Sunday, August 11, 2019

மிஸ்டர் கன்னயா, இது ஒரே நாடு; இங்கு எல்லாமே ஒன்றுதான் என்கிற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை?

*மாணவி:*

மிஸ்டர் கன்னயா, இது ஒரே நாடு; இங்கு எல்லாமே ஒன்றுதான் என்கிற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை? நமக்கு ஒரே அப்பா, ஒரே அம்மாதானே. பாரத் மாதா கி ஜே சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம்? ஜெய் ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம்?

*கன்னயா குமார்:*

ஒரே நாடு, ஒரே இனம் என்று என்னென்னவோ சொல்லி, அதை நான் ஏன் ஆதரிக்கவில்லை என கேட்கிறீர்கள்.

எல்லாமே நீங்கள் சொல்வதுபோல் ஒரே நம்பரில் முடிந்து விடுவது இல்லை. நான் இங்கே ஒரே ஆளாக நிற்கிறேன். ஆனால், இது எப்படி சாத்தியமானது? என் அப்பா, அம்மா என்கிற இரண்டு நபர்களின் இணைவால் நிகழ்ந்தது.

இந்தியா ஒரே தேசம், ஒரே நாடுதானே என்று கேட்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியா ஒரே நாடுதான். இந்த நாட்டை வழிப்படுத்தும் அரசியல் சாசனமும் ஒன்றுதான். மறுக்கவில்லை.

ஆனால், அந்த அரசமைப்பு சட்டத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட விதிகள் இருக்கின்றன.

நாட்டை நிர்வகிக்கும் நாடாளுமன்றம் ஒன்றுதான். ஆனால், அதில் லோக் சபா, ராஜ்ய சபா என்று இரண்டு அமைப்புகள் இருக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு இந்த நாட்டு மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஒரே ஒரு நபர் அல்ல; 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சபைக்கு செல்கிறார்கள்.

ஒன்று ஒன்று என நீங்கள் சொல்வதை நமது ஒன்னெஸ் - ஒருமைப்பாடு என்றுதான் பார்க்கிறேன். அது உண்மையில் நமது பன்மைத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. யூனிட்டி இன் டைவர்சிடி என்று அதைத்தான் சொல்கிறோம்.

ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்கிறீர்கள். ராமர் தனி ஆளா? சீதையுடந்தானே இருக்கிறார்? ஜெய் சீதா ராம் என்று சொல்லுமாறு கேட்க ஏன் தோன்றவில்லை, உங்களுக்கு?

ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், தப்பில்லை. அதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்ன சொல்ல விருப்பமோ, அதை சொல்லுங்கள். அதற்கான சுதந்திரத்தை நமக்கு நம்முடைய அரசமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது.

அதனால் நான் உங்களை வேண்டி கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஜெய் அரசமைப்பு சட்டம் என்றும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனென்றால், உங்களுக்கு கோஷமிடும் சுதந்திரம் கொடுத்தது அதுதான்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நான் மிதிலையில் பிறந்தவன். நீங்கள் மிதிலைக்கு வந்தால், சில ஆச்சரியமான விஷயங்களை பார்ப்பீர்கள்.

எங்கள் ஊரில் ஆக்ரஹண் மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) அயோத்தியில் இருந்து மணமகன் ஊர்வலம் வரும். மணமகன்களாக இளைஞர்கள் வருவார்கள். அவர்கள்  ராம-லட்சுமணர்களாக உடை அணிந்திருப்பார்கள். ராம்-ஜானகி கோயிலில் ராமன்-சீதை திருமணம் நடைபெறும்.

இதில் சுவையான விஷயம் என்னவென்றால், மிதிலா மக்கள் ராமனை திட்டுவார்கள். ராமனுக்கு மாமனார் வீடுதானே மிதிலை. அந்த உரிமையில்  அவர்கள் ராமனை கேலி செய்வார்கள். அது காலம் காலமாக இருந்து வரும் நமது பண்பாடு.

அதாவது, எந்த ராமனை நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்களோ, அதே ராமனை வரவேற்கும் விதமாக மக்கள் கேலி செய்கிற அல்லது திட்டுகிற ஒரு விஷயத்தை எங்கள் ஊரில் நீங்கள் பார்ப்பீர்கள். இது எங்கள் பாரம்பரியம்;  எங்கள் பண்பாட்டின் ஓர் அங்கம். இதை நீங்கள் குற்றம் சொல்ல முடியுமா?

நாங்கள் எந்த பண்பாட்டின் கீழ் வளர்ந்தோமோ அங்கே எந்த கடவுளையும் எங்களால் தனியாக பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரியான ஒருமையில் எங்களால் கடவுளைக்கூட பார்க்க முடியாது.

ஏன் என்றால், நாங்கள் பின்பற்றும் பண்பாட்டில், ராமருடன் எப்போதும் சீதையும் இருப்பார், அதேபோல் கிருஷ்ணனுடன் ராதையும் சேர்த்தே நினைக்கப்படுவார். இதுதான் எங்கள் பாரம்பரியம்.

நீங்கள் யூத் என்கிறீர்கள். பிஎச்டி செய்வீர்கள் என்று நம்புகிறேன். செய்தால்,  உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ராமாயணம் குறித்தே ஆராய்ச்சி செய்யுங்கள். ஏனென்றால், ராமாயணம்கூட நீங்கள் நினைப்பது போல ஒரே ராமாயணம் அல்ல. இந்தியாவில் 300க்கு மேற்பட்ட ராமாயணங்கள் உண்டு.

இமாச்சல பிரதேசம் சென்றபோது, அங்கே திரிலோகநாதர் கோயிலுக்கு போனேன். அங்கே புத்தர் சிலை இருக்கிறது. அந்த சிலைக்கு மேலே சிவபெருமான் முகம் இருக்கிறது. முதலில் இந்து பூசாரிகள் வந்து பூஜை செய்து விட்டு போவார்கள். பிறகு புத்த பிக்குகள் வந்து வழிபாடு செய்வார்கள்.

இது நீங்கள் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு.

அந்த கோயில் அமைந்திருக்கிற மாவட்டத்தில் லாஹோலி மொழி பேசப்படுகிறது. அதில் உள்ள ராமாயணத்தில் என்ன கதை தெரியுமா? ராவணன் சீதையை கடத்தி செல்லவில்லை. மாறாக, சீதையின் தந்தைதான் ராவணன். சீதையை ராமன் காதலித்து மணம் புரிகிறான். அதனால் கோபமான ராவணன் ராமனுக்கு எதிராக  போர் தொடுக்கிறான்.

இப்படியாக, நீங்கள் ஒன்றுதான் என நினைக்கும் பல விஷயங்கள் இங்கே பல வடிவங்களை தாங்கி நிற்கின்றன. உண்மையில் அதுதான் நமது பெருமை.

இந்த நாட்டை குறுக்கும் நெடுக்குமாக சுற்றிப் பாருங்கள். நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு இந்த நாடு எவ்வளவு பெருமைகளைக் கொண்டது என்பதை காண்பீர்கள். இந்த நாட்டின் முன்னால் உங்களை நீங்கள் சிறு துரும்பாக உணரும் தருணங்களை அடிக்கடி சந்திக்க நேரும். 

உங்கள் மூளையில் யார் எதற்காக இது போன்ற விஷயங்களை திணித்தார்களோ எனக்கு தெரியாது. ஆனால், உஙகளுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் பிறந்த எவருக்கும் இதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் இருக்க முடியாது.

அது என்னவென்றால், நீங்கள் இமாச்சலம் சென்றால் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதுபோல உணர முடியும். நீங்கள் மங்களூர் அல்லது கோவா கடற்கரையில் படுத்திருந்தால், மியாமி கடற்கரையில் இருப்பது போல உணர முடியும். இந்த நாட்டின் பரந்த மைதானங்களில் நடக்கும்போது அமெரிக்காவின் கிரீன் மைதானத்தில் நடப்பது போல உணரலாம். நீங்கள் தெற்கின் பீடபூமிகளுக்கு சுற்றப் போவீர்கள் என்றால் – குறிப்பாக சோட்டா நாக்புர் பகுதிக்குச் சென்றால் ஏராளமான கனிமவளங்களை காண்பீர்கள். அப்படி உலக வேறுபாடுகள்  முழுவதையும் தனக்குள் அடக்கியிருக்கும் தேசம் நம்முடையது.

மறுபடியும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த நாடு உங்களுடையது. உங்கள் தாய் எப்படி உங்களுக்கு சொந்தமோ அப்படி இந்த நாடும் சொந்தம்.  உங்கள் தாய் மீது நீங்கள் பாசம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது மிகவும் இயல்பான விஷயம். உங்கள் தனிப்பட்ட விஷயம்.

நீங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில் ஏதோ ஒரு கொடியுடன் ஏதோ ஒரு  கோஷம் எழுப்பிக் கொண்டு ஒரு கூட்டம் வருகிறது என வைத்துக் கொள்வோம்.  அது இன்குலாப் ஜிந்தாபாத் ஆக இருக்கட்டும், அல்லது ஜெய் ஸ்ரீராம் ஆக இருக்கட்டும்.

கோஷம் போட்டுக்கொண்டு கொடியை ஆட்டிக்கொண்டு உங்களை மறித்து, “நீ உன் அம்மாவை நேசிக்கிறாய் என்றால், அதை நிரூபித்துக் காட்டு” என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அப்படித்தான் நம் எல்லோருக்கும். இது நமது நாடு. இதை நாம் நேசிக்கிறோம். நேசம் என்பது கண்காட்சியில் வைத்து விளம்பரப்படுத்தும் விஷயம் அல்ல. நெஞ்சுக்குள் வைத்து பெருமையுடன் சுமப்பது.

அப்படித்தான் நாங்கள் நமது நாட்டை நேசிக்கிறோம், அந்த நேசத்தை எங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு உலவுகிறோம்.

நன்றி: Shahjahan R

No comments:

Post a Comment