Sunday, November 25, 2018

ஹாலிவுட் படங்களும், சைனா மார்கெட்டும்

பால கணேசன்
2018-11-25

கடைசியாக ஒரு சைனீஸ் வில்லன் நடித்த ஹாலிவுட் படத்தை நீங்கள் எப்போது பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அல்லது சைனாவை வில்லன் போல காட்டிய, சைனா மக்களை கெட்டவர்கள் போன்று சித்தரித்த பெரிய ஹாலிவுட் படத்தை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

ஒரு பத்து வருடத்திற்கு முன்பெல்லாம் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ நடித்த ஹாலிவுட் படம் வெளியாகிறதென்றால் அதில் ஒரு சின்ன வேடத்தில் ஒரு சைனீஸ் ஆள் நடித்திருப்பார். பின்னர் ஹீரோவின் நண்பனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சைனீஸ் நடிகர்கள் நடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமான வேடத்தில் அவர்கள் வந்தார்கள். அதில் வில்லனாக நடிக்கும் சைனீஸ் நடிகர்களும் கூட இருந்தார்கள். ஆனால் இப்போது?

ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு நம்புவது கடினமாக இருக்கும். சென்ற வருடம் பிக்ச்சார் நிறுவனம் ஒரு அனிமேஷன் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு காட்சியில் ஏலியன் ஒன்று பூமிக்கு வந்து மிக முக்கியமான இடங்களை எல்லாம் அழிப்பது போல ஒரு காட்சி இருந்தது. நகைச்சுவை காட்சிதான் அது. அதில் சீனப்பெருஞ்சுவரில் ஒரு பெரிய ஓட்டையை போடுவதாக திரைக்கதை எழுதியிருந்தார்கள். ஆனால் அதற்கான அனிமேஷனை உருவாக்கிக்கொண்டிருந்தபொழுது இந்த காட்சியை சீனாவில் திரையிடும்பொழுது, அது சில எதிர்மறையான விமர்சனங்களையும், மனக்குழப்பதையும் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், அதனால் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், இறுதியில் சீனப்பெருஞ்சுவரை ஓட்டை போடுவதற்கு பதிலாக, தாஜ்மகாலை உடைப்பது போல காட்சி மாற்றினார்களாம்.

மேற்கண்ட பத்தியின் மூலம் தெரியவரும் செய்திகளை கவனியுங்கள். அது அனிமேஷன் படமாகவே இருந்தாலும் கூட, நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சியாகவே இருந்தாலும் கூட, சீனாவின் பெருமை என்று கூறப்படும் ஒரு உலக அதிசயத்தை இழிவுபடுத்துவதை போல காட்டக்கூடாது என்பதில் ஏன் தயாரிப்பு குழுவினர் இவ்வளவு மும்முரமாக இருந்தார்கள்? அடுத்ததாக சினிமா என்கிற ஊடகம் ஒரு பொழுதுபோக்கு விஷயம். அந்த பொழுதுபோக்கு விஷயத்தை பார்க்கும் ஒருவன் மனக்குழப்பம் அடைவான் என்றும், அதன் மூலம் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் முடிவெடுக்க வேண்டிய காரணமென்ன? இந்த கேள்விகளுக்கான பதில் ஒன்றே ஒன்றுதான்.

பணம். சீனா கடந்த மூன்று வருடங்களுக்குள் ஹாலிவுட்டுக்கு அள்ளி தந்திருக்கும் பணம்.

சீனாவில் ஒவ்வொரு நாளும் பத்து திரையரங்குகள் புதிதாக திறக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எப்படியெனில் 2012-ல் வெறும் 12,407 திரையரங்குகள் மட்டுமே சீனாவில் இருந்தது. அதுவே 2017-ல் 50,776 திரையரங்காக மாறியது. 2021-ன் முடிவில் 80,377-ஆக இருக்கும் என்று கூறுகிறார்கள். சீனாவின் மொத்த சினிமா வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் ஹாலிவுட் படங்களால் கிடைக்கிறது. 2015-ல் 38% வருமானத்தை தந்த இந்த ஹாலிவுட் படங்கள், அதுவே 2017-ல் 41% வருமானத்தை தந்ததாக கூறப்படுகிறது.

இந்த வசூல் ஹாலிவுட் படத்திற்கு எந்தவகையில் உதவுகிறது என்கிற கேள்வி எழலாம். இப்போது நாம் உதாரணமாக ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாகம் ஏழு படத்தையே எடுத்துக்கொள்ளலாம். அது மிகப்பெரிய ஹிட்டான ஒரு ஹாலிவுட் படம் என்பது நமக்கு தெரியும். படத்தின் பட்ஜெட்டை விட அதிக அளவு பணத்தை அந்தப்படம் ஹாலிவுட்டிலேயே சம்பாதித்துவிட்டது என்பதும் உண்மை. அதாவது போட்ட காசை எடுத்தாச்சு. இதன் மூலம் அந்தப்படம் ஹிட் என்று அறிவித்துவிட்டார்கள். அதன்பின்னர் அந்தப்படம் சீனாவில் வெளியாகிறது. சீனாவில் அந்தப்படம் 390 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் சம்பாதிக்கிறது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க அந்த படம் சம்பாதித்த லாபத்திற்கு மிக அருகில் வரும் தொகை இது. இப்போது இந்த தொகையும் சேருவதால், வெறும் ஹிட் என்று அறிவிக்கப்பட்டிருந்த அதே படம் இந்த வருமானம் மூலம் பிளாக்பஸ்டர் அந்தஸ்தை பெறுகிறது. இது முதல் நன்மை.

இரண்டாவது நன்மை இந்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்கள் ஒரு பெரிய ப்ராண்ட். ஏற்கனவே எட்டு பாகங்கள் வெளிவந்துவிட்டன. இந்த வெற்றியின் மூலம் அந்த ப்ராண்டை சீனா  போன்ற பெரியநாட்டில் ஆழமாக பதியவைக்கலாம். நன்றாக கவனியுங்கள். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் கதாபாத்திரங்களில் ஒரு சைனீஸ் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்றும். இதன்மூலம் அவர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கமுடியும். ஏழாவது பாகம் வசூலித்ததை விட  50 மில்லியன் டாலர்கள் அதிகமாக வசூலித்து, ஃபேட் ஆப் ஃபியூரியஸ் மிகப்பெரிய சாதனையை சீனாவில் படைத்தது. எட்டாவது பாகமும் பிளாக்பஸ்டர். இதைவிட ஆச்சர்யமாக வெறும் ஆவரேஜ் வெற்றி என்று மட்டும் சொல்லப்பட்ட டிரான்ஸ்பார்மர் படத்தின் இறுதி பாகம், சீனாவில் வெற்றிபெற்று நல்ல வசூலை குவித்ததால், அது பெரிய ஹிட் படமாக மாறியது. இதன்மூலம் சீனாவின் சினிமா மார்க்கட் பற்றி ஓரளவிற்கு ஒரு புரிதல் வந்திருக்கலாம்.

நமக்கு வந்த இந்த புரிதல் சீனாவின் அரசியல்வாதிகளுக்கும் கூட வந்தது. புதிதாக வெளியாகும் எந்தவொரு மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இருந்தாலும் அதை சீனாவில் வெளியிட அந்த அரசியல்வாதிகள் போடும் ஒரே நிபந்தனை," எந்த காரணத்திற்காகவும் சீனாவின் பெருமையை குழைப்பது போன்ற காட்சிகள் படத்தில் இருக்கக்கூடாது..". அப்படி காட்சிகள் இருந்தால் ஒன்று நீக்கிவிட்டு வெளியிடவேண்டும். இல்லையெனில் மாற்றி எடுத்து வெளியிட வேண்டும். இதை வெறும் கோரிக்கையாக அவர்கள் வைக்கவில்லை. ஒரு எழுதப்படாத சட்டமாகவே இதை முன்னெடுத்து அதை செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருந்ததன் பலன்தான் சீனப்பெருஞ்சுவருக்கு பதிலாக தாஜ்மகாலை இடிப்பது.

ஏஞ்சலினா ஜூலியின் கணவர் ப்ராட் பிட் சீனாவிற்குள் நுழைய முடியாது என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? 1997-ல் வெளிவந்த செவன் இயர்ஸ் இன் திபெத் என்கிற படத்தில் நடித்ததால் அவருக்கு போடப்பட்ட தடை இது. சீனாவிற்கும், திபெத்துக்குமான சண்டை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.இரண்டாம் உலகப்போரின் போது நிகழ்ந்த மிகப்பெரிய கொடூரமான ஒரு சம்பவம் அது. அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த ஒரே காரணத்திற்காக பிராட் பிட்டுக்கு அன்றிலிருந்து அனுமதி மறுப்பு. இதுகூட பரவாயில்லை. லேடி காகா உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தலாய் லாமாவை இவர் சந்தித்தார் என்கிற ஒரே காரணத்திற்காக இவருக்கு சீனாவில் நுழைய தடைவிதித்தார்கள். உலகின் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெரி ஒரு இசை நிகழ்ச்சியின்போது அணிந்திருந்த ஆடையில் சூரியகாந்தி பூக்கள் இருந்ததால் தடைசெய்யப்பட்டார். ஏனெனில் சூரியகாந்தி பூக்கள் என்பது சீனா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த ஒரு குழுவின் சின்னமாக இருந்தது. அதை ஆதரிப்பது போல ஆடை அணிந்ததாக கூறி கேட்டி பெரிக்கு சீன அரசு ஆயுட்கால தடை விதித்திருக்கிறது.

இப்படி கலைஞர்களை எல்லாம் இந்த மாதிரியான காரணத்திற்காக நாட்டுக்குள் நுழைவதையே தடை செய்யும் சீன அரசு, திரைப்படங்களில் அதை கடுமையாக கடைப்பிடிப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஹாலிவுட் அந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்கள். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் சீனாவில் தயாரிக்கப்படும் அவர்களது சொந்தமொழி படங்களும் ஹாலிவுட்டுக்கு நிகரான வருமானத்தை சீனாவில் பெற ஆரம்பித்திருக்கின்றன. ஒல்ஃப் வாரியர், ஆபரேஷன் ரெட் சி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதால், சீனப்படங்களின் சந்தையை தாண்டி புதிதாக ஏதேனும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஹாலிவுட்க்காரர்கள் இருக்கிறார்கள். அதனால் சீனாவின் எல்லா நிபந்தனைக்கு தலையாட்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

இதையே இந்தியாவில் சற்று எப்படி இருக்கிறதென எட்டிப்பாத்தால் கேவலமாக இருக்கிறது. அதற்கு உதாரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அது இந்தியாவில் வெளியிடும் 3டி படங்களில், திரையரங்கில் உபயோகிக்கும் 3டி கண்ணாடி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தங்களது பங்காக கேட்கிறது. ஆனால் இந்திய திரையரங்க உரிமையாளர்கள் அப்படி எல்லாம் பங்கு தரமுடியாது என்று மறுத்துவிட்டனர். இது முதன்முதலில் ஆரம்பித்த படம் ஜுராசிக் வேர்ல்ட். உங்களுக்கே தெரிந்திருக்கும் அந்த பத்ம 3டியில் இந்தியாவில் வெளியாகவில்லையென்று. இதோ இந்தவாரம் வெளியான தி பெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமும் வார்னர் பிரதர்ஸ் வெளியீடுதான். இந்தமுறையும் அதே பிரச்சினையால் படம் 3டியில் வெளியாகவில்லை.

உண்மையில் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா மிகப்பெரிய மார்க்கட். நாம் டிமாண்ட் செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறோம். ஆனால் நம் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளோ அதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. ஒரு நல்ல சினிமா அனுபவத்தை பெற திரையரங்கிற்கு வரும் மனிதர்களை ஒரு பொருட்டாக கூட நம் அரசாங்கம் எடுத்துக்கொள்வதில்லை என்பதற்கு இந்த 3டி கண்ணாடி விவகாரம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். இன்னொரு பக்கம் சீனாவை  பொறாமையாக இருக்கிறது. அவர்கள் ஹாலிவுட் என்கிற பூனைக்கு மிக எளிதாக மணி கட்டிவிட்டார்கள். ஆனால் நாம்?

https://m.facebook.com/groups/374418146228060?view=permalink&id=792827457720458

Tuesday, November 20, 2018

ஒரு பெண், "வலி" (பாதுகாவலர்) இல்லாமல் திருமணம் செய்வது, ஷரீஅத்துக்கு  முரணானதா?

*கலாநிதி அஹ்மத் அஷ்ரப்
2018-11-21

*ஒரு பெண், "வலி" (பாதுகாவலர்) இல்லாமல் திருமணம் செய்வது , ஷரீஅத்துக்கு  முரணானதா?*

இஸ்லாத்தில், ஒரு பெண் திருமணம் செய்வதில் பின்வரும் நடைமுறைகள் இருக்கின்றன:

*நடைமுறை (1):*

ஜாஹிலிய்யாக் காலத்தில், ஒரு ஆண், பெண்ணின் பாதுகாவலரிடம், கல்யாணம் கேட்டு, மஹர் கொடுத்து, திருமணம் செய்தல்.

இஸ்லாம் வந்ததின் பின்பும், இந்த நடைமுறை தொடர்ந்தது. (புஹாரி: 5127)

ஆனால் , பெண்ணின் விருப்பம் பெறப்படவேண்டும். (புஹாரி: 5136, முஸ்லிம்: 1419)

விருப்பம் பெறப்படாமல் விட்டால், பெண் முறைப்பாடு செய்யுமிடத்து, நீதிபதி திருமணத்தை ரத்துச் செய்யலாம்.

*நடைமுறை (2):*

இஸ்லாத்தில், ஒரு பெண் தானாகவே திருமணம் செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

இதற்க்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்:

"இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்  ஒரு பெண்மணி வந்து நின்று 'நான் என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்' - என்று கூறினார்.

அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. 

அப்போது ஒருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே இவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்' - என்று கூறினார்.

நபி (ஸல்)அவர்கள்  இவருக்கு மஹ்ராக கொடுக்க உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள்.

அவர் 'சில அத்தியாயங்கள் மனப்பாடமாக  உள்ளது. அதை தவிர என்னிடம் எதுவும் இல்லை' - என்று கூறினார்.

அப்போது நபி ஸல் அவர்கள் 'உனக்கு மனனமாய் உள்ள குர்ஆனை அவளுக்கு கற்றுக்கொடுப்பதை மஹராக்கி இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன்' - என்று கூறினார்கள்.
(கருத்துச் சுருக்கம்)
(புஹாரி: 5087, முஸ்லிம்: 1425)

இந்த ஹதீஸில், அப்பெண்ணிடம் உனக்கு வலி (பாதுகாவலர்) இருக்கின்றாரா என்றோ, அல்லது அவரைக் அழைத்து வா என்றோ கூறவில்லை. இப்பெண்ணுக்கு வலி இருக்கவில்லை என இந்த ஹதீஸின் எந்த அறிவிப்பிலும் இல்லை.

மேலும், "வலி இல்லாமல் திருமணம் இல்லை", "எந்தப் பெண்ணும் வலி இல்லாமல் செய்த திருமணம், செல்லுபடியாகாது", போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவைகள்.

அதனால், அவைகளை, இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் ஆகியோர் தங்களது கிரந்தங்களில் பதிவுசெய்யவில்லை.

சில அறிஞர்கள்:

"நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, இத்தாவை முடித்துக்கொண்டால், அவர்களை திருமணம் செய்யத் தடுக்காதீர்கள்" (அல் பகரா : 232)

என்ற ஆயத்து, பாதுகாவலர்களை நோக்கிச் கூறப்பட்டது என்றும், பாதுகாவலர் கட்டாயம் என்பதினால்தான், அவர்களை தடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது என்று வாதிக்கின்றனர்.

இது தவறாகும். இது விவாகரத்துச் செய்த கணவன்மார்களை நோக்கிச் சொல்லப்பட்டதாகும். இதறக்குரிய முன் ஆயத்துகளை நோக்கினால், கணவன்மார்களையே விழிக்கின்றது  இங்கே பாதுகாவலர்களைப் பற்றிப் பேசவில்லை.

மாறாக, விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், உங்கள் வீட்டில் இத்தா முடிந்துவிட்டால், அவர்களை, வீட்டில் அடைத்துவிடாமல், அவர்கள் விரும்பும் கணவன்மார்களை திருமணம் செய்ய தடையாக இருக்காதீர்கள் என்பதே ஆயத்தின் கருப்பொருள் ஆகும்.

அதேபோன்று, "முஷ்ரிகீன்களுக்கு (முஸ்லிம் பெண்களை) திருமணம் முடித்து வைக்காதீர்கள்" (அல் பகரா : 221) - என்ற வசனம், பாதுகாவலர்களை விழித்துச் சொல்லப்பட்டதல்ல. அது சகல முஸ்லிம்களையும் நோக்கி, கூறப்பட்ட ஒன்றாகும்.

அவ்வாறே, "உங்களில் திருமணமாகதவர்களுக்கும் , திருமணம் செய்துவையுங்கள்" (அந்நூர்: 32) என்ற வசனமும், அவர்கள் திருமணம் செய்வதற்க்கு உதவுங்கள்" என்பதே அதன் கருத்து. இது பாதுகாவலர்களை நோக்கிச் சொல்லப்பட்டதல்ல. இல்லாவிட்டால், ஆண்களுக்கும் "வலி" அவசியமானது என்ற பொருளைக் கொடுக்கும்.

இமாம் அபூ ஹனீபா அவர்கள், வலி கட்டாயம் தேவை இல்லை என்றே கூறியுள்ளார்.

ஆயிஷா ரழி அவர்கள், தனது சகோதரன் அப்துர்ரஹ்மான், ஷாமில் இருந்தபோது, அவரது அனுமதி இல்லாமல், அவரது மகள் ஹப்ஸாவை, முன்திர் பின் சுபைருக்கு திருமணம் செய்துவைத்தார்கள்
(அல் முவத்தஃ: 2040)

இதன் மூலம், வலி, திருமணத்துக்கு அடிப்படை நிபந்தனை அல்ல என்பதை விளங்க்கிக் கொள்கின்றோம்.

எனவே, ஒருபெண், 18 வயதுக்குப் பின், வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தக் குழுவின் சிபார்சு,  ஷரீயாவுக்கு முரணானதல்ல. எகிப்து போன்ற நாடுகளிலும், இது போன்ற சட்டம் நடைமுறையில்  உள்ளது. 

இந்த உரிமையை, 20 அல்லது 22 வயது என வரையறை செய்தால் நல்லது என்பது எனது ஆலோசனையாகும்.

Friday, November 16, 2018

“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!

சிவபாலன் இளங்கோவன்
2018-11-17

“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!

மற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.

இன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.

சாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.

இந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.

சாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.

https://m.facebook.com/story.php?story_fbid=2389952417712562&id=100000934822167

Monday, November 12, 2018

சமூகநீதி - நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு

Ilavanji
2018-11-12

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு.

எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க...

அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு  இருப்பவர்களுக்குக் கைகொடுக்கும் தைரியமும் அவங்களுக்கு வழிவிடும் துணிவும் எங்களுக்கு இருக்குன்னு அர்த்தம்.

ஆமாய்யா... மானியத்துல கிடைச்ச அரிசில புழுவை அலசிட்டு கல்லுபொறுக்கி சோறுவைச்சுத் தின்னுதான் வளர்ந்தோம். இப்ப என்னா அதுக்கு? :) பசிச்சவனுக்கு கிடைச்ச மீனுதான். அதுகொடுத்த தெம்புலதான் எங்க தூண்டிலை நாங்களே செஞ்சுக்கிட்டோம். நீங்க இன்னமும் நூறாண்டுகள் அலசி ஆராய்ந்து எங்களில் சிலருக்கு கொடுக்கப்போகும் ”10 நாளில் மீன் பிடிப்பது எப்படி?”ங்கற புத்தகம் எங்களுக்கு எதுக்குயா வேணும்?

பல்பொடி, கரண்டு மான்யம், புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப்பு, பொங்கலுக்கு வேட்டி சேலை, திருமண உதவித்தொகை, அம்மா உணவகம் இதெல்லாம் மானியம் இலவசம் தான். அதைக் கொடுப்பது மக்களால் மக்களுக்குக்காக தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியமைத்து அதில் எடுக்கும் முடிவில் கொடுக்கப்படுபவை தான். அதையெல்லாம் பிச்சை கேவலம்னு ஒருத்தன் சொல்லறான்னா அவனுக்கு அவனைத்தவிர யாரைப்பத்தியும் அக்கறையில்லைன்னு அர்த்தம். இந்துமதத்துல ஆயிரம் ஓட்டைகள் இருக்கு ஆகவே பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மதத்தில் இந்த ஓட்டைகளைச் சரிசெய்து முன்னேத்தனுமே தவிர மதமே கூடாதுன்னு வாதிடறது முட்டள்தனம்னு சொல்லற அதே ஜொமோக்கள் தான் இலவச திட்டத்துல ஊழல் ஏமாத்து ஆகவே அனைத்தையும் ஒழிங்கன்னு வசனம் எழுதுகிறார்கள்.

ஒரு அரசாங்கம் கொடுக்கும் ஒன்றை பெறுவது அதைத்தேர்ந்தெடுத்த ஒரு குடிமகனின் உரிமை. அது தேவையில்லையெனில் பெறாமலிருப்பது ஜனநாயகம். எனக்குத் தேவையில்லை ஆகவே பெறுபவர் அனைவரும் இலவசத்துக்கு அலையும் பிச்சைக்காரர்கள் என அருள்முத்து உதிர்ப்பாயேயானால் நீ உன் தெருவையே அறியாதவன்.

எலைட்டுகளின் இன்னொரு உத்தி இதில் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைத் திணித்து இலவச திட்டங்களைக் கேவலங்கள் என பெறுபவர்களை நம்பச்செய்வது. ஊழல் நடக்குதுன்னா அதைத்தடுக்க என்ன செய்யனும்னு சொல்லாம பயனாளிகளைக் கேவலப்படுத்துவது. ஒரு அரசு எனக்குக் கொடுக்கும் பொருளை நான் பெறுவதற்கு நானெதுக்குயா என் ஒழுக்கத்தை உனக்கு நிரூபிக்கனும்? நீங்க என்ன அப்படியாப்பட்ட தங்கங்களா உங்களுக்கு முன்னால் எங்களை உரசி உரசி நிரூபிச்சுக்கிட்டே இருக்கனுங்கறதுக்கு?

நேர்மையின் மொத்த உருவன் அன்னா அசாரே இன்னைக்கு எங்க உட்கார்ந்து யார் ஊழலை எதிர்கிறார்னு பாருங்க. அங்கே எல்லையில் ராணுவவீரர்கள்னு சொன்னவங்க எல்லாம் வங்கிக்குத் திரும்பவந்த பணக்கணக்கை பத்தி எப்படிக் கமுக்கமா பேசாம இருக்காங்கன்னு பாருங்க. இவங்களுக்கு இல்லாத நிரூபிக்கத் தேவையில்லாத ஒழுக்கமும் நேர்மையும் இலவசங்களால் பலனடையும் நமக்கு எதுக்குன்னேன்? அதுக்கு எதுக்கு நம்மை நாமே அசிங்கமா உணரனுங்கறேன்?

கலைஞர் இறக்கையில் இலக்கியப் பிரம்மாக்கள் மூனுபேரு ஏதுவுமே சொல்லலைன்னு இணைய உபிக்கள் வருத்தப்படாங்க. அந்தக் கள்ளமவுனத்துல அவங்க சாதிச்சது நீங்க வாய்விட்டுக் கேட்டாலும் எழுதமாட்டேனேங்கற அதுப்புதான். அதன்மூலம் பெற்றது செத்தாலும் நல்லது ரெண்டு நடந்திருக்குன்னு என்வாயால சொல்லமாட்டேங்கற அரிப்புதான். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? தமிழகத்தின் சோத்தனங்கள் பலகாலமாய் திராவிடக் கட்சிகளின் மீது போர்த்தி வந்த நகைச்சுவை கலந்த நேர்மை, நாகரீகமின்மை, ஒழுக்கமின்னைன்ற திரைகளையெல்லாம் மனசுல கிழிச்செறிஞ்சுட்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான சாமானியர்களின் குரல்கள். அவர்கள் கொடுத்த அரசின் இலவச திட்டங்களால் எப்படிப் பயனடைந்து என்னை என் குடும்பத்தை நிமிர்த்தினேன் அப்படிங்கற வாக்குமூலங்கள். இதெல்லாம் ஓராளு செத்தவுடன் சொல்லும் சடங்கு நல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் வாழ்வில் உணர்ந்த பலனடைந்த சாமானியர்களின் துக்கம். இந்தத் தட்டுத்தடுமாறிய ஆயிரக்கணக்கான குரல்களுக்கு முன்னால் அந்த வெளிவராத 100 பக்கம் இசங்களை அரைச்ச கட்டுரைகள் ஹைகோர்ட்டுக்கு சமானமில்லையா?

இதுல ஒரு ஐரணி உண்டு. அந்த மூன்று இலக்கியபிதாக்களும் ஒருகாலத்தில் நாடுமுழுக்க ஊரூராய் சோறிண்றி போட்டுக்கத் துணியின்றி அலைந்து அனுபவங்களைப் பெற்றெடுத்த நாடோடிகள். பயணங்களே கண் திறப்புகள்னு நமக்குப் புத்தகங்கள் எழுதி உணரவைத்த ஆசான்கள். ரயிலில் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியதில் இருந்து டெல்லி எல்லைவரைக்குத் தெரியவரும் சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களைக் கண்டு உணர்ந்த பிறகும் தமிழக மக்கள் ஏன் எப்படி இந்த 60 வருடங்களில் அவலத்தில் இருந்து சமூக மரியாதை கூடிய இடத்துக்கு நகர்ந்துள்ளார்கள் என்பதைப் பற்றி ரெண்டுவரி எழுத மனமில்லைன்னா அவர்களுக்கு கடைசில க்கன்னா கூடச் சரியாக வைக்காத சர்கார் எழுதத்தான் விதி வாய்ச்சுவிடும்!

சரி ஆமாய்யா... இலவசத்துலதான் பலனடைஞ்சோம். சத்துணவு சாப்புடதான் பள்ளிக்கு போனோம். இலவச சைக்கிள்லதான் படிக்கபோனோம். இலவச வேட்டி புடவைதான் எங்காத்தாளுக்கு. முதல் பட்டதாரி க்ரேஸ் மார்க்குதான் என்னை இஞ்சினியரு ஆக்குச்சு. ரிசர்வேஷன்லதான் சீட்டு வாங்குனோம். இன்னும் ரெண்டு தலைமுறைக்குக் கூட ரிஷர்வேசன்ல வாங்குவோம். நீங்கெல்லாம் உங்க சாதிசட்டிபிகேட்டுகள கிழிச்சுட்டு முன்ன போகனும்னா போங்கய்யா. அந்த நேர்மை ஊழல் ஒழிப்பு மேம்போக்கு மேட்டிமைத்தன தடிச்ச போங்கை எங்ககிட்ட காட்டாம கமல் ரஜினி கட்சில சேர்ந்து ஸ்ரெய்ட்டா ரப்பர் வச்சி அழிங்க.

நாங்க கலைஞர், ஜெ, ராமதாஸ், திருமா ஏன் டாக்டர் கிருஷ்ணசாமியாகவே இருந்தாலும் களத்தில் எங்க சமூகத்துக்குப் போராடும் அதன்மூலம் பலன் கொடுக்கும் தலைவர்களை ஆதரிக்கறோம். ச்சேச்சே இதெல்லாம் ஜாதிக்கட்சின்னா எல்லா ஜாதிக்கட்சிகளும் தேர்தல்முறைக்கு வருகையில் ஓட்டரசியலுக்கு ஜனநாயக மாண்மை பின்பற்றித்தான் ஓட்டுகள் தேத்துங்கற உண்மை அறியாதவங்க நீங்கன்னு நினைச்சுக்கறோம்.

ஆக, அரசு இலவசங்கள் கொடுப்பதும் பெறுவதும் கேவலம்னு நினைப்பது தான் படு கேவலம் சென்றாயன்! உன்னைய உன்னையவைச்சே கேவலப்படுத்தி பேச எந்த புண்ணாக்குகளையும் அனுமதித்து விடாதே!

* இலவசங்கள் நாட்டைக்கெடுக்குதுங்கறவன் தன் முன்னோர் வரலாறு அறியாத மேட்டிமைத்தனத்தில் தளும்பும் கிணற்றுத்தவளை

* இலவசங்களைக் கேவலம் என்பவன் சொந்த மக்களின் வாழ்க்கை மாற்றங்களை எதிர்ப்பவன்

* இலவசங்களை ஊழல் நிறைந்த அயோக்கியதனம் என்பவன் சொந்த மக்களின் ஏற்றங்களை அழிக்கப்பார்க்கும் காட்டுமிராண்டி

* இலவசங்கள் நாட்டை அழிக்கும்னு ஷோல்டர் இறக்காம பொங்கறவன் தான் பெற்ற சமூகநீதி என்பதையே ஏன் பெற்றோம் என்று அறியாத மூடன்.

https://m.facebook.com/story.php?story_fbid=10156218988723773&id=595298772