Tuesday, June 16, 2015

இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்கள்

இந்தியாவில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்களை மூன்றாக பிரிக்க இயலும்:
Group A:இவர்கள் 'இட ஒதுக்கீட்டை' மட்டும் (மட்டும் என்பது இருமுறை ஒலிக்கின்றது) எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள். உண்மையில் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென பொய் பிரச்சாரம் செய்பவர்கள்.
Group B:மேற்கண்ட முதல் குரூப்பின் பொய் பிரச்சரத்திற்கு பலியாகி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென நினைப்பவர்கள்.
Group C:இவர்கள் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மட்டும் எப்படியாவது காலி செய்துவிடவேண்டுமென நினைப்பவர்கள்.
முதலில் முதல் குரூப்பை பற்றி காண்போம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group A:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த முதல் வகை மனிதர்கள் நேர்மையற்ற இந்துக்கள். பெரும்பாலும் அறிவுஜீவிகளாக தங்களை காட்டி கொள்பவர்கள்.பத்திரிக்கை, சினிமா போன்ற துறைகளிலும் இருப்பார்கள். மேலும் தங்களை மிகுந்த நல்லவர்கள் போலவும் தேசபக்தி மிகுந்தவர்கள் போலவும் காட்டி கொள்வார்கள். அநீதிகளை கண்டு கொதிக்கும் மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் அல்லது பார்ப்பனர்களை அண்டி பிழைக்கும் ஜெயமேகன் போன்றவர்களாகவும் இருப்பர்.

எடுத்துக்காட்டாக டைரக்டர் சங்கர், முருகதாஸ், மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தினமணி மற்றும் தினமலர் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதும் பூணூல் அணியும் இந்துக்களும் இந்த வகை என கூறலாம்.

இவர்கள் யாரும் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள். சரியாக சொல்வோமேயானால் தங்கள் ஜாதி மூலம் சுய பெருமைகளை தேடிக்கொள்பவர்கள். ஜாதிய அடையாளங்களை விரும்பி சுமந்து கொண்டு திரிபவர்கள். நெற்றியிலும், நடுமண்டை வரையிலும் கலர் கலராக கோடு போட்டுக்கொண்டு நேர்மை இல்லாமல் சமத்துவம் பேசுபவர்கள்.

இவர்களின் உண்மையான விருப்பம் ஜாதியை ஒழிப்பதல்ல. மாறாக சூத்திரன் மற்றும் பஞ்சமர்களுக்கு கல்வியை கொடுக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை மட்டும் எப்படியாவது கி.பி 2050 குள்ளாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

இதற்காக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொய்பிரச்சாரங்களை கிளப்பிவிடுபவர்கள். இவர்களின் பொய் பிரச்சாரங்களின் படி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்து விடும்.

இவர்களின் சுயஜாதி அடையாளங்களை கொஞ்சம் கூட மாற்றி கொள்ள விரும்பாமல், பூணூல் உள்ளிட்ட தங்கள் ஜாதி அடையாளங்களை தங்கள் உரிமையாக கருதும் கீழ்த்தரமானவர்கள்.

உண்மையில் ஜாதி எவ்வாறு தொடர்கிறது? அல்லது ஜாதி இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது?

ஜாதி இட ஒதுக்கீட்டின் காரணமாகவா தொடர்ந்து வந்தது? ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி சான்றிதழ் இருந்ததா? அல்லது பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்ககீடு மற்றும் சலுகைகள் ஏதும் இருந்ததா? இல்லை

ஆக, பல்லாயிரம் வருடங்களாக இட ஒதுக்கீடு இல்லை, சாதி சான்றிதழ் இல்லை, சலுகைகளும் இல்லை, பின்பு எப்படி ஜாதி தொடர்ந்து வந்துள்ளது?

இதனையே வேறுவிதமாக கேட்போமேயானால் ஜாதிய கொடுமைகள் எதனால் நடக்கின்றது? கோட்டா முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?
  • சேலத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையகூடாதென சூத்திர சாதி மக்கள் தடுக்க காரணம் கோட்டாவா?
  • பரவலாக நடக்கும் போலி கவுரவ கொலைக்கு காரணம் இடஒதுக்கீடா?
  • தின்னியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தை திணித்தார்களே அதற்கு காரணம் இடஒதுக்கீடா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் பூணூல் அணிவது இழிவானது என்று உணர்ந்து பாரப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்துக்கள் தீண்டாமையை கைவிடுவாரகளா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சங்கராச்சாரி அனைவரையும் தொடுவாரா?இந்துக்கள் அனைவரும் சமம் என சங்கர மடம் ஒப்புக்கொள்ளுமா?
  • இந்தியவில் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் ராமதாஸ் & குரு போன்றோர் தலைமையில் காதல் திருமணங்கள் நடக்குமா?
  • வெகு சிலர் மட்டுமே பயன் பெறும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டால் மயிலாப்பூர் கபாலி கோவிலுக்கு, 'ஆகமம் 'பயின்ற முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்த யாரையாவது அர்ச்சகராக்க விடுவார்களா?
  • இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டதிற்கு உச்சகுடுமி மன்றம் அனுமதி தான் வழங்குமா?
இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இதற்கான பதில் ஒன்றே ஒன்று தான் "இட ஒதுக்கீட்டுக்கும், சாதி தொடர்வதற்கும் (persistence of caste) எந்த சம்பந்தமும் இல்லை. இல்லை.. இல்லை...

இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது, ஆனால் சாதி தொடர இட ஒதுக்கீடு காரணம் அல்ல.

உண்மையில் இந்து சமூகத்தின் அகமண முறையின் வழியே அதாவது, ஒரே சாதிக்குள்ளே மட்டும் திருமணம் செய்வதால் அல்லது சாதி மாறி திருமணம் நடந்தால் ஊரை கொளுத்துவதால், கொலை செய்வதால் மட்டுமே சாதி தொடர்கிறது.

ஒரு குழந்தையின் சாதி அதன் (இந்து)பெற்றோர் திருமணத்தில் முடிவு செய்யப்படுகிறது. சாதி சான்றிதழ் விண்ணப்பத்தின் போது தாசில்தார் அந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து அதற்கு காகிதத்தால் ஆன சான்றிதழ் மட்டுமே தருகின்றார்.

ஆனால் இந்த குரூப் தாசில்தார் தரும் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமென மோசடி பிராச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரம் ஒரு சுய நல பிரச்சாரம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பதவி படிப்பு ஆகியவற்றை அனுபவித்து வந்த இவர் கள் இடஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு மீண்டும் அதனை முழுவதும் அனுபவிக்க எத்தனித்து அந்த சுயநலத்தினால் செய்யும் தவறான பிரச்சாரமே இடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமென்பதாகும்.

இன்னும் தெளிவாக கூறுவோமேயானல், இந்தியாவில் சாதி வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரிடம் ஜாதி சான்றிதழே இல்லை.

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் இந்து மதமும் அதன் கோட்பாடுகளே ஆகும். ஒருவன் இந்துவாக இருக்கும் வரை அவனிடம் அவன் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கும்.

ஆக, இவ்வாறு சம்பந்தமில்லாமல் சாதி தொடர்வதற்கு காரணம் இடஒதுக்கீடு தான் என்று மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வில்லங்கமானவர்கள் இந்த குரூப் A வை சார்ந்தவர்கள்.
  • சாதி என்பது ஒரு தீராத நோய்
  • நோய்க்கான காரணம் இந்துமதம்(pathology)
  • இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமாக சிகிச்சை வழங்கும் இடம்(Temprorary shelter)
  • சாதி சான்றிதழ் என்பது நோயால் பாதிக்கப்பட்டவரின் கேஸ் ஷீட்(case sheet)
ஆனால் இந்த வில்லங்கம பிடித்தோர் நோய்க்கான காரணத்தை நீக்காமல், அல்லது நீக்க விருப்பம் இல்லாமல் மருத்துவமனைகள் இருப்பதால் தான் நோய்கள் உள்ளன.

ஆகவே மருத்துவமனைகளை மூடிவிட்டு கேஸ் ஷீட்டுகளை மட்டும் கிழித்துப்போட்டுவிட்டால் நோயாளிகளே இருக்கமாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரமே செய்பவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group B:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்களை பற்றி பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. குரூப் A வின் வன்மமான பிரச்சாரத்திற்கு பலியானவர்கள். உண்மையில் விடயம் புரியாதவர்கள். இயக்குனர் சங்கரின் படங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது என்று தெரியாமலே அதனை ரசித்து பார்த்து புல்லரிப்பவர்கள்.

அந்நியன் அம்பி சூத்திர்ர்களை பந்தாடியபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Group C:
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் மிக அதிக சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பணிகள் மூலம் பெறுபவர்கள் உயர்சாதி பார்ப்பன மற்றும் பனியா இனத்தை சேர்ந்தவர்கள். வரிசலுகைகள், மற்றும் ஊதிய சலுகை மற்றும் சமூக மதிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட சலுகைகள் மூலம் சொகுசான நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 26,000 கோடி ரூபாயை பணமாக மட்டும் வரிசலுகையாக பெற்றுள்ளனர். இலவச நிலம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் போன்றவை தனிக்கதை.

அடுத்ததாக இட ஒதுக்கீடுகள் மற்றும் சமூக நல திட்டங்களை பொருத்தவரை மிகமிக அதிக சலுகைகளை அனுபவிப்பவர்கள் இடைநிலை சாதியை சேர்நதவர்கள்.

பிற்படுத்தப்பட்ட (OBC)மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிரக்கும் மூன்றாவது வகையினர்.

இந்திய அளவில் 27% இட ஒதுக்கீட்டையும் தமிழக அளவில் 50% சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பெறுகின்றனர். மேலும் சமூக நலதிட்டங்களை எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவிலான சலுகைகள் இவர்களை சென்று அடைகின்றது.

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் அதிக எண்ணிக்கையிலான கணினிகளை பெற்றது யார்? என்று ஆராய்ந்தால் அது பிற்படுத்தப்பட்டவர்கள் தான் என்பது தெளிவாக தெரியும்.

இதேபோலவே சைக்கிள் வழங்கும் திட்டம், ரேசன் கடைகள், அரசின் பிற மானியங்கள், மகப்பேறு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கே அதிக அளவு சென்றடைகிறது. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

எனினும் ஒப்பிட்டு அளவில் இந்த சலுகைகள் இன்னும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்பதே உண்மை.

எனினும் இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு இதில் ஒரு சிலர் (பலர்)SC /ST இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிராக பேசுகின்றனர். எழுதுகின்றனர்.

முதல்நாள் எங்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது எங்கள் தலைவர் தான் என்று பெருமை பேசுவது , பிறகு ஒரு நாள் எல்லா இட ஒதுக்கீட்டையும் எடுக்கனும் அப்ப தான் இந்த நாடே உருப்படும்! என்று ஜல்லி அடிப்பது.

சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, சலுகைகள் கூடுதலாக வேண்டுமென போராட்டமும் செய்து கொண்டு 'கோட்டாவை எல்லாம் எடுக்க வேண்டுமென இவர்கள் கூற காரணம் என்ன? இவர்களுக்கு என்னதான் பிரச்சினை?

இதனை ஆராய்ந்தால் இந்து சமூகத்தில் தனக்கு கீழ் உள்ள தலித்துகளின் மீதான வன்மமே இவர்களை இப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு மிடுக்கான உடை அணிந்த தாழ்த்தப்படவரை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உயர் அதிகாரியாக ஒரு தலித்தை இவர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

தலித்துகளின் வளர்ச்சி இவர்களை மனதளவில் பாதிக்கின்றது, அந்த வளர்ச்சிக்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று இவர்கள் மனம் முடிவு செய்கிறது. ஆக தனக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாதென முடிவு செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் அரசின் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து திங்கட்கிழமைகளில் கலெக்டர் ஆபிசில் மனு கொடுக்க வரிசையில் நிற்கும் போது கூட இவர்களுக்கு உண்மை புரிவதில்லை என்பது வேதனையான விடயமாகும்.

கடைசியாக டாக்டர்.அம்பேத்கரின் பொன்மொழியோடு இதனை முடிக்கின்றேன்:
Breaking up the Caste System was not to bring about inter-caste dinners and inter-caste marriages but to destroy the religious notions on which Caste was founded
ஜாதி ஒழிப்பு என்பது சம்பந்தி விருந்து நடத்துவதோ அல்லது சாதி மறுப்பு திருமணங்கள் புரிவதோ அல்ல. மாறாக ஜாதி கட்டமைக்கப்பட்டுள்ள அதன் 'மத அடிப்படைகளை' வீழ்ததுவதே ஆகும்.
எனவே பொது மக்கள் இந்த மேற்கண்ட மூன்று பிரிவினரை சரியாக இனம் பிரித்து அடையாளம் கண்டு அனுகுவது நலம்.

https://www.facebook.com/wisdomram/posts/924784540898961

No comments:

Post a Comment