Sunday, December 31, 2023

"வள்ளல்" எம்ஜியாரும், "ரேசன் கடை" நிறுவிய கலைஞரும்

Arun Bala

காட்சி 1:
கருப்பு சுப்பையா 1960களில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், 80-90களில் நடித்த நகைச்சுவை பாத்திரங்களுக்காக அறியப்பட்ட நடிகர். பெரிய மருது படத்தில் ஈயம் பூச கவுண்டமணியிடம் இவர் வரும் காட்சி மீம்ஸ்-ஆக இணையத்தில் பிரபலம். அந்த காட்சிக்காக உடம்பெல்லாம் காரீயம் (lead) கலந்த பெயிண்டைப் பூசியவருக்கு, காரீய விசம் ஏறி, தீவிரமாக உடல் நலம் குன்றி, அடுத்த நாள் காலையில் உயிருக்குப் போராடினார். அதற்குப் பிறகு ஒரு வருடத்தில், கொஞ்சம் சரியாகி, ஒரு சில படங்கள் நடித்தாலும், அதன் பின் ஒரே இறங்கு முகமாகித் தன் கடைசி காலத்தில் வறுமையிலும், நோயிலும் மிகவும் வருந்தி வாடித் தான் இறந்து போனார். இதில் முக்கியமான விசயம், மேலே சொன்ன, அந்த, உடம்பெல்லாம் காரீய பெயின்ட் பூசிய காட்சிக்கு அவருக்குக் கிடைத்த மொத்த சம்பளம் வெறும் 300 ரூபாய் மட்டுமே! இந்த நவீன காலத்திலும், தொழிலாளர் பாதுகாப்பு, காப்பீடு, மருத்துவ உதவி, வைப்பு நிதி, ஓய்வூதியம் எதுவும் இல்லாத, சிறிதும் முறைப்படுத்தப் படாத ஒரு துறையில், ஒரு சிலருக்கு மட்டும் பல கோடிகளில் சம்பளம் கிடைக்கும் ஒரு துறையில், ஒருவரைச் சாகடித்த வேலைக்கு, வெறும் 300 ரூபாய் மட்டுமே அவருக்குச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உழைப்புச் சுரண்டல்?!! ஆனால் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், அந்த படப் பிடிப்பு நடந்த நாளில், சுப்பையாவுக்கும் படத்தின் கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்ட அதே தரமான சுவையான அசைவ உணவு வழங்கப்பட்டிருந்தது. அவரும் அதை மகிழ்ச்சியாக உண்டிருப்பார், வேறு தேவையற்ற கவலைகள் எதுவும் இல்லாமல்! மனிதனுக்கு மகிழ்ச்சி தானே முக்கியம்?!

காட்சி 2:
என் துவக்கக் காலத்தில், 90களில் டிவிஎஸ் குழும நிறுவனம் ஒன்றில் நான் பணி புரிந்த போது, மூன்று வேளையும் இலவசமாக, அளவில்லாமல், வாழை இலை போட்டு உயர்தர சைவ உணவும், அவ்வப்போது டீயும், காபியும், பலகாரமும், சாயந்திரம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு குடும்பத்திற்குத் தேவையான அளவு திண்பண்ட பொட்டலமும், இது போக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, நிறுவனர் தினம் என மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிலோ கணக்கில் இனிப்புகள், தின்பண்டங்கள், விருந்துகள் என ஓயாத தீனி போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அன்பில், கவனிப்பில் ஒரு நாளைக்குச் சாதாரணமாக 12 மணி நேரமும், வாரத்திற்கு 6 முதல், சில நேரம் 7 நாட்களும் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்துக் கொண்டு இருப்போம் இளம் பொறியாளர்களாகிய நாங்கள். திடீரென, சக நண்பன் ஒருவன், இப்படியெல்லாம் தீனி போடாத பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இரண்டு மடங்கு சம்பளத்திற்கு வேலை மாறிப் போன போது தான் அந்த இலவச தீனியின் உண்மை விலை உறைத்தது எங்களுக்கு. ஆனாலும், சோறு கிடைக்குமிடம் சொர்க்கம் அல்லவா?!

காட்சி 3:
'உலக கொடுத்தல் குறீயீடு' என்கிற பெயரில், 'சாரிட்டீஸ் எய்டு பவுண்டேசன்' என்கிற தொண்டு நிறுவனம், வெவ்வேறு நாட்டு மக்களும் எவ்வளவு தான, தர்ம, தன்னார்வலத் தொண்டுகள் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய புள்ளி விவரத்தை அவ்வப்போது  வெளியிட்டு வருகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள், கலாசார வேறுபாடுகளைத் தாண்டி இந்த புள்ளி விவரத்தில் புலப்படும் விசயம் என்ன வென்றால் எந்த நாட்டில் எல்லாம் எதோ ஒரு அளவிலாவது உருவிலாவது சோசலிசம், பலமான சமூகப் பாதுகாப்பு நிதித் திட்டம் (சோசியல் செக்யூரிட்டி) , வலுவான ஓய்வு ஊதிய முறை, தீவிரமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்ட திட்டங்கள், வேலைப் பாதுகாப்பு, சமூகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பணக்காரர்-ஏழை வருவாய் வேறுபாடுகள் எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தான தான தர்மம் குறைவாக நடக்கிறது. எங்கெல்லாம் இவை இல்லையோ அங்கே தான தர்மம் அதிகமாக நடக்கிறது. எந்த நாட்டில் சமூகப் பாதுகாப்பு இல்லையோ அங்கே தனி நபர்களின் கருணையை நம்பித்தான் விளிம்புநிலை மக்கள் தப்பிப் பிழைக்க வேண்டி இருக்கிறது. எடுத்துக் காட்டாக, இந்த குறியீட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எல்லாம் முதல் பத்து இடங்களில் வர, இவைகளுடன் பொருளாதார வளர்ச்சியில் ஒத்த நாடுகளாகிய ஜெர்மனி 20ம் இடத்திலும், பிரான்ஸ் 94ம் இடத்திலும் தான் வருகின்றன. அமெரிக்கத் தர்ம பிரபுக்கள் வாழ்க! பிரெஞ்சுக் கஞ்சர்கள் ஒழிக!

காட்சி 4:
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் முதன்முறையாக ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த நாளில் நான் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மனைவி புதிய ஃபிரிட்ஜைக் காட்டி பத்தாயிரம் ரூபா கொடுத்து 'பத்துக் குழி' வாங்கியிருக்கோம் என்று வேடிக்கையாகச் சொன்னார். பத்துக் குழி என்பது கிராமங்களில் மடி ஆசாரம் பார்க்கும், உயர் சாதியினர் எனறு சொல்லிக் கொண்டவர்கள்  வீடுகளில் அடுக்களையின் பின்புறத்தில் ஒரு மூலை. அந்த மூலையில், அன்றன்று மிஞ்சிய உணவை இரவு போட்டு வைத்திருப்பார்கள், அந்த உணவினால் மற்ற நல்ல உணவிற்கோ, மனிதர்களுக்கோ தீட்டுப் படாமல் இருக்க. அந்த 'பத்து' உணவு அடுத்த நாள் காலை வீட்டுக்கு வரும் பண்ணையாள்களுக்கு, வேலை காரர்களுக்கு, மாடுகளுக்குக் கொடுக்கப் படும். அவர்கள் அனைவரும் கிடைக்கும் இலவச உணவைச் சாப்பிட்டுச் சந்தோசமாக நன்றாக வேலை பார்ப்பார்கள். தர்மம் வாழ்வதே கிராமங்களில் தான் என்று சும்மாவா சொன்னார்கள்?! கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் கோயில் நுழைவுப் போராட்டங்களைப் பெரியாரின் திராவிட கழகம் நடத்திக் கொண்டிருந்த போது, பல சாதிச் சங்கங்களும் தங்களின் ஆன்மீக, சமூகப், பொருளாதார உரிமைகளுக்காகச் செயற்பட்டு, மனு போட்டு, வழக்கு நடத்தி, போராடிக் கொண்டதோடு, தத்தம் சாதித் தொழில்களுக்கானத் தொழிற் சங்கங்களாகவும் செயல்பட்டு, அந்தந்த தொழில்களை முறைப்படுத்தத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் கொண்டு வந்த முதல் மாநாட்டுத் தீர்மானங்களை எடுத்துப் பார்த்தால், அதில், இனி மேல் சோற்றுக் கூலி, அரிசிக் கூலி முறைகளை அறவே ஒழித்துப், பணக் கூலி மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்கிற தீர்மானம் தவறாமல் இருக்கும். இப்படி வர்ணாசிரம சமூகக் கட்டமைப்பைச் சிதைத்த, பணத்தாசைப் பிடித்த பாதகர்களாகக், கொடூரர்களாக இருந்திருக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கொதிக்கிறதல்லவா?!

காட்சி 5:
கடைசியாக மீண்டும் திரைப்படத் துறைக்கே வருவோம். 'புலன் விசாரனை' படம் வெளி வந்த வாரம் அது. படம் மிகப் பெரிய வெற்றிபெறுகிறது. அந்த படத்தை இயக்க பதினைந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கிய அறிமுக இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து அடுத்த படம் இயக்கச் சொல்கிறார் தயாரிப்பாளர் ஜீவி. சம்பளம் இருபத்தைந்து என்று பேச, குறைவாக இருக்கிறதே என்று தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்ட இயக்குநருக்கு முன்பணம் காசோலையாகக் கொடுக்கப்பட, அதில் எதிர் பார்த்ததை விட ஏகப்பட்ட சைபர்கள் இருக்க, குழம்பிய இயக்குநருக்கு, அப்போது தான் பேசப்பட்ட சம்பளம் இருபத்தைந்து ஆயிரம் அல்ல இலட்சம் என்று புரிந்து, லேசாகத் தலைச் சுற்றி நிற்பதற்குள், அது போக, வேற்று மொழி உரிமையில் 40% பங்கும் உண்டு என்று  செல்லப்பட மயக்கமே வந்திருக்கிறது. அந்த நேரத்தில் முந்தைய படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவசரமாக அழைப்பு வர, அங்கே சென்றிருக்கிறார். அங்கே அடுத்த படம் 'கேப்டன் பிரபாகரன்' எடுக்கப் 'பணிக்கப்பட்டு' அதே இருபத்தைந்து சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன ஒன்று, இந்த இருபத்தைந்து இலட்சங்கள் அல்ல ஆயிரங்கள்!! 'அந்த ஆஃபீஸே ஒரு வீடு மாதிரி தான். யார் எப்போ போனாலும் சாப்பாடு உபசரிப்பு எல்லாம் தடபுடலா இருக்கும். ஆனா சம்பளம் மட்டும் இருக்காது' என்கிறார் செல்வமணி. சம்பளமா முக்கியம் சாப்பாடு தானே முக்கியம்?!

கட்ட கடைசியாக,

ஒருவனுக்கு மீன் கொடுக்கிறாயா? அல்லது மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறாயா? என்பது அமெரிக்கப் பழமொழி. ஒருவனுக்கு முதலில் மீனிட்டுப் பசியாற்றி, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, மீட்டனுப்பி வைப்பதே திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பார் ஒருவர். ஆனால், நாள் தோறும், என் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு வருபவர்களுக்குச் சாப்பிட மீன் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதே வள்ளல் தன்மை! அப்படி ஒருவர் கொடுத்தாலே, நாட்டில் எல்லோருக்கும் பசி தீருமா, தீராதா? 1977க்குப் பிறகு தமிழ் நாட்டில் சென்னையில் பிச்சை எடுக்கும் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? இந்த வாரத்திற்குப் பிறகு ஒரு வேளை பார்க்க நேரிடலாம் என்பது வேறு விசயம்.

ஆகவே,
வள்ளல்களைப் போற்றுவோம்!
வள்ளல் தன்மைக்கே தேவை இல்லாத படி சமூக மாற்றங்களைச் செய்யும் ஏமாற்றுக்கார, கஞ்சர்களைத் தூற்றுவோம்!!

நாம் மொன்னையர்! நாமே மொன்னையர்!!

Tuesday, December 19, 2023

பெரியார், பிரபாகரன் ஒப்பீடு

"பிரபாகரனையும் பெரியாரையும் 
எதிர் எதிராக நிறுத்துவது 
கண்டிக்கத்தக்கது "என்கிறார் வாலாசா வல்லவன்.

இவர் கண்டிக்காவிட்டாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக அடையாளப் படுத்தப்பட்டுக்  கொண்டேயிருப்பார்கள்.

பெரியாரை அவமானப்படுத்தும் ஒன்று. பெரியார் காந்தியம் -சமூகநீதி -கம்யூனிச சிந்தனைகள் இவற்றிலிருந்து உருவாகிவந்த பேராளுமை . 
இன்றும் பெண்ணியச் சிந்தனைகள் ,ஆதிக்கக் கலாசார மறுப்புச் செயற்பாடுகள் இவற்றிற்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார். 

பிரபாகரன் சுத்த இராணுவவாதி. 
பிரபாகரன் சிந்தனைகள் என எதுவும் இல்லை. பிரபாகரனுக்குப் பின் புலிகள்  அமைப்புமில்லை.

பெரியாருக்குப் பின் பெரியார்காலத்திலிருந்தே அவரை முன்னிறுத்தி தனித்துவமாக உருவான அமைப்புகள் இன்றுவரை இயங்குகின்றன.
தனது அமைப்பிற்குள் வன்முறையை மருந்துக்கும் அனுமதிக்காதவர் பெரியார்.

வன்முறையைத்தவிர வேறெந்த வழியிலும் தன்னை இனங்காட்ட மறுத்ததோடு வன்முறையை மறுத்த அரசியல் பிரமுகர்கள் ,சமூக சேவகர்கள்,புத்திஜீவிகள்  அனைவரையும் படுகொலை செய்தவர் பிரபாகரன்.

பெரியார் தன் அமைப்பிலிருந்து பிரிந்துபோய் இன்னொரு அமைப்பு  உருவாகுவதை ஜனநாயக பூர்வமாக அனுமதித்தவர். ஆதரித்தவர்.
தன் மேடையிலேயே அவருக்கு எதிராகப் பேசிய ஜெயகாந்தன் போன்றோரை தன் கைத்தடியால் தட்டி தனக்கு எதிராகப் பேசுவதை ஊக்குவித்த மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்த மாண்பாளர் பெரியார்.

 மாற்று அமைப்புகளை அழித்தொழித்து ஒரு சர்வாதிகாரியாக தன்னை நிறுவிக்கொண்டதோடு தனது அமைப்பினுள்ளேயே  இரண்டாங்கட்டத் தலைவர்களையும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த போராளிகளையும் கொன்றொழித்தவர் பிரபாகரன்.

பெரியார் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆதரவாயிருந்தார். இன்றுவரை தமிழ் நாட்டில் இஸ்லாமிய ,கிறீஸ்தவ சமூகங்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ்வதில் பெரியாரின் பிரச்சாரங்களே அடிப்படையாக இருந்துவருகின்றன.

பிரபாகரன் முஸ்லிம் மக்களை தம் ஆதிக்கப் பிரதேசத்திலிருந்து துரத்தியடித்தவர்.

தன் இறுதிக்கால நோய்மையிலுங்கூட  மேடைகள் தோறும் பேசிவந்த சுய சிந்தனையாளர் பெரியார்.

தனது பாதுகாப்பு ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு தலைமறைவாக பங்கருக்குள் இருந்தவர் பிரபாகரன்.

பிரபாகரன் பாசிசத்துக்கு அவரின் ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகளும் ஒரு காரணம் . பிரபாகரனின் தளபதியொருவர் அவர் இயக்கப் பெண்ணொருவரைக் காதலித்து அவர் கர்ப்பமான காரணத்தைப் பொறுக்காது இருவரையும் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர். 

பெரியார் ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை விரிந்த தளத்தில் காட்டி நின்றவர்.

பிரபாகரன் முழு மூட அறிவிலி .
அரசியல் ஒவ்வாமை கொண்டவர்.
அதனால் அன்ரன் பாலசிங்கம் அவர் தமிழில் பேசும் ஒரு சில வார்த்தைகளை தமிழிலேயே அதற்கு விளக்கமளித்து வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்தது.

பெரியார் விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளை தொடங்கி நடாத்திய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உள்ள ஆசான்.பிரபாகரனுக்கு ஒன்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை.

பெரியார் சிந்தனை வட்டங்கள் இன்றும் இருக்கின்றன .இனியும் இருக்கும்.

பிரபாகரனால் ஈழ மக்கள் அழிந்தனர்.
பெரியார் ஒரு கடவுள்போல இன்றும் தமிழகத்தைக் காத்து நிற்கிறார்.

பகிர்வு செய்தி

Monday, November 13, 2023

ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மை இனக்குழுவை அழிப்பதற்கு என்று பெரும்பான்மை தேசியவாதிகள் வழிமுறைகள்

Vijey baskervijey

பல பல மக்கள், 

செய்தித்தாள்களின் பெரிய தலைப்பை மட்டும் படித்து கடந்து விடும் நம்மை போல சராசரி மக்கள், 

ஆழ்ந்து ஒரு விஷயத்தை படிக்க வாய்ப்பில்லாத நம்மை போன்றவர்கள்,

பாலஸ்தீன பிரச்சனை, ஈழப்பிரச்சனை போன்றவற்றை 

“என்ன பாஸ் இவர்களும் அடிக்கிறார்கள், அவர்களும் அடிக்கிறார்கள். ரெண்டு பேர் மேலயும்தானே தப்பு” என்று நினைக்கிறார்கள். 

குறிப்பாக படித்த இளைஞர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். 

அவர்களுக்காக இந்த பத்தியை எழுதுகிறேன். 

ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மை இனக்குழுவை அழிப்பதற்கு என்று பெரும்பான்மை தேசியவாதிகள் 

ஒரு Plan
ஒரு Algorithm 
ஒரு Flow Chart 

வைத்திருக்கிறார்கள். 

உலகில் எங்கெல்லாம் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறதோ அங்கெல்லாம் இதே முறையைத்தான் பெரும்பான்மை தேசியவாதிகள் எனப்படும் சர்வாதிகாரிகள் செய்வார்கள். 

அந்த Plan, Algorithm, Flow Chart பற்றி இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அது புரிந்துவிட்டால் இந்த மாதிரியான பிரச்சனையில் யாருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்ற தெளிவும் வந்துவிடும். 

இந்த புரிதலை அடைய உண்மையிலேயே உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும். 

மதத்தின், சாதியின், இனத்தின், நாட்டின் பெயரால் சார்பெடுத்த ஆளாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் இந்த சிந்தனையை முழுவதுமாக சிந்திக்க முடியாது. 

Orientation இல்லாமல் இந்த 20 பாயிண்டுகளைம் படித்து அது பற்றி யோசித்தீர்கள் என்றால், உங்களுடன் இருக்கும் நண்பர்களுடம் விவாதித்தீர்கள் என்றால் உலக அரசியலில் முக்கியமான புரிதலை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். 

1. ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனக்குழுவை அடக்குவது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களை பறித்துக் கொள்வது. 

2.தொடர்ச்சியாக அந்த சிறுபான்மை இனக்குழுவை அவதூறு செய்வது. அவர்கள் மிக ஆபத்தானவர்கள் என்ற அவதூறை நாட்டில் பரப்புவது. 

3. சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை அடக்குமுறையை தேசியவாதமாக பிரச்சாரம் செய்வது.  இதுதான் தேசப்பக்தி. அந்த தேசபக்தியில் பெரும்பான்மை மக்களுக்கான உரிமைதான் முக்கியம் மற்றவை அனைத்துமே அழித்தொழிக்கப்பட வேண்டியவை, துரத்தியடிக்கப்பட வேண்டியவை என்று பிறப்பால் இருக்கும் பெரும்பான்மை சராசரி  மக்களை தூண்டி விடுவது. அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்கும் விதமாக தொடர்ச்சியாக விஷ பிரச்சாரம் செய்வது. 

4. ஊடகங்கள், பத்திரிக்கைகள் மொத்தத்தையும் தேசியவாதத்தை ஆதரியுங்கள் என்று மிரட்டி பெரும்பான்மை அடக்குமுறைக்கு துணை நிற்க செய்வது.

5. மொழி, மதம், கலை போன்ற பண்பாட்டளவில் சிறுபான்மையினரை ஒதுக்குவது. அவமானப்படுத்துவது. வாய்ப்பு கொடுக்காமல் பிரதிநிதித்துவம் கொடுக்காமல் பின் தள்ளுவது போன்றவற்றை செய்வது.

6. பெரும்பான்மையினர் வைத்திருக்கும் அரசே சிறுபான்மையினரை வெவ்வேறுவிதமாக மறைமுகமாக கொல்வது. அவர்களை மர்மமாக காணாமல் போக செய்வது. 

7.நியாயம் கேட்கக் போகும் சிறுபான்மையினருக்கு “இந்த அரசு பெரும்பான்மை சர்வாதிகார அரசு. இதில் இருக்கும் கோர்ட், காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகள், ராணுவம் அனைவருமே சர்வாதிகாரத்தன்மையில்தான் இயங்குவோம். சமத்துவம் எல்லாம் இங்கே கிடையாது” என்று சிறுபான்மையினரிடம் திணித்து பயமுறுத்துவது. 

8. ஜனநாயக அம்சத்தில் நம்மால் இனி எதுவுமே செய்ய முடியாதோ என்று சிறுபான்மையினரை கலங்கி நிற்க செய்வது. 

9. ஆனாலும் வேறு வழி என்ன இருக்கிறது என்று சிறுபான்மையின மக்கள் ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை சாத்வீகமாக தெரிவிப்பார்கள். குழு சேர்வார்கள். கூட்டம் போடுவார்கள். போராடுவார்கள். 

10. இதற்காக காத்திருந்தது போலவான பெரும்பான்மை சர்வாதிகாரம் “பாருங்கள் நாட்டுக்கு எதிராக கூட்டம் போடுகிறார்கள்” என்று கூட்டத்தை அடிப்பது, அவதூறு செய்து சிறையில் தள்ளுவது. போராட்டத்தை அடக்குவது. பல போராட்ட சிறுபான்மையின தலைவர்களை கொல்வது. 

11. இப்போது சிறுபான்மையினத்தில் உள்ள இளைஞர்கள் “நீதித்துறையும் காவல்துறையும் நமக்கு ஆதரவில்லை. நான் ஜனநாயக ரீதியாக போராடினால் பெரும்பான்மை சர்வாதிகாரம் நம்மை அடக்கிக் கொல்கிறது. நாமும் பதிலுக்கு ஆயுதம் தூக்கி ஆயுதவழியில் போராடினால்தான் விடிவு கிடைக்கும்” என்று ஆயுதப்போராட்டத்தில் இறங்குவார்கள். அதாவது சர்வாதிகாரம் சிறுபான்மையினரை ஆயுதத்தை தூக்க வைக்கும் அளவுக்கு நெருக்கடியை கொடுக்கும். 

12. சிறுபான்மையினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்காக காத்திருந்தது போலவான பெரும்பான்மை சர்வாதிகார தேசியவாதிகள் தங்கள் பக்கத்து நாடுகளிலும், உலகெங்கும் உள்ள நாடுகளிலும் “எங்கள் நாட்டில் தீவிரவாதப் பிரச்சனை உள்ளது. அப்பிரச்சனையில் நீங்கள் உலக நாடுகள் தேசியவாத அரசான எங்களுக்குதான் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று ஆதரவை கோரும். எக்காரணம் கொண்டு ஏன் தீவிரவாதம் தலைதூக்கியது என்று மற்ற நாடுகள் கேட்காதவாறு தன் பிரச்சாரத்தை பெரும்பான்மை சர்வாதிகாரம் செய்துவிடும். 

13. சிறுபான்மையினர் ஆயுதப் போராட்டத்தை பெரும்பான்மையில் பிறந்த சராசரி மக்களிடம் காட்டி “பார் இவன்கள் நம் நாட்டை அழிக்கப் பார்க்கிறான்கள். இவன்கள் தீவிரவாதிகள்” என்று திரும்ப திரும்ப சொல்லி பெரும்பான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி வைத்துக் கொள்ளும். 

14. இன்னொருபுறம் சிறுபான்மை போராட்டத்தை உலக நாடுகளிலும் தன் நாட்டிலும் காட்டி அப்பாவி சிறுபான்மையின குடியிருப்புகளில் தாக்குதலை நடத்தும் அந்த பெரும்பான்மை தேசியவாதம் பேசும் சர்வாதிகாரம். 

15. சிறுபான்மை போராட்டக் குழுவில் ஈகோ காரணமாக ஏற்படும் பிளவை பயன்படுத்தி சர்வாதிகாரம் சிறுபான்மை போராட்டக் குழுவை உடைத்து அதில் வலிமையற்ற போராட்டக் குழுவிடம் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்துகிறோம் என்று உலகை ஏமாற்றும். 

16. முன்னை விட சிறுபான்மை இன மக்களை பண்பாட்டு அளவிலும், வளங்களை பங்கு கொடுப்பதிலும், உரிமையளவிலும் அடக்கும். 

17. வேறு வழியே இல்லாமல் சிறுபான்மை போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்த அதனால் தங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை ஊடகங்கள் வாயிலாக மிகப் பிரம்மாண்டமாக காட்டி ஒவென்று அழுது பரிதாபம் சம்பாதிக்கும் அந்த பெரும்பான்மை சர்வாதிகாரம். 

18. இப்போது உலக மக்கள், சொந்த நாட்டு மக்கள், சிறுபான்மையினத்திலேயே இருக்கும் அப்பாவி மக்கள், தன் நடுக்கத்தையும் பயத்தையும் நடுநிலை என்ற போர்வையில் பேசும் அறிவார்ந்த லிபரல்கள் அனைவரும் சிறுபான்மை போராட்டக் குழுவினரை “இருந்தாலும் இவ்வளவு அநியாயமாக நீங்கள் இதை செய்திருக்க கூடாது” என்பார்கள். இதுதான் பெரும்பான்மை சர்வாதிகாரத்துக்கு வேண்டும் என்பதை அறியாமல் அதை செய்வார்கள். 

19. இப்போது பெரும்பான்மை சர்வாதிகாரத்துக்கு மாபெரும் அதிகாரம் கிடைத்துவிட்டது. 

சிறுபான்மை போராட்டக்காரர்களை கொல்ல வேண்டும் என்ற நிலையில் சிறுபான்மை அப்பாவி மக்களை கொன்றுவிடுவோமே என்ற சுய அச்சமும், உலகு ஏதோ சொல்லுமே என்ற பயமும் இப்போது பெரும்பான்மை சர்வாதிகார தேசியவாதிகளுக்கு முற்றிலுமாக போய்விடுகிறது. 

அந்த பயமற்ற நிலையில், கையில் ஏராளமான நவீன ஆயுதங்கள் உள்ள நிலையில் 

பெரும்பான்மை சர்வாதிகாரிகள் முடிவை மாற்றுகிறார்கள். 

சிறுபான்மை அப்பாவி மக்கள் செத்தாலும் பரவாயில்லை.
சிறுபான்மை குழந்தைகள் கருகினாலும் பரவாயில்லை.
சிறுபான்மை தாயின் வயிற்றில் புரளும் சிசுக்கள் சிதைந்தாலும் பரவாயில்லை.

அவர்களை கொல்லவேண்டும். 

நம் நோக்கம் சிறுபான்மை இன மக்களை இந்த நிலத்தை விட்டு ஓட விடுவதுதான். அதை பக்காவாக திட்டமிட்டு கொண்டு வந்துவிட்டோம். 

இனிமேல் என்ன என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். 

20. மொத்தமாக சிறுபான்மை இன மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசியும், மருத்துவமனையை கூட விட்டு வைக்காமல் அழித்தும், No War Zone யில் கூட குண்டுகளை இட்டு அழித்தும் ஒரேடியாக அந்த மக்களை அழித்து நிலத்தை பெரும்பான்மை மக்கள் கைவசப்படுத்துகிறார்கள்.

வெறுமே மனித நேயம் கொண்ட மனதை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. 

மேலே சொன்ன அடக்குதல் முறையை புரிந்து கொள்ள வேண்டும். 

உலகெங்கும் சிறுபான்மையினரை பெரும்பான்மை தேசியவாதிகள் இப்படித்தான் அடக்குகிறார்கள். 

அந்தப் பார்வையில் இம்முறையை ஒரு கருத்தாக பார்ப்பதை தவிர்த்து ஒரு பொருளாக பார்க்கும் அறிவு வளர வேண்டும். 

அப்படி பொருளாக பார்க்கும் போது அதை எந்த இடத்தில் எப்படி தகர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சியும் வந்துவிடும். 

அந்த விழிப்புணர்வு உலக அரசியலுக்கும், உலக மக்களுக்கும் நல்லது செய்யும்.

Wednesday, October 25, 2023

உணவுத் தொழிலில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது

ஆரிய பவன்,
கஸ்தூரி பவன்,
ஐயர் மெஸ்,
ஐயங்கார் மெஸ்,
பிராமணாள் கபே 
என உணவுத் தொழிலில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மட்டுமே  இருந்தது தான்  உண்மை.. 

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர்கள் உணவுத் தொழிலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் பாலகுமாரன் தனது உடையார் நாவலில் எழுதியிருப்பார் . அக்காலத்தில் இருந்தே உணவுத் தொழில் பார்ப்பனர் பிடிக்குள் தான் இருந்ததுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநிலக் கல்லூரிக்கு படிக்க வந்த பிராமணரல்லாத மாணவர்கள் , உணவுக்காக பார்ப்பனர்கள் நடத்தும் ஹோட்டல்களையே நம்பி இருந்தனர் . ஆனால் அங்கு மாணவர்களை  உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து உணவு கொடுத்தனர் பிராமணர்கள் . உணவை அமர்ந்து சாப்பிட மாணவர்கள் இடம் தேடி அலைந்தனர், மாணவர்கள் கொடுக்கும் பணத்தை பிராமணர்கள் தீட்டு கழித்தே எடுத்துக் கொண்டனர் .

இதைக் கண்ட திராவிட  இயக்க நாயகர்களுள் ஒருவரான   நடேசனார் பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க  " திராவிடர் இல்லம் " உருவாக்கினார் . அக்காலத்தில் இவ்விடுதி பிராமணரல்லாத எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி கற்க முன்னேற ஏதுவாக இருந்தது . இந்தியாவின் முதல் நிதியமைச்சரான சண்முகம் செட்டியார் கூட இவ்விடுதியில் தங்கிப் படித்தவர் தான் . இந்த இல்லமே திராவிட இயக்க அரசியலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்கியது

பெரியார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிராமணர், பிராமணரல்லாதோருக்கு தனித் தனியே உணவு சமைத்து வழங்கப்பட்டதும் , வவேசு ஐயர் தனது குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனித்தனியாக  உணவு செய்து பரிமாறியதும், அம்பேத்கர் தான் பணி செய்த இடத்தில் நீர் அருந்தக் கூட ஆட்சேபனை செய்யப்பட்டதும், தங்க விடுதியின்றி அவர் வீதிவீதியாக அலைந்ததும் இம்மண்ணின் வரலாறு தான்.

பெரியார் தான் அதை எல்லாம் உடைத்தெறிந்தார். பிராமணர்க்கு மட்டும் என இருந்ததற்கும் , பிராமணாள் கபே என பெயர் இருந்ததற்கும் எதிராக உணவு விடுதிகள் மீது பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். பெரியாரின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சேலத்தில் ஆரம்பித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிராமணியத்தை தாங்கிப் பிடித்த பெயர்கள் அதன் உரிமையாளர்களாலேயே மாற்றப்பட்டன. 

மாற்றப்படாத கடைகள் முன் பெரியார் பெயர் அழிப்பு போராட்டம் அறிவித்தார். அதற்கு கடையினரோ காவல்துறையினரோ தடை செய்த பட்சத்தில்,  அமைதி வழியில்‌கடைக்கு முன் நின்று அக்கடைக்கு சாப்பிட வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு " சாதி ஆணவத்தை தாங்கிப்பிடிக்கும் இக் கடைக்குச் சென்று உணவருந்த வேண்டாம் " என்று கேட்டுக் கொள்ளும் வகைமில் போராட்டத்தை வடிவமைத்துத் தொடர்ந்தார். 

அதன் பின்பே பிராமணர்,ஐயர், ஐயங்கார் என்ற "ஆணவம்" உணவுத்துறையில் இருந்து அகற்றப்பட்டது. பெரியார் தனது சுயமரியாதை மாநாடுகளில் நாடார் சமைத்த உணவு பரிமாறப்படும் என்றே விளம்பரம் செய்தார்.தொடர்ந்து திக மற்றும் திமுக வின் வளர்ச்சியால் உணவுத்துறையில் சமத்துவத்தை எட்டியது தமிழ்மண்.

இதைத்தான் அடையாறு ஆனந்தபவன் முதலாளி அவர்களும் சுருக்கமாக ஒரே வார்த்தையில் " யார் வேண்டுமானாலும் உணவுத் தொழிலில் ஈடுபடலாம்"  என்ற சூழலை  உருவாக்கிய பெரியாருக்கு நன்றி" என மனசாட்சியுடன் கூறினார். இதற்குத்தான் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பூணூலிஸ்ட் களும் தாம் தூம் எனக் குதிக்கிறார்கள். 

குதிக்கட்டும் மதுரை முனியாண்டி விலாஸ்களின்  கறிதோசை மணமும் , கொத்து புரோட்டா சத்தமும்,  ஐயர் மெஸ்களின் நெய்தோசை மற்றும் பில்டர் காபிகளை காலி செய்த வலி அவாள்களுக்கு இருக்கத்தானே செய்யும். நன்றாக கதறட்டும்.

A2B யின் வியாபார வெற்றியினால் உருவாகும் அவாள்களின் கதறல்‌ சத்தம்  பட்டாசு சப்தங்களை விட பெருமகிழ்ச்சி தரக்கூடியது நமக்கு.

A2B ன் வெற்றி இன்னமும் இது பெரியார் மண் தான் என்பதை டெல்லியை ஆள்பவர்களுக்கும் , 
டெல்லிக்கு கூஜா தூக்குபவர்களுக்கும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கட்டும்!

வாழ்க பெரியார் 💐💐.

தோழர் வினேஷ்பாபு

Saturday, August 26, 2023

தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை, ஏன்?

Gold king
https://www.facebook.com/thangaarasan.annamalai

கள ஆய்வுகள், அதன் அறிக்கைகள் என்ற செய்தியை கேட்கும் போதெல்லாம் எனக்கு எழும் ஒரு எளிய கேள்வி - 

"பட்டியல் இனத்தரப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், பட்டியல் இனத்தவர்களை சேர்ந்த சமூகத்துவத்திற்காக நிற்கும் சமூக ஆர்வலர்கள் களப்பணி செய்து பட்டியல் இனத்தவர்களின் மீது ஏன், எதற்கு, எப்படி, யாரால் எங்கு தாக்குதல் நடத்தப்பட்டது அதன் பின்புலம் - என ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான பரிந்துரைகளை பொதுவெளியில் முன்வைக்கின்றனர்." இது பட்டியல் இனத்தவர்களை பொறுத்தளவில்லான அவர்களின் எல்லை அதுவே. 

எனது கேள்வி என்னனா? பட்டியல் இனத்தவர்களின் மீதான சாதிய தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை. 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் அதனை செய்யமுடியாது. ஆனால், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பாக இருக்ககூடிய சாதியினரில் "சமூக நீதியை விரும்பும், சமத்துவத்தை விரும்பும் மனித தன்மையுடன் இருக்கும் சோகால்டு முற்போக்காளர்கள்" எல்லாம் பட்டியல் இனத்தவர்களின் மீது தாக்குதலை நிகழ்த்தியவர்களை கண்டு, 

வேங்கைவயல் எனில், பட்டியல் இனத்தவர்களின் குடி நீர் தொட்டியில் மலம் கலக்ககூடிய மன நிலை ஏன் வந்தது என்றும். நாங்குனேரி என்றால், மாணவனை தாக்கியவர்களையும் அவர்களின் உறவினர்களை கண்டு "என்ன பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறீர்கள், ஏன் அவனை சாதிய மன நிலையில் வளர்த்திருக்கிறார்கள்" என்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, சாதிய ரீதியாக எவ்வளவு மோசமான மன நிலையை கொண்டிருக்கிறார்கள் என்பதனையும்,  தாக்குதல் நடத்தியவர்களின் சாதிய உறவினர்களின் கருத்து என்ன? சொந்த சாதியினரின் கருத்து என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து ஏன் எந்த ஆய்வையும் செய்வதில்லை. 

வேங்கைவயலை எடுத்துக்கொண்டால், சாதியபலம் காரணமாகவும், வாக்குவங்கி அரசியலாகவும் பொதுவாக பிம்பபடுத்தப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு தயக்கம் இருப்பதாக சப்பைகட்டு கட்டப்படுகிறது. 

உண்மையில் வேங்கைவயல் கிராமத்தில் மலத்தை கலந்த சாதியினரை, "உங்கள் சாதியில் சக மனிதன் குடிக்கும் நீரில் மலத்தை கலப்பதை எப்படி பார்க்கிறீர்கள்" என்ற கருத்தை கேட்டு அவர்களின் எண்ணவோட்டம் "சாதிக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது எதிராக இருக்கிறதா?" - என்பதை ஆய்வரிக்கையாக கொண்டு வந்தால்தானே வேங்கைவயல் பிரச்சனையில் சாதி எந்தவித தார்மீக ஆதரவையும் கொடுத்திருக்கிறதா அல்லது கொடுக்கவில்லையா என்பதனை அறிந்து அதனால், வாக்கு வங்கி, சாதி பலம் என மடைமாற்றி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் யோக்கியதையை காணமுடியும். 

இதேபோலத்தான், மாணவரை கொலைவெறிக்கொண்டு தாக்கியது சரியா என தாக்கியவர்களின் சொந்த சாதியினரிடத்தில் கேட்டு ஏதாவது பதில் பெறப்பட்டிருக்கிறதா? அவ்வாறு கள ஆய்வை செய்தால்தானே உரிய பிரச்சனைக்கு சாதிதான் காரணமெனில் "அந்த சாதிய தாக்குதலுக்கு தனிப்பட்ட நபரின் சாதி வெறி மட்டுமே காரணமா அல்லது மறைமுகமாகவோ மவுனமாகவோ உரியவர்களின் சாதி ஆதரவு இருக்கிறதா" - என்பதை கண்டுப்பிடிக்கமுடியும். 

ஆனால், இதனை ஏன் எந்த பட்டியல் இனத்தவர்கள் அல்லாத முற்போக்காளர்கள் யாரும் செய்வதில்லை? 

உரிய ஆய்வுகளை செய்து ஆவணப்படுத்தினால்தானே சாதியவாதிகளின் யோக்கியத்தையை ஆவணத்தோடு கேள்விக்கு உட்படுத்தமுடியும்? 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களை கண்டு பாதிக்கப்பட்டதை அறிக்கையாக தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, முக்கியம், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பை கள ஆய்வு செய்து ஏன் எவ்வித கேள்விக்கு உட்படுத்துவதில்லை. 

ஏன் இதனை சாதிக்கு எதிராக இருக்கும் பட்டியல் இனத்தவர்கள் அல்லாத சாதியை சார்ந்த முற்போக்காளர்கள் செய்யகூடாது?

Saturday, May 20, 2023

தோனியிடம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கிய 7 பாடங்கள்.

- அரவிந்த ராஜ்

'மகேந்திர சிங் தோனி'

இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் உலகை ஆண்ட மன்னனின் இறுதி கட்டம் இது. எப்போது வேண்டுமென்றாலும் 'நான் இன்றோடு விடைபெறுகிறேன்' என கூறும் மனிதர் அவர். விடைபெறும் நேரத்தில் எழுதுவதை விட மன்னன் அரியாசனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் போதே துதி பாடிவிடுவது சிறப்பு.

தோனியிடம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கிய 7 பாடங்கள்.

1.Have control over your emotions. Express them only if needed.

தோனி Calm and Cool பெர்சன் கிடையாது. Dhoni is a man who has control over his emotions. A man who has control over his emotions is very dangerous and lethal. தோனி கோவப்பட்ட தருணங்கள் என்னவென்று கேட்டால் ராஜஸ்தான் உடனான போட்டியில் தோனி நோ பாலுக்காக நடந்து வந்தது, பஞ்சாப் உடனான போட்டியில் இர்பான் பதான் ஓவரில் சிக்ஸர் அடித்து விட்டு ஹெல்மெட்டை ஓங்கி குத்தி கண்ணில் தீ ஜுவாலையை பறக்க விட்ட இவ்விரண்டும் சட்டென்று நினைவுக்கு வரும். கோபத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஒருவன் அதை கட்டுப்படுத்தி வாழும் வித்தையை கற்றுக்கொண்டால், அவனால் வாழ்க்கையில் எந்த கடின கொடிய தருணத்தையும் கடந்து விட முடியும். Control your emotions. Express your anger when it is necessary and needed என்பதே முதலாம் பாடம்.

2. Be fit Physically

இதை படித்துக்கொண்டிருக்கும் பலரை 40 வயது தோனி அசால்டாக 100 மீட்டர் ஓட்டத்தில் வென்று விடுவார். A sound body is a sound mind. உடல் நன்றாக இருந்தால் உள்ளமும் நன்றாக இருக்கும். எத்தனை வயதானாலும் முடிந்த வரை பிட்னசில் கவனம் செலுத்துங்கள். அது மிக அவசியம் என்பதே பாடம் 2.

3. Look out for people you believe in and never judge someone based on others opinion and views.

விராட் கோலி இந்திய அணியில் நுழைந்த சில மாதங்களிலியே ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால், ரோஹித் அப்படி இல்லை. நிறைய தோல்விகள். ஆனால், தோனி ரோகித்தை நம்பினார். மீண்டும் மீண்டும் வாய்ப்புகள். நிச்சயம் தோனிக்கு மேலிடத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு அவன் மீது நம்பிக்கை உள்ளது என்பதே தோனியின் பதில். அது ரோகித்தை நிச்சயம் மனதளவில் வலுப்படுத்தியிருக்கும். யாரும் அவரை நம்பாத நாட்களில் தோனி அவர் மீது செலுத்திய நம்பிக்கை ரோகித்தை இன்று ஆகச்சிறந்த ஸ்டார் ஆக மாற்றியுள்ளது.

4.Have some passion outside your career

வேலையே கதி என்று கிடைக்காமல் உங்களை மனிதனாக உயிர்ப்புடன் வைக்க உதவும் செயல்களின் மீது ஈடுபாடு செலுத்துங்கள். தோனியின் பைக் மீதான காதல் அப்படியான ஒன்று. சினிமா, இசை, சமைப்பது, எழுதுவது, பாடுவது இப்படி ஏதாவது ஒரு Passion-ஐ பற்றிக்கொண்டு அதற்கு அடிக்கடி உரமிடுங்கள். உயிரோடு இருத்தல் வேறு; வாழ்க்கையை வாழ்தல் வேறு. வாழுங்கள்.

5.Fight till your last breath

உச்சத்தில் இருக்கும் யாராக இருப்பினும், தொப்பென்று கீழே வீழ்வது நடப்பது மானுட விதி. உயரத்தில் இருந்த நான் விழுந்து விட்டேன் என Pessimistic தொனியில் சிந்திக்காமல், மீண்டும் ஏறி உச்சிக்கு போவேன் என்ற Practical Optimism மனநிலையை உருவாக்குங்கள். 2 வருட தடைக்கு பின்பாக 2018-ல் CSK மீண்டு வந்து கோப்பை அடித்ததெல்லாம் விளையாட்டு உலகின் ஆகப்பெரிய மாஸ் 'Thug' மொமெண்ட். 

6. Don't let anyone to intimidate you or never seek someone else's validation

M.S.Dhoni படத்தில் யுவராஜ் சிங் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு ஸ்டைலாக வரும் போது, தோனியை தவிர மற்ற அனைவரும் யுவராஜை மலைத்து பார்ப்பார்கள். 'நாம எங்க தெரியுமா தோத்தோம்??' என்று தோனி கேட்கும் போது அந்த சீன் ஓடும். யாரை கண்டும் பயப்பட வேண்டாம். நாம் பயந்து ஒடுங்கும் போதே தோல்வியை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். போராடுங்கள். வெற்றியோ தோல்வியோ உங்களுடைய போராட்டம் எப்படியானது என்பதே அவசியம். 'Lose like a winner'. Process is important than results.

அடுத்தவர்களின் opinion-ஐ பொறுத்து தான் என் வாழ்க்கையை வாழ்வேன் என்றும் இருக்க வேண்டாம். அது ஒருவித இயலாமை நிலைக்கு நம்மை தள்ளிவிடும். எதிரில் எவன் இருந்தால் என்ன?? நீ எதிர்ப்பது என்னை; முடிந்தால் ஜெய்த்துப்பார். Kill me if you can என்ற மனநிலையை கொண்டு வா. 

7.Work on your strengths a lot than on your weakness.

எப்போதுமே நாம் அனைவரும் நாம் weak ஆக உணரும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அது நமக்கு ஒரு Challenge-ஐ அளிக்கும். அதை சரிசெய்யும் போது நமது Ego விற்கு Satisfaction கிடைக்கும். ஆனால், Weakness ஐ சரிசெய்ய செய்யும் மெனக்கெடலில் நமது Strong zone மீதான ஈடுபாடு குறைந்து அது less strong ஆக மாறிவிடும்.

தோனி பினிஷராக பொறுப்பெடுத்த பின்பு ஸ்பின் பவுலிங்கை பெரிதாக ஆட மாட்டார். தோனிக்கு வேகப்பந்து நன்றாக ஆட வரும். அதுவும் Left hand fast bowler என்றால் அல்வா தின்பது போல. தோனி தன்னை தயார்படுத்திக்கொண்டது எப்படி என்றால்., என்னால் இந்த Spin ஓவரை சமாளித்து அவுட் ஆகாமல் ஆடி விட்டால், இதில் விட்ட ரன்களை நான் fast பவுலர் போடும் போது அடித்து விடுவேன். Spin-ல் அவுட் ஆகாத அளவுக்கு யுக்தியை வளர்த்துக் கொள்கிறேன். அது போதும். அதே நேரம் நான் fast பவுலிங்கில் நிறைய அடிக்க வேண்டும். என்னுடைய Strength அது. அதில் இன்னும் கவனம் செலுத்துகிறேன் என்ற Positive Approach தோனியின் மிகப்பெரிய பலம்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அவரை வரையறுக்க 7 என்ற எண் மட்டும் போதுமே !!

சாதாரண குடும்பத்தில் பிறந்து, பணபலம் எதுவும் இல்லாமல், தன்னை ஒவ்வொரு நாளும் மெருக்கேற்றிக்கொண்டு, 20 ஆண்டுகாலம் ராஜாவாக வாழ்ந்து ராஜவாகவே ஓய்வு காணும் தலைவா., உன் 20 வருட வாழ்க்கையை இந்த வரிகள் பறைசாற்றும்.

~"சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்

உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்"~

❣️

https://www.facebook.com/100042863708639/posts/pfbid02vDRwM7RSuTnvRUubxPhUTmVsNQ2JNv66ozyLGmbuJHN3JCdHnuwRGEzfCb28h4oLl/?mibextid=Nif5oz

Thursday, January 12, 2023

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது

Raja Rajendran Tamilnadu

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது என்று எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய காணொலியைக் கண்டு, கேட்டிருப்பீர்கள். 

எழுத்துவடிவில் சில முக்கியமான ஆனால் 100% உண்மையான செய்திகள் இது 👇

நேற்று, இந்து தமிழ் திசை நாளிதழில், நடுப்பக்கக் கட்டுரையாக, ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதியதிலிருந்து ;

1.) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2.) 1956.  75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார்.  ஊர் விருதுநகர்.  ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு.  முதலமைச்சர் காமராஜர்.  அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்டமுடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும், உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய் சங்கரலிங்கனாரை பார்த்துவிட்டு வந்தனர்.  அப்படி ஒருமுறை அண்ணா அவர்கள் போனபோது, அவருடையக் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டு சங்கரலிங்கனார், காங்கிரஸ்தான் என்னைக் கை விட்டுடுச்சி, நீயாவது என் ஆசையை நிறைவேத்து என்றிருக்கிறார்.  அண்ணா வெடித்து அழுதிருக்கிறார்.  அந்தளவு அந்த உடல் மோசமாகி இருந்தது !

சங்கரலிங்கனார் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் நாடகமாடுவதாக காங்கிரசார் மீட்டிங்கில் பேசினர்.  அதாவது கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ரகசியமாக உணவுகளை இரவு வேளையில் கொடுத்து வருவதாக !

நான் செத்துட்டா ஒரு காங்கிரஸ் பய எனக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாது.  என் மேல காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது.    என் உடலை கம்யூனிஸ்ட்கள்தான் எடுக்க வேண்டும்.  அவர்கள்தான் இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

பொதுவுடமை கட்சியினர்தான் சங்கரலிங்கனாரின் இறுதி ஊர்வலம், சடங்கு, அஞ்சலியைச் சிறப்புற செய்தனர் !

3.) 1957.  திமுகவின் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைகின்றனர்.  சங்கரலிங்கனாரின் உயிர் தியாகத்தை மதிப்பதற்காகவாவது காமராஜர் செவிமடுப்பார் என நம்பி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்கிற தீர்மானத்தை சட்டசபையில் வைத்தனர்.

அதன்மீது தர்க்கங்கள் நடந்தன.  இது ஒருவகையான அட்டென்ஷன் சீக்கிங் என்கிற புது வியாதி.  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சி கொந்தளிக்கப் பேசிவிட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள் என ஒரு சிறுகூட்டம் நம்புகிறது அல்லது அப்படி பேசி மக்களை ஏமாற்றுகிறது.  எத்தனை உயிர் போனாலும் பிரிவினைவாதக் கொள்கைகளை ஏற்க முடியாது என்றது காமராஜர் அரசு !

நம்புங்கள்.  அன்றைய காங்கிரஸ் கிட்டத்தட்ட இன்றையச் சங்கிகள்.  சத்தியமூர்த்தி, இராஜகோபால், ஆர் வெங்கட்ராமன்ல்லாம் இருந்த காங்கிரஸ் பின்ன என்னவா இருக்கும் ?

07/05/1957 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 42 (கம்யூனிஸ்ட் & திமுக.  அன்று எதிர்கட்சி கம்யூனிஸ்ட்தான்)

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 127.  சங்கரலிங்கனார் இறந்த பின்னரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது !

ஆச்சா ?

4.) 1961.  சங்கரலிங்கனார் செத்து அஞ்சு வருஷமாச்சு.  திமுக தீர்மானம் கொண்டு வந்து நாலு வருஷமாச்சு.  இம்முறை சோசலிஸ்ட் கட்சிக்காரர் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஆளுங்கட்சியினர் தயைகூர்ந்து ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காமராஜர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றால், நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக, ஆமாம் அந்தளவு அவருக்கு நேருவிடம் செல்வாக்கு இருந்தது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம் !

நம்பமாட்டீர்கள்.  காந்தி & காமராஜர்.  இருவருமே பெரும் சர்வாதிகாரிகள்.  முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்.  இதில் காந்தியார் ஒரு படி மேலே சென்று எதிர்ப்பைக் காட்ட உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை வேறு தூக்கிடுவார்.

பெரிய அக்கப்போரா போச்சே விடுங்க இனி கடிதப் போக்குவரத்தில் வேணா தமிழ்நாடுன்னு எழுதிக்கலாம் என சட்டசபையில் குறிப்பிட்டார்.  எதிர்கட்சிகள் சம்மதிக்கவில்லை.  பிறகென்ன, வழக்கம் போல இந்தத் தீர்மானமும் தோல்வி !

1962.  காங்கிரஸ் மாபெரும் வெற்றி.  மாறாக அண்ணாதுரை தோல்வி.  ஆனால் திமுகவின் பலம் முன்பை விட நான்கு மடங்கு அதிகமானது !

5.) அண்ணாவை மாநிலங்களவைக்கு உறுப்பினராக்கி அனுப்பி வைத்தது திமுக.

அங்குதான் கம்யூனிஸ்ட் தனிநபர் மசோதாவாக தமிழ்நாடு கோரிக்கையை எழுப்புகிறது.

அண்ணா அதை ஆதரித்து அற்புதமான வாதங்களை எடுத்து பேசுகிறார்.

இலக்கியங்களில் தமிழ்நாடு என்று பெயர் வருமிடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதெல்லாம் சரிங்க, இப்ப தமிழ்நாடுன்னு மாத்திடறதால உங்களுக்கு என்ன லாபம் ? என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார்.

பார்லிமெண்ட் ஹவுஸ் என்றிருந்ததை லோக்சபா என்று நீங்கள் மாற்றினீர்களே உங்களுக்கு என்ன லாபம் வந்ததோ அதே லாபம் தமிழ்நாடுக்கும் வரும் என்றார் !

அண்ணா ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்பதால் அந்த அவையே வாய்பிளந்து அந்த உரையை ரசித்தது !

ஆனால் தீர்மானம் தோல்வி.

6.) விடாது கருப்பு - சிவப்பு.

23/07/1963.

மீண்டும் திமுகவின் இராம.அரங்கண்ணல் தமிழ்நாடு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருகிறார்.  முதலமைச்சர் பக்தவச்சலம்.  தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

7.) தமிழ்நாடு என்றால் யாருக்குமே புரியாது.  குறிப்பாக வடக்கில் அனைவருக்குமே மெட்ராஸ்ன்னு நல்லா பழகிருச்சி.  ஃபாரின்காரன் வாய்ல தமிழ்நாடு நுழையவே நுழையாது, பெயரை திடுக்குன்னு மாத்தினா அவன் காண்ட்ராக்டை எல்லாம் கேன்சல் பண்ணிடுவான்.
எனவே மதராஸ் பிரசிடென்சி எனத் தொடர்வதே நமக்கு நல்லது என்று பேசினார் வெங்கட்ராமன்.

சங்கரலிங்கனார் இறந்து எட்டு வருடங்கள் ஆன பின்னரும் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருந்தன !

8.) 1967.  யோசிச்சு பாருங்க.  சொந்த மக்களிடத்திலேயே இவ்வளவு காழ்ப்புடன் ஓர் அரசு நடந்துக்கும்ன்னா, கூடவே அரிசிப்பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டம், பதுக்கல் கொள்ளையர்கள் பெருக்கம், விளங்குமா ?  அப்ப போன காங்கிரஸ்தான்.  மக்களின் கோபம் காமராஜரையே பலி போட்டது.  ஆனால் இந்தச் சங்கி கூடையான்கள் காமராஜரையே தோற்கடிச்சிட்டானுகளேன்னு கதறுவாய்ங்க.  ஏன்னு இனிமேலாவது புரிஞ்சா சரி.

9.) அண்ணா முதலமைச்சராகிறார்.  மூன்று அதிமுக்கியமான தீர்மானங்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார்.

i) இனி நம் நாடு தமிழ்நாடு என்றழைக்கப்படும் !

ii) தமிழ் & ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கை மட்டுமே இங்கு இருக்கும்.  மும்மொழி என்கிற போர்வை போர்த்திக் கொண்டு கூட இந்தி நுழைய முடியாது !

iii) சடங்கு, சம்பிரதாயம், அக்னிசாட்சி, இடைத்தரகர் என்கிற எந்த இடையூறுகளுமின்றி நடத்தப்படும் சீர்திருத்த திருமணங்களும் செல்லும் !

10.) 18/07/1967.  தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் வென்ற தீர்மானம் என்பதால், ஒன்றிய அரசில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அது ஏற்றுக் கொள்ளவும் பட்டது !

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை 11 வருடங்கள் கழித்தும் மறவாமல் நிறைவேற்றிச் சாதித்தார் முதலமைச்சர் அண்ணா 🖤❤

எனவே, இனி எங்கள் தமிழ்நாடு மீது கை வைக்கவோ, அகந்தையில் கால் வைக்கவோ முயன்றீர்களெனில் அவ்வளவு அவயங்களும் அ*படும்.  திமிராக பேசிய வா*கள் உ*படும், எலும்புகள் பொ**படும் !