Tuesday, December 19, 2023

பெரியார், பிரபாகரன் ஒப்பீடு

"பிரபாகரனையும் பெரியாரையும் 
எதிர் எதிராக நிறுத்துவது 
கண்டிக்கத்தக்கது "என்கிறார் வாலாசா வல்லவன்.

இவர் கண்டிக்காவிட்டாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக அடையாளப் படுத்தப்பட்டுக்  கொண்டேயிருப்பார்கள்.

பெரியாரை அவமானப்படுத்தும் ஒன்று. பெரியார் காந்தியம் -சமூகநீதி -கம்யூனிச சிந்தனைகள் இவற்றிலிருந்து உருவாகிவந்த பேராளுமை . 
இன்றும் பெண்ணியச் சிந்தனைகள் ,ஆதிக்கக் கலாசார மறுப்புச் செயற்பாடுகள் இவற்றிற்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார். 

பிரபாகரன் சுத்த இராணுவவாதி. 
பிரபாகரன் சிந்தனைகள் என எதுவும் இல்லை. பிரபாகரனுக்குப் பின் புலிகள்  அமைப்புமில்லை.

பெரியாருக்குப் பின் பெரியார்காலத்திலிருந்தே அவரை முன்னிறுத்தி தனித்துவமாக உருவான அமைப்புகள் இன்றுவரை இயங்குகின்றன.
தனது அமைப்பிற்குள் வன்முறையை மருந்துக்கும் அனுமதிக்காதவர் பெரியார்.

வன்முறையைத்தவிர வேறெந்த வழியிலும் தன்னை இனங்காட்ட மறுத்ததோடு வன்முறையை மறுத்த அரசியல் பிரமுகர்கள் ,சமூக சேவகர்கள்,புத்திஜீவிகள்  அனைவரையும் படுகொலை செய்தவர் பிரபாகரன்.

பெரியார் தன் அமைப்பிலிருந்து பிரிந்துபோய் இன்னொரு அமைப்பு  உருவாகுவதை ஜனநாயக பூர்வமாக அனுமதித்தவர். ஆதரித்தவர்.
தன் மேடையிலேயே அவருக்கு எதிராகப் பேசிய ஜெயகாந்தன் போன்றோரை தன் கைத்தடியால் தட்டி தனக்கு எதிராகப் பேசுவதை ஊக்குவித்த மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்த மாண்பாளர் பெரியார்.

 மாற்று அமைப்புகளை அழித்தொழித்து ஒரு சர்வாதிகாரியாக தன்னை நிறுவிக்கொண்டதோடு தனது அமைப்பினுள்ளேயே  இரண்டாங்கட்டத் தலைவர்களையும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த போராளிகளையும் கொன்றொழித்தவர் பிரபாகரன்.

பெரியார் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆதரவாயிருந்தார். இன்றுவரை தமிழ் நாட்டில் இஸ்லாமிய ,கிறீஸ்தவ சமூகங்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ்வதில் பெரியாரின் பிரச்சாரங்களே அடிப்படையாக இருந்துவருகின்றன.

பிரபாகரன் முஸ்லிம் மக்களை தம் ஆதிக்கப் பிரதேசத்திலிருந்து துரத்தியடித்தவர்.

தன் இறுதிக்கால நோய்மையிலுங்கூட  மேடைகள் தோறும் பேசிவந்த சுய சிந்தனையாளர் பெரியார்.

தனது பாதுகாப்பு ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு தலைமறைவாக பங்கருக்குள் இருந்தவர் பிரபாகரன்.

பிரபாகரன் பாசிசத்துக்கு அவரின் ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகளும் ஒரு காரணம் . பிரபாகரனின் தளபதியொருவர் அவர் இயக்கப் பெண்ணொருவரைக் காதலித்து அவர் கர்ப்பமான காரணத்தைப் பொறுக்காது இருவரையும் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர். 

பெரியார் ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை விரிந்த தளத்தில் காட்டி நின்றவர்.

பிரபாகரன் முழு மூட அறிவிலி .
அரசியல் ஒவ்வாமை கொண்டவர்.
அதனால் அன்ரன் பாலசிங்கம் அவர் தமிழில் பேசும் ஒரு சில வார்த்தைகளை தமிழிலேயே அதற்கு விளக்கமளித்து வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்தது.

பெரியார் விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளை தொடங்கி நடாத்திய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உள்ள ஆசான்.பிரபாகரனுக்கு ஒன்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை.

பெரியார் சிந்தனை வட்டங்கள் இன்றும் இருக்கின்றன .இனியும் இருக்கும்.

பிரபாகரனால் ஈழ மக்கள் அழிந்தனர்.
பெரியார் ஒரு கடவுள்போல இன்றும் தமிழகத்தைக் காத்து நிற்கிறார்.

பகிர்வு செய்தி

No comments:

Post a Comment