Saturday, January 21, 2017

முதன்மை எதிரி யார் என்பதை முடிவு செய்வதில் அடிப்படை நேர்மையை காட்டாதவரை

ஒவ்வொரு முறை புதிதாக கலைஞரை, திமுகவை யாரும் விமர்சிக்கும் போது

அவருடைய எதிரிகள் மட்டுமின்றி ,பொதுமக்கள், ஊடகங்கள், ஏன் திமுகவினர் கூட ,

அடடா , புதிதாக எதோ அறிவுஜீவி , சிந்தனைச் சுடர் வந்திருக்கிறாரே,
எதோ புதியதாக சொல்லப் போகிறார் என்று எண்ணி கூர்ந்து நோக்குவதுண்டு.

-
அப்புறம் சில காலம் சென்றதும்
அவர்களிடம் கலைஞர், திமுக எதிர்ப்பை தவிர வேறு எந்த புள்ளியும் சிந்தனையும் இல்லாததை காணும் போது,
நீங்கள் சொல்லற விமர்சனங்களை எல்லாம் தாண்டித்தான் கலைஞரை,திமுகவை நாங்கள் மதித்திருக்கிறோம் ,

உங்கள் சரக்கு எதுவும் இருந்தால் சொல்லுங்கள் இல்லையெனில் ஓரமாக நில்லுங்கள் ,
வரிசை ரெம்ப பெரியது. என்று
ஓரம் கட்டிவிடுகின்றனர். மக்கள்.

இப்படி ஓரமாக இருந்து எப்போதும் கூவிக்கொண்டே இருக்கிறது ஒரு கூட்டம் ,

கேட்பார் தான் யாரும் இல்லை.

Shanthi Narayanan M
21 Oct 2016
-------
தோழர் கார்த்திக் ராமசாமியின் பதிவு...

தமிழகத்தில் மாற்று அரசியலை முன்னெடுக்கும் அரசியல் செயல்பாட்டாளர்கள் இதுவரை வெற்றி பெற முடியாததன் காரணமாக நான் நினைப்பது, உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு ஓரளவிற்கு தங்கள் கொள்கைகளுடன் ஒத்துவரும் தோழமை சக்திகளை முதன்மை எதிரிகளாக முன்னிருத்த முனைவதுதான்.

இந்த மாபெரும் மக்கள் எழுச்சி சாத்தியமானதற்கு காரணம் ஒற்றை எதிரியை நோக்கி கவனத்தை குவித்ததுதான்.

உங்களது எதிரி யார் நண்பன் யார் என்பதில் சரியான தெளிவு இல்லாததுதான் காரணம்.

இத்தனை வருடம் தொடர்ந்து தமிழக மக்கள் தேசிய கட்சிகளை நிராகரித்து திமுகவையும் அதிமுகவையும் தேரந்தெடுத்தற்கு காரணம், தமது முதன்மை எதிரி யார் என்பதில் நம் மக்களுக்கு தெளிவு இருந்தது.

தமிழ் தேசியத்திற்கு முதன்மை எதிரி ஆணவம் பிடித்த தமிழர் நலனை நசுக்கும் வட இந்திய அரசியல்வாதிகள்.

அவர்களை விட்டுவிட்டு நம்முடன் 400, 500 வருடங்களாக அண்ணன் தம்பி போல வாழும் மக்களை வந்தேறி என்று நமக்குள்ளேயே வெறுப்பினை விதைக்கும் செயலை செய்ததில் எந்த அடிப்படை ஞாயமும் இல்லை.

நமது உண்மையான எதிரி நமக்கு அருகில் இருக்கும் கன்னட, ஆந்திர, கேரள மக்களும் அரசியல் தலைவர்களும் அல்ல. நம் மீது ஒற்றைக் கலாச்சார,மொழி, பண்பாட்டை திணிக்க முயலும் வட இந்திய கும்பல்.

ஒருவேளை சீமான் மட்டும் அவரது ஆரம்பகால நண்பர்களான திராவிட இயக்க தோழர்களுடன் உண்மையான தமிழர் நலனை முன்னிருத்திய தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்திருந்தால் இன்றைய நிலையில் மிகப்பெரிய தலைவராக மதிக்கப்பட்டிருந்திருப்பார்.

மக்கள் எந்த தலைவரையும் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அதே சமயம் கவனிக்காமல் இருப்பதும் இல்லை. நீங்கள் உண்மையானவராக இருந்தால் சூழ்நிலை அமையும்போது உங்களை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.

நான் கவனித்த வரை மாற்று அரசியலில் இன்று வரை சரியான தலைவர் யாரும் இல்லை.

எனது கல்வி, வேலை, வாழ்க்கை தரம் போன்றவற்றில் இன்றைய நிலைமைக்கு காரணம் தந்தை பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா
போன்ற தலைவர்களின் பங்கு முக்கியமானது என்பதை உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக திராவிட கொள்கைகள் மீது அசைக்க முடியாத மரியாதை உள்ளது.

மாற்று அரசியலை முன்னெடுக்கும் பலரிடம் கலைஞர் மீதான தீராத வன்மம் இருப்பதை பார்க்கிறேன்.

கலைஞரின் மீதான நிறை குறைகள் வெளிப்படையானவை. கடந்த 50 வருடங்களாக வட இந்திய ஆதிக்கத்தை தமிழகத்தில் தடுத்து நிறுத்தியதில் அவருக்கு மிக முக்கியமான பங்குண்டு.

ஏன் ஜெயலலிதா அவர்களும் அப்படியே ஆனால் அவர் மீது இங்குள்ளவர்களும் சரி வட இந்தியர்களும் சரி வன்மத்தை காட்டியது இல்லை.

இருக்கிற உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு இவர்கள் கலைஞரின் மீதும் திராவிடக் கொள்கைகள் மீதும் இவ்வளவு வன்மத்தை காட்டும் பொழுது மாற்று அரசியல்வாதிகளின் அடிப்படை நோக்கத்தின் மீதே சந்தேகம் வருகிறது.

அடுத்து நமது தலித் அரசியலை முன்னெடுக்கும் நண்பர்கள், அவர்களுயை முதல் டார்கெட்டும் கலைஞர்தான். அதிலும் சிலர் தந்தை பெரியாரை முதன்மை எதிரியாக சித்தரிக்கும் அளவிற்கு செல்கின்றனர்.

எதிரிகளை விட்டுவிட்டு நண்பர்களை எதிரிகளாக்கும் வேலையை தொடர்ந்து செய்கின்றனர்.

முதன்மை எதிரி யார் என்பதை முடிவு செய்வதில் அடிப்படை நேர்மையை காட்டாதவரை இங்கு எந்த மாற்று அரசியலும் வெற்றி பெறப் போவதில்லை.

karthik Ramasamy

No comments:

Post a Comment