Thursday, December 29, 2016

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு

*தீண்டாமைக்கு எதிரான  மனவிளையாட்டு* :

இந்தியாவில் 'இந்து பட்டியில் சாதியில்' பிறந்த ஒருவர் தீண்டாமையை வாழ்க்கையில் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. எனினும் அவ்வாறான தீண்டாமையிலிருந்து தப்புவதற்கு நமது மக்கள் பல்வேறு மன தந்திரங்களை கையாளுகின்றனர்.

இதனை மனோதத்துவத்தில் defence mechanism என்று சொல்லுவார்கள்.

தீண்டாமையை முற்றிலும் அடியோடு் அழிக்க, அனைவரும் சமத்துவம் எனும் நிலையை அடைய 'எது வழி' என்று பாபாசாகேபின் வழியில் அறிந்து கொள்ளாத வரை இவ்வாறான மனவிளையாட்டுகள் (defence mechanism) மூலம் தீண்டாமையிலிருந்து தப்ப முயல்வது இயல்பே.அவற்றை ஒவ்வொன்றாக காணுவோம்.

1. *தீவிர இந்துவாக இருப்பது*

இவ்வகையில் வருவோர் மிக அதிகமாக இந்து தன்மையுடன் தங்களை வெளிப்படுத்தி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பி விடலாம் என்று என்னுகின்றனர்.

இவர்கள் மத அடையாளங்களை தீவிரமாக வெளிப்படுத்துகின்றனர். பெரிய விபூதி வைத்து கொள்வது, வருடத்திற்கு நான்கு ஐந்து முறை திருப்பதி் போன்ற இடங்களுக்கு பயணிப்பது இவர்கள் வழக்கமாகும். இதில் குறிப்பிட தகுந்த விடயம் அவர்கள் திருப்பதி் செல்வதோ அல்லது வேறு வகையான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் படி அவர்கள் பார்த்து கொள்கின்றனர் என்பதாகும்.

2. *சைவ உணவுக்கு மாறுவது*

மாட்டிறைச்சியை இழிவாக இந்துக்கள் கருதுவது மாட்டிறைச்சி மோசமானது என்பதனால் அல்ல. மாறாக அதனை பட்டியல் சாதியினர் உண்கின்றனர் என்பதற்காக தான். தவறு மாட்டின் மேல் அல்ல.

ஆனால் இதனை எதிர் நிலையில் புரிந்து கொள்ளும் சிலர் நாம் முற்றிலும் சைவமாக மாறிவிட்டால் சமூக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
உண்மையில் நீங்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் கூட இந்துக்கள் நீங்கள் இந்துவாக உள்ளவரை உங்களை மதிக்க மாட்டார்கள் (காரணம் கடைசியில்).

3. *சாதியை முற்றிலும் மறைத்து கொள்வதில் வெற்றி பெற்றவர்கள்*

பலர் இதில் வெற்றி கண்டுள்ளனர். முற்றிலும் தங்கள் சாதியை மறைத்து கொண்டு பொது சமூகத்தில் வாழ்கின்றனர். பொது சமூகத்தினர் தலித் மக்களை இழிவாக பேசும் போது வேறு வழியின்றி இவர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து 'ஆமா, ஆமா அவுங்க எல்லாம் ஒரு மாதி்ரி' என்று சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளோர் இவர்கள்

4. *சாதியை மறைப்பதில் தோல்வி அடைந்தோர்* 

இவர்கள் தான் என்ன சாதி என்று மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து கொள்பவர்கள்.ஆனால் உண்மையில் இவர்களை சுற்றி உள்ளோர் இவர் யார் என்று அறிந்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் பரிதாபமாக இவ்வறான நமது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அற்று பரிதாப நிலையில் இருப்பார்கள்.

5. *கல்வி , பொருளாதாரம் தங்களுக்கு மதிப்பை பெற்று தரும் என்று நம்புவோர்*

டாக்டர்.அம்பேட்கர் கல்வி ஒன்றே இழிவு நீங்க வழி என்று சொன்னதாக இந்துக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் அவரின் 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவது' என்ற கருத்தியலை மறைப்பது.

இந்த பிரச்சாரத்தை நம்பியோர் கல்வியும் ,பொருளாதாரமும் ஒரு நாள் நமக்கு சம மரியாதை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம்மை இழிவுக்கு உள்ளாக்கும் இந்துக்கள் அனைவரும் மெத்த கல்வி கற்றவர்களும் அல்ல , அம்பானி குடும்பமும் அல்ல.

6. *நாம நம்ம வேலையை பார்ப்போம்*

இந்த வகையினர் தீண்டாமை இருந்தால் இருந்துவிட்டு் போகட்டும் நாம் நமது வேலை பார்ப்போம் என்று ஜாலியாக இருப்போர். இது உடலி்ல் உள்ள தொழு தோயை பற்றி கவலைபடாமல் ஜாலியாக இருக்கும் நோயாளியை போன்றது.

7. *அரசியல் அதிகாரம் சம மரியாதை பெற்று தரும் என்று நம்புவோர்*

இந்தியாவில் SC பிரிவினர் 16.6% உள்ளனர். இவர்கள் ஓரணியில் இல்லாமல் உட்சாதி் உணர்வோடு பிரிந்தும் உள்ளனர்.சிலர் தங்களை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி கொள்கின்றனர். இவ்வாறான சிறுபாண்மையினர் அரசியலில் எந்த அளவு சாதிக்க இயலும் என்பது எண்ணிக்கை அடிப்படையில் விவாதத்துக்கு உரியது.

எனினும் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான போராட்டம் அவசியம் தேவை.அதற்கான நமது இயக்கங்கள் தலைவர்கள், வளர்த்து எடுக்கப்பட வேண்டியோர். இது வேறு விடயம்.

ஆனால் இங்கே புரிதலில் குழப்பம் யாதெனில் அரசியல் அதிகாரம் தீண்டாமையை ஒழிக்குமா? இல்லையா? என்பது தான். இதற்கான பதில் ஒழிக்காது என்பதே.

எளிமையாக சொன்னால் தீண்டாமை என்பது பண்பாட்டு் பிரச்சினை,அரசியல் பிரச்சினை அல்ல. எந்தவிதமான அரசியல் பிரதிநிதித்துவமும் அற்ற இசுலாமியர்கள்,கிறித்துவர்கள் சம மதிப்பை இந்தியாவில் பெறுகின்றனர். ஆனால் தனித்தொகுதிகளின் பயனால் எப்போதும் 15% MLA/MP களை  கொண்டிருக்கும் நாம் சம மதிப்பை பெற இயலவில்லை என்பது கவனிக்க தக்கது.
நான்கு முறை முதல்வராக இருந்த அன்னை மாயாவதியின் உத்திர பிரதேசம் இன்றும் வன்கொடுமைகளில் முன்னனியில் உள்ளது.

இங்கே இந்த கருத்து அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டாம் என்பதாக புரிந்து கொள்ளதக்கதல்ல. அது நிச்சயம் வேண்டும். ஆனால் அது தீண்டாமையை ஒழிக்குமா ? என்றால் இல்லை என்பதை தான் நாம் புரிந்து்கொள்ள வேண்டும்.

(மீண்டும் கூறுகிறேன்,
இது அரசியல் அதிகாரம் நமக்கு தேவையில்லை என்று புரிந்து கொள்ளதக்கதல்ல)

8. *நாங்க SC இல்லை' பிரிவினர்*:

இது மிகவும் முக்கியமான ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய பிரிவாகும். இந்த பிரிவில் உள்ளோர் SC என்பதன் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற ஆசையற்றோர்.

அதாவது தீண்டாமைக்கான நிரந்திர தீர்வு குறித்து அக்கறையற்றோர்.

மாறாக தங்களை SC அல்ல என்று சொல்லி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் SC பிரிவிலிருந்து அரசியலமைப்பு சட்டப்படி யாரும் வெளியேறவே முடியாது என்ற உண்மை இவர்களுக்கு தெரிவதில்லை.

மேலும் இவர்களின் மனதந்திரம் வேறு சிலரை தீண்டதகாதவர்களாக காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பபுகணக்கு போடுகிறது. அதாவது பட்டியில் சாதியில் உள்ள வேறு சாதியைவிட தங்களை உயர்வாக காட்டி கொள்வதன் மூலம் தப்ப எண்ணுவது. (நாங்க இல்ல , அவுங்க தான்)

இங்கே முக்கியமானது இவர்கள் தீண்டாமையை ஒழிக்க பாடுபடவில்லை என்பதும் வேறு ஒரு சாதியை பலி கொடுத்து தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்பதுமாகும்.

SC யின் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்குவது தான் நியாயமானது என்பது புரியாமல் தாங்கள் SC அல்ல என்று நிறுபிக்க முயல்பவர்கள். இந்த பிரிவினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து.

ஏனெனில் ஏதோ ஒருவகையில் SC பிரிவிலிருந்து இவர்கள் அமானுசிய முறையில் நீக்கப்பட்டுவிட்டால் இட ஒதுக்கீடும் கிடைக்காது, வன் கொடுமை சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் பெருமளவு வன்முறையை இவர்கள் சந்திக்க நேரிடும். மேலும் சாதியை சொல்லி (டேய் *** பயலே) திட்டினால் ஒரு வழக்கு கூட தொடுக்க இயலாது.

9. *Inter caste சாதி மறுப்பு திருமணத்தில் பிறந்தோர்*

இந்த பிரிவினரும் மேற்சொன்ன பிரிவினரும் 'ஒத்த அடிப்படை' கருத்தாக்கத்தில் உள்ளோர் தான்.

அதாவது நாங்க SC இல்ல என்று ஏதாவது ஒரு வகையில் நிறுவ முயல்பவர்கள்.

"எங்க அப்பாவோட ஒன்றுவிட்ட மாமா சாதி மறுப்பு திருமணம் செய்தவர் மேலும் என் அம்மாவின் அப்பாவின் அப்பா திருமணம் செய்தது ஒரு முதலியார் "

இவ்வாறான ஏதாவது ஒரு கதையை சொல்லி தங்களின் ரத்தம் SC ரத்தம் இல்லை என்று சொல்லி தப்ப முனைபவர்கள்.

ஆனால் வரலாறு முழுவதும் சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டே தான் உள்ளது என்பதும் அதனால் சாதியோ அல்லது தீண்டாமையோ ஒரு போதும் ஒழியவில்லை/குறையவில்லை என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை

********

ஆகவே மக்களே
நீங்கள் மேற்கண்ட எந்த பிரிவில் இருந்தாலும் உங்களால் தீண்டாமையலிருந்து தப்ப இயலாது என்பதே உண்மை.

இந்துக்கள் உங்களை கண்டறிந்து உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தான் தருவார்கள்.

ஏனெனில் இந்துகளுக்கு நீங்கள் வேண்டும். அதாவது SC என்பதன் பின் ஒரு இழிவு இருந்தால் தான் அவர்கள் உயர் சாதியாக ஆக முடியும். அதற்காக அவர்கள் உழைப்பார்கள்.

ஒரு வேளை அந்த இழிவு இல்லை எனில் அவர்களின் உயர்சாதி பெருமை சரிந்துவிடும், அது அவர்களுக்கு ஆபத்தானது.

அதனால் ஒவ்வொரு இந்துவின் கடமை  இந்த சாதி்வேறுபாட்டை கட்டிu காப்பாற்றுவது ஆகும். அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பது நம்மை இழிவு படுத்த அல்ல. *மாறாக அவர்களின் உயர் நிலையை உறுதிபடுத்த கொள்ளவே*

ஆகவே தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது எப்படியாவது SC பட்டியிலில் இருந்து வெளியேறுவதோ அல்லது தங்களை மறைத்து கொள்வதோ அல்ல.

மாறாக SC என்பதன் மீதுள்ள இழிவை இந்து மதத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதன் மூலம் துடைத்து கொள்வதாகும்.

அது சானதான முறைகளில் இருந்து *பாபாசாகேபின் வழியில் வெளியேறி பூர்வீக பௌத்த* கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைத்து அதன் வழியே நாங்கள் இந்து தீண்டதகாதோர் அல்ல, வேறு மதத்தை சார்ந்தோர். நாங்கள் பெருமைக்குறிய புத்திஸ்டுகள் என்று முழுங்குவதே ஆகும்.

*Dr.Satva*

No comments:

Post a Comment