Wednesday, February 7, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 2

Muralidharan Kasi Viswanathan
Via facebook
208-02-07

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவச கலர் டிவியும் ஸ்கூட்டியும் கொடுக்கிறதா தமிழக அரசு?  - பகுதி 2.
--------------------------------------------------------------
இந்து சமய அறநிலையத் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப்படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியைச் செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில்கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக்கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57. Specified அறக்கட்டளைகள்  1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38635.

இந்தக் கோவில்கள் பிறகு Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்) ,  Non - Listed Temples(பட்டியல் கோவில்கள்)  என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள் Non - listed கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் 10,000 ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட  சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை வரைநிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தருகிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது.  அதாவது கோவில் வருவாயில் Accessible income என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சதவீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்டமைப்பை நிர்வக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை. உண்மையில் ஒரு கோவிலின் வருவாயை எடுத்து இன்னொரு கோவிலுக்குக்கூட செலவழிக்க முடியாது. அந்தந்தக் கோவில்களின் திருப்பணி அந்தந்தக் கோவில்களின் வருவாய் மூலமே நடத்தப்படுகிறது. ஆனால், மிகக் குறைவாக உள்ள கோவில்கள் என்ன செய்யும்?

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றாவதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால்,  தணிக்கையின்போது அது கவனிக்கப்பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர்வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில்தான் அது என்பதை அங்கு சொல்பவர்கள் உடனடியாக உணர முடியும். இதற்கு முன்பாக இந்த விருதை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் பெற்றது. அந்தக் கோவிலின் வருவாய்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருவாய்க்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. சிறந்த நிர்வாகத்தின் மூலம்  மட்டுமே இதைச் சாதித்திருக்கிறது மதுரைக் கோவில்.

இருந்தும் இந்தக் கோவிலை முன்வைத்து, தற்போது நாஜிக்கள் இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கியிருப்பது பெரும் வேதனை.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1183887971742928&id=100003652096964

Tuesday, February 6, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 1

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-06

இந்துக் கோவில்களின் நிர்வாகம்:
கிழக்கிந்திய கம்பெனி முதல்
காமராஜர் வரை  - பகுதி 1
------------------------------------------------------------------------------------------------------------------

மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கோவில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் துறையையே தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவாக்கி, பிறகு மு.க. ஸ்டாலினும் அதற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினும் ரேஞ்ச் ரோவர் காரில் வந்து கொள்ளையடித்துச் செல்வதைப் போல சமூகவலைதளங்களில் கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

பல மகத்தான நிர்வாக விதிகள் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன என்றாலும் இந்தச் சட்டம் அவர் முதல்வராவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், கருணாநிதி வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு இந்து சமய அறநிலையத் துறை எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை எப்படி வந்தது, அது எப்படி கோவில்களை நிர்வகிக்கிறது, கிறிஸ்தவ, இஸ்லாமியக் கோவில்களை அவர்களே நிர்வாகம் செய்யும்போது இந்துக் கோவில்களை ஏன் இந்துக்கள் நிர்வாகம் செய்யக்கூடாது, கோவில் வருமானத்தை எடுத்து அரசு செலவழிக்கிறதா, கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்களே என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில்தான் இந்தப் பதிவு.

முதலாவதாக இந்து சமய அறநிலையத் துறை எப்படி உருவானது என்று பார்க்கலாம்.  மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, இந்துக் கோவில்களும் அவற்றின் சொத்துக்களும் ஒரு சிலரின் வசமே இருந்தன. இந்தக் கோவில்களை நிர்வகிப்பதிலும் ஊழல் இருந்ததோடு, கோவில் நகைகள், நிலங்கள் இஷ்டத்திற்கு விற்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில்தான் மெட்ராஸ் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிடம் மக்கள் முறையிட ஆரம்பித்தனர். இதையடுத்துதான் மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817ல் உருவாக்கப்பட்டது. சட்டம் எண் VII/1817. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 15ல் ஒரு விஷயம் மிகவும் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது இந்தச் சட்டத்தின் நோக்கம், கொடைகளை, கோவில் சொத்துகளை பராமரிப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கமே தவிர, அவற்றிலிருந்து வரும் வருவாயை அரசுக்கு பயன்படுத்துவதல்ல என்று குறிப்பிடப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி இந்துக் கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வேலை அப்போதைய வருவாய் வாரியத்திடம் அதாவது Board of Revenueவிடம் வழங்கப்பட்டது.  இந்த வேலைகளைச் செய்ய உள்ளூர் அளவில் முகவர்களை நியமிக்கும்
ஆனால், இந்த உள்ளூர் முகவர்கள் சரியாக செயல்படாத நிலையில், 1863ல், அதாவது விக்டோரியா மகாராணி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு புதிய சட்டம் இயற்றப்பட்டது. உள்ளூர் முகவர்களைக் கண்காணிக்க உள்ளூர் கோவில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் குழுக்கள் கோவில்களை நிர்வகிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால், மதப் பழக்க - வழக்கங்களில் தலையிடுவதில்லை என்ற விக்டோரியா அரசியின் கொள்கைகளின் காரணமாக, உள்ளூர்காரர்களின் கொள்ளைகள் தொடர்ந்தன. மன்னர்களும் பிரிட்டிஷ் அரசும் கோவில்களுக்கு அளித்த சொத்துக்கள் கொள்ளை போயின. கோவில்களை நிர்வகித்தவர்கள், கோவில் சொத்துகளை தங்கள் சொத்துகளைப் போல அவற்றை கருதினர். கோவில் நகைகளுக்கு எந்தப் பட்டியலும் இல்லை (சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போல). இது தொடர்பாக யாராவது நீதி மன்றங்களை அணுகினால், கோவில் தரப்பில் ஸ்கீம் சூட் எனப்படும் வழக்குகள் தொடரப்ப்பட்டு, விரும்பிய ஸ்கீம்களுக்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது. 

ஆகவே, 1926ல் நீதிக் கட்சி ஆட்சியின்போது மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம்  II/1927 இயற்றப்பட்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத்திற்கு உயர் வகுப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலையங்கம் எழுதின. வழக்கம்போல காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அப்போதை வைசிராயாக இருந்த இர்வினடம் முதலமைச்சர் பனகல் அரசர் விளக்கமளித்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்தச் சட்டம் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX 1951 இயற்றப்பட்டது. முதன்முதலாக கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டன. அதிகாரிகளின் நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட்டன. பாரம்பரிய அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி,  இந்து அறநிலையைத் துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலின் துணை, இணை ஆணையர்களையோ, அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளைக் கேட்க முடியும். கோவில்களுக்கு, மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடுக்கவும் விற்கவும் ஆணையரின் அனுமதி அறங்காவலருக்குத் தேவை. இஷ்டப்படி ஏதும் செய்ய முடியாது. இங்கு ஆணையர் என்பது அரசைக் குறிக்கும். இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். கருணாநிதி அல்ல. கிட்டத்தட்ட 140  வருடங்களாகப் படிப்படியாக உருவாக்கப்பட்ட சட்டம் இது.

ஒரு வகையில் இந்தியாவிலேயே மிகவும் முன்னோடிச் சட்டம் இது. தமிழக மக்களின், பக்தர்களின் நீண்ட காலக் கோரிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட சட்டம் இது. ஆந்திர மாநிலத்தில் 2000களுக்குப் பிறகுதான் இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் இதுவரை இதுபோன்ற சட்டம் கிடையாது. இந்தச் சட்டத்தின் காரணமாக மட்டுமே வர்ணாசிரம ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும்கூட கோவிலின் நிர்வாகத்தில் தற்போது ஈடுகின்றனர். இதுதான் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1183354405129618&id=100003652096964

குதுப்மினார் சடலத்தை தோண்டுவதா?

குதுப் மினார் சடலத்தை தோண்டுவதா?
====எஸ்.ஜி.ரமேஷ்பாபு====

(இன்றைய தீக்கதிர் நாளேட்டில் வந்துள்ள கட்டுரை)

வரலாற்று பின்புலத்தில் புனைவுகளை உருவாக்கும் போது மிகவும் சமூக பொறுப்புணர்வோடு உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதுவும் வரலாற்றில் வாழ்ந்த பாத்திரங்கள் எனும்போது அந்த பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது. கவிதையாக, காவியமாக உள புனைவுகளை திரைப்படமாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லைதான். ஆனல் நிகழ்கால அரசியல் சூழலையும், சமூக சூழலையும் புரிந்துக்கொள்வது அவசியமில்லையா? அக்கரையற்ற அப்படைப்பு சமூக தளத்தில் உருவாகும் எதிர் விளைவுகளை கணக்கில் கொள்ளாமல் எப்படி படைப்பின் ஜனநாயகத்தை பாதுகாக்கும்?

இஸ்லாமியர்களின் மீதான காழ்புணர்வையே மூலதனமாக முன் வைத்து இந்துத்துவா அமைப்புகள் தினம் ஒரு கலவரம் செய்யும் சூழலில், அவர்களை பாதுகாக்கும் ஆட்சியமைப்பு அமைந்துள்ள நிலையில், வரலாற்று காலம் தொட்டே இஸ்லாமிய ராஜாகள் இந்து ராஜாக்கள் மீது வன்மத்துடன், துரோகம் செய்து அல்லது போர்களத்தில் சூழ்ச்சியால் கொலை செய்வது போலவும், அவர்கள் பெண் பித்தர்கள் அதற்காக ஒரு நாட்டையே அழிப்பர்கள் என்ற படைப்பு எந்த விளைவை பொதுதளத்தில் உருவாக்கும்?

சிங்கள தேசத்தில் முத்துகளைப் பெறுவதற்காகச் செல்கிறார் சித்தோடு அரசர் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்). அப்போது காட்டில் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோன்) மானைக் குறி வைத்து செலுத்தும் அம்பு, ரத்தன் சிங் மார்பைத் துளைக்கிறது. இதனால் காயம்பட்ட ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரை குணமடையச் செய்கிறார். இதனிடையே இருவருக்கும் காதல் மலர, திருமணம் புரிந்து பத்மாவதியை சித்தோடுக்கு அழைத்து வருகிறார் ரத்தன் சிங். பத்மாவதியின் அழகில் மயங்கும் ராஜகுரு, ரத்தன் சிங்- பத்மாவதி தனித்து இருக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறார். இதனால் பத்மாவதியின் கூற்றுப்படி, ரத்தன் சிங் உத்தரவால் ராஜகுரு நாடு கடத்தப்படுகிறார்.

டெல்லியை வந்தடையும் ராஜகுரு, அரசன் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) சந்தித்து பத்மாவதியின் பேரழைக் கூறி மதி மயங்கச் செய்கிறார். கண்ணால் பார்த்திராத பத்மாவதிக்காக அலாவுதின் கில்ஜி டெல்லியில் இருந்து சித்தோடு நோக்கி படையெடுக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி வஞ்சகமாக ரத்தன் சிங்கை சிறைபிடிக்கிறார். ரத்தன் சிங் விடுவிக்கப்பட வேண்டுமானால் பத்மாவதி டெல்லி வந்தாக வேண்டும் என்று கில்ஜி சொல்ல, பத்மாவதி டெல்லி சென்று ரத்தன் சிங்கை தந்திரமாக மீட்டு வருகிறார். அதனால் ஆத்திரமடைந்த அலாவுதீன் சித்தோடு மீடு படையெடுக்கிறார். போரில் ரத்தன் சிங்கை நயவஞ்சகமாக கொன்று கோட்டைக்குள் நுழையும் போது பத்மாவத் நூற்றுக்கனக்கான பெண்கள் கூட்டத்துடன் தீயில் இறங்கி கரைந்து போகிறார்கள். இதுதான் படம்.

மாலிக் முகம்மது ஜயஸி என்னும் சூஃபி கவிஞர் 1540ல் எழுதிய பத்மாவத் என்னும் காவியத்தில் உள்ள கதாபாத்திரம்தான் பத்மாவதி என்னும் பத்மினி. அவர் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அலாவுதீன் மறைந்து ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது இக்காவியம். இக்காவியத்தின் அடிபடையில் எடுக்கப்பட்டப் படம் என்றுதான் அறிமுகத்தில் போடுகின்றனர். ஆனால் இந்த படம் இந்த காவியத்திற்கும் உண்மையாக இல்லாமல், வரலாற்றிற்கும் உண்மையாக இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதியின் கணவர் ரதன் சிங் கும்பல்கரின் தேவபாலரிடம் போரிட்டு இறந்ததாகவே காவியம் சொல்கிறது. வரலாறும் அதுவே. ஆனால் இப்படத்தில் அலாவுதீன் கில்ஜியிடம் போரிட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுளது.

மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு கட்டிய சாமாதியை, 702 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுத்து கேவலப்படுத்தும் படைப்பு இது. பத்மாவத் படத்தின் பாத்திர படைப்புகளை கூர்ந்து நோக்கினால் பல அப்பட்டமான அநியாயங்கள் தெரியும். அதுவும் அலாவுதின் கில்ஜி, தனது தனது நிச்சயதார்த்த சமயத்தில் ஒரு பெண்ணை சுகிப்பதும், அதை கேட்கும் ஒரு மந்திரியை கொலைசெய்வதும், அத்தர் நறுமனத்தை பூசவேண்டும் என்றால்கூட தனது பணிப்பெண்னின் மார்பகங்களில் மொத்தமாய் ஊற்றி அவளை தன்னுடன் அணைத்து பூசிக்கொள்வது போலவும், ஒரு பெண்ணிற்காக ஆறுமாதம் கோட்டைக்கு வெளியில் கொத்தளம் அமைத்து காத்திருபது போலவும், ஒவ்வொரு நொடியும் காமம் ததும்பும் கண்களோடு உள்ள உடல்மொழி அசைவும், வெருக்கத்தக்க நடையும் என அலாவுதின் கில்ஜியை எப்படி வெறுக்க வைக்க முடியுமோ அப்படி வெறுக்கடிக்கின்றனர்.

ஜலாலுதீன் கில்ஜியும் அவரது மருமகன் அலாவுதீன் கில்ஜியும் முற்றிலும் பண்பாடற்ற காட்டுமிராண்டிகளை போல சித்தரித்திருப்பது மிகவும் திட்டமிட்ட சித்தரிப்பாகவே படுகிறது. தோலாடைகள், மூர்க்கமான முகங்கள், வெறிகொண்டவர்கள் போன்ற நடத்தைகள். சாப்பிடுவதில்கூட ஒருவகை காட்டுமிராண்டி தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அலாவுதீன் கில்ஜி ஆடும் மோசமான வெறியேற்றும் நடனம் கேவலமான ரசனையின் வெளிப்பாடு.

துருக்கிய சுல்தான்கள் இப்படத்தில் காட்டப்படுவதுபோல நாகரீகம் இல்லாத பாலைவனப் படையெடுப்பாளர்கள் அல்ல. இந்தியப் கலாச்சார அளவு தொன்மை பொருந்தியவை துருக்கிய, பாரசீகப் கலாசாரங்களும், அவற்றின்மேல் இஸ்லாம் மார்கம் உருவாக்கிய தாக்கத்தால் எழுந்த அரசர்கள் அவர்கள். நெடுங்கால கலாச்சரம் உருவாக்கிய மிக பொருத்தமான பழக்க வழக்கங்கள், நுண்கலைகள், உயர்தர இலக்கியங்கள் கொண்டவர்கள். இன்னும் சொல்லப்போனால் அத்தகைய பிரம்மாண்டமான அரசவைச்சூழல் அன்று இந்திவில் இருக்கவில்லை என்பதே உண்மை. சுல்தான்களுக்குப் பின் இந்திய அரசர்கள் பலரும் அவர்களின் மரபைத்தான் தொடர்ந்தனர் எனலாம். சிவாஜியும் கிருஷ்ணதேவராயரும் அணிந்துள்ள உடைகள் கூட இந்திய உடைகள் அல்ல, சுல்தானிய பாணியிலான உடைகளே.

இன்றைய வடிவில் உருவான இந்துஸ்தானி இசை சுல்தானிய அவைகளில் கிளந்தெழுந்த்துதான். தொன்மையான இந்திய இசைக்கும் துருக்கிய, பாரசீக இசைகளுக்கும் நடுவே நிகழ்ந்த கலப்பின் விளைவு. அலாவுதீன் கில்ஜியின் அவையில்தான் அமிர் குஸ்ரு இருந்தார். இந்திய இலக்கியத்திலும் இசைமரபிலும் இன்றும்கூட தவிர்க்க முடியாத செல்வாக்கு பெற்றவர் அவர்.

அலங்காரக்கலைகளின் அற்புதம் சுல்தான்களின் ஆட்சி. நகைகள் செய்வதில் இந்திய கைத்திறனிலும், இந்திய ஆலயங்களின் பட்டுநூல்பின்னல், அலங்காரப்பின்னல் பணிகளில்கூட இஸ்லாமியக் கைவினைஞர்கள் படந்திருக்க காரணம் இதுதான். நறுமணங்களை உருவாக்கும் கலை, சமையற்கலை ஆகியவற்றிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். எழுத்துருக்கலை உயர்ந்த்தும் அப்போதுதான். குர்ஆனை அலங்காரமாக பட்டிலும் தோலிலும் எழுதும் கலை அக்காலகட்டத்தில்தான் தொடங்கியது.

போர்த்திறனிலும் அலாவுதீன் கில்ஜி சலைத்தவர் அல்ல. தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். தொடர்ந்து பலரையும் வென்றுள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தை தொடந்து கண்காணிக்க கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறியமுடிந்தது. தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.

அலாவுதீன் கில்ஜி குறிகோளுடன் காட்டிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்க இது உதவியது.. தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

இத்தகைய தரவுகளை சொல்ல அடிபடை காரணம் இத்தகைய மன்னரைதான் வெறும் காமம் கொண்டலையும் கொடூரனாக இப்படம் காட்சி படுத்தியிருபதே. சரி கில்ஜி எந்த தவறும் செய்யாத மன்னரா? அத்தகைய முடிவுக்கும் போக முடியாது. படைகள் சென்ற இடங்களில் கொலை, கொள்ளை நடந்தது உண்மை. அது அந்த கால போர்களங்களின் நேரடி விளைவு. ஏனெனில் போர்வீர்ர்களின் ஊதியம் அவர்கள் அடிக்கும் கொள்ளையையை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. சோமாநாதபுரம் ஆலையம் சூரையாடபட்டதும், தமிழகத்தில் மதுரை, சிதம்பரம் கோவில்கள் கொள்ளையிடப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். இஸ்லாமிய மன்னர்கள் மட்டடுமல்ல, இந்திய அரசர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

உதாரணமாக காவி மதவெறியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி இரண்டுமுறை சூரத்தை கொள்ளையிட்டார். இவை இரண்டு குறித்தும் விரிவான கணக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மராட்டியர்கள் கொள்ளையின் போது சிருங்கேரியில் உள்ள பெண் தெய்வம் சாராதாவின் கோவில் சேசப்படுத்தப்பட்டது. முஸ்லீம் மன்னரான திப்புசுல்தான் அதை மீண்டும் நிறுவினார் என்பது வரலாறு. காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹர்ஷா தேவ் இந்துக்கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த சிலைகளை உருக்கும் முன்பு அவற்றின் மீது மனித மலங்களையும், சிறுநீரையும் கொண்டு அசிங்கப்படுத்தினார். இந்த எல்லா விவரங்களும் படங்களுடன் கல்ஹனரின் “ராஜத்தரங்கிணி”யில் கூறப்பட்டுள்ளது. அவர் தனது வருவாய்த்துறையில் “கடவுள் கவிழ்ப்பு” (தேவோட்படன்) எனும் தனிப்பிரிவையும் கூட்த் துவக்கினார். (ஆதரம்:கோவின் பன்சாரே எழுதிய மாவீரன் சிவாஜி)

மற்றொன்று இப்படத்தின் இறுதிக்காட்சி, பத்மாவதி தன்னுடன் நூற்றுகாணக்கான பெண்களுடன் சிதையில் இறங்கும் காட்சி. இதை சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பதோடு இணைத்துப்பார்க்க முடியுமா என விவாதத்திற்குறியதே. தெரியவில்லை. ஏனெனில் உலகின் நடந்த எல்லா போர்களும் இறுதியில் பெண்கள் உடலின் மீதுதான் ஆதிக்கத்தை நிலைநட்டியே வெற்றியை அறிவிக்கின்றன. ஒரு நாட்டை வெற்றி பெற்றதும் அங்குள்ள பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்படுவதும், கொடூரமாக கொள்ளப்படுவதும் மிக இயல்பாக நடந்துள்ளது. இதை எதிர்க்கும் ஒரு செயலாக பெண்கள் கூட்டு தற்கொலை செய்துகொள்ளும் மரபும் உருவாகியது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இருதிசையை நோக்கி சென்ற கூட்டத்தில் உள்ள மதவெறியர்கள் செல்லும் வழியில் நடத்திய கொடூரங்கள் சகிக்கமுடியாத வடுக்களை எற்படுத்தின. இருபக்கமும் எல்லையில் உள்ள பல கிராமங்களில் எதிர் மத்த்தினர் கைகளில் சிக்கி கணவன், சகோதரன், தந்தை கண்முன்னால் கூட்டு வன்புணர்வுக்கு பெண்கள் ஆளாகும் நிலையில் குடும்பத்தார்கள் கூட்டாக எரிந்தோ, விஷமருந்தியோ தற்கொலை செய்துக்கொண்ட கண்ணீர்மிக்க கதைகள் ஏராளம் உண்டு நம்மிடையே. போர் என்றபெயரில் இலங்கையிலும், மியான்மரிலும் சமகாலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன சொல்கின்றன? ஆக இதை சதி என்பதா? எதிர்ப்பியக்கம் என்பதா? என்ற விவாதம் தவிர்க்க முடியாத ஒன்று.

வரலாற்று பதிவு என்பது மிகவும் நிதானத்துடன் விருப்பு வெறுப்பு இல்லாமல் பதிவு செய்யபடவேண்டியதாகும். ஆனால் இந்த கவலை கொஞ்சமும் இல்லாமல், மதவெறியர்கள் ஆட்சியில் இருக்கும் சூழலில் காவியத்தின் அடிப்படையில் நேர்மையற்ற ஒரு திரைப்பட்த்தை எடுப்பது, இந்த பொறுப்பற்ற படத்தை எதிர்த்து உண்மையில் இஸ்லாமியர்கள் எழுப்பவேண்டிய எதிர்ப்பை இந்து மதவெறியர்கள் எழுப்பியதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

மிகவும் நுட்பமாக தனது மதவெறி முன்முடிவுகளை மெல்ல மெல்ல அமலாக்கிவரும் இந்துத்துவ மதவெறியர்கள் இப்படத்தை முன்வைத்தும் அரசியல் செய்வதும், போரட்டத்தை முன்னெடுப்பதும் தற்செயலான ஒன்றல்ல. மிகவும் திட்டமிடப்பட்டதே. வரலாற்றை மிகவும் கவனத்துடன் கையாளும் நிலைக்கு முற்போக்காளர்களை தள்ளுகின்றனர். கவனத்துடன் கையாளுவோம்

https://m.facebook.com/story.php?story_fbid=1674707515906070&id=100001005148037