Thursday, February 5, 2015

கிளிமூக்கு அரக்கரே, ஆனா சில கேள்விக்கும் பதில் சொல்லணுமே

A Antony Xavier என்ற எனது ரசிகர், "அன்புள்ள அரக்கரே, நல்லது, ஆனா சில கேள்விக்கும் பதில் சொல்லணுமே" என்று ஆரம்பித்து கேட்டக்கேள்விகளுக்கு நான் அளித்த பதில். தொடர்வது அவரது கேள்விகளும் எனது பதில்களும்.
.
கிளிமூக்கு அரக்கன்
.
கேள்வி: கருணாநிதிக்கும் இந்த 2g க்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: இல்லை.
.
கேள்வி: அவருக்கும் அவரோட துணைவியாரோட பொண்ணுக்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: இருக்கிறது.
.
கேள்வி: அவருக்கும் கலாநிதி..தயாநிதி சன்டிவிக்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: கலைஞருக்கும் அவரது பேரன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கலைஞருக்கும் சன்டிவிக்கும் தொடர்பில்லை. கலாநிதிக்கும் அவரது தம்பி தயாநிதிக்கும் தொடர்பிருக்கிறது. சன்டிவிக்கும் தயாநிதிக்கும் தொடர்பில்லை. உங்கள் சொத்தில் உங்கள் தம்பிக்கு தொடர்பு உள்ளது என எவனாவது கிளப்பிவிட்டால் கடுப்பாகி, கொந்தளிப்பீர்கள் அல்லவா? அதே விதி கலாநிதி-தயாநிதிக்கும் பொருந்தும்.
.
கேள்வி: கலைஞருக்கும் கலைஞர் டிவிக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லயா?
பதில்: இல்லை. அதிமுகவில் அண்ணா பெயர் வருகிறது என்பதற்காக அண்ணாவுக்கும், அண்ணா திமுகவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்லமுடியுமா?
.
கேள்வி: திருவாரூர்லேருந்து மூளை மற்றும் மஞ்சப்பையோட வந்தப்ப இவ்வளவு சொத்து சேர்ப்போம்னு அவருக்கு தெரியுமா தெரியாதா?
பதில்: அவருக்கு கண்டிப்பாக தெரியும். என் பழைய குருநாதரின் நண்பர் "ஸ்டாம்பு சித்தர் டான் அசோக்" அரக்கன் இப்போதுதான் சினிமாவில் வசனம் எழுதவே ஆரம்பித்திருக்கிறார். அதற்குள், அவர் எவ்வளவு சொத்து சேர்க்கப்போகிறார் என என்னிடம் உறுதியாக-தெளிவாக பட்டியலிடுகிறார். அப்படி இருக்கும் போது , திமுக ஆட்சிக்கு வருவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னமே பெரும் கதை / வசனகர்த்தா என்று பேரும் புகழும் பெற்ற மூளாதி- மூளைக்காரரான பேரரக்கன் கலைஞருக்கு சொத்து சேர்ப்பதில் மட்டுமல்ல, எங்கெங்கு சொத்து வாங்கப் போகிறோம், முதல்வர் ஆனபின் என்னென்ன நலப்பணிகளை நிறைவேற்றுவோம் என்பதும் கூட கிளம்பி வரும்போதே தெரிந்திருக்கும்.
.
கேள்வி: தமிழ்... தமிழர்... திராவிடர்... இந்த மூனெழுத்து மூலமா இன்னும் எவ்வளவு சொத்து சேக்க முடியும்னு யாருக்காச்சும் தெரியுமா?
பதில்: தெரியாது. ஆனால் சீமான், நெடுமாறன் போன்றவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். கேட்டுப்பாருங்கள். ஆனால் வெட்டியாக அதை ஆராய்ந்து கொண்டிருப்பதை விட கலைஞர் அரசு உருவாக்கியிருக்கும் தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொத்தை வாங்கிவிடுங்கள். உலகிலேயே அதிக கலைச்சொற்கள் உடைய மொழியாக தமிழை ஆக்கிய ஆராய்ச்சிக் களஞ்சியமான அது, கலைஞர் தமிழுக்குச் சேர்த்த பெருஞ்சொத்து.

கேள்வி: இந்த இலங்கைகாரங்க தலைவர இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்கன்றது அவருக்கு தெரியுமா?
பதில்: ஜெயவர்தனே, ராஜபக்சே போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. சென்ற வருடம் கூட கலைஞரின் உருவபொம்மையை கொலும்புவில் எரித்தார்கள். ஈழத்தந்தை செல்வா, தமிழ்ச்செல்வன், ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரன் போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். கலைஞர் பல சூழல்களில் ஈழ அணியின் தமிழ்நாட்டு கேப்டனாகவும் களத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு இந்திய அணியை எதிர்த்தும், அதன் அமைதிப்படையை எதிர்த்தும் விளையாடியிருக்கிறார். அதனால் முதல்வர் பதவியையும் இழந்திருக்கிறார். ஆனால் 1991 தேர்தலில் தமிழக மக்கள் இலங்கைக்காரர்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்! ஆக, கலைஞரை இலங்கைக்காரர்கள் ஆட்டத்தில் சேர்க்கிறார்களா, இல்லையா என்பது கேள்வியே அல்ல. நீங்கள் யாரை இலங்கைக்காரர்களாக பார்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி!
.
கேள்வி: இன்னும் ஒரு 10 தலைமுறைக்காவது கருணாநிதின்னு பேர்கூட அவங்க வைக்க கூசுவாங்கன்னு தெரியுமா?
பதில்: சென்ற மாதம் ஈழத்தமிழர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு கலைஞர் கருணாநிதி என பெயர் சூட்டியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது முதல் குழந்தையின் பெயர் பிரபாகரன். என்னது? நான் பொய் சொல்கிறேனா? உங்கள் கேள்வியை நீங்கள் உண்மை என நிரூபியுங்கள். நான் என் பதிலை உண்மை என நிரூபிக்கிறேன்.
.
கேள்வி: ஜெயலலிதாவகூட நம்பலாம் ஆனா கருணாவ நம்பவே கூடாதுன்னு நம்பிக்கிட்டு இருக்கறவங்களப்பத்தி தெரியுமா?
பதில்: தெரியும். தன்னுடனே இருந்து தனக்கே இறுதியில் திரோகம் இழைத்த 'கருணா'வை நம்பக்கூடாது என பிராபகரன் கூட கடைசியில் தான் உணர்ந்தார். ஆனால் அவர் கூட புலிகளுக்கு தீவிரவாதிப் பட்டம் வாங்கிக் கொடுத்த ஜெயலலிதாவை நம்பியதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லையே! ஒருவேளை நீங்கள் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களை சொல்கிறீர்களோ?
.
கேள்வி: நம்மளையும் இந்த திமுக கொடிய தூக்கிப் புடிச்சிருக்கிறதாலேயே நாலு பேரு மனுசனா மதிப்பான்..........அப்படின்னு நெனச்சிக்கிட்டு இருக்குற என்னயப்போல இருக்குற நாலு பேத்தயும் பத்தி தெரியுமா?
பதில்: நன்றாகவே தெரியும். திமுக கொடி மட்டுமல்ல. திராவிடர் கழக கொடி, மதிமுக கொடி, பெதிக கொடி, த.பெ.வி.க கொடி, அவ்வளவு ஏன், அதிமுக கொடி என கருப்பு சிவப்பு கொடி எதை தூக்கிப் பிடித்தாலும் மனுசனாக மதிக்கப்படுவீர்கள். அதைவிட பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், வி.பி.சிங்கும் போராடிப் பெற்றுக்கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி படித்தால் மனுசனாக மதிக்கப்பட மட்டுமல்ல போற்றவே படுவீர்கள்.
.
--------------------------------------------------------------------------------------------------------------
.
நாம் தமிழர் என்ற வீரத்தமிழர் முன்னனி புனைவுப் பெயர்களுக்கெல்லாம் முன்னோடியான ஆர் எஸ் எஸ் ஸ்லீப்பர் செல் கணக்கில் ஒருவர் அத்வானி புகைப்படத்துடன் விஜய் யாதவ் என்ற பெயரில் (அனேகமாக மாம்பலம் டைம்ஸ் படிக்கும் கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடும் என்று நினைக்கின்றேன்) பேரரக்கன் கலைஞரைத் தாக்கி பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டிருந்தார். சக அரக்கர்களின் கேள்விகளைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் ஆனால் தேவாதிதேவ இந்திரர்களுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்தானே. இல்லை எனில் சாபமிட்டுவிடுவார்கள். விஜய்யின் ஆபாசக் குறிப்புகளை மட்டும் நீக்கிவிட்டு அவர் கேட்டிருந்த கேள்வி கீழே.
.
கேள்வி :
"ஜெயிலில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தாலும் வெளியே வந்ததும் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கொஞ்சமும் கூச்சமுமில்லாமல் குனிந்து வீராணம் வழக்கு வராமல் பார்த்துக்கொண்ட ராஜ தந்திரம் உங்களுக்கு உண்டா? இருந்திருந்தால் தன் ஆதரவில் இருந்த வாஜ்பாய் அரசின் போதே வழக்கை ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியாதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று நீதியரசர் சர்காரியார் சொல்லிவிட்டாரே அந்த பெரியவர் வாக்கு பொய்த்து போய் விட கூடாதே என்பதற்காக விஞ்ஞானத்திலேயே ஊழல் செய்து 1.76 லட்சம் கோடி சம்பாதித்து காட்டிய சாமர்த்தியம் யாருக்காவது வருமா?"

என்னுடைய பதில்:
எமர்ஜென்சியில் கலைஞர் கைது செய்யப்படவில்லை என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து வைத்திருக்காமல் நீங்கள் கேள்வி கேட்பதனால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான முகாந்திரத்தின் மேல் ஐயப்பாடு எழாமல் இல்லை. எமர்ஜென்சிக்குப்பின்னர் இந்தியா முழுவதும் கடும் தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்த இந்திரா நாடி வந்து ஆதரவைக் கேட்டது கலைஞரிடம்.
.
இந்திரா காந்தியால் , கலைஞர் மேல் குற்றஞ்சாட்டப்பட்டவை எல்லாம் உண்மை எனில், இடைக்காலத்தில் மொராஜி , சரன்சிங் அரசாங்கத்தில் இருந்த எம்ஜிஆர் மேலும் கிடுக்கிப்பிடி போட்டு நிருபித்திருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக எம்ஜிஆரே ,கலைஞர் ஊழல் செய்தார் என்பதற்கு தன்னிடம் ஆதாரமில்லை என்று சாட்சியளித்தார். ஆக கலைஞருக்கு என்றுமே தான் செய்த தவறுகளுக்காக இந்திரா தேவையாக இருந்ததில்லை. இந்திராவிற்குத்தான் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள கலைஞர் தேவைப்பட்டார்.
.
ஆர் எஸ் எஸ் சின் மறைமுக அரசாக மாறிப்போக இருந்த ஜனதா அரசிற்கு மாற்றாக இந்திராவே இருந்தார் என்பதால் அரசியல் மாண்பின்படி, கலைஞர் , இந்திரா காந்தி தனது கட்சியுடன் கூட்டுச் சேர சம்மதித்தார். கலைஞர் எம்ஜிஆரை அத்தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார். இந்தச் செய்திகள் எல்லாம் தெரிய வேண்டுமெனில், சவுக்கு, விஜயபாரதம் , தினமலர் மட்டும் படிக்கக் கூடாது விஜய் அவர்களே. வரலாற்றுப்புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் வாசிக்க வேண்டும்.
.
அடுத்தது, கலைஞர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்தார் என்பது. உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றேன். நீங்கள் கலைஞரைத் திட்டினாலும் நல்லவர் என்பதை யாம் அறிவோம். இது எடுத்துக்காட்டு மட்டுமே. திடிரென உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு.
.
நீங்கள் ஒரு பெண்ணை அல்லது ஓர் ஆணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டீர்கள் என்று உங்கள் எதிரிகள் உங்களின் மேல் அபாண்டமாக பழி போடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லவர் தூயவர் என்பதால் நீதிமன்றம் போகின்றீர்கள். உங்களைக் கடும் பிராயத்தனம் பட்டும் நிருபிக்கின்றீர்கள். இருந்த பொழுதும், உங்களின் எதிரிகள். உங்களின் மேல் பழி போட ஏதுமில்லாத பொழுது, நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் , அதனால்தான் சாட்சிகள் , தடயங்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் கெட்டவர் என்பதாகிவிடுமா. அல்லது ஊரில் நடக்கும் 1.7 லட்சம் கோடி பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் நீங்கள் தான் காரணம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
.
பொதுவாக வேதவிற்பன்னர்களின் மனு நீதி கமிஷன்கள், குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றால் வேதகால விஞ்ஞானப்படி ஊழல் செய்தார்கள் என்பார்கள். நெருப்பில் தள்ளிவிட்டுவிட்டு ஜோதியில் ஐக்கியம் என்பார்கள். நீங்கள் உண்மையிலேயே யாதவாக இருந்தால் முலாயம் யாதவ், லாலு யாதவ் போல சமூகநீதிக்காக கலைஞருடன் இணையுங்கள். ஸ்லீப்பர் செல் என்றால், தொடர்ந்து எனக்கு தூண்டில் புழுவாக இருங்கள். உங்களை வைத்து நான் பதில் சொல்லி பெருங்கூட்டத்தை எனக்காக்கிக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment