Monday, November 13, 2023

ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மை இனக்குழுவை அழிப்பதற்கு என்று பெரும்பான்மை தேசியவாதிகள் வழிமுறைகள்

Vijey baskervijey

பல பல மக்கள், 

செய்தித்தாள்களின் பெரிய தலைப்பை மட்டும் படித்து கடந்து விடும் நம்மை போல சராசரி மக்கள், 

ஆழ்ந்து ஒரு விஷயத்தை படிக்க வாய்ப்பில்லாத நம்மை போன்றவர்கள்,

பாலஸ்தீன பிரச்சனை, ஈழப்பிரச்சனை போன்றவற்றை 

“என்ன பாஸ் இவர்களும் அடிக்கிறார்கள், அவர்களும் அடிக்கிறார்கள். ரெண்டு பேர் மேலயும்தானே தப்பு” என்று நினைக்கிறார்கள். 

குறிப்பாக படித்த இளைஞர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். 

அவர்களுக்காக இந்த பத்தியை எழுதுகிறேன். 

ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மை இனக்குழுவை அழிப்பதற்கு என்று பெரும்பான்மை தேசியவாதிகள் 

ஒரு Plan
ஒரு Algorithm 
ஒரு Flow Chart 

வைத்திருக்கிறார்கள். 

உலகில் எங்கெல்லாம் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறதோ அங்கெல்லாம் இதே முறையைத்தான் பெரும்பான்மை தேசியவாதிகள் எனப்படும் சர்வாதிகாரிகள் செய்வார்கள். 

அந்த Plan, Algorithm, Flow Chart பற்றி இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அது புரிந்துவிட்டால் இந்த மாதிரியான பிரச்சனையில் யாருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்ற தெளிவும் வந்துவிடும். 

இந்த புரிதலை அடைய உண்மையிலேயே உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும். 

மதத்தின், சாதியின், இனத்தின், நாட்டின் பெயரால் சார்பெடுத்த ஆளாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் இந்த சிந்தனையை முழுவதுமாக சிந்திக்க முடியாது. 

Orientation இல்லாமல் இந்த 20 பாயிண்டுகளைம் படித்து அது பற்றி யோசித்தீர்கள் என்றால், உங்களுடன் இருக்கும் நண்பர்களுடம் விவாதித்தீர்கள் என்றால் உலக அரசியலில் முக்கியமான புரிதலை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். 

1. ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனக்குழுவை அடக்குவது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களை பறித்துக் கொள்வது. 

2.தொடர்ச்சியாக அந்த சிறுபான்மை இனக்குழுவை அவதூறு செய்வது. அவர்கள் மிக ஆபத்தானவர்கள் என்ற அவதூறை நாட்டில் பரப்புவது. 

3. சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை அடக்குமுறையை தேசியவாதமாக பிரச்சாரம் செய்வது.  இதுதான் தேசப்பக்தி. அந்த தேசபக்தியில் பெரும்பான்மை மக்களுக்கான உரிமைதான் முக்கியம் மற்றவை அனைத்துமே அழித்தொழிக்கப்பட வேண்டியவை, துரத்தியடிக்கப்பட வேண்டியவை என்று பிறப்பால் இருக்கும் பெரும்பான்மை சராசரி  மக்களை தூண்டி விடுவது. அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்கும் விதமாக தொடர்ச்சியாக விஷ பிரச்சாரம் செய்வது. 

4. ஊடகங்கள், பத்திரிக்கைகள் மொத்தத்தையும் தேசியவாதத்தை ஆதரியுங்கள் என்று மிரட்டி பெரும்பான்மை அடக்குமுறைக்கு துணை நிற்க செய்வது.

5. மொழி, மதம், கலை போன்ற பண்பாட்டளவில் சிறுபான்மையினரை ஒதுக்குவது. அவமானப்படுத்துவது. வாய்ப்பு கொடுக்காமல் பிரதிநிதித்துவம் கொடுக்காமல் பின் தள்ளுவது போன்றவற்றை செய்வது.

6. பெரும்பான்மையினர் வைத்திருக்கும் அரசே சிறுபான்மையினரை வெவ்வேறுவிதமாக மறைமுகமாக கொல்வது. அவர்களை மர்மமாக காணாமல் போக செய்வது. 

7.நியாயம் கேட்கக் போகும் சிறுபான்மையினருக்கு “இந்த அரசு பெரும்பான்மை சர்வாதிகார அரசு. இதில் இருக்கும் கோர்ட், காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகள், ராணுவம் அனைவருமே சர்வாதிகாரத்தன்மையில்தான் இயங்குவோம். சமத்துவம் எல்லாம் இங்கே கிடையாது” என்று சிறுபான்மையினரிடம் திணித்து பயமுறுத்துவது. 

8. ஜனநாயக அம்சத்தில் நம்மால் இனி எதுவுமே செய்ய முடியாதோ என்று சிறுபான்மையினரை கலங்கி நிற்க செய்வது. 

9. ஆனாலும் வேறு வழி என்ன இருக்கிறது என்று சிறுபான்மையின மக்கள் ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை சாத்வீகமாக தெரிவிப்பார்கள். குழு சேர்வார்கள். கூட்டம் போடுவார்கள். போராடுவார்கள். 

10. இதற்காக காத்திருந்தது போலவான பெரும்பான்மை சர்வாதிகாரம் “பாருங்கள் நாட்டுக்கு எதிராக கூட்டம் போடுகிறார்கள்” என்று கூட்டத்தை அடிப்பது, அவதூறு செய்து சிறையில் தள்ளுவது. போராட்டத்தை அடக்குவது. பல போராட்ட சிறுபான்மையின தலைவர்களை கொல்வது. 

11. இப்போது சிறுபான்மையினத்தில் உள்ள இளைஞர்கள் “நீதித்துறையும் காவல்துறையும் நமக்கு ஆதரவில்லை. நான் ஜனநாயக ரீதியாக போராடினால் பெரும்பான்மை சர்வாதிகாரம் நம்மை அடக்கிக் கொல்கிறது. நாமும் பதிலுக்கு ஆயுதம் தூக்கி ஆயுதவழியில் போராடினால்தான் விடிவு கிடைக்கும்” என்று ஆயுதப்போராட்டத்தில் இறங்குவார்கள். அதாவது சர்வாதிகாரம் சிறுபான்மையினரை ஆயுதத்தை தூக்க வைக்கும் அளவுக்கு நெருக்கடியை கொடுக்கும். 

12. சிறுபான்மையினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்காக காத்திருந்தது போலவான பெரும்பான்மை சர்வாதிகார தேசியவாதிகள் தங்கள் பக்கத்து நாடுகளிலும், உலகெங்கும் உள்ள நாடுகளிலும் “எங்கள் நாட்டில் தீவிரவாதப் பிரச்சனை உள்ளது. அப்பிரச்சனையில் நீங்கள் உலக நாடுகள் தேசியவாத அரசான எங்களுக்குதான் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று ஆதரவை கோரும். எக்காரணம் கொண்டு ஏன் தீவிரவாதம் தலைதூக்கியது என்று மற்ற நாடுகள் கேட்காதவாறு தன் பிரச்சாரத்தை பெரும்பான்மை சர்வாதிகாரம் செய்துவிடும். 

13. சிறுபான்மையினர் ஆயுதப் போராட்டத்தை பெரும்பான்மையில் பிறந்த சராசரி மக்களிடம் காட்டி “பார் இவன்கள் நம் நாட்டை அழிக்கப் பார்க்கிறான்கள். இவன்கள் தீவிரவாதிகள்” என்று திரும்ப திரும்ப சொல்லி பெரும்பான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி வைத்துக் கொள்ளும். 

14. இன்னொருபுறம் சிறுபான்மை போராட்டத்தை உலக நாடுகளிலும் தன் நாட்டிலும் காட்டி அப்பாவி சிறுபான்மையின குடியிருப்புகளில் தாக்குதலை நடத்தும் அந்த பெரும்பான்மை தேசியவாதம் பேசும் சர்வாதிகாரம். 

15. சிறுபான்மை போராட்டக் குழுவில் ஈகோ காரணமாக ஏற்படும் பிளவை பயன்படுத்தி சர்வாதிகாரம் சிறுபான்மை போராட்டக் குழுவை உடைத்து அதில் வலிமையற்ற போராட்டக் குழுவிடம் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்துகிறோம் என்று உலகை ஏமாற்றும். 

16. முன்னை விட சிறுபான்மை இன மக்களை பண்பாட்டு அளவிலும், வளங்களை பங்கு கொடுப்பதிலும், உரிமையளவிலும் அடக்கும். 

17. வேறு வழியே இல்லாமல் சிறுபான்மை போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்த அதனால் தங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை ஊடகங்கள் வாயிலாக மிகப் பிரம்மாண்டமாக காட்டி ஒவென்று அழுது பரிதாபம் சம்பாதிக்கும் அந்த பெரும்பான்மை சர்வாதிகாரம். 

18. இப்போது உலக மக்கள், சொந்த நாட்டு மக்கள், சிறுபான்மையினத்திலேயே இருக்கும் அப்பாவி மக்கள், தன் நடுக்கத்தையும் பயத்தையும் நடுநிலை என்ற போர்வையில் பேசும் அறிவார்ந்த லிபரல்கள் அனைவரும் சிறுபான்மை போராட்டக் குழுவினரை “இருந்தாலும் இவ்வளவு அநியாயமாக நீங்கள் இதை செய்திருக்க கூடாது” என்பார்கள். இதுதான் பெரும்பான்மை சர்வாதிகாரத்துக்கு வேண்டும் என்பதை அறியாமல் அதை செய்வார்கள். 

19. இப்போது பெரும்பான்மை சர்வாதிகாரத்துக்கு மாபெரும் அதிகாரம் கிடைத்துவிட்டது. 

சிறுபான்மை போராட்டக்காரர்களை கொல்ல வேண்டும் என்ற நிலையில் சிறுபான்மை அப்பாவி மக்களை கொன்றுவிடுவோமே என்ற சுய அச்சமும், உலகு ஏதோ சொல்லுமே என்ற பயமும் இப்போது பெரும்பான்மை சர்வாதிகார தேசியவாதிகளுக்கு முற்றிலுமாக போய்விடுகிறது. 

அந்த பயமற்ற நிலையில், கையில் ஏராளமான நவீன ஆயுதங்கள் உள்ள நிலையில் 

பெரும்பான்மை சர்வாதிகாரிகள் முடிவை மாற்றுகிறார்கள். 

சிறுபான்மை அப்பாவி மக்கள் செத்தாலும் பரவாயில்லை.
சிறுபான்மை குழந்தைகள் கருகினாலும் பரவாயில்லை.
சிறுபான்மை தாயின் வயிற்றில் புரளும் சிசுக்கள் சிதைந்தாலும் பரவாயில்லை.

அவர்களை கொல்லவேண்டும். 

நம் நோக்கம் சிறுபான்மை இன மக்களை இந்த நிலத்தை விட்டு ஓட விடுவதுதான். அதை பக்காவாக திட்டமிட்டு கொண்டு வந்துவிட்டோம். 

இனிமேல் என்ன என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். 

20. மொத்தமாக சிறுபான்மை இன மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசியும், மருத்துவமனையை கூட விட்டு வைக்காமல் அழித்தும், No War Zone யில் கூட குண்டுகளை இட்டு அழித்தும் ஒரேடியாக அந்த மக்களை அழித்து நிலத்தை பெரும்பான்மை மக்கள் கைவசப்படுத்துகிறார்கள்.

வெறுமே மனித நேயம் கொண்ட மனதை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. 

மேலே சொன்ன அடக்குதல் முறையை புரிந்து கொள்ள வேண்டும். 

உலகெங்கும் சிறுபான்மையினரை பெரும்பான்மை தேசியவாதிகள் இப்படித்தான் அடக்குகிறார்கள். 

அந்தப் பார்வையில் இம்முறையை ஒரு கருத்தாக பார்ப்பதை தவிர்த்து ஒரு பொருளாக பார்க்கும் அறிவு வளர வேண்டும். 

அப்படி பொருளாக பார்க்கும் போது அதை எந்த இடத்தில் எப்படி தகர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சியும் வந்துவிடும். 

அந்த விழிப்புணர்வு உலக அரசியலுக்கும், உலக மக்களுக்கும் நல்லது செய்யும்.