Sunday, October 6, 2019

ஐயர் என்பதன் பொருள்

Satiyaperumal balusamy
2019-10-06

ஐ என்றால் தலைமை. தாய்வழிச் சமூகத்தில் இனக்குழுவிற்குத் தலைமையாக இருந்த பெரும் பெண்ணை ஐயை என்றனர். ஐ+ஐ.  அதாவது பெருந்தலைமை! ஐயை என்பது மதுரை புக்க கோவலன் கண்ணகியர்க்கு அடைக்கலம் வழங்கிய பெருமாட்டி-சிலப்பதிகார மாதரியின் மகளின் பெயரும் கூட. ஐயம்மாள் என்ற பெயரில் சில உறவினர்கள் இன்றும் எனக்குண்டு.

தந்தைவழிச் சமூகத்தின் தலைமையை ஆண் ஏற்ற பொழுது அவன் வெறும் ஐ. குடும்பத் தலைவனும் 'ஐ'.  தம்+ஐ = தந்தை, எம்+ஐ = எந்தை, நும்+ஐ =நுந்தை, உம்+ஐ=உந்தை.

சமூகத்தின் தலைவரான 'ஐ' யே அச்சமூகத்தின் வழிகாட்டி. அறிவுக் கருவூலம். பட்டறிவுப் பெட்டகம். போரில் முன் செலும் பெருவீரன்.  ஐ யற்ற சமூகம் மேய்ப்பனற்ற மந்தை போல. அதனால் தான் போரில் தலைவன் மாண்டதும் திகைத்துச் சிதறிவிடுகிறது படை. ஐயை ஆகிய தலைவி மாண்ட செய்தியைக் கேட்டதும் நம்பமுடியாமல் 'ஐயையோ?' என வினவி வியந்து அஞ்சினர். ஐ யாகிய தலைவன் மாண்ட போதும் 'ஐயோ' என அழுதனர்.

ஆக, ஐ என்பது தலைவரைக் குறிக்கும் சொல். அதனால் தான் திருவள்ளுவரை ஐயன் என அழைக்கச் சொன்னார் கலைஞர். நமது வீட்டின் பெரியவர்கள் மட்டுமல்ல தந்தை பெரியார் கூட நமக்கு ஐயா தான். வயதில் மூத்த பாட்டனை ஐயிரு எனப் படர்க்கையில் சுட்டினோம்.

ஆனால், பி ஏ கிருஷ்ணனைப் போன்ற தமிழ் விற்பனர்களுக்கு (சரியாகத் தான் படித்தீர்கள் ஐயன்மீர்,  விற்பன்னர் அல்ல விற்பனர் தான்)மாத்திரம் ஐயர் என்ற சொல் பார்ப்பனரைக் குறிக்கும் சொல்லாகி விடுகிறது. 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்னும் தொல்காப்பிய அடிகளில் வரும் 'ஐயர்' அவரைப் பொறுத்தவரை பார்ப்பனரைக் குறிக்கும் சொல். இப்படிப் பொருள் கோள்வது பெருநோய். இந்த நோய்க்கு மனந்திருந்தலை விடவும் வேறொரு மாமருந்தே இல்லை.

அந்தணர் என்று குறிப்பிடப்படுபவர் பார்ப்பனர் என்றால் பார்ப்பனர்கள் மிகவும் நல்லவர்களாக, அறம் பிறழாதவர்களாக, எல்லாவுயிர்களையும் சமமாக நடத்துபவர்களாக இருக்கவேண்டும் என்கிறான் எம் ஐயன் திருவள்ளுவப் பெருந்தகை. நானறிந்தவரை பார்ப்பனர்களுக்குத் தங்களைத் தவிர மற்ற தமிழரெல்லோரும் சூத்திரரே. "சூத்ரத்தி பாத்திரம் கழுவ வந்தாளோ?" "சூத்ரன் இளநீர் கொய்தானோ?" என்பதே அவர்கள் மொழி.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் என்பது திருவள்ளுவம்.

இந்த அளவுகோலை நிறைவு செய்யும் தகைமை, சென்ற தலைமுறைப் பார்ப்பனர் வரை இருந்ததில்லை. பாரதியார் உள்ளிட்ட விடுபடல்கள் பார்ப்பனர்கள் இல்லை. மனிதர்கள்!  அதனால் அந்தணர் எனும் சொல் அறம் காத்த நல்லவர்களான ஆசீவக பௌத்த சமணத் துறவியரைக் குறித்ததாகவே இருக்கவேண்டும் என்பது பனிக்கூழ்மேற் செர்ரிப்பழம்!

இந்த அளவு கோள்களை வைத்துக்கொண்டு அளந்தால் பி ஏ கிருஷ்ணனைப் போன்ற பொய்யர்களின் உயரம் பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவாகவே படும்.

அதனால், கீழடி பற்றிப் பி ஏ கிருஷ்ணன்கள் ஓயாது மாரடிக்கும் பிலாக்கணங்கள் வெறும் பிலாக்கணங்களேயன்றி வேறில்லை. அழுது தொலைக்கட்டும் அந்தப் பிணங்கள். நாம் நெஞ்சுயர்த்திச் செல்வோம். சொல்வோம் "தமிழெங்கள் உயிருக்கு நேர்"

https://m.facebook.com/story.php?story_fbid=3258934847480432&id=100000918452805

No comments:

Post a Comment