காங்கிரசின் பெருந்தலைவர் களாகவும் இருந்த வரதராஜுலு நாயுடு, திரு.வி.க ஆகியோரைத் தூண்டிவிட்டு, தனது ' குடிஅரசு' இதழின் வழி தக்க பரப்புரைகளைகளையும் மேற்கொண்டு, பார்ப்பனரின் கடும் எதிர்ப்பையும் மீறி அறநிலையத்துறை மசோதா வெற்றி பெற அடிப்படைக் காரணமாக விளங்கியவர் பெரியார்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பதிவைப் பார்த்த, 'பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு', 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' நூல்களின் ஆசிரியரும் நண்பருமான டாக்டர் பழ. அதியமானும் இதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டினார்.

இந்து அறநிலையத் துறை மசோதா தாக்கல்செய்யப்பட்டபோது, காங்கிரசைச் சேர்ந்தவரும், எல்லா சமூக முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் எதிர்க்கக்கூடியவருமான தீரர் சத்தியமூர்த்தி அந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்டசபையில் நிறைவேறிய அந்த மசோதாவை இந்திய சட்டசபை, வைசிராய், இங்கிலாந்து அரசு என பல மட்டங்களுக்கு எடுத்துச் சென்று தடைசெய்ய பிராமணர்களின் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். இதற்கென பல ஆயிரம் ரூபாய்கள் திரட்டப்பட்டன.

(இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வரதராஜுலு நாயுடு தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், பதிவு பெரியாரின் பங்களிப்பைப் பற்றியது என்பதால் அதனை விரிவாகக் குறிப்பிடவில்லை.)

பெரியார் குடியரசு இதழைத் துவங்கியிராத காலகட்டம். அப்போது இது சம்பந்தமாக பெரியார் விடுத்த அறிக்கையை எந்த இதழும் வெளியிடாத நிலையில்,  நவசக்தி அதனை வெளியிட்டது. இது தொடர்பான விவரங்கள், பழ. அதியமானின் பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

20.2.1925 நவசக்தி இதழில் பெரியாருடைய அறிக்கை வெளியானது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் நினைவு கூர்ந்ததை அதியமான் பதிவுசெய்திருக்கிறார். "நான் காங்கிரசில் இருந்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள். யாரையும் கலந்துகொள்ளாமலும் கேட்காமலும் திடீரென்று காங்கிரஸ் பார்ப்பனர்களான சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார் முதலியவர்களே எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நான் பதறி, இந்தப் பார்ப்பனர்களின் செயலை எதிர்க்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். உடனே நானும் வரதராஜுலுவும் திரு.வி.கவும் இராமநாதனும் சேர்ந்து யோசித்து ஒரு அறிக்கை எழுதினோம். அப்போது அதை வெளியிட எங்களுக்குச் சாதகமாக எந்த பத்திரிகையும் கிடையாது. ஆகவே அப்போதிருந்த நவசக்தி என்ற பத்திரிகையில் மட்டும்தான் வெளியிட்டோம். அதைக் கண்டதும் ராஜகோபாலாச்சாரியார் ஓடிவந்து இந்த மாதிரி இந்த மாதிரி அறிக்கை விடுவது கூடாது என்றார். அதற்கு நான் சத்தியமூர்த்தி அய்யரும் சீனிவாசய்யங்காரும் செய்தது சரியா என்று கேட்டேன். பிறகு அவர் இருவருக்கும் அமைதி ஏற்படுகின்ற தன்மையில் சமாதானம் செய்து ஒரு அறிக்கை விட்டார்" என்று பெரியார் கூறினார்.

அந்த அறிக்கையில் பெரியார் என்ன கூறினார் என்பதை, நவசக்தி இதழில் இருந்து அப்படியே தருகிறேன்.
"ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் அவர்கள் கடிதம்

அன்புள்ள டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு அவர்களுக்கும் ஸ்ரீமான் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் ஈரோடு ஈ.வெ. ராமசாமி அநேக வணக்கம்.

இந்த தேவஸ்தான சட்டம் சம்பந்தமாய் சமீபத்தில் சிலரால் நடத்தப்படும் கண்டனக் கிளர்ச்சிகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் இது மத சம்பந்தமான கிளர்ச்சி அல்ல என்றும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்பு சம்பந்தமான கட்சிவாதம் என்று இப்போதாவது உணர்ந்திருப்பார்கள். வகுப்பு சம்பந்தமான சுயநல்ன்களை மனதில் வைத்து மதசம்பந்தமான கிளர்ச்சி என்று போலிப்பெயரால் இந்துக்களின் பெரும்பான்மையோராய் இருக்கிற பல சமூகத்தினருக்கு இழிவும் நஷ்டமும் உண்டாகும்படி இந்துக்களில் ஒரு மிகச் சிறிய கூட்டத்தார் தங்களுடைய தந்திரத்தினாலேயும் கூடா ஒழுக்கமுள்ள மடாதிபதிகள், மகந்துகள், மதாச்சாரியார்கள் முதலானவர்களாலும் உதவப்பட்ட பணச்செருக்குகளினாலேயும் செய்துவரும் சூழ்ச்சிப் பிரச்சாரங்களினாலேயும் இந்துக்களின் மேற்கண்ட இழிவுகளுக்கும் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட சமூகத்தாரில் தரித்திரத்தாலும் பேராசையினாலும் சுயநலத்திலும் அழுந்தக்கிடக்கும் ஒரு சிலரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர்கள் மூலமாகவும் தங்கள் விஷமப் பிரச்சாரத்தை செய்து நம்மவர்களை ஏமாறச்செய்துகொண்டுவருவதை நாம் பார்த்துக்கொண்டு வருவது, பெரிய தேசத் துரோகமும் மதத் துரோகமும் சமூகத் துரோகமும் என்பதை நான் சொல்லாமலேயே தங்கள் போன்ற பெரியோர்களுக்கு விளங்கும்.   

உண்மையிலேயே இந்து தேவஸ்தானச் சட்டம் மதவிரோதமானது என்று நினைத்து தப்பபிப்ராயத்துடன் கிளர்ச்சி செய்பவர்கள் சிலர் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்து தேவஸ்தானச் சட்டத்திற்கு விரோதமாகச் செய்யும் கிளர்ச்சிகளை, தேச, மத, சமூக, நன்மைகோரி நசுக்கப்படவேண்டியது அவசியம் என்பது வெகுஜன அபிப்பிராயம். அப்படிச்செய்வதினால் பிராமண துவேஷம் என்று சொல்லப்பட்டுவிடுமோ, பிராமணர்களின் புன்சிரிப்பு மறைந்துவிடுமோ, வைதிக உலகில் தமக்கு செல்வாக்கு குறைந்துவிடுமோ நம்மவர்களில் தக்கவர்களான அநேகருக்குக்கூட இருந்து மௌனம் சாதிக்கச் செய்துவருவது எனக்குத் தெரியும்" என்று அந்த நவசக்தி அறிக்கையில் குறிப்பிடுகிறார் பெரியார்.

இந்த அறிக்கை முழுவதையும் இது தொடர்பாக நவசக்தி இதழில் வெளிவந்த கடிதங்களையும் விரைவில் முழுமையாக இதே பதிவில் தொடர்கிறேன்.

குறிப்பிட்ட நவசக்தி இதழின் தேதியைச் சொன்ன பழ. அதியமான், பெரியாரின் அறிக்கை வெளிவந்து சரியாக 93 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இதழைப் பார்க்க அனுமதித்த சென்னை ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றுக்கு நன்றி. ஆ. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இந்து தேவஸ்தானச் சட்டம் வந்தபோது தீரர் சத்தியமூர்த்தி அதைத் தீவிரமாக எதிர்த்தார் என்பதையும் பெரியார் இது தொடர்பாக ஆதரவைத் திரட்டினார் என்பதையும்தான். மேலும், தெரியாத விஷயங்களில்  யாராவது எதாவது கேட்டால், உடனடியாக 'ஆமாம், இல்லை" என்று பதில் சொல்லக்கூடாது என்பதையும் இந்த விவகாரத்தில் புரிந்துகொண்டேன்.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1191755954289463&id=100003652096964