Saturday, December 31, 2016

பேரழிவு 23 - பிரதமரின் டெட்லைன் முடிந்தது.

பிரதமரின் டெட்லைன் முடிந்தது.

நக்கலடிக்க, பெட்ரோல்/டீசல் கேன் ஸ்பான்சர் செய்ய, மீம்ஸ்களில் ஒட்ட என எல்லாமும் செய்ய முடியும். ஆனால், நாம் கேட்க வேண்டிய கேள்விகளை அடுக்குவோம்.

1 ) டிச. 30 வரை வங்கியில் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவு ?

2 ) டிச. 30 வரை ரிசர்வ் வங்கியால், வங்கிகளுக்கு தரப்பட்ட புதிய தாள்கள் எவ்வளவு ? அதன் மதிப்பு எவ்வளவு ?

3 ) இடைப்பட்ட 50 நாட்களில் இருந்த 2.15 இலட்சம் ஏ.டி.எம்களின் SLA என்ன ? எத்தனை ஏ.டி.எம்கள் இயங்கின ? எவ்வளவு மணி நேரத்திற்கு இயங்கின ? எவ்வளவு மதிப்புள்ள தொகையை மக்களுக்கு அளித்தன ?

4 ) ஏ.டி.எம்களின் உள்கட்டமைப்பினை புதிய தாள்களுக்கு ஏற்றாற்போல மாற்றுவதற்கு நேரமெடுத்தது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இதுவரை எத்தனை ஏ.டி.எம்கள் புதிய கட்டமைப்போடு வெளியிடப்பட்டிருக்கிறது ? இன்னும் எத்தனை ஏ.டி.எம்களை மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும் ? அதற்கான கால அளவென்ன ?

5 ) இதுவரை புழக்கத்தில் விடப்பட்ட புதிய தாள்களை அச்சடிப்பதற்கு எவ்வளவு செலவானது ? இன்னும் எவ்வளவு புதிய தாள்களை அச்சடிக்க வேண்டும் ? அதற்கான கால அளவு என்ன ? செலவென்ன ?

6 ) நவ. 10லிருந்து டிச. 30 வரை வங்கியில் வைக்கப்பட்ட, புதியதாக பழைய தாள்களைக் கொடுத்து வங்கியில் சேர்க்கப்பட்ட ரொக்கத்திற்கு என்ன வட்டி தருவீர்கள் ? வட்டியை எப்படி கணக்கிடுவீர்கள் ?

7 ) நாடெங்கிலும் 4,200 கோடிகள் வரை கறுப்புப் பணம் (பழைய, புதிய, கணக்கில் வராத) வருமானவரித் துறையினால் பிடிக்கப்பட்டது என்று செய்திகள் வருகிறது. பிடிபட்டவர்களுக்கு (சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் உட்பட) பணத்தினை யார் தந்தார்கள் ? அதனுடைய சீரியல் எண்களை வைத்து ரிசர்வ் வங்கியால் எந்தெந்த வங்கிகள், கிளைகளுக்கு இந்த தாள்கள் தரப்பட்டதென்று கண்டறிய முடியாதா ? அப்படிக் கண்டறிந்தால் அந்த வங்கிகளுக்கும், கிளைகளுக்கும் என்ன தண்டனை ?

8 ) போலிப் பணம் ஏற்கனவே புழக்கத்தில் வந்து விட்டது. இதற்கு முன்னால் சொல்லப்பட்ட கணக்கில் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் வெறும் 0.028% அளவு (சற்றேறக்குறைய 400 கோடிகள்) தான் fake currencies என்று சொல்லப்பட்டது. இப்போது வந்திருக்கும் புதிய கரன்சிகளுக்கான போலிப் பணம் இந்தியா முழுக்க பரவ எவ்வளவு நாட்களாகும் ? எத்தனை நூறு, ஆயிரம், இலட்சம் கோடிகள் புதிய போலிப் பணம் வருமென்று அரசு நினைக்கிறது ?

9 ) 50 நாட்கள் தவம் முடிந்தது. எப்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தமிழ்நாட்டில் 'தை’-க்கு பிறகு தான் ஏராளமான திருமண முகூர்த்தங்கள் வரும். அதற்கு செலவு செய்ய வேண்டும். விதிமுறைகள் தனிநபர், நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் என எப்போது தளர்த்தப்படும் ? அதை தளர்த்தினால் அதை ஈடுகட்டுவதற்கான பணமும், கட்டமைப்பும் வங்கிகளிடத்தில் இருக்கிறதா ?

உங்களுடைய உரையில் இதற்கெல்லாம் பதில் வரும் என்று நம்புகிறோம் பிரதமரே! - நரேன் ராஜகோபாலன்

பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்

நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி..

பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்:

பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
**************************************************************************
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக தற்போது புதுச்சேரியில் மினி பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது நாள் ஒன்றுக்கு 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை 3 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 2 கட்ட பரிசீலனை புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசீலனை சென்னையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே 3-ம் கட்ட பரிசீலனையையும் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 2-ம் முதல் இந்த மையம் முழு அளவில் செயல்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெற சென்னைக்கு வர வேண்டிய அவசி யமில்லை.
பாஸ்போர்ட் பெற சில விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை தற்போது எளிமையாக்கி உள்ளது.

இதன்படி, 1989-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. ஆனால், இனி அது தேவையில்லை. அதற்குப் பதிலாக தங்களது பிறந்த தேதி இடம் பெற்றுள்ள பள்ளிச் சான்றிதழ்கள், பான்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாண்டுகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் மற்றும் தத்து குழந்தைகள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது தந்தை, தாய் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பெயர்களை குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பெற்றோர் பெயர் மட்டும் குறிப் பிட்டால் போதுமானது.

இதற்காக விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய பின்னிணைப்புகளில் (அனெக்சர்ஸ்) முன்பு நோட்டரி பப்ளிக், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சான்று அவசியமாக இருந்தது. இனி, விண் ணப்பதாரரே ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சுய கையொப்பம் (செல்ப் அட்டெஸ்டட்) இட்டு சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும், திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. விவாக ரத்து பெற்றவர்கள் தங்களது விவாகரத்து சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவை யில்லை.

அதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே சுய கையொப்பம் இட்ட சான்றிதழை அளித்தால் போதும். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் பெறுவது அவசியமாக இருந்தது. இனி அவர்கள் தங்களது துறைக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

பெற்றோரை இழந்து காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற அந்தக் காப்பகத்தின் நிறுவனர் சான்றிதழ் அளித்தால் போதும். அதேபோல், சாதுக்கள், சன்னியாசிகள் பாஸ்போர்ட் பெற தங்களது ஆன்மிக குரு தரும் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 475 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 319 பேருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அசோக் பாபு கூறினார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 31.12.2016

Thursday, December 29, 2016

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு

*தீண்டாமைக்கு எதிரான  மனவிளையாட்டு* :

இந்தியாவில் 'இந்து பட்டியில் சாதியில்' பிறந்த ஒருவர் தீண்டாமையை வாழ்க்கையில் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. எனினும் அவ்வாறான தீண்டாமையிலிருந்து தப்புவதற்கு நமது மக்கள் பல்வேறு மன தந்திரங்களை கையாளுகின்றனர்.

இதனை மனோதத்துவத்தில் defence mechanism என்று சொல்லுவார்கள்.

தீண்டாமையை முற்றிலும் அடியோடு் அழிக்க, அனைவரும் சமத்துவம் எனும் நிலையை அடைய 'எது வழி' என்று பாபாசாகேபின் வழியில் அறிந்து கொள்ளாத வரை இவ்வாறான மனவிளையாட்டுகள் (defence mechanism) மூலம் தீண்டாமையிலிருந்து தப்ப முயல்வது இயல்பே.அவற்றை ஒவ்வொன்றாக காணுவோம்.

1. *தீவிர இந்துவாக இருப்பது*

இவ்வகையில் வருவோர் மிக அதிகமாக இந்து தன்மையுடன் தங்களை வெளிப்படுத்தி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பி விடலாம் என்று என்னுகின்றனர்.

இவர்கள் மத அடையாளங்களை தீவிரமாக வெளிப்படுத்துகின்றனர். பெரிய விபூதி வைத்து கொள்வது, வருடத்திற்கு நான்கு ஐந்து முறை திருப்பதி் போன்ற இடங்களுக்கு பயணிப்பது இவர்கள் வழக்கமாகும். இதில் குறிப்பிட தகுந்த விடயம் அவர்கள் திருப்பதி் செல்வதோ அல்லது வேறு வகையான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் படி அவர்கள் பார்த்து கொள்கின்றனர் என்பதாகும்.

2. *சைவ உணவுக்கு மாறுவது*

மாட்டிறைச்சியை இழிவாக இந்துக்கள் கருதுவது மாட்டிறைச்சி மோசமானது என்பதனால் அல்ல. மாறாக அதனை பட்டியல் சாதியினர் உண்கின்றனர் என்பதற்காக தான். தவறு மாட்டின் மேல் அல்ல.

ஆனால் இதனை எதிர் நிலையில் புரிந்து கொள்ளும் சிலர் நாம் முற்றிலும் சைவமாக மாறிவிட்டால் சமூக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
உண்மையில் நீங்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் கூட இந்துக்கள் நீங்கள் இந்துவாக உள்ளவரை உங்களை மதிக்க மாட்டார்கள் (காரணம் கடைசியில்).

3. *சாதியை முற்றிலும் மறைத்து கொள்வதில் வெற்றி பெற்றவர்கள்*

பலர் இதில் வெற்றி கண்டுள்ளனர். முற்றிலும் தங்கள் சாதியை மறைத்து கொண்டு பொது சமூகத்தில் வாழ்கின்றனர். பொது சமூகத்தினர் தலித் மக்களை இழிவாக பேசும் போது வேறு வழியின்றி இவர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து 'ஆமா, ஆமா அவுங்க எல்லாம் ஒரு மாதி்ரி' என்று சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளோர் இவர்கள்

4. *சாதியை மறைப்பதில் தோல்வி அடைந்தோர்* 

இவர்கள் தான் என்ன சாதி என்று மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து கொள்பவர்கள்.ஆனால் உண்மையில் இவர்களை சுற்றி உள்ளோர் இவர் யார் என்று அறிந்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் பரிதாபமாக இவ்வறான நமது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அற்று பரிதாப நிலையில் இருப்பார்கள்.

5. *கல்வி , பொருளாதாரம் தங்களுக்கு மதிப்பை பெற்று தரும் என்று நம்புவோர்*

டாக்டர்.அம்பேட்கர் கல்வி ஒன்றே இழிவு நீங்க வழி என்று சொன்னதாக இந்துக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் அவரின் 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவது' என்ற கருத்தியலை மறைப்பது.

இந்த பிரச்சாரத்தை நம்பியோர் கல்வியும் ,பொருளாதாரமும் ஒரு நாள் நமக்கு சம மரியாதை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம்மை இழிவுக்கு உள்ளாக்கும் இந்துக்கள் அனைவரும் மெத்த கல்வி கற்றவர்களும் அல்ல , அம்பானி குடும்பமும் அல்ல.

6. *நாம நம்ம வேலையை பார்ப்போம்*

இந்த வகையினர் தீண்டாமை இருந்தால் இருந்துவிட்டு் போகட்டும் நாம் நமது வேலை பார்ப்போம் என்று ஜாலியாக இருப்போர். இது உடலி்ல் உள்ள தொழு தோயை பற்றி கவலைபடாமல் ஜாலியாக இருக்கும் நோயாளியை போன்றது.

7. *அரசியல் அதிகாரம் சம மரியாதை பெற்று தரும் என்று நம்புவோர்*

இந்தியாவில் SC பிரிவினர் 16.6% உள்ளனர். இவர்கள் ஓரணியில் இல்லாமல் உட்சாதி் உணர்வோடு பிரிந்தும் உள்ளனர்.சிலர் தங்களை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி கொள்கின்றனர். இவ்வாறான சிறுபாண்மையினர் அரசியலில் எந்த அளவு சாதிக்க இயலும் என்பது எண்ணிக்கை அடிப்படையில் விவாதத்துக்கு உரியது.

எனினும் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான போராட்டம் அவசியம் தேவை.அதற்கான நமது இயக்கங்கள் தலைவர்கள், வளர்த்து எடுக்கப்பட வேண்டியோர். இது வேறு விடயம்.

ஆனால் இங்கே புரிதலில் குழப்பம் யாதெனில் அரசியல் அதிகாரம் தீண்டாமையை ஒழிக்குமா? இல்லையா? என்பது தான். இதற்கான பதில் ஒழிக்காது என்பதே.

எளிமையாக சொன்னால் தீண்டாமை என்பது பண்பாட்டு் பிரச்சினை,அரசியல் பிரச்சினை அல்ல. எந்தவிதமான அரசியல் பிரதிநிதித்துவமும் அற்ற இசுலாமியர்கள்,கிறித்துவர்கள் சம மதிப்பை இந்தியாவில் பெறுகின்றனர். ஆனால் தனித்தொகுதிகளின் பயனால் எப்போதும் 15% MLA/MP களை  கொண்டிருக்கும் நாம் சம மதிப்பை பெற இயலவில்லை என்பது கவனிக்க தக்கது.
நான்கு முறை முதல்வராக இருந்த அன்னை மாயாவதியின் உத்திர பிரதேசம் இன்றும் வன்கொடுமைகளில் முன்னனியில் உள்ளது.

இங்கே இந்த கருத்து அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டாம் என்பதாக புரிந்து கொள்ளதக்கதல்ல. அது நிச்சயம் வேண்டும். ஆனால் அது தீண்டாமையை ஒழிக்குமா ? என்றால் இல்லை என்பதை தான் நாம் புரிந்து்கொள்ள வேண்டும்.

(மீண்டும் கூறுகிறேன்,
இது அரசியல் அதிகாரம் நமக்கு தேவையில்லை என்று புரிந்து கொள்ளதக்கதல்ல)

8. *நாங்க SC இல்லை' பிரிவினர்*:

இது மிகவும் முக்கியமான ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய பிரிவாகும். இந்த பிரிவில் உள்ளோர் SC என்பதன் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற ஆசையற்றோர்.

அதாவது தீண்டாமைக்கான நிரந்திர தீர்வு குறித்து அக்கறையற்றோர்.

மாறாக தங்களை SC அல்ல என்று சொல்லி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் SC பிரிவிலிருந்து அரசியலமைப்பு சட்டப்படி யாரும் வெளியேறவே முடியாது என்ற உண்மை இவர்களுக்கு தெரிவதில்லை.

மேலும் இவர்களின் மனதந்திரம் வேறு சிலரை தீண்டதகாதவர்களாக காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பபுகணக்கு போடுகிறது. அதாவது பட்டியில் சாதியில் உள்ள வேறு சாதியைவிட தங்களை உயர்வாக காட்டி கொள்வதன் மூலம் தப்ப எண்ணுவது. (நாங்க இல்ல , அவுங்க தான்)

இங்கே முக்கியமானது இவர்கள் தீண்டாமையை ஒழிக்க பாடுபடவில்லை என்பதும் வேறு ஒரு சாதியை பலி கொடுத்து தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்பதுமாகும்.

SC யின் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்குவது தான் நியாயமானது என்பது புரியாமல் தாங்கள் SC அல்ல என்று நிறுபிக்க முயல்பவர்கள். இந்த பிரிவினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து.

ஏனெனில் ஏதோ ஒருவகையில் SC பிரிவிலிருந்து இவர்கள் அமானுசிய முறையில் நீக்கப்பட்டுவிட்டால் இட ஒதுக்கீடும் கிடைக்காது, வன் கொடுமை சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் பெருமளவு வன்முறையை இவர்கள் சந்திக்க நேரிடும். மேலும் சாதியை சொல்லி (டேய் *** பயலே) திட்டினால் ஒரு வழக்கு கூட தொடுக்க இயலாது.

9. *Inter caste சாதி மறுப்பு திருமணத்தில் பிறந்தோர்*

இந்த பிரிவினரும் மேற்சொன்ன பிரிவினரும் 'ஒத்த அடிப்படை' கருத்தாக்கத்தில் உள்ளோர் தான்.

அதாவது நாங்க SC இல்ல என்று ஏதாவது ஒரு வகையில் நிறுவ முயல்பவர்கள்.

"எங்க அப்பாவோட ஒன்றுவிட்ட மாமா சாதி மறுப்பு திருமணம் செய்தவர் மேலும் என் அம்மாவின் அப்பாவின் அப்பா திருமணம் செய்தது ஒரு முதலியார் "

இவ்வாறான ஏதாவது ஒரு கதையை சொல்லி தங்களின் ரத்தம் SC ரத்தம் இல்லை என்று சொல்லி தப்ப முனைபவர்கள்.

ஆனால் வரலாறு முழுவதும் சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டே தான் உள்ளது என்பதும் அதனால் சாதியோ அல்லது தீண்டாமையோ ஒரு போதும் ஒழியவில்லை/குறையவில்லை என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை

********

ஆகவே மக்களே
நீங்கள் மேற்கண்ட எந்த பிரிவில் இருந்தாலும் உங்களால் தீண்டாமையலிருந்து தப்ப இயலாது என்பதே உண்மை.

இந்துக்கள் உங்களை கண்டறிந்து உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தான் தருவார்கள்.

ஏனெனில் இந்துகளுக்கு நீங்கள் வேண்டும். அதாவது SC என்பதன் பின் ஒரு இழிவு இருந்தால் தான் அவர்கள் உயர் சாதியாக ஆக முடியும். அதற்காக அவர்கள் உழைப்பார்கள்.

ஒரு வேளை அந்த இழிவு இல்லை எனில் அவர்களின் உயர்சாதி பெருமை சரிந்துவிடும், அது அவர்களுக்கு ஆபத்தானது.

அதனால் ஒவ்வொரு இந்துவின் கடமை  இந்த சாதி்வேறுபாட்டை கட்டிu காப்பாற்றுவது ஆகும். அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பது நம்மை இழிவு படுத்த அல்ல. *மாறாக அவர்களின் உயர் நிலையை உறுதிபடுத்த கொள்ளவே*

ஆகவே தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது எப்படியாவது SC பட்டியிலில் இருந்து வெளியேறுவதோ அல்லது தங்களை மறைத்து கொள்வதோ அல்ல.

மாறாக SC என்பதன் மீதுள்ள இழிவை இந்து மதத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதன் மூலம் துடைத்து கொள்வதாகும்.

அது சானதான முறைகளில் இருந்து *பாபாசாகேபின் வழியில் வெளியேறி பூர்வீக பௌத்த* கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைத்து அதன் வழியே நாங்கள் இந்து தீண்டதகாதோர் அல்ல, வேறு மதத்தை சார்ந்தோர். நாங்கள் பெருமைக்குறிய புத்திஸ்டுகள் என்று முழுங்குவதே ஆகும்.

*Dr.Satva*

பேரழிவு 22

பொருளாதார மடசாம்பிராணி மோடிக்கு ஒரு சாமான்யக் குடிமகனின் அறிவுரை இதோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மோடியை தோளில் தூக்கி சுமந்து திரியும் அறிவுஜீவிகளுக்கும் இது சமர்ப்பணம்...:----

பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா? என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.

எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். +2வில் 1000 மார்க்குக்கு mமேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.

சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000/-க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு . . .

                                                                                       பணமில்லா வர்த்தகம்

POS Machine வாடகை மாதம் 850 * 12                                             10,200.00

ஒரு நாளைக்கு 6000/- ரூபாய்க்கு 0.75% POS
Transaction charge 45/- 365 நாளைக்கு 45*365                                    16,425.00

அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ATMஇல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23/-சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230*12                     276.00

SMS Charges 30/- x 4 Quarter                                                                        120.00

Bank Book keeping / folio charges, etc                                                           200.00

                                                                                                                    --------------

Total Bank Charges                                                                                      27,221.00

                                                                                                                    --------------

இதை தவிர, POS மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000/- ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000/-).

இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000/- வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000*365 = 21,90,000/-. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் TIN வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100/- ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200/-. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், Income Tax தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500/-.TIN & PAN வாங்க முதலீடு 1000/-.

இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500/-. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000/- வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16%.இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.

இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் neft transfer charges, நான் பொருளை வாங்கும்போது POS charges என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு, வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.

அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.

கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடிக்கப் போகிறோமோ?