Monday, June 22, 2015

கல்வி தனியார்மயமாவதை தடுக்க மக்கள் அதிகாரமே தீர்வு!

தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இன்று அரசுப்பள்ளிகள் இழுத்துமூடப்படுகின்றன. அன்று பார்ப்பான் ”பஞ்சமர்களும், சூத்திரர்களும் படிக்கக்கூடாது” என்றான். இன்றைய அரசும் அதையே செய்கிறது. 90-களுக்குப் பிறகு, உழைக்கும் மக்களின் பிள்ளைகள் கல்வி கற்கக்கூடாது என்றுதான் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடிவருகிறது. 
.
தனியார் பள்ளிகளில் படித்தால் ஆங்கில அறிவு வளரும்; அதனால் வேலை கிடைக்கும் என்று கருதித்தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது? கும்பகோணத்தில் 90 பிள்ளைகள் தீயில் கருகி மாண்டனர். சென்னையில் சுருதி என்ற மாணவி பள்ளி வேனில் இருந்து விழுந்து இறந்தார். விருத்தாசலத்தில் தட்சிணாமூர்த்தி, கோவையில் சங்கீதா என்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனியார் முதலாளிகளால் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது.
.
ஜேப்பியார் போன்ற முன்னாள் கள்ளச்சாராய ரவுடிகளும், ஜெகத்ரட்சகன், தளி ராமச்சந்திரன் போன்ற ஆளுங்கட்சிக்காரன்களும்தான் இன்று கல்வி வியாபாரம் செய்கின்றனர். எல்லாக் கட்சிகளிலும் கல்வி வியாபாரிகள் உள்ளனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று அவர்கள் வாய் திறப்பதில்லை.
.
தனியார் பள்ளிகளில் என்ன நடக்கிறது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடத்தைப் 11-ம் வகுப்பிலும் என ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் படிக்க வைக்கின்றனர். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் ரோபோட்டுகளாக, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களை மாற்றுகின்றனர். இதன் மூலமாக தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட முயல்கின்றனர்.
.
ஆனால், நமது நாட்டின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் போன்ற எதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டபோது அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் அதை எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் எந்தவொரு சமூகப் பிரச்சனைக்கும் முன்னால் வந்து போராடுகிறார்கள். ஆனால் அவர்களைத்தான் ரவுடி, பொறுக்கி என்று அழைக்கிறார்கள்.
.
மேலும், அரசுப் பள்ளிகளில் படித்தால் அறிவு வளராது, ஆங்கிலம் தெரியாது, வேலை கிடைக்காது என்றும் கூறுகின்றனர். இது தவறு. கணிதமேதை இராமானுஜம், விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற பல்துறை அறிவியல் மேதைகளும், இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து வந்தவர்கள்தான். இன்று அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். நமது வீட்டின் கூரை ஒழுகினால் அதை மாற்றியமைக்கிறோமே தவிர யாரும் வாடகை வீட்டிற்குச் சென்றுவிடுவதில்லை.
.
அதைப்போல, அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய நாம் போராட முன்வரவேண்டும். மாறாக, தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் நம் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாது. தனியார் பள்ளிகளில் இன்றுள்ள பெரிய பிரச்சனை ஊழல். நகராட்சி ஊழல். நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த வார்டு மெம்பர், கவுன்சிலர், பஞ்சாயத்துப் பிரசிடெண்ட், எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், பிரதமர் வரை யாருக்காவது இந்த ஊழலைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் உண்டா?
.
நம்மை ஆள்வது யார்? உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது? தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார், கலேக்டர் போன்றவர்களிடம்தான் அதிகாரம் குவிந்துள்ளது. சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழ் தேவைப்பட்டாலும் நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் செல்லமுடியாது. மாறாக, அதிகாரிகளிடம்தான் செல்லவேண்டியிருக்கிறது.
.
மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட போலீசு இன்று மக்களுக்கு எதிராக நிற்கிறது. சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சம்பவம் போலீசின் யோக்கிதைக்கு ஒரு சான்று. நீதித்துறையின் நிலையென்ன? மக்களால் கட்டப்பட்ட தில்லைக்கோயில் பார்ப்பனர்களுக்குத்தான் சொந்தம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. 5+3=8 என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், குமாரசாமி 7 என்று சொல்லி ஜெயாவை விடுவிக்கிறார். இதுதான் இன்றைய நீதித்துறையின் நிலைமை.
.
அதிகாரவர்க்கத்தின் நிலை என்ன? நம்மால் அனைத்து வேலைகளையும் செய்யமுடியாது என்பதால்தான் அந்த வேலைகளுக்கு அதிகாரிகளை நியமிக்கிறோம். ஆனால், இன்று எந்தவொரு வேலை நடைபெறவேண்டுமென்றாலும் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஊழலை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியாது.
.
ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புமே இன்று நாறிக்கிடக்கிறது. இன்று இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. நெல்லை கங்கைகொண்டானில் தாமிரவருணி ஆற்றுநீரை உறுஞ்சுகின்றனர்; தஞ்சை, திருவாரூர் டெல்டா மாவட்டங்களிலே மீத்தேன் எரிவாயுத் திட்டம்; திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்குத் தாரை வார்த்துள்ளனர்; ஓசூர், சேலம், தருமபுரி பகுதிகளில் கெயில் நிறுவனத்திற்கு நிலப்பறிப்பு என்று இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது தொடர்கிறது.
.
இன்று ஒட்டுமொத்த அரசமைப்பே ஊழல் மயமாகியுள்ளது. இந்நிலையில் நகராட்சி ஊழலை மட்டம் தனியாக சரிசெய்ய முடியாது. இதற்கு என்ன செய்யவேண்டும். மக்கள் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு ஆகும். மக்கள் அதிகாரம் என்றால் என்ன? விருத்தாசலத்திற்கருகிலே மணற்கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் மக்களுடன் இணைந்து போராடி மணற்கொள்ளையைத் தடுத்து அந்த மணல் குவாரியை மூடவைத்தன. ஆர்.டி.ஓ. மணல் அள்ளலாம் என்றார்; அப்பகுதி மக்கள் மணலை அள்ள விடமாட்டோம் என்று எதிர்த்தனர். ஆர்.டி.ஓ. பின்வாங்கிவிட்டார்.
.
அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? போலீசு, அதிரடிப்படை என்று வைத்துள்ள அரசிடமா? அல்லது, உறுதியாகப் போராடி மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திய மக்களிடமா? சந்தேகமென்ன! உண்மையான அதிகாரம் மக்களிடம், நம்மிடம் தான் உள்ளது. இதேபோல இந்தியா முழுவதும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.
.
தோழர் முருகானந்தம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில்...(13/06/2015)

பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்

பாசிசம், பாசிச ஆட்சி என்ற சொற்கள் இப்போதெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் இராணுவமயப்பட்ட சர்வாதிகார ஆட்சியைக் குறிக்கிறது என்ற அளவில் பலர் இச்சொற்களை விளங்கிக்கொள்கிறார்கள். ஆனாலும் இச்சொற்கள் மிகவும் ஆழமானதும் விரிவானதுமான அரசியற் பொருளைக் கொண்டிருக்கின்றன. ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பினூடாக இச்சொற்கள் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியும்.
.
சுருக்கமாக, ஒரு நாட்டில் பாசிச ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்வது எப்படி?
.
இதனை அறிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சுருக்கமான கையேடு. இதில் பாசிச ஆட்சிகளில் இருக்கக்கூடிய பதினான்கு பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
.
ஹிட்லர் (ஜேர்மனி), முசோலினி (இத்தாலி), ஃப்ரான்கோ (ஸ்பெயின்), சுகார்ட்டோ (இந்தோனீசியா) ஆகியோரதும், பல லத்தீன் அமெரிக்க நாடுகளதும் பாசிச ஆட்சிகளை முனைவர் லோரன்ஸ் பிரிட் (Dr. Lawrence Britt ) ஆய்வு செய்துள்ளார். இவ் ஆய்வின் பயனாக, இத்தகு பாசிச ஆட்சிகளை வரையறுக்கக்கூடிய பொதுவான தன்மைகள் 14 இனைக் கண்டறிந்துள்ளார். அப் பதினான்கு தன்மைகளும் வருமாறு:
.
1. வலிமையானதும் தொடர்ச்சியானதுமான தேசியவாதம்
நாட்டுப்பற்று முழக்கங்கள், சுலோகங்கள், குறியீடுகள், பாடல்கள், இவை தவிர்ந்த வேறு வழிமுறைகள் போன்றவற்றை பாசிச ஆட்சிகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முனைகின்றன. ஆடைகளிலும் பொதுவான காட்சிப்படுத்தல்களிலுமாக தேசியக்கொடிகள் எங்கும் காணப்படும்.
.
2. மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் அலட்சியம்.
எதிரிகள் பற்றிய பயத்தினாலும் பாதுகாப்புத் தேவைக்காகவும், குறிப்பான சந்தர்ப்பங்களில், "தேவை" கருதி மனித உரிமைகளைக் கவனிக்காமல் விட்டுவிடலாம் என பாசிச ஆட்சியின் மக்கள் ஏற்கவைக்கப்பட்டிருப்பர். சித்திரவதை, விசாரணைகள் இன்றிய மரணதண்டனை, படுகொலை, கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் போன்றவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூட மக்கள் முனைவர்.
.
3. எதிரிகளை அடையாளப்படுத்துவதையும், பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாக இன்னொரு குழுமத்தை அடையாளப்படுத்துவதையும் மக்களை ஒருங்கிணைப்பதற்கான காரணியாகப் பயன்படுத்துதல்.

'நாட்டுப்பற்று வெறி' யினைப்பயன்படுத்தி மக்கள் ஓரணியில் திரட்டப்படுவர். இந் நாட்டுப்பற்று வெறியே மக்களை ஒருங்கிணைக்கும். ஒரு பொதுவான எதிரியை அல்லது அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட வேண்டிய தேவையை முன்னிறுத்தியே இந் நாட்டுப்பற்று வெறி வளர்க்கப்படும். இன, இனத்துவ, மதச் சிறுபான்மையினர்; லிபரல்கள்; கம்யூனிஸ்டுக்கள்; சோசலிஸ்டுக்கள்; பயங்கரவாதிகள் போன்றவர்கள் இவ்வாறான பொதுவான "எதிரியாக" அல்லது "அச்சுறுத்தலாக" அடையாளப்படுத்தப்படுவார்கள்.
.
4. படைத்துறை மேன்மைப்படுத்தப்படல்
பரந்த அளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல இருந்தபோதும், அளவுக்கதிகமான அரசங்கப் பணத்தை படைத்துறை பெறும். உள்நாட்டுத் திட்டங்கள் யாவும் அலட்சியம் செய்யப்படும். படைவீரர்களும் படைத்துறைச் சேவையும் கவர்ச்சிகரமானதாக்கப்படும்.
.
5. பால்நிலை/பாலியல் ஏற்றதாழ்வுகளின் பரவுகை
பாசிச ஆட்சிகளின் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகவே இருக்க முனையும்.
பாசிச ஆட்சிகளின் கீழ் மரபார்ந்த பால்நிலை வகிபாகங்கள்/பாத்திரங்கள் மேலும் மேலும் இறுக்கமாக்கப்படும். மணமுறிவு, கருக்கலைப்பு, சமப்பாலுறவு ஆகியன அடக்கியொடுக்கப்படுவதுடன் "குடும்பம்" என்கிற நிறுவனத்தின் அதியுயர் காவலனாக அரசானது பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
.
6. கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஊடகங்கள்
சிலவேளைகளில் ஊடகங்கள் அரசாங்கங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறில்லாத போது, அரசாங்கச் சட்டதிட்டங்களாலோ அல்லது அனுதாபம் பெற்ற ஊடகப் பேச்சாளர்கள், அதிகாரிகளாலோ ஊடங்கள் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படும். தணிக்கை, குறிப்பாக போர்க்காலங்களில் மிகவும் பொதுவானதாக அமையும்.
.
7. தேசத்தின் பாதுகாப்பு மீதான மிகைவிருப்பு
தேசத்தின் பாதுகாப்புப் பற்றிய அச்சமானது ஒர் ஊக்கி உற்சாகப்படுத்தும் கருவியாக அரசாங்கத்தால் வெகுமக்கள் மீது பயன்படுத்தப்படும்.
.
8. மதமும் அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாய் இருக்கும்.
பொதுமக்களது கருத்தினைத் தமக்கேற்றபடி கையாள்வதற்கான கருவியாக தேசத்தின் பெரும்பான்மையானோரின் மதத்தினைப் பாசிசத் தேசங்களின் அரசாங்கங்கள் பயன்படுத்த முனையும். குறித்த மதத்தின் முக்கியமான கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் இருந்தபோதும், அரசாங்கத் தலைவர்களிடத்தில் மதம் சார்ந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களும் சொல்லாடல்களும் மிகப் பொதுவானதாக இருக்கும்.
.
9. (கார்ப்பரேட்டுக்கள் என்றறியப்படும்) கூட்டுரு முதலாளிகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
அரசாங்கத் தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்துபவர்களாக, பாசிச ஆட்சி ஒன்றின் வணிக, தொழிற்றுறை முதலாளிகளின் உயர்குடி வர்க்கத்தினரே இருப்பர். இவர்கள் ஒருவருக்கொருவர் நன்மையாக அமையத்தக்க வணிக/அரசாங்க உறவுகளையும் அதிகார உயர்குழாத்தையும் உருவாக்குவர்.
.
10. தொழிலாளர் சக்தி அடக்கி ஒடுக்கப்படும்.
ஏனெனில், பாசிச அரசாங்கம் ஒன்றுக்கான ஒரேயொரு உண்மையான அச்சுறுத்தல், தொழிலாளர்கள் கொண்டுள்ள, அமைப்பாக ஒன்றுசேரும் வலுவேயாகும். தொழிற் சங்கங்கள் முற்றாகத் துடைத்தழிக்கப்படும் அல்லது மிக மோசமாக அடக்கியொடுக்கப்படும்.
.
11. கலைகளுக்கும் புத்திசீவிகளுக்கும் மதிப்பில்லாமற்போகும்.
கல்விச் சமூகம் மீதும் உயர்கல்வி மீதுமான வெளிப்படையான எதிர்ப்பினைப் பாசிச நாடுகள் ஊக்குவிக்கவோ அல்லது அவ்வெதிர்ப்புக்களுக்கு நெகிழ்ச்சியாயிருக்கவோ முனையும். பேராசிரியர்களும் ஏனைய கல்வியாளர்களும் தணிக்கைக்குள்ளாவதும் கைதாவதும் சாதாரணமாக நிகழும். சுதந்திரமான கலை, எழுத்து வெளிப்பாடுகள் வெளிப்படையாகவே தாக்குதலுக்குள்ளாகும்.
.
12. குற்றங்கள் தண்டனைகள் மீதான மிகைவிருப்பு
பாசிச ஆட்சிகளின் கீழ், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரையறையற்ற அதிகாரமானது காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும். காவல் துறையின் துஷ்பிரயோகங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கண்டும் காணாமலிருப்பதற்கும், சிவில் சுதந்திரங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கைவிடுவதற்கும் மக்கள் விரும்புவர். பாசிசத் தேசங்களில் ஏறத்தாழ எந்த வரையறையுமற்ற அதிகாரம் கொண்ட தேசியக் காவற்துறைப் படை இருக்கும்.
.
13. குடும்ப/உறவுக் குழும ஆட்சியினதும் ஊழலினதும் பரவுகை
பாசிச ஆட்சிகள் பெரும்பாலும் எப்போதும், தம்மில் ஒருவரை ஒருவர் அரசாங்கப் பணிகளில் அமர்த்திக்கொள்ளுகின்றவர்களால் ஆளப்படும். அவர்கள் தமது நண்பர்களைப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து காப்பதற்கு அரச அதிகாரத்தினையும் பலத்தினையும் பயன்படுத்துவார்கள். தமக்குள் உறவுக்காரர்களும் நண்பர்களுமாக இருப்பார்கள்.
.
14. மோசடி மிகுந்த தேர்தல்கள்
சிலவேளைகளில், பாசிச நாடுகளின் தேர்தல்கள் முழுக்க முழுக்கக் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனைய வேளைகளில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கெதிரான சேறடிப்புப் பரப்புரைகள், படுகொலைத் தாக்குதல்கள் போன்றவற்றின் மூலமும் வாக்காளர்களின் எண்ணிக்கை, மாவட்ட எல்லைகள் போன்றவற்றைச் சட்டத்துறையக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலமும் ஊடகங்களைத் தம் நோக்கங்களுக்காகக் கையாள்வதன் மூலமும் தேர்தல்கள் சூழ்ச்சியுடன் கையாளப்படும். பாசிச நாடுகள், தேர்தல்களைக் கட்டுப்படுத்தவும் சூழ்ச்சியுடன் கையாள்வதற்கும் நீதித்துறையினையும் கூட பொதுவாகப் பயன்படுத்துகின்றன.
.
The 14 Defining Characteristics Of Fascism | தமிழாக்கம் : மு. மயூரன் ]

கல்வியில் தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மய ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்!
.
1. மாணவர்களிடையே சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப்பள்ளி- அருகமைப்பள்ளி முறைக்காக அனைவரும் போராட வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
.
2. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு மாணவர் விடுதிகளில் சுத்திகரிக்கபட்ட குடிநீர், சுகாதாரமான உணவு என்பதை கண்காணித்து உத்திரவாதபடுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கும் வண்ணம் போராட வேண்டுமென்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
.
3. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
.
4. கல்வியை மட்டுமின்றி மாணவர்களையும் பண்டமாக்கும் கல்வி வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசைப் பொறுப்பாக்கு வதற்கும் போராட வேண்டுமென மாநாடு அறை கூவுகிறது.
.
5. ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தனியார்பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.
.
6. அனைவருக்கும் கல்வியளிப்பதாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைகழுவியது மட்டுமின்றி, தாய்மொழிக் கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கும், தனியார் கல்விக் கொள்ளையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் இந்த அரசாங்கம், அதிகாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட மொத்த அரசமைப்பும் முன்நின்று வேலை செய்கின்றன. இந்தஅரசு, ஆளும் தகுதியிழந்து விட்டதால், இதனிடம் மனுக்கொடுப்பதும் மன்றாடுவதும், பயனற்றது என்றும், மக்கள் தமது கல்வி உரிமையை நிலை நாட்டிக்கொள்ளும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தமது கண்காணிப்பின் கீழ்கொண்டு வரவேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவுகிறது.
.
7. ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் அல்லாத டி.என்.பி.சி, யு.பி.எஸ்.சி,தேர்வு பணி, தேர்தல் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, மதுவின் தீமை விளக்க பேரணி, மழை நீர் சேகரிப்பு ஊர்வலம், இது போன்ற எண்ணற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
.
8.அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தரகு வேலை பார்க்கும் கல்வி துறையை, மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
.
- மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
- மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

Wednesday, June 17, 2015

நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள்

Surya Born To Win:

"ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க கருணாநிதி தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், கட்டுரை - தினமணி – 27.06.2012.

"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.

இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.

அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், "எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் துரோகம் செய்தார்" என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேசுகிறார். துரோகம் செய்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

"அ.தி.மு.க. அரசு துரோகம் இழைக்கிறது" என்னும் தலைப்பின் கீழ் உள்ள இணைத்துள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டி "தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது" என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு.க.வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.க. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அங்கு சென்று தன் தரப்பு வாதத்தை அழகாக அழுத்தம் திருத்தமாக மத்திய அரசாங்கத்திற்கு எடுத்து வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதை தட்டி கழித்துவிட்டு பழனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதில் கலைஞரை குறை கூறுகிறார்

PS:.தெளிவான செய்தித்தாள் ஸ்க்ரீன் ஷாட், முதல் இரண்டு கமெண்டுகளில்


https://www.facebook.com/photo.php?fbid=10205656452503827&set=a.1571712965964.2074714.1029710751&type=1

திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன?

வேந்தன். இல:

பகுதி - 1
## பெரியார் தான் 'தமிழரை' 'திராவிடர்' என்று சொல்லி ஏமாற்றி இன அடையாளத்தை அழித்தாரா? ##
2 பக்க கட்டுரையை கூட முழுதாக படிக்காத சில 'குமாரு' போன்ற இளைஞர்கள், யாரோ சிலர் வரலாற்று திரிபுகளோடு சொல்லும் கருத்தை சரியா தவறா என்று யோசிக்காமல் நம்புகிறார்கள். 'குமாரு' போன்ற இளைஞருக்காக நாம் வரலாறை 1ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
# பெரியாரால் முதலில் 'திராவிடர்' என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை.
* 1881ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தீண்டத்தகாதவர்கள் தங்களை "சாதியில்லா திராவிடர்கள்" என பதிவு செய்து கொள்ளும்படி அயோத்தி தாச பண்டிதர் அறிவிப்பு செய்கிறார்.
(இதை தொடர்ச்சியாக வலியுறுத்தி 1910ம் ஆண்டு கூட வெள்ளையரிடம் மனுகொடுக்கிறார். அந்த மனுவில்,
"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்." - 14- 12- 1910
அயோத்தி தாசரின் இறுதி ஆண்டுகளான 1913, 1914 ஆண்டு கூட 'திராவிடர்' என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இவர் 'திராவிட கருத்தியலின் முன்னோடி' என்றும் கருதப்படுகிறார்)
* 1885 ஆம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர், ஜான் ரத்தினம் அவர்களோடு இணைந்து 'திராவிட பாண்டியன்' என்ற இதழை தொடங்குகிறார்
* 1891ம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர் 'திராவிட மகாஜன சபை'யை நிறுவுகிறார்
* 1892ம் ஆண்டு, ஜான் ரத்தினம் 'திராவிட கழகம்' தொடங்குகிறார்
* 1891 ஆம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய 'பறையர் மகா ஜன சபை' 1893 ஆம் ஆண்டு 'ஆதி திராவிட மகா ஜன சபை' என பெயர் மாற்றப்படுகிறது
* 1912ல் நடேசனாரால் ஆரம்பிக்கப்பட்ட 'Madras United League' என்ற பெயரை 1913ம் 'திராவிடர் சங்கம்' என்று அவரே மாற்றி 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்.
* அதன் பிறகு தான் 1944 ஆம் ஆண்டு பெரியார் 'திராவிடர் கழகம்' தொடங்கினார். (அதுவும் பெரியாருக்கும் முன்பே அவரது தோழர்கள் 'செவ்வாய்பேட்டை திராவிடர் கழகம்' , 'கோவை மாவட்ட திராவிடர் கழகம்' என்று ஆரம்பித்து பெரியார் தலைமையில், அண்ணா கலந்து கொண்ட கூட்டங்கள் நடத்தியதெல்லாம் வரலாறு)
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் தன் சுயமரியாதை மீட்கவும், சமூக நீதிக்காக போராடிய இயக்கத்தின் தொடர்ச்சியாக பெரியாரும் 'திராவிடர்' என்ற பெயர் நியாயமானதாகவும் தேவையானதாகவும் அமைவதால் 'திராவிடர் கழகம்' என்று தன் இயக்கத்திற்கு பெயர் வைக்கிறார்.
இவையெல்லாம் தெரியாமல் 'திராவிடம்' என்று சொல்லை பெரியார் தான் திணித்தார். அவர் தான் உபயோகித்தார்.. அவர் தமிழர் என்ற வார்த்தையை இருட்டடிப்பு செய்துவிட்டார் என்றெல்லாம் புலம்புவது அறியாமை..
#####
திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டுக்குமான தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?
திராவிடம் இன அடையாளத்தை அழித்ததா? இனத்தின் சுய மரியாதையை மீட்டதா?
அடுத்தடுத்த பதிவில் வரலாற்று தரவுகளோடு சொல்றேன் குமாரு...

பகுதி - 2
## திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? இரண்டுக்குமான தொடர்பு என்ன? ##
'திராவிடம்' என்பதற்கு ஆய்வாளர்கள் பலர் பல கோணங்களின் தனது ஆராய்ச்சி முடிவை தருகிறார்கள். இருப்பினும் அந்த முடிவுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும், ஒரு புள்ளியில் இணைவதை பார்க்கிறோம். அவைகளை தொகுத்தால், 'திராவிடம்' என்னும் வார்த்தை மூன்று நிலைகளில் ஆளப்படுகிறது.
திராவிடம் என்பது,
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
1. 'தமிழ்' என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு, 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு 'திராவிட' மாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி 'தமிழ்' அல்லது 'திராவிடம்' என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று; ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி. தமிழ், காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. - பாபா சாகேப் அம்பேத்கர்.
'பாபா சாகேப்' 'தமிழ்' என்ற வார்த்தை தான் சமஸ்கிருதத்தில் 'திராவிடம்' என்று உச்சரிப்படுவதாக குறிப்பிடுகிறார்.
2. தமிழம் என்பது திராவிடம் என்பதன் திரிபுச்சொல்லே - பாவாணர்
பண்டைய காலத்தில் நாட்டுப்பெயர்கள் 'அம்' ஈறு பெற்றே வழங்கி வந்தன. (எ.கா) சிங்களம், கடாரம், ஆரியம், மராட்டியம், வங்காளம், அராபியம் இவ்வகையிலேயே தமிழம் என்று வழங்கப்பட்டது.
ஒரு சொல்லின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், அதிலுள்ள உயிரெழுத்தை நீக்கி, மெய்யாக நிறுத்தி, அதையடுத்து 'ர' என்னும் எழுத்தை சேர்த்துக் கொள்வது ஒருவகை திரிபு முறை.
படி (copy) என்ற சொல்லில் உள்ள 'ப' என்ற உயிர் மெய் எழுத்தில், 'அ' என்னும் உயிரெழுத்தை நீக்கி, 'ப்' மெய் எழுத்தை நிறுத்தி, 'ர' எழுத்தை சேர்த்தால் 'ப்ரடி' 'ப்ரதி' 'பிரதி' என்று வடமொழியில் மாறும்.
பவளம் - ப்ரவளம் - பிரவாளம்
மதங்கம் - ம்ரதங்கம் - மிர்தங்கம் - மிருதங்கம்
தமிழம் - த்ரமிளம் என்று திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் 'த்ரமிடம்' என்று திரிந்து 'திரவிடம்' என்றாகித் 'திராவிடம்' என்று நீண்டது என்று பாவாணர் விளக்குகிறார்.
* 'திராவிடம்' தமிழை இருட்டடிப்பு செய்தது என்று சொல்பவர்களால் தான் 'திராவிட மொழி ஞாயிறு' பாவாணர் என்பவர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 'மொழிஞாயிறு பாவாணர்' என்றே அழைக்கப்படுகிறார் smile emoticon
3. "திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே" என்றும் "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
பெரியார் துரோகம் இழைத்தார் என்றால் பெரியார் சொல்வதை ஏற்க வேண்டாம். தமிழறிஞர் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் திராவிடம் குறித்து என்ன சொன்னார்கள் என்று படிக்கலாமே!
அவர்களைப் படித்தாலே 'திராவிடம்' 'தமிழ்' இவற்றிலுள்ள குழப்பம் தீரும். இவர்கள் யாரையுமே படிக்கவில்லை என்பது தான் இங்கு வருத்தமான செய்தி.
ஒரு பெயர் மற்ற மொழியாரால் பயன்படுத்தப்படும் போது அவர்களுடைய இலக்கணப்படியோ, அல்லது வழக்காற்றிலோ திரிவது இயல்பே.
நமக்கு தெரிந்தே ஆண்டனி (Antony) என்ற பெயர் நம்மால் 'அந்தோணி' என்று சொல்லப்படவில்லையா? ரஷ்யா (Russia) 'உருடியா' என்று மாற்றப்படுவதில்லையா?
4. தமிழரின் நாகரிகத்தை எழுத்தை ஆராய்ந்த ஈராஸ் பாதிரியார் தமிழ் எழுத்துக்கள் மற்ற தொன்மை நாகரிக எழுத்துக்களுடன் ஒன்றிணைந்திருப்பதை கண்டறிந்தார். தமிழின், திராவிடத்தின் தொன்மையை அறிந்த அவர், தான் 'ஸ்பெயினில் உள்ள திராவிடன்' (I am Dravidian from Spain) என்று அறிவித்துக்கொண்டார்
5. வடமொழி இலக்கியங்களில் 'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்றே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தென்னிந்தியர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, 10ம் அத்தியாயத்தில், 43,44 வது ஸ்லோகத்தில், திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, "சாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்கு பிறந்தவர்கள் திராவிடர்கள்.. திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்" என்கிறது மனுஸ்மிருதி.
* கி.பி. 7ம் நூற்றாண்டில், குமரிலப்பட்டர் 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்
* கி.பி. 470இல் சமணத்தின் மையமாக மதுரை திகழ்ந்த போது, பூச்சியநாதரின் சீடரான வச்சிர நந்தி என்பார் 'த்ரமிள சங்கம்' நிறுவினார்.
* கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "படித்தவர்கள் தமக்கு எல்லாம் தெரியும் போல காட்டிக்கொள்வார்கள். தமிழ் தெரிந்தவரிடம் தமக்கு வடமொழி தெரியும் என்பார்கள். வடமொழிப் பண்டிதர் எதிரில் வந்தால், தமக்கு திராவிடமும் தெரியும் என்பார்கள்" என்று கூறுகிறார்.
'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார்.
* திருஞான சம்பந்தர் 'திராவிட சிசு' என்றே அழைக்கப்பட்டார்.
#####
இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது.
'திராவிடம்' என்றால் என்ன என்று சிலரை கேட்டால் 'அது தெலுங்கரை குறிக்கும் சொல்' என்று சொல்கிறார்கள். (அவர்கள் தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு கூட தெரியாத பச்சிளம் குழந்தைகள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது). அவர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.
தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு திராவிடம் என்று அழைப்பதன் பின்புலமும், எவ்வாறு பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்லாக மாறியது என்பதை இதே பதிவில் எழுதினால் பதிவு நீளும் என்பதால் அடுத்த பதிவுகளில் பார்ப்போம். smile emoticon

பகுதி - 3
## 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் திராவிடம் இல்லையா?
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள், தமிழ் தான் தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மூத்த மொழி என்பதை மறுக்க முடியாது. நேரடியாக சொல்வதானால் 'தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை தமிழ் மொழிக்குடும்பம்' என்று சொல்லலாம். நாம் முன்னர் பார்த்தது போல், 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால் அதை 'திராவிட மொழிக்குடும்பம்' என்றும் அழைக்கலாம்.
தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழரிலிருந்து பிரிந்தவர்கள் தான், அவர்களின் மொழி நம் தமிழ் மொழியிலிருந்து தான் பிரிந்தது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் மேலெ சொன்ன 'திராவிடம்' விளக்கத்தின் படி அவர்களும் 'திராவிடரிலிருந்து (தமிழரில்)' பிரிந்தவர்கள். 'திராவிட (தமிழ்) மொழி' யிலிருந்து பிரிந்தவர்கள்.
ஆனால் கால்ட்வெல் 'தென்னிந்திய / திராவிட மொழிக்குடும்பம்' என்பதை இதே பொருளில் கூறவில்லை என்பதை கவனிக்க. இந்த (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு) மொழிகளுக்கு மூத்த மொழி (Proto Dravidian) ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதை கண்டறிய முடியாததால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, துளு ஆகியவைகளை சேர்த்து 'திராவிட மொழிக்குடும்பம்' என்று கூறுகிறார்.
இங்கு தான் நாம் குழப்பத்தில் நிற்கிறோம். கால்ட்வெல்லின் 'திராவிட மொழி ஒப்பிலக்கணமும்', தமிழறிஞரின் ஆய்வையும் வேறு வேறு தளத்தில் வைத்து ஆராய்ந்தால் அதில் உள்ள சிறிய அளவில் முரண்பாடுகளும் பெரிய ஒற்றுமையையும் காண முடியும்.
சுருக்கமாக சொன்னால், கால்ட்வெல் வரையறையில் 'திராவிடம்' என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவற்றின் கூட்டாக கருதினார். அதில் 'தமிழ்' தான் மூத்த மொழி என்றார். தமிழறிஞர்கள் 'தமிழ்' தான் 'தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு' ஆகியவற்றுக்கான மூல மொழி" என்று கருதுகிறார்கள்
( இந்த இடத்தில் அயோத்தி தாச பண்டிதர், தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க 'ஆதி (மூல) திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தியதை நினைவு கூர்க ).
** ஆக, 'தமிழி' தான் 'திராவிட'மாகவும் 'தமிழர்'தான் 'திராவிடரா'கவும் குறிக்கப்பட்டது போல தமிழிலிருந்து பிரிந்த தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் குடும்பம் திராவிட (தமிழ்) குடும்பம் என்றும் தெலுங்கர், மலையாளி, கன்னடர் 'திராவிடர்' என்றும் குறிக்கப்படுகிறார்கள்.
** தமிழ்நாடு, கேரளத்தின் மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து 'சென்னை மாகாண'மாக இருந்த போது (1956 முன்பு வரை) இந்தியாவிலிருந்து தனிநாடாக 'திராவிடஸ்தான்' என்றும் 'திராவிட நாடு' என்றும் கோரிக்கை விடுத்த பெரியார் தான், 1956க்கு பிறகு மொழிவாரி மாகாணமாக 'இப்போதுள்ள தமிழ் நாடு' பிரிக்கப்பட்ட பிறகு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தான் தனிநாடு கோரிக்கை விடுத்தார்.
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச்சொல்
'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்ற சொல்லும் வரலாறு நெடிங்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்த்தோம். ஒடுக்கு முறைக்கு எதிரான 'உரிமை' முழக்கமாக 'திராவிடம்' என்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் பெரியாருக்கு முன்பே, 'திராவிட மகாஜன சபை', 'ஆதி திராவிட மகா ஜன சபை', 'திராவிடர் சங்கம்' உருவானது.
1. (தென்னிந்தியாவில்) ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப்பார்த்தால் தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் 'திராவிடர்' என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் என்பது புரியும். - பாபா சாகேப் அம்பேத்கர்
2. தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் மற்றும் அவரது மகா ஜன சபையின் 6 உறுப்பினர்களும் அன்றைய தலைமை ஆளுனர்(கவர்னர் ஜெனரல்) எல்ஜின் பிரபுவை சந்தித்த போது பேசியதை தனது 'ஜீவிய சரித்திரச் சுருக்க' த்தில் குறிப்பிடுகிறார்.
அதில், "எல்ஜின் பிரபு.. பறையர்,பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்று பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர் என வழங்கும் சமூகத்தவர்களுக்கு, இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்க காரிய நிர்வாகத்திலும், பரிபாலன நிறைவேற்றத்திலும், இராஜிய வியவகார மந்திரி பதவியிலும் பங்கு பெரும் உரிமை உண்டாகி இருக்கின்றது" என்று ஆதி திராவிடர் என்ற சொல் கௌரவமான வரலாற்றில் மூத்த குடிகள் என்ற பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியார் தான் 'ஆதி திராவிடர்' என்ற பெயரை தொன்மக்களுக்கு திணித்தார் என்று வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.
** இந்த இடத்தில் நம்ம குமாருக்கு ஒரு செய்தியை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன. என்னவென்றால், தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் முந்தைய பதிவில் அயோத்தி தாசர் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் பார்த்தால் 'ஆதி திராவிடர்' என்ற அடையாளத்தை பூர்வகுடி மக்களுக்கு பெரியார் திணிக்கவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தொன்மையின் அடையாளத்தை குறிக்கவும், பண்பாட்டின் மீட்சி சொல்லாகவும் 'ஆதி திராவிடர்' (திராவிடர்களில் தொன்மையானர்கள்) என்னும் சொல்லை அவர்களாகவே பயன்படுத்திக்கொண்டனர்.
'ஆதி திராவிடர்' என்ற சொல்லை தொன்மை தமிழருக்கு பெரியார் கொடுத்துவிட்டதால், 'ஆதி தமிழர்' என்ற நம் அடையாளத்தை 'வந்தேறி தெலுங்கு அருந்ததிய மக்கள்' அபகரித்துவிட்டனர் என்று பேசுவது எவ்வளவு பெரிய விஷமத்தனமான பொய் என்பது இதிலிலிருந்து புரியுதா குமாரு?
இனியாவது, உழைக்கும் மக்களான பள்ளர், பறையர் சமூகத்தினருக்கு எதிராக அருந்ததிய சமூகத்தினரை எதிரிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். வரலாற்று உண்மையறியாத நம் இளைஞர்களோ இந்த விஷமக்கருத்துக்கு ஆட்படுகின்றனர் என்பது வருத்தமான செய்தி.
###########
திராவிடம் என்பது தமிழையும், தமிழிலிருந்து பிரிந்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை குறிக்கிறது என்றால், ஏன் தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களை திராவிடர் என்று அழைத்துக்கொள்ளவில்லை?
1944ல் 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்று கோரிக்கை விடுத்த பெரியார்1956ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று கோருகிறார். ஆனால் 1944ல் உருவாக்கப்பட்ட 'திராவிடர் கழகம்' 1956க்கு பிறகு ஏன் 'தமிழர் கழக'மாக மாற்றப்படவில்லை??
அடுத்த பதிவில் பார்ப்போம்.. smile emoticon

சு.விஜய பாஸ்கர்: 

நண்பர்களே,

திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு பகுத்தறிவு/பெண் விடுதலை/மூட நம்பிக்கை ஒழிப்பு / சாதி ஒழிப்பு கருத்துகள் கொண்ட குறும்படங்கள்/ஆவணப் படங்களை பரிந்துரை செய்யுங்கள் தோழர்களே

நான் சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன்

1) கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய்

2) வெள்ளமடை நாகராசன் இயக்கிய ஜாதி
இணைப்பு (https://www.youtube.com/watch?v=aCGZ2P7h_Ko)

3) இரா.கார்த்திகேயன் இயக்கிய முரண்
இணைப்பு (https://www.youtube.com/watch?v=17qxgHuyiNs)

4)கி.தளபதிராஜ் இயக்கிய புனிதம்
இணைப்பு (https://www.youtube.com/watch?v=4fEwLpiJdvY#t=142)

5) தொலைந்து போனவள் இணைப்பு 

6) அன்பு படைப்புலகம் வழங்கும் மறைபொருள்
இணைப்பு (https://www.youtube.com/watch?v=LMV32zWuJAU)

7) வினவு தளம் வெளியிட்ட கருவாடு

வாஞ்சிநாதனுக்கா அல்லது ஆஷ்துரைக்கா?


வீர வணக்கம் யாருக்கு?

இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள்.

அரசியல்,அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூறாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே ஆஷ் எனும் கயவன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த போது இந்தியர்கள் மீது மேற்கொண்ட கொடிய அடக்குமுறை கண்டு வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் எனும் தேசபக்தி மிகுந்த பார்ப்பன இளைஞன் மணியாச்சி ர்யில் நிலையத்தில் அந்த ஆஷ் கயவனை சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போனான்,அந்த இளைஞனின் வீரத்தை மெச்சி இன்று அவனுடைய நினைவு தினத்திலே பத்திரிக்கைகள் எல்லாம் அவனை பெருமையுடன் நினைவு கூர்வதைக் கண்டு அந்த வீர வாஞ்சியைப் பற்றி தெரிந்து கொள்ள பழைய சேதிகளை எல்லாம் புரட்டி தேடிப் பார்த்தால் அவை வேறு ஒன்றைத் தெரிவிக்கின்றனவே!

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.

அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.

சரி வாஞ்சி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தானே,அது என்ன கூறுகிறது என்று பார்த்தால்.......

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”


ஆக இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல,இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது,

மேற்படி செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரை சமதர்மத்தை காக்க முனைந்திட்ட மனிதநேயம் போற்றிய மாமனிதராகவே என் கண்ணுக்குத் தெரிகிறார்,மேற்படி செய்திகளை அயோத்திதாச பண்டிதரும் தன்னுடைய பத்திரிக்கையில் அப்போது எழுதி இருக்கிறார்.

ஆஷ் எனும் மாமனிதருக்கு வீர வணக்கங்கள்.

https://www.facebook.com/Beemarao/posts/915052021895046:0

ஆப்பிள் & PLU code


ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. 

யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:

1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

http://www.glutenfreeveganmom.com/2011/05/06/produce-codes-plu-codes-organic-conventional-gmo-codes-on-produce-stickers/

Tuesday, June 16, 2015

புலிகள் இயக்க ஆதரவாளர்கள் - நன்றிகெட்டப் பண்பு

Prabhakar Valli:

ஈழப்போர் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த நாட்கள் மிகவும் மன வலி ஏற்படுத்திய நாட்கள்..
ஈழ ஆதரவாளர்களாகிய நாங்கள் எப்பொழுதும் கணிணி முன்பாகவே அமர்ந்திருந்தோம்..
நிமிடத்திற்கொருதரம் இணையதளங்களுக்குச் சென்று போர் செய்தியை பார்த்தபடி இருந்தோம்..
ஒவ்வொரு செய்தியும் எங்களது கனவை நம்பிக்கையை முற்றாக கலைத்தபடி இருந்தது.
சாப்பிடாமல் தேனீரைக் குடித்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்..
இன்னும் பல ஈழ ஆதரவு நண்பர்கள் பல ஊர்களில் இருந்தும் எங்களை தொலைபேசியில் அழைத்து போர் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பார்கள்..
நாங்கள் எவ்வளவு சோர்வுற்றிருந்த போதிலும் அவர்களுக்கு சில நம்பிக்கையான செய்திகளை சொல்லுவோம்..
நாள் நெருங்க நெருங்க எங்களுக்கு மனப்பதட்டம் அதிகரித்தது..
ஒரு நாள் நள்ளிரவில் நான் அறிவுமதி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி அழுதிருக்கிறேன்.. அண்ணன், நாம் எல்லோரும் ஒரு இடத்தில் இருப்போம்.. ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்.. அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இப்படி தனித்தனியே இருப்பது மிகவும் மனப்பதட்டத்தை உண்டாக்குகிறது.. என்னால் தூங்கவே முடியவில்லை அண்ணன் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறேன்..
என்னைப் போலவே இந்த பதட்டத்திற்கு ஆளான சில ஆயிரம் ஈழ நண்பர்கள் அன்று தமிழகம் முழுவதும் இருந்தார்கள்..
கலைஞரும் கனிமொழியும் கூட அப்படி இருந்தவர்கள்தான்..
கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..
விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.
இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..
அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கலைஞரும் கனிமொழியும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்த்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை அந்த நாட்களில் செய்தார்கள்!
போர் முடிவுக்கு வந்து கனிமொழி ஈழத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்ட போது, ஈழமக்களுக்கு மிகவும் அதியவசியமாக என்ன தேவைப்படும் என்று தனக்குத் தெரிந்த ஈழ நண்பர்களிடம் எல்லாம் விசாரித்து பொருட்கள் வாங்கி சேகரித்து கொண்டு சென்றார்.. அன்று கனிமொழியிடம் மிளிர்ந்தது ஒரு தாயன்பு.
இன்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கலைஞரையும் கனிமொழியையும் தூற்றுகிறார்கள்..
துரோகப் பட்டம் சூட்டுகிறார்கள்.
பிரபாகரன் விரும்பிய வண்ணம் ஆயுதக்கடத்தல் செய்வது, பிரபாகரன் விரும்பிய வண்ணம் படுகொலைகளுக்கு உளவு பார்த்து சொல்வது, பிரபாகரன் செய்த படுகொலைகளை நியாயப்படுத்துவது , இன்னும் இது போன்ற இழிவான காரியங்களில் புலிகளுக்கு அனுகூலமாக செயல்படுகிறவர்களை போற்றுவதும், அவ்வாறு செய்யாதவர்களை தூற்றுவதும் விடுதலைப் புலிகளின் இயல்பு..
விடுதலைப் புலிகளின் இயக்கம் அழிந்து போனதற்கு அவர்களின் இந்த நன்றி கெட்டப் பண்பு மிக முக்கிய காரணிகளில் ஒன்று..
கனிமொழியைப் பழிப்பதன் மூலம் இன்னும் அந்த நன்றிகெட்டப் பண்பை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்!

https://www.facebook.com/prabhakar.valli/posts/10205807129850750

அண்ணா எஸ்.எஸ்.ஆர் உறவு

எஸ்.எஸ்.ஆர், அண்ணா மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் மிகப் பெரியது.

அண்ணா தன் படைப்புகள் கடிதங்களில் பலவற்றை எஸ்.எஸ்.ஆர் வீட்டில்தான் எழுதியிருக்கிறார். அண்ணா எழுதி முடிக்க, அவர் எழுத்தை சூட்டோடு சூடாக வாசிப்பது தனி இன்பம் என்று சிலாகிக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அண்ணாவின் வசனங்களை தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அண்ணாவின் பிறந்தநாள் அன்று 50 பரிசுப்பொருட்கள் பரிசாகக் கொடுத்து, 51 வது பரிசாக “என் உயிர்” என்று சீட்டில் எழுதி அதை கூட்டத்தில் உணர்ச்சி பொங்க வாசித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட அண்ணா கூட்டம் முடிந்து காரில் திரும்பும் போது “ நீ இப்படியெல்லாம் உன் உயிர் என்று என்னை உணர்ச்சிவசப்படவைத்தால் என்னால் எப்படி கூட்டத்தில் பேச முடியும்” என்று அன்பாக கடிந்து கொண்டாராம்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எஸ்.எஸ்.ஆர் மிக உற்சாகமாக செய்திருக்கிறார். இந்திய சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிப் போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அறிவிக்க அப்போதைய முதல்வர் “உங்கள் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றினால் எங்களுக்கென்ன” என்ற ரீதியில் சொல்ல எஸ்.எஸ்.ஆர் தன் வீட்டு மாடியில் மிகப்பெரிய கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்க விட்டிருக்கிறார். அதைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் கூடி அடி புடி என்று கத்தி கூச்சல் போட, பின் போலீஸ் வந்து கறுப்புக் கொடியை இறக்கியிருக்கிறது. 

அறிஞர் அண்ணா இறந்த போது இறுதி ஊர்வலம் முடியும் போது, “அவர் முகத்தை இன்னுமொருமுறை பார்க்க வேண்டும்” என்று அழுதபடியே கேட்டிருக்கிறார்.ஆனால் அது முறையல்ல என்று மற்றவர்கள் மறுத்திருக்கிறார்கள். அதன் பின் அண்ணாவின் பிரிவை தாங்க முடியாமல் பல நாட்கள் குடித்து விட்டு அவர் சமாதிக்கு சென்று அழுதபடியே தூங்கிவிடுவாராம். இப்படியே குடியின் தீமையால் அதிகம் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மருத்தவமனையில் இருந்திருக்கிறார்.

அச்சமயத்தில் பெரியார் எஸ்.எஸ்.ஆரை பார்க்க வந்திருக்கிறார். பின் “உங்க வயசென்ன என் வயசென்ன. இவ்வளவு வயசான நான்தான் உங்கள மாதிரி இருக்கனும்.ஆனா நீங்க இந்த வயசுலேயே இவ்வளவு சோர்ந்துட்டீங்களே” என்று எஸ்.எஸ்.ஆரைத் திட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் எஸ்.எஸ்.ஆர் மறுபடியும் தன் உடல்நிலை மீது அக்கறை கொண்டு, அண்ணாவின் பிரிவில் இருந்து மீண்டிருக்கிறார்.

இதில் பாருங்கள் அண்ணா எஸ்.எஸ்.ஆருக்கு காசு பணம் எதாவது கொடுத்தாரா? அல்லது வேறு எதாவது காரணமா? முழுக்க முழுக்க கொள்கை சார்ந்த உறவுதான். இந்தியா மாதிரியான இந்தி மொழி ஆதிக்கம் நிறைந்த நாட்டில் தமிழன், தமிழ் உணர்வு என்ற அடையாளத்தை உருவாக்குவதற்கு மட்டுமே அண்ணா எஸ்.எஸ்.ஆர் உறவு ஏற்பட்டிருக்கிறது.

அது எவ்வளவு அர்த்தமும் அழகும் நிறைந்ததாக இருக்கிறது.

அயம் நாட் ய டமிலியன் பிரதர்

Leo Joseph D:

தமிழர்கள் யார் என்பதற்கு யார் யாரோ வகை வகையாய் வியாக்கியனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நாழ் தமிழர் கட்சியின் சீமான் தனது சமீபத்தியப் பேட்டியில் 'பெயரோடு தமிழ் என்பதை இணைத்துக் கொண்டால் யாரும் தமிழராகி விடலாம்' என்ற அதிரடிச் சலுகையை அறிவித்தார். இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்து தப்பிக்க ' தமிழ் லியோ' என்று மாற்றிக்கொள்ளலாமா எனக் கூட யோசனையாக இருந்தது.

கடைசி வரை நான் தமிழனாகவே முடியாதோ என்ற ஏக்கத்தையும் பயத்தையும் இன்று காலை ஜுனியர் விகடனில் படித்த பேட்டி ஒன்று உண்டாக்கிவிட்டது. இந்து முன்னனியைச் சேர்ந்த மூகாம்பிகை மணி என்பவர் தனது பேட்டியில் தமிழர்கள் யார் என்பதற்கு புதிய வரையறையைக் கொடுத்து எனக்கு தலைக் கிறுக்கு ஏற்பட வைத்துவிட்டார் என்பதை உங்கள் முன் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.

' பசுவை தெய்வமாக வழிபடுபவர்கள், கழுத்தில் தாலி அணிபவர்கள், ஒருவருக்கு ஒருத்தி என வாழக் கூடியவர்கள், தினமும் குளிப்பவர்கள் என இவர்கள் மட்டும் தான் தமிழர்களாக இருக்க முடியும். அப்படி பார்த்தால் இந்துக்கள் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும் ' என்று இது மாதிரி அது மாதிரி இல்லாமல் புதுமாதிரியான விளக்கத்தை தந்திருக்கிறது இந்து முன்னனி.

சரி, அவர்கள் சொல்வதற்கு நான் எந்த வகையிலெல்லாம் ஒத்துப் போகிறேன் அல்லது ஒத்துப் போக முடியுமென கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். முதலாவதாக வருவது , பசுவை தெய்வமாக வழிபடுவது. நான் அதிகம் படித்தவனல்ல. ஆனாலும் கூட சென்ற வருடம் ஆறாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடமெடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. திராவிட, ஆரிய நாகரிகங்களை வேறுபடுத்தும் அட்டவணையொன்றில் திராவிடர்கள் காளையை வழிபட்டவர்கள், ஆரியர்கள் பசுவை வழிபட்டவர்கள் என வரலாற்றாராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

திராவிடர்களின் முக்கியத் தொழில் வேளாண்மையென்பதையும் ஆரியர்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க அவரவர்கள் தங்கள் தொழிலுக்கு உதவக் கூடிய காளை மற்றும் பசுவை வழிபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இன்று தமிழ், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என்றெல்லாம் வாய்கிழிய கூவுபவர்கள் ஆரிய பழக்கவழக்கத்தினை, அவர்கள் பண்பாட்டை , கலாச்சாரத்தை தமிழர்களின் பொது கலாச்சாரமாக திணிக்க முனைவதையும் இதன் வழி ஆரியர்கள் மட்டுமே தமிழர்கள் என்பதையும் அவர்கள் நிறுவ முனைகிறார்கள்.

ஆரியம், திராவிடம் என்பதெல்லாம் சும்மா கப்சா என்பதாகக் கூட சிலர் வாதாடலாம். அதை விட முக்கியம் நான் ஒரு மாட்டுக்கறி பிரியன். கடையிலிருந்து வாங்கி வரும் கறியில் அது காளை மாடா, பசு மாடா என்பதெல்லாம் ஆராய எனக்கு நேரமில்லை. ஒரு காலத்தில் நாட்டுக்கோழி என்றால் எனக்கு மிகவும் பிரியம். கறிக்கோழி மயமாகிவிட்ட பின் கோழிக்கறியை தியாகம் செய்தாயிற்று. எங்கள் வீட்டிலேயே இரண்டு முறை பன்றி வளர்த்திருக்கிறார்கள். ஒரு செல்லப் பிராணி போல அதுவும் எங்களோடு வாழ்ந்தாலும் அக்கம்பக்கத்து வீட்டு தோட்டங்களில் பள்ளம் தோண்டி செய்த அட்டகாசங்களால் வந்த சண்டைகளை சமாளிக்க முடியாமல் அதன்பின் பன்றி வளர்ப்பதுமில்லை. எங்கே பன்றியிறைச்சி கிடைக்குமென தேடி அலையவும் முடிவதில்லை.

ஆட்டுக் கறி... அதன் விலையெல்லாம் ஒரு நாளும் என் பட்ஜெட்டுக்குள் இருந்ததேயில்லை. எங்காவது நிகழ்ச்சியில் புண்ணியவான்கள் பார்த்து பரிமாறினால் தான் உண்டு. எனக்கிருக்கிற ஒரே வாய்ப்பு மாட்டுக் கறி என்பதாலோ என்னவோ அதன் மீது அலாதிப்பிரியம் எனக்கு.

செந்தமிழன், பச்சைத் தமிழன், புரட்சி தமிழன் என்றெல்லாம் பட்டம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்தாவது தப்பிக்கலாமே என என்னை தமிழனாக 'மாற்றிவிட' எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் மாட்டுக்கறியா, தமிழனா என்று பார்த்தால் , இந்த பாழாப்போன வயிறு மாட்டுக்கறி பக்கம்தான் மனதை சாய்க்கிறது. என்ன செய்ய?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அயம் நாட் ய டமிலியன் பிரதர் - 2

தமிழர்கள் என்பதற்கு இந்து முன்னனி கொடுக்கிற இரண்டாவது வரையறை 'கழுத்தில் தாலி அணிபவர்கள் '. இந்த வாக்கியத்தை படிக்கும்போதே இது குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து சொல்லப்பட்டதென்பது நமக்கு புரியும். சரி, தமிழர்கள் எல்லோரும் தாலி அணிந்து கொண்டிருந்தார்களா? எப்போது யாரால் இந்த பழக்கம் ஏற்பட்டதென்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்குள்ளும் ஆரிய நரி ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல் அதிகம் படித்தவனோ அல்லது சங் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனோ இல்லையென்றாலும் கூட எந்த பழந்தமிழ் நூலிலும் தமிழர்கள் தாலி அணிந்து திருமணம் செய்தார்கள் என்பதான குறிப்பெதையும் பார்க்கவே முடியவில்லை. நோகாமல் வயிறு வளர்க்க ஆரியர்கள் கண்டுபிடித்த ஆயிரத்தெட்டு சடங்கு சம்பிராதயங்களில் ஒன்று தான் இந்த தாலி அணியும் பழக்கமும். வாயு பகவானுக்கு, அக்கினி பகவானுக்கு, சூரிய பகவானுக்கெல்லாம் மனைவியாய் இருந்தவளே, இன்று முதல் நீ இன்னாருடைய மனைவி என ஏலம் விடுவதை வேத மந்திரம் என கப்சா விட்டு காசு பார்க்க திட்டமிட்டதன் விளைவு தான் இந்த தாலி பழக்கம்.

பொதி மாட்டுக்கு நுகத்தடி புனிதமென்பது போல் பெண்களுக்கு தாலியை புனிதமாக கற்பிதம் செய்து விட்டார்கள். பெண்மை, தாய்மை புனிதமென்பதும் கூட பெண்ணை பெருமைப்படுத்தவா ஏற்படுத்தப்பட்டது? தாலி அணிபவர்கள் தான் தமிழர்கள் என்பது இனத்தை மதத்தோடு பிணைக்கிற இந்துத்துவ குறுக்குபுத்தி அல்லாமல் வேறு என்ன?
மூன்றாவது பாயிண்ட்டை படித்ததும் தான், அட ச்சே, இதை போய் சீரியஸ் பேட்டி னு நெனச்சுட்டமே.. டைம் பாஸ் ல வரவேண்டிய காமெடி பேட்டி ஆச்சே என்பது என் மர மண்டைக்கு உறைக்க ஆரம்பித்தது. அது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அயம் நாட் ய டமிலியன், பிரதர்! - 3

கழுத்தில் தாலி அணிபவர்கள் தமிழர்கள் என்று பெண்களுக்கு மட்டும் இலக்கணம் சொன்னவர்கள் ஆண்கள் எதை அணிய வேண்டும் என்பதை சொல்லாமலே விட்டுவிட்டார்களே.. ஒருவேளை அவர்களை பொறுத்தவரை ஆண்களெல்லாம் தமிழர்கள் அல்ல என்பதா அல்லது திருமணம் என்பது பெண்ணை மட்டும் சார்ந்தது என்பதாலா? எனக்கு புரியவில்லை.

ஆரிய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரம் என தம் கட்டி கூவுபவர்கள், தமிழ் இலக்கியங்களில் களவியல், கற்பியல், உடன்போக்கு என்பதை பற்றியெல்லாம் கூட சொல்லியிருக்கிறார்களே என்று கேட்டால் மட்டும் ராமதாஸின் பேரன்களாக அவதாரமெடுத்து, காதலிக்கலாம்.. தப்பே இல்ல.. ஆனா சொந்த சாதியில காதலிக்கனும்.. என சாதி சூலாயுதத்தை தூக்கிக் கொண்டு வெறிப்பிடித்து விரட்டுகிறார்கள்.

பில்டிங் அப்ரூவல் போல பேரண்ட்ஸ் அப்ரூவல் என்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேறு. எந்த தலைவனும் எந்த தலைவியும் பெற்றோர்களிடத்தில் சொல்லி காதல் செய்ததாக தெரியவில்லை. எங்கே சாதிப் பேயின் பல்லுடைக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிடுமோ என்ற பதட்டத்தில் காதல் என்றாலே அபச்சாரம் அபச்சாரம் என காதை பொத்திக் கொள்கிறார்கள்.

தாலி கட்டிவிட்டோம் என்பதாலேயே ஒரு பெண் ஆணின் வாழ்நாள் உடைமையாகிவிடுகிறாள். அவளுக்கென தனிப்பட்ட ஆசைகளோ விருப்புவெறுப்புகளோ இலட்சியங்களோ இருக்க கூடாது. இன்னும் சொல்லப் போனால் அவள் மனுஷி என்பதை கூட மறந்து , ஒரு ஆணை எல்லாவிதத்திலும் சந்தோஷப் படுத்தக் கூடிய பொருள் என்பதை தொடர் நினைவூட்டவே தாலி பயன்படுகிறது. இப்படியான பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழனாக முடியும் என்கிறது இந்து முன்னனி.

ஒருவனுக்கு ஒருத்தி என்று பேச நினைத்து தாலி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். சரியான ஞாபகமறதி கேஸ். சரி விடுங்கள், இப்போதாவது ஞாபகத்துக்கு வந்ததே.. ஒருவனுக்கு ஒருத்தி.. இதுவே இந்து கலாச்சாரம்.. இதுவே தமிழ் கலாச்சாரம் என்பவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

எல்லா மத கதைகளுமே கடைந்தெடுத்த, ஒன்றுக்கும் உதவாத , மக்களை மடையர்களாக்குகிற குப்பைகள் தான் என்ற போதிலும் இந்து மத புராணக் கதைகள் எல்லாவற்றையும்விட ஸ்பெஷல். சாமியாக இந்து மதம் குறிப்பிடப்படும் எவருடைய வரலாறாகட்டும், எல்லாமே அடல்ட்ஸ் ஒன்லி டைப் தான். சரோஜாதேவி , ரம்பை, ஊர்வசி புத்தகங்களையெல்லாம் மறைத்து மறைத்து படிக்க வேண்டிய நிலையில், கிருஷ்ணன் பல பெண்களோடு கூத்தடித்த கதையை, ராமனின் அந்தப்புர லீலைகளை, ஐவருக்கும் மனைவி என மனைவியை பங்கு போட்ட கதையை பொதுவெளியில் படித்து நம்மை பக்திமான்களாக, ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்துக்கள் தான் தமிழர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்பவர்கள் தான் தமிழர்கள் என்று கூறும் இந்து முன்னனியினரின் வியாக்கியனமெல்லாம் இருக்கட்டும். இந்து சாமிகளாக கூறப்படுபவர்களில் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த ஒருவரையாவது காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்..