Saturday, January 12, 2019

மன்னிப்பு

மன்னிப்பு

---

(தண்டிக்கும்) சத்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியமானவர்.
-முஹம்மத் நபி(ஸல்)

---

இறைநம்பிக்கை கொண்டவர்களே, கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும்.

கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும்.

இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு.

(அல்குர்ஆன் : 2:178)

---

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.

ஆனால் அதற்கான இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். கொல்லப்பட்ட வனுக்குப் பல வாரிசுகள் இருந்து, ஒரே ஒருவர் மன்னித்தால் கூட கொலை யாளிக்கு மரண தண்டனை கிடையாது. இதனால் தான் "ஏதேனும் மன்னிக் கப்பட்டால்" என்று இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதைச் சட்டமாகக் கொண்டுள்ள பல நாடுகளில் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் அதிபருக்கு வழங்கியிருப்பதைக் காண்கிறோம்.

ஒருவன் கொல்லப்பட்டால் அதனால் அவனது வாரிசுகள் தான் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் கஷ்டங்களும், வேதனையும், வலியும் அவர்களுக்குத் தான் தெரியும். எனவே இந்த மன்னிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவனிடம் தான் இருக்க வேண்டும்.

ஒருவன் கொல்லப்பட்டதால் எந்தப் பாதிப்பும் அடையாத, நாட்டின் அதிபர்களிடம் இந்த அதிகாரத்தை அளிப்பது மாபெரும் அநீதியாகும். தனது தந்தையைக் கொன்றவனுக்கு மரண தண்டனைதான் அளிக்க வேண்டும் என்று அவனது மகன் நினைக்கும் போது, அதற்கு எதிராக, நாட்டின் அதிபர் கருணை காட்டுவது மிகப் பெரும் அக்கிரமமாகும். இந்த அறிவுப்பூர்வமான, நியாயமான சட்டம் தான் இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.

---

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது

கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...

அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...

"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...

உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.

அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்...

அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...

தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...

இரண்டு நாட்கள் ஓடியது.

மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது.

எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...

நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...

தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...

தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....

உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார்.

அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...

அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்..

உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்...

பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...

குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்...

"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...

No comments:

Post a Comment