Sunday, March 31, 2019

மனிதன் ஒரு territorial மிருகம்

நியாண்டர் செல்வன்
2019-03-31

பரிதாபகரமானவராக ஆவதை தவிருங்கள்

தொடர்தோல்விகள் நம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஒன்று நம்மை பரிதாபகரமானவர்களாக ஆக்குவதுதான். குறிப்பாக ஆண்களுக்கே இதன் பாதிப்புகள் மிக அதிகம்.

மனிதன் பிறவகை மிருகங்கள் போல ஒரு territorial மிருகம். ஒரு நாயின் எல்லையில் இன்னொரு நாய் நுழைந்தால் உடனே சண்டை மூன்டுவிடும். தோற்ற நாய் ஒன்று வென்ற நாய்க்கு கட்டுபட்டு அந்த பகுதியில் வாழவேண்டும். அல்லது சண்டையிட்டு ஜெயித்து அது அந்த பகுதிக்கு அரசனாகவேண்டும்.

ஓநாய்களுக்கிடையே இப்படி சண்டை வந்தால் தோற்ற ஓநாய் கீழே படுத்துக்கொண்டு தன் கழுத்தை கடிப்பதற்கு வசதியாக காட்டும். அது நம் மனித இனத்தில் காலில் விழுவதற்கு ஒப்பானது. ஜெயித்த ஓநாய் நினைத்தால் கீழே கிடக்கும் ஓநாயின் கழுத்தை கடித்து கொல்ல முடியும். ஆனால் அப்படி செய்வதில்லை. வேட்டைக்கு ஒரு துணை ஆச்சு என தன் டீமில் சேர்த்துகொள்ளும். அல்லது அடித்து விரட்டிவிடும்.

ஆனால் குழுவில் உள்ள பிற ஓநாய்கள், நாய்கள் அதனுடன் அதன்பின் ஒன்று சண்டையிடும். அதன்பின் அதன் இடம் குழுவில் ஏழாவதா, எட்டாவதா, இரண்டாவதா என தீர்மானமாகும். இந்த ரேங்கிங் ஆர்டர் தீர்மானமானபின் குழுவில் அமைதி நிலவும்.

மனித இன ஆண்களிடையே இந்த குணாதிசயம் அதிகம் உண்டு. ஒரு குழுவில் புதியதாக ஒருவன் வந்து சேர்ந்தால் அவன் வலிமை, திறம ஆகியவறை அளவிட்டு அவனுக்கான இடத்தை குழுவில் தீர்மானிப்பார்கள். ஓநாய்கள் போல அடித்துக்கொள்வது கிடையாது :-) ஆனால் புதியதாக ஒரு கம்பனியில் சேர்கிறீர்கள். ஏற்கனவே இருக்கும் ஆண்கள் உங்கள் திறமை என்ன, ஆளுமை என்ன என அளவிட்டு தம் குழுவுக்குள் உங்களுக்கான இடத்தை தீர்மானிப்பார்கள்.

இரு ஆண்கள் அறிமுகம் செய்துகொண்டால் அவர்கள் தமக்குள் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி "எங்கே வேலை பார்க்கறீங்க?" என்பதுதான். அதைபொறுத்து தான் எதிராளியின் இடத்தை தம்முடன் ஒப்பிட்டு தீர்மானிப்பார்கள்.

ஆக இதில் கடைசி இடத்தை பிடிக்கும் வலிமையற்றவர்களின் நிலை என்ன?

அவர்கள் தலையில் எல்லா வேலைகளும் கட்டபடும். விட்டால் "தம்பி போயி நாலு டி சொல்லிட்டு, சிகரெட் வாங்கிட்டு வா" என்பது போன்றவேலைகள் கட்டபடும். இதற்கும் ஒரே கம்பனியில் ஒரே விதமான வேலைகளை செய்யும் ஆண்களுக்கிடையே கூட இத்தகைய படிமநிலைகள் உருவாகும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் குழுவின் கடைசி ரேங்கில் இருந்து அனைவரின் ஏவல்களையும், ஏச்சுகளையும் பொறுத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.

எலிகளுக்கிடையே நடந்த சோதனையில் ஒரு கூண்டில் பெரிய வலுவான ஆண் எலிகளை அடைத்து வைத்து அதனுள் ஒரு சின்ன வலுவற்ற எலியை அனுப்பினார்கள். தோற்கடிக்கபட்ட எலி அதன்பின் கொத்தடிமை மாதிரி ஆகி எலிக்கூண்டினுள் கடைசி இடத்தில் இருந்தது. அதை அதன்பின் எடுத்து சம வயதுடைய, சம பலமுள்ள எலிகளுக்கு நடுவே விட்டாலும் அதன் அடிமை மனபான்மை மாறவில்லை. அது இந்த புதிய இடத்திலும் முதலிடத்துக்கு ஆசைப்படாமல் இருக்கும் தலைமையை ஏற்று கடைசி இடத்தில் வாழ ஆரம்பித்துவிட்டது. அது பிறருடன் பழகுவது, உற்சாகமாக இருப்பது எல்லாமே குறைந்தன. அது தன்னை தனிமைபடுத்திக்கொண்டு ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கி அதனுள் வாழ ஆரம்பித்துவிட்டது.

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை கொடுத்தவுடன் அது மீன்டும் சுறுசுறுப்பானது. ஆக இந்த எலிக்கு மூளையில் தொடர்தோல்விகள் செரடோனின் அளவை குறைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்.

நீங்கள் இப்படி உங்களுக்கே தெரியாமல் ஆண்கள் கூட்டத்தில் ஒரு கம்பனியில், வீட்டில், உறவில், நட்புகளுக்கிடையெ கூட் கடைசி இடத்தில் இருக்கலாம். பல சமயம் அந்த குழுவில் உள்ளவர்களுக்கே இது தெரியாமல் இருக்கும். ஆனால் தொடர்தோல்விகள் உங்களை மனரீதியாக பாதித்து நீங்கள்  பணிபுரியும் இடத்தில் அனைத்து வேலைகளும் உங்கள் தலையில் கட்டபடும் நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.

தொடர்தோல்விகளால் துண்டவருக்கு சிறு சிறு வெற்றிகளை அடைவது தான் பாதிப்பை சரி செய்யும் வழி.

உங்களுக்கு சமமானவர்கள் உங்களை அடக்குவது போல தெரிந்தால் "நோ" சொல்லி பழகவும். இது உங்கள் எல்லைகோட்டை நீங்கள் தீர்மானிப்பதுபோல. உங்களுக்கான எல்லைகோட்டை நீங்கள் தீர்மானித்தால் அவர்கள் அதன்பின் அதனுள் வரமாட்டார்கள். முன்பே சொன்னதுபோல மனிதன் ஒரு
territorial animal.

அவர்களிடம் இருக்கும் திறமையை நீங்களும் வளர்த்துக்கொள்ள முயலவும். படிம அமைப்பில் மேலேறுங்கள்.

படிம அமைப்பின் மெல்நிலையில் நீங்கள் இருந்தால் கீழ்நிலையில் இருப்பவர்களை கைதூக்கி விடவும்.

அன்றாட வாழ்வில் சிறு சிறு வெற்றிகளை உடல்பயிற்சி மூலம் அடையவும். ஒரு குறிக்கோளை எட்டுவது கூட வெற்றிதான். அதுவும் உங்களை வெற்றியாளராக மாற்றும். அந்த வெற்றி பிற துறைகளிலும் எதிரொலிக்கும்.

https://www.facebook.com/100001446818079/posts/2206418672749672/

பகுத்தறிவா வஹீயறிவா? எது சிறந்தது?

அப்பான் அப்துல் ஹலீம்
2019-03-30

பகுத்தறிவா வஹீயறிவா? எது சிறந்தது?

வானங்களும், பூமியும், மலைகளும் பொறுப்பேற்க மறுத்த வஹி எனும் அறிவை அல்லாஹு தஆலா பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் கொடுத்திருக்கிறான். எனவே மனித அறிவால் வஹீயைப் புரிந்துகொள்ள முடியாது என்ற வாதமானது வஹியின் முழுமுதல் நோக்கத்துக்கே எதிரான வாதமாகும். அறிவை ஒரு புறம் வைத்துவிட்டு வேறொரு புலனால் வஹியைப் புரிந்துகொள்ளும் படி அல்குர்ஆன் ஏவவில்லை. மாற்றமாக ‘அறிவைப் பயன்படுத்தாமல், தர்க்கத்துக்குட்படுத்தாமல் அல்லாஹ்வின் வசனங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது இறையடியார்களின் பண்புக்கு விரோதமானது’ என்றே அல்குர்ஆன் (25:73) கூறுகிறது.

அசத்தியத்துக்கெதிரான பகுத்தறிவின் நோயெதிர்ப்புச் சக்தியை மென்மேலும் வலுப்படுத்துவதுதான் பகுத்தறிவுக்கு வஹீ செய்யும் பங்களிப்பாகும். வஹீயின் துணை கொண்டு முழு வீச்சில் சிந்தித்துணர்வதுதான் பகுத்தறிவு வஹியிற்கு செய்யும் கைமாறாகும்.

அனுபவமுள்ள ஒருவர் அனுபவமற்ற ஒருவனுக்கு செய்யும் உபதேசத்தை பெரும்பாலும் அனுபவமற்றவன் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டான். ஆனால் அவனது சொந்த அனுபவத்தில் குறித்த விஷயத்தை அவன் புரிந்துகொள்ளும் கட்டம் வரும் போது ஏற்கனவே தனக்கு அந்த உபதேசத்தை செய்தவரின் அறிவையும் அனுபவத்தையும் அங்கீகரிக்கின்ற, அதனை மெச்சுகின்ற ஒரு நிலைக்கு அவன் வந்து விடுகிறான். எதிர்காலத்தில் குறித்த நபரிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்வான்.

இதுபோலத்தான் இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள உறவும். இறைவன் தனது அப்பழுக்கற்ற அறிவின் மூலமாக மனிதனுக்கு சொல்கின்ற வழிகாட்டல்களை மனிதன் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் காலவோட்டத்தில் அவனது அறிவை அவன் பிரயோகித்து இறையறிவின் வழிகாட்டல்களை தர்க்கத்துக்கும், சவாலுக்கும் உட்படுத்துகின்ற போது, ஏற்கனவே அவனது அறிவால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தவற்றை புரிந்துகொள்ளத் தலைப்படுகிறான். இதன் விளைவாக இறையறிவின் மகத்துவத்தையும் அதனூடாக இறைவனின் மகோன்னதத்தையும் அவன் புரிந்துகொள்கிறான். விளைவாக இறைவழிகாட்டலின் பால் தனக்குள்ள தேவையை உணர்ந்து மெல்ல மெல்ல அதன் பக்கம் திரும்ப ஆரம்பிப்பான்.

எங்கு இறைவழிகாட்டல் தர்க்கத்துக்கும் சவாலுக்கும் உட்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு ஐயங்களுக்கான வாசல் திறக்கப்படுகிறது. பதிலற்ற ஐயங்கள் தெளிவின்மையையும் நிரந்தர சந்தேகத்தையும் பிரசவிக்கின்றன. அந்த சந்தேகம் நிராகரிப்பை நோக்கி இட்டுச் செல்லும். சிந்தனையை, அறிவை பிரயோகித்தல் பற்றி அல்குர்ஆன் அதிகம் வலியுறுத்தியிருப்பதன் நோக்கமும் அதன் பிரயோசனத்தை சிலாகித்திருப்பதன் பின்னணியும் நிராகரிப்பிலிருந்தும் அவனைக் காப்பாற்றுவதன்றி வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?!

பகுத்தறிவா வஹீயறிவா? எது சிறந்தது? என்பன போன்ற வாதங்கள் தேவையற்றவை. ஏனெனில் இவ்விரண்டு அறிவுகளினதும் உள்ளீடுகள் முற்றிலும் வேறுபட்டவை. வஹியானது வழிகாட்டல் தத்துவங்களையும், அடிப்படைகளையும் உள்ளீடுகளாகக் கொண்ட அறிவாகும். பகுத்தறிவோ புரிந்துகொள்ளலையும், முறைமைகளைப் பிரசவிக்கும் தன்மையையும், நடைமுறைப்படுத்தல் கருவிகளையும் உள்ளீடுகளாகக் கொண்ட அறிவாகும். இதில் ஒன்றில்லா விட்டால் அடுத்தது இருந்து பிரயோசனமில்லை. அறிவின் நோக்கமான ‘சத்தியத்தை அறிந்துகொள்ளல்’ என்பதை சாத்தியப்படுத்தும் வகையில் ஒன்றையொன்று பூரணப்படுத்துகின்ற பரஸ்பரம் ஒன்றின் பால் இன்னொன்றுக்குத் தேவையுள்ள கூறுகளைத்தான் இவ்விரண்டும் உள்ளடக்கியிருக்கின்றன.

வஹியின் சிறப்பம்சம் அதன் தத்துவார்த்த அடிப்படைகள் என்றும் பகுத்தறிவின் சிறப்பம்சம் அதன் புரிந்துகொள்ளல் செயற்பாடு என்றும் கூறலாம். மனித அறிவால் வஹியின் தத்துவார்த்த ரீதியான அடிப்படைகள் புரிந்துகொள்ளப்படும் செயற்பாட்டுக்குப் பெயர்தான் இஜ்திஹாத். அந்தப் புரிதல் சிலபோது தவறான புரிதலாக அமைந்துவிட்டாலும் கூட அது நன்மையொன்றைப் பெற்றுத்தரும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதானது முக்கிய செய்தியொன்றைச் சொல்லித்தருகிறது. வஹியின் மீது அதனைப் புரிந்துகொள்வதற்காகவும் நடைமுறைப்படுத்துவதற்காகவும் மனித அறிவைப் பிரயோகிப்பது இபாதத்தாகும். அந்த இபாதத் எந்தளவு ஏற்றமானதென்றால், உங்கள் இலக்கு தவறினாலும் கூட ‘அறிவைப் பிரயோகித்தல்’ என்ற இபாதத்தை நிறைவேற்றியதற்கான கூலிக்கு உரித்துடையவராக மாறுகிறீர்கள்... ஸுப்ஹானல்லாஹ்!!!

பகுத்தறிவு எந்தளவுக்கு அதிகமாக பிரயோகிக்கப்படுகிறதோ (அதாவது பகுத்தறிவுக்கு எந்தளவு சுதந்திரம் வழங்கப்படுகிறதோ) அந்தளவுக்கு அதிகமாக அது வஹியின் அடிப்படைகளை புரிந்துகொள்ள ஏதுவாய் அமைந்து விடுகிறது. பகுத்தறிவின் மீதான கெடுபிடிகளும் வரையறைகளும் அதிகரிக்கும் போது உண்மைக்கும் பகுத்தறிவுக்குமிடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. ஓட்டம் தடைப்பட்டு அசைவற்று தேங்கி நிற்கும் நீர் எப்படி தன்னளவிலும் அசுத்தமாகி இன்னும் பல அசுத்தங்கள் பிறந்து வளர்வதற்கான உற்பத்திஸ்தானமாகவும் மாறி விடுகிறதோ, அவ்வாறே பிரயோகிக்கப்படாமல் தேக்கி வைக்கப்படும் பகுத்தறிவும் கூட தன்னளவிலும் அசுத்தப்பட்டு அசுத்தமான சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் மாறி விடுவதைப் பார்க்கலாம். ‘அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து விளங்காதவர்கள் மீது அசூசையை (அருவருப்பை) அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான்’ என்ற அல்குர்ஆன் (10:100) ஆயத் எத்தனை தெளிவாக இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது!

அறிவின் எதிரிகள் பகுத்தறிவின் வகிபாகத்தை பகுத்தறிவுவாதமாக சித்தரிப்பர். ‘பகுத்தறிவுவாதம்’ என்பது மனித அறிவை மிஞ்சிய வேறோர் அறிவு இல்லை என்ற வாதமாகும். ஆனால் பகுத்தறிவின் வகிபாகம் என்பது மனித அறிவை மிஞ்சிய அறிவொன்றின் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலான தொடர் சிந்தனைச் செயற்பாடாகும். அறிவைப் பிரயோகிக்கத் தெரியாத மனிதர்களுக்கு(?) அல்குர்ஆனின் பாஷையில் சொன்னால் ‘செவிட்டு ஜந்துகளுக்கு’, அல்லது ‘ஊமைச் செவிடுகளுக்கு’, ‘கால்நடைகளை விட கேவலமான நிலையில் உள்ள ஜீவராசிகளுக்கு’ பகுத்தறிவுவாதம் மற்றும் பகுத்தறிவின் வகிபாகம் இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டைக் கூட புரிந்துகொள்ள முடியாத முடியாத புலனியக்கக் கோளாறு இருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

சிந்திக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தமது வேர்பிடித்த கதிரைகளுக்கும் கொழுப்புத் தட்டிய வயிறுகளுக்கும் ஆப்பு வைக்கப்படும் என்ற அச்சத்தைத் தவிர, அறிவின் மீது வெறுப்பைக் கொட்டுவதற்கு வேறு என்ன நியாயம்தான் இருந்துவிடப் போகிறது!!!

https://m.facebook.com/story.php?story_fbid=2368230859876823&id=723418241024768

Saturday, March 30, 2019

முஸ்லிம் சமூகமும், 'குப்ர்' சிந்தனைக் கட்டமைப்பும்...

மனாஸிர் ஸரூக்
2019-03-30

முஸ்லிம் சமூகமும், 'குப்ர்' சிந்தனைக் கட்டமைப்பும்...
.

நூற்றாண்டு கால முஸ்லிம் உளவியலைத் தீர்மானித்ததில் பிக்ஹ் கண்ணோட்டத்துக்கு பாரியதொரு இடமுண்டு. முஸ்லிம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல விடயங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் பிக்ஹ் கண்ணோட்டம் பதிலளித்து / தீர்வுகளை முன்வைத்து, முஸ்லிமின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே எமது பிக்ஹ்(சட்டவியல்) பாரம்பரியம் வளர்ந்து வந்தது. சட்டவியல் பாரம்பரியம் முஸ்லிமின் அன்றாட வாழ்வுடன் ஊடாடி வளர்ச்சியுற்ற கலை என்ற வகையில் அது பெரிதும் சூழல்சார் தாக்கங்களுக்கு உட்பட்டே தன்னை வளப்படுத்திக் கொண்டன.
.

ஆனால், பிக்ஹ் கண்ணோட்டம் பிரசவித்த பிக்ஹ் நிலைப்பாடுகள் அனைத்தும் அல்குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்திற்கு உடன்பட்ட வகையில் அமையும் என்று குறிப்பிட முடியாது. பிக்ஹ் கலைசார் இமாம்களின் பிக்ஹ் நிலைப்பாடுகளில் / இஜ்திஹாத்களில் அவர்களின் சூழமைவு சார்ந்த தாக்கம் நிச்சயமாக அவதானிக்கத் தக்கவை. இவ்வகையில், அல்குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்துக்கும், எமது சட்டவியல் பாரம்பரியத்தின் அடியான பிக்ஹ் கண்ணோட்டத்துக்குமிடையில் முரண்கள் எழுகையில் நாம் எதனைத் தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமானது.
.

எடுத்துக்காட்டாக, 'முஸ்லிம் - காபிர்' என்ற பிக்ஹ் சிந்தனைக் கட்டமைப்பு. முஸ்லிமல்லாத அனைவரையும் 'காபிர்' என்ற  வகைமையினுள் பிக்ஹ் கண்ணோட்டம் வரையறுத்தது. முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் சார்ந்து எழுந்த கேள்விகளுக்கு பதிலாகவும், நாடுகளுக்கிடையிலான உறவில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அன்றைய உலக ஒழுங்கின் 'தாருல் இஸ்லாம் - தாருல் குப்ர்' சிந்தனை சார்ந்தும் அமைந்தன 'காபிர்' பற்றிய சட்டவியல் பார்வை. அதாவது, திருமண பந்தம், உணவில் ஹலால் - ஹராம் பேணல் போன்ற முஸ்லிமின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சட்டவியல் நிலைப்பாடுகள் தொடங்கி நாடுகளுக்கிடையிலான உறவினை முகாமை செய்தல் வரை முஸ்லிம் அல்லாதவர்களை ஒரு வகைமையினுள் உள்ளடக்கும் தேவை சட்டவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. 'காபிர்' என்ற பிரயோகத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களை அவர்கள் குறித்தனர் / வரையறுத்தனர்.
.

ஆனால், 'காபிர்' என்ற சொற்பதத்தினை அல்குர்ஆன் வேறு அர்த்தத்தில் பிரயோகித்தன, வரையறுத்தன. முஸ்லிம் அல்லாத அனைவரையும் அச்சொற்பிரயோகம் அல்குர்ஆனில் குறித்து நிற்கவில்லை. பிரச்சினை என்னவென்றால், முஸ்லிம் சமூகம் பிக்ஹ் நிலைப்பாடு சார்ந்த 'காபிர்' என்ற பிரயோகத்தினை (அதாவது, முஸ்லிம் அல்லாத அனைவரையும் குறிக்கும் 'காபிர்' என்ற சட்டவியல் சார்ந்த சொற்பிரயோகத்தினை,) அல்குர்ஆன் 'காபிர்' என்று பயன்படுத்தும் வகையினரின் மேல் பிரயோகித்து பொருள்கோடல் செய்தனர். அல்குர்ஆன் 'காபிர்' என்ற சொற்பதத்தினை அசத்தியத்தை, அநீதியை உலகில் வளர்ப்பவர்களாகவும், மனிதர்களிடம் வரம்பு மீறுபவர்களாகவுமே வர்ணிக்கின்றன. எனவே, அல்குர்ஆன் 'காபிர்' என்பதனை கடுமையாக சாடவும், இகழ்ச்சியாக வரையறுக்கவும் செய்கின்றன. விளைவாக, அல்குர்ஆனின் 'காபிர்' என்ற பிரயோகத்திற்கான பிக்ஹ் கண்ணோட்டம் சார் பொருள்கோடலானது முஸ்லிம் அல்லாத அனைவரையும் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியவர்களாக முஸ்லிம் உளவியலில் முன்னிறுத்தின. முஸ்லிம் சமூகம் தனது வாழ்வியலை மூடூண்ட சமூகக் கட்டமைப்பினுள் சுருக்கிக் கொள்ளவும் இது காரணமாயமைந்தன. 
.

அல்குர்ஆன் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களினை எவ்வாறு நோக்குகிறது?
.
நாம் பொதுவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிக்க 'முஸ்லிம்' என்ற சொற்பதத்தினை பயன்படுத்துகின்றோம். ஆயினும், அல்குர்ஆன் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களின் படிதரங்களையும் பிரித்தே நோக்குகின்றது.
.

"“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்."(49:14).
.

இவ்வசனம் 'ஈமான்' கொள்ளலை, 'கீழ்ப்படிதல்' / 'வழிப்படுதல்' என்ற கருத்தைக் கொடுக்கும் 'முஸ்லிம்' பிரயோகத்திலிருந்து பிரித்தே நோக்குகிறது. நாட்டுப் புறத்து அரபிகளிடம் இஸ்லாத்தினை ஏற்ற 'முஸ்லிம்' என்று வேண்டுமானால் கூறுங்கள், விசுவாசம் கொண்ட 'முஃமீன்' ஆக நீங்கள் மாறவில்லை என்கிறது. எனவே தான், முஸ்லிமாக இருக்கும் படி ஏவுகின்ற அல்குர்ஆனின் வேறு வசனங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்ட முஸ்லிமாக இருக்கும் படி ஈமானையும் இணைத்தே கூறுகின்றன.
.

இவ்வகையில் அல்குர்ஆன் இஸ்லாத்தினை மார்க்கமாக ஏற்றவர்களை முஸ்லிம்கள்(இஸ்லாத்துக்கு கீழ்ப்படிந்தவர்கள் / வழிப்பட்டவர்கள்), முஃமீன்கள்(ஈமான் கொண்டவர்கள்), முத்தகி(தக்வா உடையவர்கள்) போன்ற பிரயோகங்கள் மூலம் தரப்படுத்தல் செய்கிறது. உள நிலையின் அடிப்படையிலும் நப்ஸுல் அம்மாரா, நப்ஸுல் அவ்வாமா, நப்ஸுல் முத்மயின்னா என்றும் வகைப்படுத்துகின்றது. மனிதர்கள் என்ற வகையில் அனைவரையும் ஒரே சட்டகத்தினுள் அடைக்க முடியாது என்பது யதார்த்தம். இதனையே அல்குர்ஆனும் மனிதர்களை வகைப்படுத்தும் போது கையாள்கிறது. இவ்வாறே இஸ்லாத்தினை ஏற்காதவர்களையும் அல்குர்ஆன் வேறுபட்ட வகையிலேயே பிரித்து நோக்குகிறது.
.

அல்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களை / இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதவர்களை எவ்வாறு நோக்குகிறது?!  
.

இஸ்லாத்தினை தனது மார்க்கமாக ஏற்காதவர்கள் அல்குர்ஆன் பல வகைகளில் வகைப்படுத்துகிறது. 'காபிர்' என்பது அதில் ஒன்றே. காபிர்கள்(நிராகரிப்போர்), முஷ்ரிக்கள்(இணைவைப்போர்), முனாஃபிக்கள்(இஸ்லாத்தினை ஏற்றதைப் போன்று நடிக்கும், முஸ்லிம் சமூகத்தினுள்ளேயே இருக்கும் நயவஞ்சகர்கள்), அஹ்லுல் கிதாப்(வேதம் வழங்கப்பட்டோர்), முஸ்லிம்களுக்கு உபத்திரம் செய்யாதோர், அநீதி இழைக்காதோர் அல்லது நல்ல முறையில் நடந்து கொள்வோர் என்று பலவாராக அல்குர்ஆன் வகைப்படுத்துகின்றன. பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அவதானியுங்கள்:
.
"(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
.

அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றார்களோ, அவர்கள் அநியாயக்காரர்கள்தாம்."(60: 8-9).
.

அதாவது, முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக நல்லுறவு பேணுவதை, நன்மை செய்வதை, நீதமாக நடப்பதை தவிர்ந்து கொள்வது நீதவான்களில் செயல் அல்ல என்கிறது.
.

இவை தவிர, அல்குர்ஆன் 'மனிதர்களே'(நாஸ்) என்று விழித்து பல விடயங்களினைப் பேசுகின்றன. மனித சமூகம் என்ற வகையில் ஒருமைப்பாட்டையும், ஒருமித்து அனைவரும் உடன்பட வேண்டிய விடயங்களினையும் பேசுகின்றன.
.

"மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்."(49:13).
.

அல்குர்ஆன் ஜிஹாத் செய்ய அனுமதித்த முதலாவது வசனமே, மத வெளிப்பாட்டு சுதந்திரத்தை அல்லது விசுவாச சுதந்திரத்தை முன்னிறுத்துகின்றன. (நவீன பரிபாஷையில் சொவதென்றால், கருத்து வெளிப்பாட்டு உரிமையை, மனித உரிமையை வலியுறுத்துகின்றன.):
.
"இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."(22:40).
.

இறுதியாக, நபிகளார் அநியாயத்துக்கு எதிராக அல்லது ஒருவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் மனிதர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதை எவ்வளவு விரும்பினார் என்பதை ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ ஒப்பந்தம் பற்றிய அவருடைய மனப்பதிவு காட்டுகின்றது. இஸ்லாத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தம் இது:
.

"சிறப்புமிகு ஒப்பந்தம்.

சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்." (இப்னு ஹிஷாம்).

"இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் “இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்” என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்." (தபகாத் இப்னு ஸஅது).
.

"ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."(2:62).
.

அல்லாஹூ அஃலம்!

.

https://m.facebook.com/story.php?story_fbid=2367033466663229&id=723418241024768