Monday, December 31, 2018

பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது" - எனப் பெரியார் சொன்னதாக

ரதி மல்லிகா
2048-12-31

"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது" - எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்:

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.

அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.

வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.

காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில்  (11.12.1968) பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான்.

எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்.

இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".

தரவு:

கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.

https://m.facebook.com/story.php?story_fbid=375494326518507&id=100021738280165

Saturday, December 29, 2018

விசுவாச சுதந்திரம் குறித்த அல் குர்ஆனிய அணுகுமுறை - Lafees

Lafees Shaheed
2018-12-29

சிலர் மக்கா வெற்றியின் போதான நபிகளாரின் சிலை உடைப்பை "அதிகாரம் கிடைப்பதற்கு முன்னரான இறைதூதரின் செயல்பாடுகள்" மற்றும் "அரசதிகாரம் கிடைத்ததன் பிறகான செயல்பாடுகள்" - என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

அதாவது "அதிகாரம் கிடைத்தல்" என்பது இவர்களைப் பொறுத்தவரையில் நபிகளாரின் வாழ்வில் ஒரு பிரிகோடு.

"இந்த பிரிகோட்டுக்கு முற்பகுதியில், அதாவது நபிகளாரின் மக்கா காலகட்டத்து வாழ்வில், அவர் கஃபாவில் இருந்த சிலைகளை உடைக்கவில்லை. ஆனால் பிரிகோட்டின் அடுத்த பக்கமாக மதீனா நகர அரசு உருவான பொழுது, நபிகளார் மக்கா வெற்றியின் பின்னர் கஃபாவில் உள்ள சிலைகளை உடைத்தார்கள்" - என்று இவர்கள் பொருள் கோடல் செய்கிறார்கள்.

ஆக பிரச்சனையை இவர்கள் 'விசுவாச சுதந்திரம்' என்று விரிவான சமூக உள்ளடக்கத்தில் வைத்து புரிந்து கொள்ளாமல் இஸ்லாத்திற்கு 'அதிகாரம்' கிடைத்தல் என்று சுருக்கிப் புரிந்து கொள்கிறார்கள்.

ஆனால் இந்தக் கருதுகோள் அல்குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்திற்கு முரணானது.

********************************************

கீழ் வருவது விசுவாச சுதந்திரம் குறித்த அல் குர்ஆனிய அணுகுமுறை பற்றியதான Manazir Zarook எழுதிய முக்கியமான பதிவு :

-----------------------------------------

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்;

எங்களுடைய இறைவன் ஒருவன்தான் - என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை);

மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்;

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

அல்குர்ஆன் (22:40)

-----------------------------------------

இந்த வசனத்தின் முதற்பகுதி விரும்பிய மதத்தினை ஒருவர் பின்பற்றலுக்குரிய பூரண விசுவாச சுதந்திரம் உலகில் நிலவ வேண்டும் என கோருகிறது... //“எங்களுடைய இறைவன் ஒருவன்தான்”// என்று கூறியது தான் முஸ்லிம்கள் தமது வீடுகளை விட்டு துரத்தப்படுவதற்கும், அவர்கள் மீது போர் தொடுக்கப்படுவதற்கும் காரணமாய் அமைந்தன.

அல்குர்ஆன் இவ்விடத்தில் முஸ்லிம்களது விசுவாச சுதந்திரத்தை உறுதிப்படுத்த போராடும் படி கூறும் பொழுது, அதனுடன் தனது போராட்டத்துக்கான நியாயத்தை வரையறுத்துக் கொள்ளாமல், முழு மனித சமூகத்தினதும் (அதாவது, முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரினதும்) விசுவாச சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

இஸ்லாம் ஏனைய மதங்கள், கோட்பாடுகள் பற்றி வேறுபட்ட நோக்கு கொண்டுள்ள போதிலும், அவர்களுக்கு தமது நம்பிக்கைக் கோட்பாட்டுப் பகுதியை பின்பற்றுவதற்கு பூரண விசுவாச சுதந்திரம் உலகில் நிலவ வேண்டும் என அல்குர்ஆன் பணிக்கிறது.

அதற்காக உழைப்பது அல்குர்ஆனிய நோக்கில் முஸ்லிம் சமூகத்தினது முன்னனிச் செயற்பாடுகளில் ஒன்று. உலகில் விசுவாச சுதந்திரத்தை பேண முடியாத நிலை காணப்படுவது, அக்கிரமச் செயற்பாடுகளில் உள்ளடங்குவது.

இன்னொரு வகையில், மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது (அது எந்த மதமாயினும்) அக்கிரமம் செய்யும் கூட்டத்தினரின் செயல் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அல்லாஹூ அஃலம்!"
#விசுவாச_சுதந்திரம்

********************************************

மனாஸிரின் கருத்துக்கள் ஷெய்க் ரஷீத் ரிழா, ஷெய்க் ஷல்தூத், இமாம் முஹம்மத் அபூஸஹ்ரா, ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் தொடக்கம் இன்றைய தாரிக் ரமழான், ஷெய்க் முஃதார் அல் ஷன்கீதி வரை தொடரும் ஒரு சிந்தனைப் பள்ளியின் நிழலோட்டத்தை உள்ளீடாக கொண்டவை. குறித்த பதிவை ஆஷிக்கீன்கள் பொறுமையாக கற்க வேண்டும்.

ஆக பிரச்சனை இஸ்லாத்திற்கு அதிகாரம் கிடைப்பது அல்லது கிடைக்காமல் பலவீனமாக இருப்பது என்பது அல்ல. அல்குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்தின் சிறப்பான கூறான விசுவாச சுதந்திரம் தான் இந்த பிரச்சனையின் அடிப்படை.

அனைத்து மதங்களுக்கும் பூரண விசுவாச சுதந்திரம் நிலவும் ஒரு சமூக அமைப்பில் தான் உண்மையான ஏகத்துவ நம்பிக்கை, ஈமான் தழைக்க முடியும். நிர்ப்பந்தப்படுத்தி நம்பிக்கை கொள்ள வைப்பது இறைவனுக்கே உவப்பான ஒரு விடயம் அல்லாத பட்சத்தில் நாம் ஏன் அப்படியான ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்...?!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
#விடுதலை_இறையியல்

https://m.facebook.com/story.php?story_fbid=1153174638194630&id=100005063134008

Thursday, December 27, 2018

ஏற்கனவே உடைந்து போயிருக்கும் நோயாளி மருத்துவர் உறவை மேலும் நொறுக்காதீர்கள்

மருத்துவர் . மா. அன்புமணி.
2018-12-28

என்னோடு மருத்துவம் படித்த நண்பனுக்கு காசநோய் pleural effusion தாக்குதல்.

இன்னொரு மருத்துவருக்கு முதுகெலும்பில் காசநோய் தாக்குதல்.

ஒரு ஆய்வக நுட்பனருக்கு நுரையீரல், வயிறு இரண்டிலும் காசநோய்.

எத்தனையோ மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணிய்யாளர்கள் எச்ஐவி, மஞ்சள் காமாலை, நோய்த் தொற்று-க்கு ஆளாகியுள்ளனர்.

எல்லாமே நோயாளியிடம் இருந்து எதிர்பாராத விதமாக தொற்றிக் கொண்டது தான்.
அதுபோல பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா வைரசு  நோயாளியிடம் இருந்து தொற்று பரவி உயிர் இழந்த மருத்துவத் துறையினர் ஏராளம்.

இவை எல்லாம் ஆண்டு தோறும் occupational  hazard பணியிட கேடுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன.

எச்ஐவியோ, எப்படைட்டிசு பி யோ உடைய நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது எதிர்பாராதவிதமாக மருத்துவர், செவிலியர் களுக்கு காயம் ஏற்பட்டு நோயாளியின் குருதியோடு தொடர்பு ஏற்படுவது நாளும் நடக்கிறது.

இந்த ஆபத்து நடக்க அனைத்து வாய்ப்புகளும் உண்டு என்று தெரிந்தே எச்ஐவி ரத்தத்தில் கையை குளிப்பாட்டி எடுக்க எவ்வளவு மனத் துணிவு வேண்டும்.

எகிறும் இதயத் துடிப்போடு எச்ஐவி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் அந்த திருமணம் ஆகாத, அல்லது ஆன  இளம் மருத்துவர் செவிலியர்களின் மன உளைச்சலை மைக்ரோ ஹார்ட் அட்டாக்குகளை யாரேனும் அறிவீரா?

எச்ச்ஐவி பாதித்த மஞ்சள் காமாலை பி பாதித்த நபர் சாலை விபத்தில் அடிபட்டு ரத்தம் வழிய வழிய தூக்கிக் கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் போடப்படும் போது, அந்நபருக்கு எச்ஐவி உள்ளதா மஞ்சள் காமாலை பி உள்ளதா என்று அப்போதைய பரபர நேரத்தில் யாரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை.

முகத்தில் தெறிக்கும் நோயாளியின் குருதியை துடைத்துக் கொண்டு டிரையேஜ் ட்ரீட்மெண்ட் கொடுப்போரைப் பற்றித் தெரிந்து கொண்டதுண்டா?

லேபர் வார்டில் பிரசவம் பார்க்கும் போது முகத்தில், உடலில் திடீரென தெறிக்கும் பனிக்குட நீரில் என்ன என்ன நோந்த்தொற்றுக்கு வாய்ப்புள்ளதோ என அச்சம் ஒருபுறமும், தாயும் சேயும் நன்றாக பிறக்கனுமே என்ற பதைபதெப்போடு நகரும் மணித்துளிகளை அறிவீரா?

எல்லையில் போர் நடந்தால் தான் போர்வீரன் கூட குண்டுகளை எதிர்கொள்கிறான்.
ஆனால், ஒரு மருத்துவர் செவிலியர் ஒவ்வொரு நோயாளி யை கவனிக்கும் போதும் குண்டுகள் வீசப்படும் போர் முனையில் தான் நிற்கிறார்கள்.

மருத்துவ விபத்துக்கள், குறைபாடுகள் வேண்டும் என்று நடத்தப்படுவதில்லை.
ஏனெனில் மருத்துவர்களே மருத்துவ விபத்துகளில் நோயாளிகளை விட அதிகம் சிக்குபவர்களாக உள்ளனர்.

கவனமின்மை நிர்வாக குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து க்கு இடமில்லை.

ஆனால், இது தான் சாக்கு என்று வன்மத்தைக் கொட்டாதீர்கள்.

ஏற்கனவே உடைந்து போயிருக்கும் நோயாளி மருத்துவர் உறவை மேலும் நொறுக்காதீர்கள்.
இங்ஙனம்.

https://www.facebook.com/100001078193497/posts/2048071691905417/

கர்ப்பிணிப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடுநிலைப்பார்வை

Dr. A.B. ஃபரூக் அப்துல்லா, MBBS., M.D.,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

*கர்ப்பிணிப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடுநிலைப்பார்வை:*

தமிழகத்தில் 24 வயது உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவ மனையில் ரத்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 

முதலில் இந்த விபத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான அந்த பெண்ணுக்கு அனுதாபங்களை பதிவு செய்தவனாய் அந்த பெண்ணிற்கு அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டியவனாகவும் இந்த விளக்கப் பதவிவை ஆரம்பிக்கிறேன்.

---

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை நோயை சரிசெய்யும் பொருட்டு ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது.

பொதுவாக கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படுவது இந்திய பெண்களை பொருத்தவரை வாடிக்கையான ஒன்று.

முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு கர்ப்பிணிகள் அனைவருக்கும் இந்த ரத்த சோகையை தடுக்கும் பொருட்டு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன

இருப்பினும் அடுத்த மூன்று மாதங்களில் ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அயன் சுக்ரோஸ் (Iron sucrose) எனும் திரவம் நரம்பு வழியாக ஏற்றப்பட்டு இரும்புச்சத்து அதிகரிக்கப்படும்.

இதில் கடைசி மூன்று மாதங்களில் இருக்கும் கர்ப்பிணகளுக்கு ரத்த சோகை மிக அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது

கடைசி மூன்று மாதமான 3rd trimester இல் இரும்புச்சத்து மாத்திரைகளோ திரவம் மூலம் ஏற்றப்படும் அயன் சுக்ரோஸோ பயன்தராது.

ஆகவே அத்தகைய இரும்புச்சத்து குறைந்த ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுவது அவர்களுக்கு தரப்படவேண்டிய சிகிச்சை.

எனவே இது அத்தியாவசிய சிகிச்சை என்ற அளவில் அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் ரத்தம் - டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்ட அந்த ரத்தமானது அதற்கு நான்கு தினங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி தன்னார்வல தொண்டு நிறுவனம் நடத்திய ரத்த தான முகாம் மூலம் ஒருவர் வழங்கிய ரத்தம்.

---

பொதுவாக எவற்றுக்கெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறது என்பதை பார்ப்போம்?

1. சாலை விபத்துகளில் அடிபட்டு அதிக ரத்தப்போக்குக்கு உள்ளானவர்களுக்கு

2. ரத்தப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்பட வேண்டும்

3. தீவிர ரத்த சோகை (severe anemia)

4. பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு பின் அந்த அறுவை சிகிச்சை மூலம் வீணான ரத்தத்தை ஈடு செய்ய ஏற்றப்படும்
(Perioperative blood loss)

இவ்வாறு பல்வேறு காரணங்களுக்கு தேவைப்படும் ரத்தமானது

தொண்டு நிறுவனங்கள், ரத்த வங்கிகள் இவற்றில் தன்னார்வத்துடன் ரத்தத்தை தர விரும்பும் கொடையாளர்களிடம் (Donors ) இருந்து பெறப்படுகிறது.

---

குருதி கொடை தரவும் பல விசயங்களை பூர்த்தி செய்தாக வேண்டும் 

குருதி தருபவருக்கு வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும்

நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமானவராக இருத்தல் வேண்டும்.

அவருக்கு வேறெதுவும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள்  இருத்தல் கூடாது.

அவரது ரத்த ஹீமோகுளோபின் அளவு சரியானதாக இருக்க வேண்டும் 

இவ்வாறு அவர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் தரலாம்.

---

நாள்தோறும் தேவைப்படுவோர்க்கு தேவையான ரத்த யூனிட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சாலை விபத்துகள் அதிகமாகின்றன..
அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத் தேவை அதிகமாக இருக்கிறது.

எனவே ரத்த தான முகாம்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருக்கின்றன.

இதுபோன்ற ஒரு ரத்த தான முகாமில் தான் 21 வயதுடைய நபர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடையாக தந்துள்ளார்.

இப்படி கொடையாக வாங்கப்படும் உதிரமானது மற்றவருக்கு ஏற்றப்படுவதற்கு முன்பு கட்டாய பரிசோதனைகளுக்கு பின்பு ஏற்றப்படுகிறது. 

என்னென்ன பரிசோதனைகள் செய்யப் படுகின்றன ?

முக்கியமான பரிசோதனை

"Cross Matching" எனப்படும் பரிசோதனை.

அதாவது கொடை வாங்கப்பட்ட இந்த ரத்தம் எந்த ரத்த வகையை சேர்ந்தது ?
மற்றும் ரத்தம் ஏற்றப்படப்போகும் குருதி பெறுபவரின் ரத்த வகை எது?

இது இரண்டும் ஒத்துப்போகிறதா என்ற சோதனை..

இந்த சோதனை அனைத்து ரத்த யூனிட்களுக்கும் செய்யப்படுகின்றன.

அதற்கடுத்ததாக,  முக்கியமான பரிசோதனைகள்

எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி சோதனை

இந்த இரண்டு தொற்று நோய்களும் ரத்தத்தால் பரவும் தன்மை கொண்டது. 
ஆகவே,
கொடையாக வாங்கப்பட்ட குருதியில் எச்.ஐ.வி நோய் தொற்றும், ஹெபாடைடிஸ் - பி நோய் தொற்றும் இருக்கிறதா? என்று கட்டாயம் கண்டறியப்படும்.

இந்த பரிசோதனை பாசிடிவாக அதாவது கிருமி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் மருத்துவக்கழிவுகளில் சேர்க்கப்படும் 

அதை கொடுத்த கொடையாளருக்கு நோய் தொற்று இருப்பது அறிவிக்கப்படும். இது அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், மேலும் அவர் ரத்தம் கொடை கொடுப்பதையும் தடுக்கும்.

இந்த குறிப்பிட்ட நிகழ்விலும் , கொடையாக வாங்கப்பட்ட ரத்தத்தில் மேற்சொன்ன
Cross matching,
HIV பரிசோதனை,
Hepatitis - B பரிசோதனை
செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட துறை சார்ந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மூன்று பரிசோதனைகளும்  சரியாக இருந்ததால் தான் ரத்தம் அந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு முடிவு.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு.. அவரது ரத்த பரிசோதனையில் எச்.ஐ.வி இல்லை என்று வரும் வாய்ப்பு இருக்கிறதா????

இருக்கிறது.

எப்படி?
அதற்கு அந்த பரிசோதனைகள்
பற்றியும் எச்.ஐ.வி கிருமி உடலுக்குள் எப்படி பெருக்கம் செய்கிறது என்றும் பார்க்க வேண்டும்.

ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure)  ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் நெகடிவ் என்று தான் வரும்.

காரணம் நாம் பொதுவாக செய்யும் எச்.ஐ.வி பரிசோதனை
என்பது "Fourth generation / 3rd generation ELISA antigen- antibody test " 

இதில் antigen என்பது உடலுக்குள் வரும் எச்.ஐ.வி கிருமியில் இருக்கும்

அந்த antigen க்கு எதிராக உடல் செய்யும் எதிர்வினைதான் antibodies எனப்படும்.

நாம் செய்யும் இந்த ELIZA (enzyme linked immuno sorbent assay ) என்பது நமது உடலில் உருவான antibody களை அளந்து அது மூலம் எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியும்.

எச்.ஐ.வி உடலுக்குள் நுழைந்த முதல் மற்றும் இரண்டாம் வாரம்
- உள்ளே வந்த வைரஸின் அளவு பொறுத்து அதற்குரிய Polymerase chain reaction எனும் சோதனை மூலம் சில வைரஸ்களை பல வைரஸ்களாக பெருக்கம் செய்து கண்டறியலாம். ஆனால் இது மிகவும் காஸ்ட்லியான பரிசோதனை. இதை அனைவருக்கும் செய்வது நமது நாட்டின் நிதி சூழ்நிலைக்கு தற்போதைக்கு சாத்தியமற்றது.

ஆனால் இந்த
கிருமிக்கு எதிராக உடல் உற்பத்தி செய்த antibody களை நான்காவது வாரத்தில்( 28 நாட்களுக்கு பிறகு தான்)  இருந்து தான் கண்டறிய முடியும்.  ( பெரும்பாலும் அனைத்து ரத்த வங்கிகளிலும் இந்த 4th generation ELIZA kits வழங்கப்பட்டுள்ளது)

ஆகவே ஒருவருக்கு இன்று எச்.ஐ.வி தொற்று  புதிதாக ஏற்பட்டு இருந்தாலும் ,
அவருக்கு இன்று பரிசோதனை செய்தால் எச்.ஐ.வி இல்லை என்று தான் வரும்.

அவரது ரத்தத்தை நான்கு வாரங்கள் அல்லது 28 நாட்களுக்கு பிறகு சோதனை செய்தால் தான் "பாசிடிவ்" என்று காட்டும்.

இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகு சோதனை செய்து அப்போது வரும் பரிசோதனை முடிவே இறுதியானது

இதைத்தான் மருத்துவம் "window period " என்கிறது.

window period என்பது யாதெனில் ஒருவருக்கு நோய் கிருமித் தொற்று ஏற்பட்ட அன்றிலிருந்து அவருக்கு அந்த நோயின் பரிசோதனை முடிவு " பாசிடிவ்" என்று வரும் நாளுக்கு இடைப்பட்ட இந்த காலத்தை window period என்கிறோம்.

இது நோய்க்கு நோய் மாறுபடுகிறது.

எச்.ஐ.வி பொறுத்தவரை இப்போதைய நமது 4th generation ELIZA kits க்குரிய window period - 28 நாட்கள்

இனி நாம் எடுக்கும் அனைத்து ரத்த யூனிட்களுக்கும் PCR எனும் polymerase chain reaction செய்தாலும் அதற்குரிய window period 7 முதல் 14 நாட்களாகும்.

Polymerase chain reaction என்பது காஸ்ட்லியான பரிசோதனை.
இப்போது நாம் செய்யும் rapid card test முறையில் செய்ய இயலாது. தலைசிறந்த ஆய்வகத்தில் மட்டுமே செய்ய இயலும். மேலும் அந்த பரிசோதனை நேரம் பிடிக்கும் time consuming test. ஆகவே எமர்ஜென்சி நிலையில் அது பயன் தராது.

ஆகவே இந்த சம்பவத்தில் ரத்தம் கொடுத்த கொடையாளர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு எச்.ஐ.வி தொற்று நவம்பர் 15 முதல் 30 க்குள் ஏற்பட்டிருந்தால் ,
அவரது ரத்த பரிசோதனை முடிவில் "Negative" என்று தான் வரும்.    காரணம் அது அந்த கிருமிக்கான Window period.

ஆகவே , அந்த ஆய்வக நிபுணர்கள் செய்த எச்.ஐ.வி பரிசோதனை முடிவுகள் நெகடிவாக வந்தது என்பது அவர் window period இல் இருந்ததன் விளைவாகவும் இருக்கலாம்.

மேலும் அவர் வெளிநாடு செல்வதற்காக Medical tests செய்வதற்கு கடந்த வாரம் ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு HIV - positive என்று வந்துள்ளது.

இதற்கு காரணம் அவர் window period ஐ தாண்டி விட்டதும் இருக்கலாம்.

அந்த நல்ல மனதுடைய கொடையாளர் தனக்கு எச்.ஐ.வி இருப்பது அறிந்ததும் உடனே தான் ரத்தம் கொடையாக கொடுத்த வங்கிக்கு வந்து அதை கூறுகிறார். ஆனால் அதற்குள் அந்த குருதி அது தேவைப்பட்ட கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டு விட்டது.

இது ஒரு சோக நிகழ்வு.
பெரும் விபத்து.

இதில் அந்த ஆய்வக நுட்புணர்கள் தாங்கள் அந்த கொடையாளரின் ரத்தத்தை எச்.ஐ.வி
பயிசோதனைக்கு உட்படுத்தியாக முதல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த பரிசோதனையை சரியாக செய்யாமல் ரத்தத்தை ஏற்றியிருந்தால் அது Gross / serious  Professional Negligence
  என்ற வரையறைக்குள் வரும். அது அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தரும்.
ஆனால் அதுவே அவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்திருந்து window period விளைவாக நெகடிவ் என்று வந்திருந்தால்
அது Medical test error (Error Of God ) என்ற ரீதியில் அணுகப்பட வேண்டும். காரணம் இது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய பரிசோதனை முடிவில் உள்ள குறைபாடு.

தற்போதைக்கு அந்த ஆய்வக நிபுணர்கள் மூவரையும் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
மருத்துவ  குழுவின் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் நமக்கு தெரிய வரும்.

சரி.. இப்போது ஒரு கும்பல் கிளம்பும்
ரத்தம் ஏற்றுவதால் எச்.ஐ.வி பரவுகிறது . ஆகவே ரத்தம் ஏற்றுவது தவறு.. யாரும் ரத்தம் ஏற்றாதீர்கள்.. கொடுக்காதீர்கள்..  
என்று கிளம்பும்

இந்தியாவில் தமிழகம் எச்.ஐ வி நோய் தொற்றுள்ளோர் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறது.

இதில் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானோர் வாழும் மாநிலங்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது 

தமிழகத்தில் கடந்த வருடம் 1,134 பேர் ரத்தம் ஏற்றியதால் தான் தனக்கு எச்.ஐ வி வந்தது என்று கூறியுள்ளனர்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குஜராத்.

ஒட்டுமொத்த இந்தியாவில் கடந்த வருடம் 20,592 பேருக்கு ரத்தம் மூலம் எச்.ஐ.வி வந்ததாக கூறியுள்ளனர்.

( இது நோயாளியின் வாய்மொழி வழி பெறும் தகவல் ஆதலால் தகாத பாதுகாப்பற்ற உறவு  மூலம் வந்த நோயை மறைக்க கூட தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டது மூலம் தான் நோய் வந்தது  என்று நோயாளியே கூறவும் வாய்ப்புண்டு)

இந்தியாவில் அனுதினமும் குருதிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது

நாளொன்றுக்கு 1200 சாலை விபத்துகள் நமது நாட்டில் நடக்கின்றன

வருடத்திற்கு சராசரியாக
6 கோடி அறுவை சிகிச்சைகள் - சாலை விபத்துகளில் பாதிப்படைந்தோருக்கு செய்யப்படுகிறது.

23 கோடி மேஜர் அறுவை சிகிச்சைகள் நமது நாட்டில் வருடாவருடம் நடக்கிறது.

33 கோடி கேன்சர் நோயாளிகளுக்கு ரத்தம் அனுதினமும் தேவை.

ஆகவே நமது குருதித் தேவை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இன்னுமொரு விஷயத்தையும் பதிவு செய்கிறேன்

வருடம் தோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் யூனிட் ரத்தம் தேவையற்றதாக அல்லது ஏற்றத்தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டு மருத்துவ கழிவுக்குச் செல்கிறது.

எச்.ஐ.வி, மலேரியா, சிஃபிலிஸ், ஹெபாடைடிஸ் பி போன்ற தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்படுவதும் இந்த நிராகரிப்புக்கு  முக்கியமான காரணம்

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 1% மக்கள் ரத்தக்கொடையாளர்களாக இருக்க வேண்டும் என்பது

அப்படிப் பார்த்தால்
நமது நாட்டில் 1.3 கோடி பேர் ரத்த கொடையாளர்கள் இருக்க வேண்டும் .ஆனால் ரத்தம் தருவது 95 லட்சம் மக்கள் மட்டுமே.

ஆனால் இந்தியாவில் 51 கோடி பேர் ரத்தம் தர தகுதியானவர்கள் என்று NACO எடுத்த ஆய்வு கூறுகிறது.

டெல்லி போன்ற நகரங்களில் தேவைக்கு மேல் ரத்தம் இருக்கிறது.
பிஹார் போன்ற ஊர்களில் 85 சதவிகிதம் பின்னடைவில் இருக்கிறது.

ரத்தம் என்பது ஒருவரின் உயிர் காக்கும் உன்னத விசயம்.

இந்த ஒரு விபத்தை மனதில் கொண்டு நாம் ரத்த கொடையாளர்களையோ ரத்தம் ஏற்றி சிகிச்சை அளிக்கும் முறையையோ எள்ளிநகையாடுவது தவறு.

ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தல் (Blood transfusion) என்பது நவீன மருத்துவம் கண்டறிந்த மிக முக்கிய உயிர் காக்கும் சிகிச்சை.

அதன் மூலம் உயிர் பிழைத்த பல கோடி உயிர்கள் சொல்லும் அதன் முக்கியத்துவத்தை.

ஆண்டு தோறும் பல கோடி யூனிட்டுகள் ரத்தம் ஏற்றப்பட்டு பல கோடி உயிர்கள் காக்கப்படும் நம் நாட்டில் , ரத்தம் மூலம் எச்.ஐ.வி பரவியது என்று நோயாளியே ஒப்புக்கொண்டபடி வருடம் 20 ஆயிரம் பேர் என்ற அளவில் தான் வருகிறது.

மக்கள் தொகையை கொண்டு கணக்கிட்டால் இந்த தொகை மிகச்சொற்பம் என்பதை உணர முடியும்.

சரி..ரத்த தானம் மூலம்  எச்.ஐ.வி நோய் தொற்றை தடுப்பது எப்படி?

1. அவரவர் குடும்ப தேவைக்கு அவரவர் குடும்பத்தில் ஒருவரே ரத்த தானம் அளிக்கலாம்.
இதை Autologous blood transfusion என்போம்.

2. குருதியை பணத்திற்காக விற்பது 1995 முதல் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் Red market எனும் பெயரில் இன்னும் ரத்தத்திற்கான கள்ளச்சந்தை புலக்கத்தில் இருக்கிறது.  இந்த சட்டத்தை இன்னும் கடுமையாக்கிட வேண்டும். இதன் மூலம் கிருமித்தொற்றுக்கு உள்ளான ரத்தம் பொதுவெளியில் கலப்பதை தடுக்க இயலும்.

3. கொடையாளர்களின் ரத்தத்தை எச்.ஐ.வி போன்ற பரிசோதனை செய்வதில் இன்னும் நவீன முறைகளை புகுத்தலாம். window period error இதனால் குறையும் வாய்ப்புண்டு. இருப்பினும் முழுவதும் நீக்க இயலாது.

4. தன்னார்வல ரத்த கொடையாளர்களை அதிகமதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் தேவையான ரத்தம், ஆரோக்கியமான மக்களிடம் இருந்து கிடைக்கும்.

கடைசியாக

நமது தமிழகத்தில்
வருடா வருடம் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது 

2015-16 இல் 13,315
2016-17 இல் 11,809
2017-18 இல் 8,718

தமிழக அரசு  மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோக்கங்கள் யாவும் மக்களுக்கு ஆரோக்கியமான நல்வாழ்வை வழங்கிடவே.

இது போன்ற விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன
ஆனால் மருத்துவ துறையில் மட்டுமே மிகவும் பெரிதுபடுத்தப்படுகின்றன.

ஒரு விசயத்தின் உண்மையை நடுநிலையோடு அதன் அடிவரை ஆராய்ந்து முடிவு எடுப்பதே சான்றோர்க்கு அழகு.

முடிவுரை

ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப்பெண் அனுதாபங்களுக்கு உரியவர். அவருக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட வேண்டும்.
தற்போது எச்.ஐ.விக்கு உள்ள சிகிச்சை முறைகள் யாவும் தலைசிறந்தவை. அவருக்கு உயர்தர சிகிச்சையை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குருதி மூலம் எச்.ஐ.வி., ஹெபாடைடிஸ் பி போன்ற நோய் தொற்றுகள் பரவும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் அரசு  முடிவுகளை எடுத்து செயலாற்ற வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2075518789197953&id=100002195571900