Sunday, September 15, 2019

மண்ணில் தோன்றிய மகத்துவம், அண்ணா என்னும் அதிசயம்

சூரியமூர்த்தி

மண்ணில் தோன்றிய மகத்துவம், அண்ணா என்னும் அதிசயம்
.
1.அண்ணாவின் வாக்கியங்களில் பிடித்தது எது ?

1967 தேர்தலில் தேர்தல் வரலாற்றின் சாதனையாக பிரிவினை கோரிய ஒரு இயக்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பு அவர் சொன்னது, "its not because of bullet, its because of ballot".. இந்த வரியின் மீதான அவரது நம்பிக்கை தான் ரத்தம் சிந்தாமல் தமிழர்களை பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்த வைத்தது
.
2. அண்ணாவின் மாஸ் எத்தகையது..?

போராட்டங்களின் விளைவாக மிகக்கடுமையாக அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சூழலில் இந்தோ-சீனா யுத்தம் வருகிறது.. அந்த யுத்தகாலத்தில் தான் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு இந்தியத்திற்கு துணையாக நிற்கிறார் அண்ணா.. எல்லையிலே ராணுவ வீரர்களுக்கு இரத்தம் தேவையாதலால் இரத்தக்கொடை அளிக்கச்சொல்லி தம்பிகளுக்கு கடிதம் எழுதுகிறார், அந்த கடிதத்தில் "தம்பிகளே உங்களிடம் இரத்தம் கேட்க காரணம் உங்கள் இரத்தத்தின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை, ஊரை அடித்து உலையில் போடுபவர்களின் இரத்தத்தை (காங். காரர்களை குறிப்பிடுகிறார்) ஏற்றினால் கிடக்கின்ற துப்பாக்கியை எடுத்து கொண்டு போய் கள்ள மார்க்கெட்டில் விற்றுவிடுவார்கள்" என்று எழுதுகிறார்.. இது அண்ணாவின் எழுத்தின் மாஸ்..
அடுத்த நாள் போர் நிதி கேட்டு எழுதுகிறார்.. நம்ப மாட்டீர்கள், பல ஆயிரம் பேர் தங்களால் இயன்றதையெல்லாம் எல்லாம் கொண்டு வந்து தந்தனர் அது நூற்றுக்கணக்கான மாங்கல்யமும் இருந்தது என்ற செய்தி தான் அண்ணாவின் ஆளுமைக்கான மாஸ்
.
3. நவீன தமிழகத்தை கட்டமைத்ததில் அண்ணாவின் பங்கு என்ன..?

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மூலம் uniform distributive & uniform access என்ற முறை தான் இந்த தத்துவம் இங்கே நடைமுறைப்படுத்த காரணம் அண்ணா என்ற அந்த ஒற்றை மனிதனின் பொருளாதார பார்வை தான்

ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive development ) பற்றி இந்தியா பேச தொடங்கியது 2007 வந்த 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் தான் ஆனால் 1960 homeland magazine ல் எழுதினார் அண்ணா.. குறைந்தது ஆயிரம் கோடிகளாவது ஒதுக்குங்கள் என்று தலைப்பிடுகிறார்,
ஆளும் கட்சி பெயர் பெற்றுவிடும் என்ற தயக்கம் கூட இல்லாமல் அப்படி கோரிக்கை வைத்தவர் அண்ணா.. அவரது மொழிக்கொள்கையும், சுயநிர்ணய உணர்வும் ஆழமான பொருளாதார அறிவும் தான் பீகார், உ.பி.க்கு இனையான பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ்நாட்டை third largest economic power in india என்ற நிலைக்கு உயர்த்தியது
.
4.அண்ணா என்றால் உங்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது..?

1949ல் பெரியாரை விட்டு பிரிந்து திமுக வை தொடங்குகிறார், 1967 ல் ஆட்சியை பிடிக்கிறார்.. இடைப்பட்ட 18 ஆண்டு காலத்தில் அவர்கள் இருவரின் உறவும் உரசலோடு தான் பயணிக்கிறது.. பெரியார் இவரை கடுமையாக விமர்சிக்கிறபோதும் தேவையான இடங்களையன்றி மற்றவற்றுக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறார்.. ஆட்சியை பிடித்தவுடன் பெரியாரை தேடி திருச்சிக்கு ஓடி வந்து வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறார்.. ஆக கருத்து முரண்பாட்டால் தந்தையை விட்டு வெளியேறிய மகனை, தந்தை திட்டிக்கொண்டே இருக்கிறார்.. தமயனும் பதிலளித்துக்கொண்டே வருகிறார்.. இந்த சூழலில் வெற்றி பெற்றவுடன் நாமெல்லாம் என்ன செய்வோம், "இந்த பாருய்யா நான் ஜெயிச்சுட்டன் என்று காலரை தூக்கிவிட்டு சென்றிருப்போம்.. ஆனால் அவரோ தந்தைக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறார்"
அண்ணா என்றவுடன் இந்த பண்பு தான் எனக்கு நினைவுக்கு வரும்.. இந்த பண்பு தான் இன்று எல்லோருக்கும் தேவை, அரசியல்வாதியாக அல்ல மனிதனாகவே எல்லோருக்கும் இது தேவை, ஒரு தந்தை மகன் உறவில் தொடங்கி.. ஆசிரியர் மாணவர் உறவு வரை அத்தனைக்கும் தேவைப்படும் பண்பு இது
.
5.அண்ணா - இன்றைய தேவை.. ?

அண்ணாவை மக்கள் படிக்க வேண்டியதை விட, அரசியலுக்கு வர நினைக்கிற அல்லது அரசியலில் இருக்கிற அரசியல்வாதிகள் தான் அவசியம் படிக்க வேண்டும்.. தன்னை மீறி ஒருவன் வந்துவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்லை அதனால் தான் அவரது தம்பிகள் அத்தனை பேரையும் தன் நிலையிலேயே வைத்துப்பார்க்க அவரால் முடிந்தது.. தனது தம்பியை பார்த்து, "தம்பி வா தலைமை ஏற்க வா"  என்று அவரை சொல்லவைத்தது பதவி ஆசை ஒரு துளி கூட இல்லாத அவரது மனநிலை தான்...
ஒரு கட்சியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்கிற party constructing engineering ஐ நீங்கள் அண்ணாவிடம் தான் கற்க வேண்டும்/ கற்க முடியும்..
தனக்கு தெரிந்த அத்தனையையும் தனது தம்பிகளிடம் அவரை சொல்லவைத்தது அவரின் தேடல் மீதான அவரது தன்னம்பிக்கை தான்.. இன்னும் சொன்னால் தனது அறிவின் மீதான கர்வம் எப்போதும் இல்லை என்பதற்கு, அவர் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களே சாட்சி.. கிரேக்க வரலாற்றை சொன்னாலும், கிரகங்களின் அறிவியலை சொன்னாலும் இப்படித்தான் முடிக்கிறார்.. "உனக்கு தெரியாததா தம்பி" என்று..
ஒரு கட்சியின் உயிர்ப்பு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களின் எண்ணிக்கையில் இருக்கிறது.. அண்ணா வளர்த்த இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இணையாக இன்னொரு இயக்கத்தில் நம்மால் ஆட்களை தேடி விட முடியாது.. ஏறக்குறைய அவர்கள் எல்லோரிடமும் அண்ணாவை போல செயல்படும் ஆற்றல் இருந்தது, தேவையான நேரத்தில் அப்படி செயல்படவும் செய்தார்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு கருப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிக்கிறார் அண்ணா, ஏறக்குறைய எல்லா முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்ட சூழலில் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக காவல்துறை நினைத்த நேரத்தில்.. விமான நிலையத்தில் கருப்புகொடி காட்டப்பட்டது.. காட்டியது நாகூர் அனிபா தலைமையிலான குழு.. ஒரு கட்சி இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் இரண்டாம் நிலை தலைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கட்சி பயணிக்கவே கூடாது.. அப்படி பயணித்தால் அது கூடிய விரைவில் தனது இறுதி பயணத்தை தொடங்கும் என்பது தான் வரலாறு.. இதை சரியாய் செயல்படுத்தியவர் அண்ணா.. அது தான் இன்றைய தேவை
.
6.அண்ணா இன்றைய இந்தியாவிற்கு எப்படி தேவைப்படுகிறார் ?

இந்தியா என்கிற ஒன்றை மிகச்சரியாக வரையறுத்தவர் அண்ணா.. இது பல்வேறு நிலபரப்புகளின், தேசிய இனங்களின் "கூட்டமைப்பு" என்பதை அவர் தான் உரக்க சொல்லி நாடாளுமன்றத்தை நடுங்க வைத்தார்.. இந்தியாவை ஒரு federal structure ஆக பார்க்கும் மரபு பரவலானால் அதன் ஆதிவேர் அண்ணாவாகத்தான் இருப்பார்...
மதச்சார்பிண்மை இந்தியாவின் உயிர்நாடிகளில் ஒன்று, இந்திய அரசே தனது அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் (in preamble) மதச்சார்பற்ற (secular) என்ற வார்த்தையை நெருக்கடி நிலை காலத்தில் தான் சேர்த்தது (1976) ஆனால் அதற்கு முன்பே அரசு என்பது மதச்சார்பற்றது அதன் அலுவலகங்களில் மத அடையாளத்தை குறிக்கும் சின்னங்கள் இடம்பெறக்கூடாது என்று அரசாணை போட்டவர் அண்ணா (29/4/1968) ஏறக்குறைய இந்திய அரசிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்தது தமிழ்நாடு அரசு.. ஆகவே இன்றைய சூழலில் இந்தியா இந்தியாவாக இருக்க அண்ணா தேவை
.
7.அண்ணாவிடம் நீங்கள் வியந்தது..?

அவரது முடிவெடுக்கும் திறன்.. தனக்கு தன் கட்சிக்கு என்று வரும்போது அவரது முடிவுகள் ஒரு வகையாகவும், மக்களுக்கு நாட்டுக்கு என வரும்போது ஒரு வகையாகவும் இருந்துள்ளது.. முதலில் நாட்டுக்கு, எப்போதெல்லாம் தான் எடுத்த முடிவின் இலக்கை அடைவதற்கு தேர்ந்தெடுத்த பாதையில் மக்களுக்கு துன்பம் வரும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த பாதையை விட்டு அவர் பின்வாங்க அல்லது மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க தயங்கியதே இல்லை, அப்படி பாதையை மாற்றினாலும் இலக்கில் உறுதியாக இருந்தார்.. finding alternative path with maximum similarity என்கிற அடிப்படையை அவர் கையாண்டார், திராவிட நாடு கோரிக்கையை வைத்து திமுக வளர்ந்த சம காலத்தில் அகாலி தளம் ஆசாத் பஞ்சாப் (தனி நாடு) கோரிக்கையை முன்வைத்து வளர்கிறது, அதன் பாதையில் உள்ள ஆபத்தை உணர்ந்து இரண்டு கட்சிகளுமே அதை கைவிடுகின்றன.. இதுவரை சாதரணமானது தான் ஆனால் அந்த கோரிக்கைக்கு மாற்றாக அவர்கள் இருவரும் எதை தேர்ந்தெடுத்தனர் என்பதில் தான் அண்ணா மிளிர்கிறார், அகாலிதளம் ஆசாத் பஞ்சாப் கோரிக்கையை கைவிட்டுவிட்டு "பஞ்சாபி சுபா" தனி பஞ்சாப் மாநிலம் கோரிக்கையை எடுக்கிறது ஆக சுயநிர்ணயம் பேசியதிலிருந்து.. சுருங்கிவிட்டது அகாலிதளம் ஆனால் அண்ணாவோ "மாநில சுயாட்சி" என்ற நெருப்பை கையிலெடுக்கிறார், தனிநாடு கேட்டதும் சுயநிர்ணய உரிமைக்காக தான்.. தற்போது மாநில சுயாட்சி கேட்பதும் அதற்காக தான் ஆக இலக்கில் மாற்றமில்லை, பாதையில் மட்டுமே மாற்றம்

அடுத்ததாக இந்தி திணிப்பு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலகட்டம், ஜனவரி 26ல் தொடங்கிய போராட்டம் பிப்ரவரி 6 வாக்கில் உச்சபட்ச கொதிநிலையை அடைகிறது.. இது மாணவர் நலனுக்கு நல்லதில்லை என்பதை உணர்ந்தவராய், பிப்ரவரி 6 மாலை மாணவர் தலைவர்களை அழைத்து பேசுகிறார், போராட்டத்தை தீவிர படுத்த சொல்லுவார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், நிலைமை கையை மீறி போவதால் இப்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று சொல்கிறார்.. (இப்படி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று எச்சரிக்கையாய் முடிவுகளை எடுப்பார்) ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை, எந்த தலைவனும் அந்த இடத்தில் கோவப்பட்டிருப்பர் ஆனால் அண்ணா மறுநாள் காலை மாணவர்களோடு களம் புகுந்தார்.. அது தான் அவர் ஜனநாயகத்தின் மீது வைத்த அளப்பறிய நம்பிக்கை, மதிப்பு எல்லாம்

ஒருபக்கம் இப்படி என்றால், தனக்கு தன் கட்சிக்கு என்றால் முடிவுகள் வேறு வகையில் இருக்கும்.. புத்தகத்தை தடையை மீறி வெளியிட்ட வழக்கில் அபராதம் போட்டால் கட்ட மாட்டேன் என்று பேசி சிறைக்கு போவது, பிரிவிணை கோருவது, பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானாலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என்று அவர் கட்சிக்காகவும் தனக்காவும் எடுத்த முடிவுகள் அத்தனையும் நெருப்பு... ஒற்றை வரியில் சொன்னால், "கட்சிக்கு அவர் எடுத்த பாதை சிங்கப்பாதை, மக்களுக்கு அவர் காட்டிய பாதை பூப்பாதை".
.
8.அண்ணாவிடம் இளைஞர்கள் கற்க வேண்டியது..?

அரசியலை.. ஒரு கிளர்ச்சியை அரசியல் மயப்படுத்துவதில் தான் அந்த கிளர்ச்சியின் வெற்றி உள்ளது, சல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி தேர்தல் காலத்தில் அது எப்படி எதிரொலிக்கிறது என்பதில் இருக்கிறது, அதாவது கிளர்ச்சியில் தொடங்கி தேர்தல் வரை அந்த கிளர்ச்சியின் தொடர்ச்சி எப்படி இருக்கிறது என்பதில் இருக்கிறது.. ஆனால் இங்கே நடந்த சல்லிக்கட்டு போராட்டம் அரசியல் அரங்கில் ஒப்புக்குக்கூட எதிரொலிக்காது என்பது என் எண்ணம், இந்த இடத்தில் தான் இந்தி எதிர்ப்பு போரை ஜனநாயக மயப்படுத்தி தேர்தல் புரட்சியை நடத்திகாட்டிய அண்ணாவின் அரசியலை இளைஞர்கள் படிக்க வேண்டும்

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் நாற்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், ஐம்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், 70களில் 80களில் தமிழகம் சாதித்ததை 2018ல் பட்ஜெட்டில் கனவுத்திட்டங்களாக இந்திய ஒன்றியம் அறிவிக்கிறது என்று நாம் அடையும் அத்தனை பெருமைக்கும் அடிப்படை அவரே, தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தின் வளர்ச்சிக்கு பின்னாலும் அந்த மனிதரின் பெருங்கனவும், பேரறிவும் இருப்பதை எவராலும் மறுத்துவிட இயலாது, அந்த பேராற்றல் அடங்கிப்போய் 48 ஆண்டுகள் ஓடிவிட்டது, அன்றைக்கு அவர் பேசியதன் அரிச்சுவடியை இந்தியாவின் பல குரல்கள் இன்று பேச தொடங்கியுள்ளது.. உண்மையான அண்ணாயிசம் இந்தியாவெங்கும் ஒலித்தே தீரும்

.
சூரியமூர்த்தி (மீள்) #ANNA #ArchitectOfFederalConcept #BaseOfMordernTN

https://www.facebook.com/100001791863699/posts/2454777017925336/

No comments:

Post a Comment