Monday, November 12, 2018

சமூகநீதி - நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு

Ilavanji
2018-11-12

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு.

எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க...

அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு  இருப்பவர்களுக்குக் கைகொடுக்கும் தைரியமும் அவங்களுக்கு வழிவிடும் துணிவும் எங்களுக்கு இருக்குன்னு அர்த்தம்.

ஆமாய்யா... மானியத்துல கிடைச்ச அரிசில புழுவை அலசிட்டு கல்லுபொறுக்கி சோறுவைச்சுத் தின்னுதான் வளர்ந்தோம். இப்ப என்னா அதுக்கு? :) பசிச்சவனுக்கு கிடைச்ச மீனுதான். அதுகொடுத்த தெம்புலதான் எங்க தூண்டிலை நாங்களே செஞ்சுக்கிட்டோம். நீங்க இன்னமும் நூறாண்டுகள் அலசி ஆராய்ந்து எங்களில் சிலருக்கு கொடுக்கப்போகும் ”10 நாளில் மீன் பிடிப்பது எப்படி?”ங்கற புத்தகம் எங்களுக்கு எதுக்குயா வேணும்?

பல்பொடி, கரண்டு மான்யம், புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப்பு, பொங்கலுக்கு வேட்டி சேலை, திருமண உதவித்தொகை, அம்மா உணவகம் இதெல்லாம் மானியம் இலவசம் தான். அதைக் கொடுப்பது மக்களால் மக்களுக்குக்காக தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியமைத்து அதில் எடுக்கும் முடிவில் கொடுக்கப்படுபவை தான். அதையெல்லாம் பிச்சை கேவலம்னு ஒருத்தன் சொல்லறான்னா அவனுக்கு அவனைத்தவிர யாரைப்பத்தியும் அக்கறையில்லைன்னு அர்த்தம். இந்துமதத்துல ஆயிரம் ஓட்டைகள் இருக்கு ஆகவே பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மதத்தில் இந்த ஓட்டைகளைச் சரிசெய்து முன்னேத்தனுமே தவிர மதமே கூடாதுன்னு வாதிடறது முட்டள்தனம்னு சொல்லற அதே ஜொமோக்கள் தான் இலவச திட்டத்துல ஊழல் ஏமாத்து ஆகவே அனைத்தையும் ஒழிங்கன்னு வசனம் எழுதுகிறார்கள்.

ஒரு அரசாங்கம் கொடுக்கும் ஒன்றை பெறுவது அதைத்தேர்ந்தெடுத்த ஒரு குடிமகனின் உரிமை. அது தேவையில்லையெனில் பெறாமலிருப்பது ஜனநாயகம். எனக்குத் தேவையில்லை ஆகவே பெறுபவர் அனைவரும் இலவசத்துக்கு அலையும் பிச்சைக்காரர்கள் என அருள்முத்து உதிர்ப்பாயேயானால் நீ உன் தெருவையே அறியாதவன்.

எலைட்டுகளின் இன்னொரு உத்தி இதில் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைத் திணித்து இலவச திட்டங்களைக் கேவலங்கள் என பெறுபவர்களை நம்பச்செய்வது. ஊழல் நடக்குதுன்னா அதைத்தடுக்க என்ன செய்யனும்னு சொல்லாம பயனாளிகளைக் கேவலப்படுத்துவது. ஒரு அரசு எனக்குக் கொடுக்கும் பொருளை நான் பெறுவதற்கு நானெதுக்குயா என் ஒழுக்கத்தை உனக்கு நிரூபிக்கனும்? நீங்க என்ன அப்படியாப்பட்ட தங்கங்களா உங்களுக்கு முன்னால் எங்களை உரசி உரசி நிரூபிச்சுக்கிட்டே இருக்கனுங்கறதுக்கு?

நேர்மையின் மொத்த உருவன் அன்னா அசாரே இன்னைக்கு எங்க உட்கார்ந்து யார் ஊழலை எதிர்கிறார்னு பாருங்க. அங்கே எல்லையில் ராணுவவீரர்கள்னு சொன்னவங்க எல்லாம் வங்கிக்குத் திரும்பவந்த பணக்கணக்கை பத்தி எப்படிக் கமுக்கமா பேசாம இருக்காங்கன்னு பாருங்க. இவங்களுக்கு இல்லாத நிரூபிக்கத் தேவையில்லாத ஒழுக்கமும் நேர்மையும் இலவசங்களால் பலனடையும் நமக்கு எதுக்குன்னேன்? அதுக்கு எதுக்கு நம்மை நாமே அசிங்கமா உணரனுங்கறேன்?

கலைஞர் இறக்கையில் இலக்கியப் பிரம்மாக்கள் மூனுபேரு ஏதுவுமே சொல்லலைன்னு இணைய உபிக்கள் வருத்தப்படாங்க. அந்தக் கள்ளமவுனத்துல அவங்க சாதிச்சது நீங்க வாய்விட்டுக் கேட்டாலும் எழுதமாட்டேனேங்கற அதுப்புதான். அதன்மூலம் பெற்றது செத்தாலும் நல்லது ரெண்டு நடந்திருக்குன்னு என்வாயால சொல்லமாட்டேங்கற அரிப்புதான். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? தமிழகத்தின் சோத்தனங்கள் பலகாலமாய் திராவிடக் கட்சிகளின் மீது போர்த்தி வந்த நகைச்சுவை கலந்த நேர்மை, நாகரீகமின்மை, ஒழுக்கமின்னைன்ற திரைகளையெல்லாம் மனசுல கிழிச்செறிஞ்சுட்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான சாமானியர்களின் குரல்கள். அவர்கள் கொடுத்த அரசின் இலவச திட்டங்களால் எப்படிப் பயனடைந்து என்னை என் குடும்பத்தை நிமிர்த்தினேன் அப்படிங்கற வாக்குமூலங்கள். இதெல்லாம் ஓராளு செத்தவுடன் சொல்லும் சடங்கு நல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் வாழ்வில் உணர்ந்த பலனடைந்த சாமானியர்களின் துக்கம். இந்தத் தட்டுத்தடுமாறிய ஆயிரக்கணக்கான குரல்களுக்கு முன்னால் அந்த வெளிவராத 100 பக்கம் இசங்களை அரைச்ச கட்டுரைகள் ஹைகோர்ட்டுக்கு சமானமில்லையா?

இதுல ஒரு ஐரணி உண்டு. அந்த மூன்று இலக்கியபிதாக்களும் ஒருகாலத்தில் நாடுமுழுக்க ஊரூராய் சோறிண்றி போட்டுக்கத் துணியின்றி அலைந்து அனுபவங்களைப் பெற்றெடுத்த நாடோடிகள். பயணங்களே கண் திறப்புகள்னு நமக்குப் புத்தகங்கள் எழுதி உணரவைத்த ஆசான்கள். ரயிலில் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியதில் இருந்து டெல்லி எல்லைவரைக்குத் தெரியவரும் சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களைக் கண்டு உணர்ந்த பிறகும் தமிழக மக்கள் ஏன் எப்படி இந்த 60 வருடங்களில் அவலத்தில் இருந்து சமூக மரியாதை கூடிய இடத்துக்கு நகர்ந்துள்ளார்கள் என்பதைப் பற்றி ரெண்டுவரி எழுத மனமில்லைன்னா அவர்களுக்கு கடைசில க்கன்னா கூடச் சரியாக வைக்காத சர்கார் எழுதத்தான் விதி வாய்ச்சுவிடும்!

சரி ஆமாய்யா... இலவசத்துலதான் பலனடைஞ்சோம். சத்துணவு சாப்புடதான் பள்ளிக்கு போனோம். இலவச சைக்கிள்லதான் படிக்கபோனோம். இலவச வேட்டி புடவைதான் எங்காத்தாளுக்கு. முதல் பட்டதாரி க்ரேஸ் மார்க்குதான் என்னை இஞ்சினியரு ஆக்குச்சு. ரிசர்வேஷன்லதான் சீட்டு வாங்குனோம். இன்னும் ரெண்டு தலைமுறைக்குக் கூட ரிஷர்வேசன்ல வாங்குவோம். நீங்கெல்லாம் உங்க சாதிசட்டிபிகேட்டுகள கிழிச்சுட்டு முன்ன போகனும்னா போங்கய்யா. அந்த நேர்மை ஊழல் ஒழிப்பு மேம்போக்கு மேட்டிமைத்தன தடிச்ச போங்கை எங்ககிட்ட காட்டாம கமல் ரஜினி கட்சில சேர்ந்து ஸ்ரெய்ட்டா ரப்பர் வச்சி அழிங்க.

நாங்க கலைஞர், ஜெ, ராமதாஸ், திருமா ஏன் டாக்டர் கிருஷ்ணசாமியாகவே இருந்தாலும் களத்தில் எங்க சமூகத்துக்குப் போராடும் அதன்மூலம் பலன் கொடுக்கும் தலைவர்களை ஆதரிக்கறோம். ச்சேச்சே இதெல்லாம் ஜாதிக்கட்சின்னா எல்லா ஜாதிக்கட்சிகளும் தேர்தல்முறைக்கு வருகையில் ஓட்டரசியலுக்கு ஜனநாயக மாண்மை பின்பற்றித்தான் ஓட்டுகள் தேத்துங்கற உண்மை அறியாதவங்க நீங்கன்னு நினைச்சுக்கறோம்.

ஆக, அரசு இலவசங்கள் கொடுப்பதும் பெறுவதும் கேவலம்னு நினைப்பது தான் படு கேவலம் சென்றாயன்! உன்னைய உன்னையவைச்சே கேவலப்படுத்தி பேச எந்த புண்ணாக்குகளையும் அனுமதித்து விடாதே!

* இலவசங்கள் நாட்டைக்கெடுக்குதுங்கறவன் தன் முன்னோர் வரலாறு அறியாத மேட்டிமைத்தனத்தில் தளும்பும் கிணற்றுத்தவளை

* இலவசங்களைக் கேவலம் என்பவன் சொந்த மக்களின் வாழ்க்கை மாற்றங்களை எதிர்ப்பவன்

* இலவசங்களை ஊழல் நிறைந்த அயோக்கியதனம் என்பவன் சொந்த மக்களின் ஏற்றங்களை அழிக்கப்பார்க்கும் காட்டுமிராண்டி

* இலவசங்கள் நாட்டை அழிக்கும்னு ஷோல்டர் இறக்காம பொங்கறவன் தான் பெற்ற சமூகநீதி என்பதையே ஏன் பெற்றோம் என்று அறியாத மூடன்.

https://m.facebook.com/story.php?story_fbid=10156218988723773&id=595298772

No comments:

Post a Comment