Wednesday, December 14, 2016

பண மதிப்பு நீக்கம் தனது கோர முகங்களைக் காட்டத் துவங்கியுள்ளது.

துணைத் தளபதி மார்கோஸ்
Via Facebook
2016-Dec-13

பண மதிப்பு நீக்கம் தனது கோர முகங்களைக் காட்டத் துவங்கியுள்ளது.

1. வார்தா புயலுக்கு மரித்தவர்கள் பத்துக்கும் கீழே. பணமதிப்பு நீக்கத்துக்கு இதுவரையில் பலியானவர்கள் 100.

2. நடுத்தர வர்க்கம் வரிசையில் நிற்கும் சிக்கல் குறித்து பேசுகிறது. அது ஒரு புறம். இன்னொரு புறம் சிறு குறு தொழில்கள் முடங்கி நிற்கின்றன. இது மட்டுமல்ல, மரண அடி வாங்கிக் கொண்டிருப்பது விவசாயிகளே. அறுவடைக் காலம். கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களின் " வங்கிப் பணியை " RBI முடக்கி வைத்துள்ளது. அதில் பரிவர்த்தனை செய்த விவசாயிகள் நிலை இனி என்ன ? பல இடங்களில் அறுவடைப் பணி நின்று போய் உள்ளது.

3.நாடு முழுதும் சிறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மொராதாபாத் ( பித்தளை பொருள்கள் ), திருப்பூர் ( துணி ), லூதியானா ( மிதி வண்டிகள் ) , பிரோசாபாத் ( கண்ணாடி பொருள்கள் ) மாண்டியா (வெல்லம் ) தொழிலகங்கள் மிகப் பெரிய வீழ்ச்சியின் துவக்கத்தில் இருப்பதை உணரத் துவங்கியுள்ளன.

4. நடக்கும் கூத்து முழுதுக்கும் மோடி, ஜெட்லி, உர்ஜித் படேல் அடங்கிய மூவரணியே பொறுப்பு. இதில் முதல் இருவர் ஒரு கட்சியைச் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்கள். ஆனால் படேல் அவ்வாறு அல்ல. டெபுடி கவர்னராக இருந்தவர். Monetary Policy Department இன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அவர் எப்படி இதில் கூட்டு சேரலாம்? மூன்று லட்சம் பேர் எழுதும் தேர்வில் வெறும் 100 பேர் மட்டுமே RBI இல் பணிக்கு எடுத்தக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வந்த ஒருவர் கூட இதன் பாதகங்களை அரசுக்குச் சொல்லவில்லையா? ஆட்சியாளர்களுக்கு இதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? பணக் கொள்கையின் அடிப்படைகள் கூடவா அவர்களுக்கு மறந்து போயிற்று?

5. பண மதிப்பு நீக்க நடவடிக்கை எல்லோரையும் ஒரே போல் தாக்கவில்லை. நான்கைந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரும், நான்கைந்து பண அட்டைகள் வைத்திருப்போரும் சந்திக்கும் சிக்கலுக்கும், ஒரே ஒரு அட்டை வைத்திருப்போர் சந்திக்கும் சிக்கலும் வேறானவை. முன்னவருக்கு பல வங்கிகளின் பணம் கிடைக்கும். பின்னவருக்கு நான்கு மணி நேர வரிசைக்குப் பின் இரண்டாயிரம் கிடைக்கும். இதில் வங்கியின் " சிறப்பு நுகர்வோர் " தனியாக கவனிக்கப்பட்டு பணத்துடன் செல்கின்றனர். [ #SBIவங்கியின் #ExclusiF என்றொரு சேமிப்புக் கணக்கு உள்ளது. அதில் இணைய நீங்கள் வங்கியில் 30 லட்சம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் அல்லது வங்கியிடம் நீங்கள் 1 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பெற்றிருக்க வேண்டும். இதில் இணைந்தால் வங்கி உங்களைச் சிறப்பாக கவனிக்கும். நீங்கள் ஒரு சிறப்பு நுகர்வோர். ]

6. புதிய பணத் தாள்கள் அச்சிடப்பட்டு வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதிலும் RBI பாரபட்சம் காட்டுகிறது.
நவம்பர் இறுதி வரையான இந்த தகவலை ஒப்பிட்டுப் பாருங்கள். ICICI வங்கிக்கு ரூபாய் 4500 கோடி புதிய பணமும், HDFC வங்கிக்கு 900 கோடியும், AXIS வங்கிக்கு 700 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த மூன்று வங்கிகளுக்கு மட்டும் மொத்தமாய் ரூபாய் 6100 கோடி ரூபாய். ஆனால் பொதுத் துறை வங்கிகள் அனைத்துக்கும் சேர்த்து ரூபாய் 7800 கோடி ரூபாய். பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கே உள்ள தனியார்த் துறை வங்கிகளுக்கு எதன் அடிப்படையில் இப்படிப் பிரித்துக் கொடுத்தனர். புதிய பணத் தாள்கள் எவ்வளவு அச்சடிக்கப்படுகின்றன, எந்த வங்கிக்குக் கொடுக்கப்படுகின்றன, நகர்புற வங்கிகள் எவ்வளவு, கிராமப்புற வங்கிகள் எவ்வளவு போன்ற புள்ளி விவரங்களை RBI வெளியிட வேண்டும். குறிப்பாய் 100 ரூபாய் தாள்கள். நகர்ப்புறத்துக்கு எவ்வளவு போகிறது, கிராமப்புறத்துக்கு எவ்வளவு போகிறது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.

7. வருமான வரித் துறை சமீபத்தில் இரண்டு அரசு அதிகாரிகள் வீடுகளில் 5.7 கோடி மதிப்பு உள்ள இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களைக் கைப்பற்றினர். இந்தத் தொகையை ஒரு சாதாரண மனிதன் வரிசையில் நின்று, தினமும் இரண்டாயிரம் இரண்டாயிரமாய் , எடுப்பதாய்க் கொண்டால் அவன் 45 வருடங்கள் தினமும் வங்கி வாசலில் நிற்க வேண்டும்.

8. செல்லா நோட்டு அறிவிக்கப்பட்டவுடன் பண முதலைகள் தங்களிடம் உள்ள பணத்தை பலவிதமாய் மாற்றிக் கொள்ளத் துவங்கினர். தங்கமாய் வாங்குவது பெரும்பாலும் பேசப்படுகிறது. அது ஒரு வழி. ஆனால் உண்மையிலும் அவர்கள் செல்லுமிடமெல்லாம் வழிகளே. பெங்களுருக்கு அருகில் உள்ள மத்தூர் APMC வளாகத்துக்கு வரும் இளநீரை வாங்கிப் பதுக்கியும் கறுப்பை வெள்ளையாக்கியுள்ளனர். பத்து நாள் கழித்து அவை மீண்டும் சந்தைக்கு வந்தன. சந்தையில் உள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிப் பதுக்கி கருப்பை வெள்ளையாக்கும் வேலையை செய்ய முடியும். செய்தார்கள். கர்நாடகாவில் நெல்லை பெருமளவு கொள்முதல் செய்தும் அங்குள்ள அரசியல்வாதிகள் கருப்பை வெள்ளையாக்கியுள்ளனர்.. இப்படிப் பதுக்கிய பண்டங்கள் பின்னாளில் அதிக விலைக்கு விற்று அதிலும் ஒரு லாபம் பார்ப்பார்கள்.

9. துவக்கத்தில் இதை கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாய் முழங்கினர். பின்னர் தீவிரவாதிகளிடம் உள்ள கள்ளப் பண ஒழிப்பாயிற்று. பின்னர் எதுவும் சரிவராமல் அட்டைப்பண பொருளாதாரம் என்று தாவியுள்ளார்கள். உண்மையிலும் இந்த பணமற்ற பொருளாதாரம் என்பது இங்கு சாத்தியமே இல்லை. பணமற்ற பரிமாற்றம் செய்ய PAYTM போன்ற நிறுவனங்கள் உள்ளன. சிக்கல் என்னவென்றால் அந்த செயலிகள் நமது செல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளும் வல்லமை உடையவை. ஒரு தனி மனிதனது தனிப்பட்ட குணாதிசயங்களை அலசி அவனை ஒரு வியாபார வலையில் விழவைக்க முடியும். இந்தியாவில் இப்படியான தனி மனிதர் குறித்த தகவல்களை எப்படிப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு ஒரு சட்ட வரைமுறை ஏதுமில்லை. [ உதாரணமாய் என் பெற்றோருக்கு என்ன வியாதி வந்துள்ளது என்பதை அவர்கள் வாங்கும் மருந்துகளைக் கொண்டு கண்டு பிடிக்கலாம். அவை பரம்பரை வியாதியாக இருக்கும் பட்சத்தில் எனக்கு மருத்துவக் காப்பீடு தர எந்த நிறுவனமும் முன் வராது.]

10. ஒரு பிச்சைக்காரன் கூட கார்டு ஸ்வைப் செய்யும் அளவுக்கு நாடு முன்னேறியுள்ளது என்ற அறிவிப்பில் எந்தத் தகவலும் இல்லை. அதில் பெருமிதம் இல்லை. அதில் நிரம்பி வழிவது வெறும் இகழ்ச்சியே. அடித் தட்டு மக்களின் மீதான இகழ்ச்சியே. காறித் துப்பினாலும் துடைத்துக் கொண்டு இந்த மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்ற இகழ்ச்சியே.

#தகவல்: FRONTLINE

https://www.facebook.com/thunaiththalabathymarcose/posts/1704289556567030

No comments:

Post a Comment