Thursday, August 10, 2017

பேலியோவில் ஏன் தேன் பரிந்துரைக்கப் படுவதில்லை?

Dr.ஃபரூக் அப்துல்லா
Via Facebook
2017-08-10

பேலியோவில் ஏன் தேன் பரிந்துரைக்கப் படுவதில்லை?

இந்த கேள்வி தற்போது ஹாட் டாபிக்காக சுற்றி வருகிறது

மேலும் இஸ்லாமிய சமுதாய மக்களிடையே இது குறித்த அதிருப்தி இருப்பதும் புரிகிறது

குரான் தேனை மருந்தென்று கூறுகிறது
நபிகள் நாயகம் அவர்களும் தேனை ஸ்லாகித்து கூறியுள்ளனரே
பிறகு ஏன் பேலியோ அதற்கு முரணாக இருக்கிறது??

இதற்கான எனது விடை பின்வருமாறு

தேன் என்பது மருத்துவ குணம் கொண்டது என்பதில் ஐயமில்லை
தேனை மருந்தாக எடுப்பதில் நமக்கு பிரச்சனையில்லை

பிறகு ஏன் தேன் பேலியோவில் பரிந்துரைக்கப்படவில்லை

காரணம் 1

தற்போது பேலியோவிற்கு வரும் 99 சதவிகிதத்தினர் தங்களுக்கு இருக்கும் வியாதியை குணப்படுத்தவே வருகின்றனர்

உடல் பருமன், நீரிழிவு , ரத்த கொதிப்பு,
பி சி ஓ டி  போன்றவை அந்த வியாதிகள். 

இவர்களுக்கு இனிப்பு எந்த ரூபத்தில் சேர்த்தாலும் பிரச்சனை தான்.

தேனில் உள்ள ஃப்ரக்டோஸ் ரத்தத்தில் கலந்து ரத்த சர்க்கரை அளவு களை ஏற்றுகிறது

அதை கட்டுக்குள் கொண்டு வர இன்சுலின் சுரக்க என்று எடை குறைப்பிலோ நீரிழிவிலோ முன்னேற்றம் அடைய முடியாது

ஆகவே தேனை பொது பரிந்துரையாக கொடுக்கவில்லை

காரணம் 2

ஒரு பொருளை மருத்துவ ரீதியாக மருத்துவர் வேண்டாம் என்று கூறினால் அது வேறு சில நோய்களுக்கு மருந்தாய் இருப்பினும் நாம் அதை தவிர்ப்பது நல்லது.

உதாரணம்
யூரிக் ஆசிட் அதிகம் உள்ளவருக்கு கீரை மட்டன் மீன் எப்படி வேண்டாம் என்கிறோமோ அதே காரணத்தினால் தான் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், தேன், சர்க்கரை வேண்டாம் என்கிறோம். 

கீரை மட்டன் மீன் போன்றவை சத்து மிக்க உணவாய் இருப்பினும் ஒருவருக்கு யூரிக் அமில அளவுகள் கட்டுக்குள் வரும்வரை அவற்றை நிறுத்த சொல்வது போலத்தான் தேனை நிறுத்தச் சொல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணம் 3

தற்போது சந்தையில் கிடைக்கும் தேன்களில் பெரும்பான்மை high fructose corn syrup களாகும். இவற்றில் இருப்பது சர்க்கரை கரைசல் மட்டுமே. தேனை காலை வேலையில் அதிகமாக எடுத்து நீரிழிவு முற்றிய பலரை யாம் அறிவோம். 

சுத்தமான தேன் தானா என்பதை உறுதி செய்யவும்

யாரெல்லாம் தேன் எடுக்கலாம்??

குழந்தைகள் , உடல் பருமன் இல்லாத வளரும் பிள்ளைகள் , உடல் பருமன் இல்லாதவர்கள் (BMI  <25) , நீரிழிவு, ரத்த கொதிப்பு, ஃபேட்டி லிவர், பிசிஓடி போன்ற வியாதி இல்லாதவர்கள், ஆட்டோ இம்யூன் வியாதி இல்லாதவர்கள்  ( தற்போது பேலியோ கடைபிடிக்கும் அனைவருக்கும் இதில் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது)

இவர்கள் தாங்கள் உண்ணும் செயற்கை சர்க்கரைகளை நிறுத்தி விட்டு தூய தேனை சிறிது எடுப்பது நன்மை பயக்கும்

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு

ஆகையால் தேனாகவே இருப்பினும் அளவோடு எடுப்பது நல்லது.

யாரெல்லாம் தேன் எடுக்க கூடாது???

1. நீரிழிவு நோயர்கள்
2. ரத்த கொதிப்பு உள்ளவர்கள்
3. ஐந்து வருடங்களுக்கு மேல் BMI 30 க்கு மேல் இருந்தவர்கள்
4. உடல் பருமனானவர்கள்
5. PCOD உள்ளவர்கள்
6. ஃபேட்டி லிவர் உள்ளவர்கள்

இவர்கள் தங்களது பிரச்சனையை முழுமையாக சரிசெய்து விட்டு மருத்துவ பரிந்துரையின் பேரில் தேன் எடுக்கலாம்

ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு அப்பா தன் பிள்ளைக்கு கேட்பதெல்லாம் வாங்கி கொடுப்பார். ஆனால் பிள்ளை சொல்பேச்சு கேட்காமல் வரம்பு மீறினால் அவனை வழிக்கு கொண்டு வர சில நேரங்களில் கடுமையாக நடப்பார் இல்லையா அதைப் போலவே

தேன் இயற்கையானது, மருத்துவ குணம் கொண்டதாயினும்

நாம் மாவுச்சத்து விசயத்தில் வரம்பை மீறி விட்டபடியாலும்

அதன் விளைவாக பல நோய்களை ஏற்படுத்திக் கொண்டதாலும்

நமக்கு மருந்தாய் இருக்க வேண்டிய தேனைக்கூட உண்ண முடியாமல் போனதற்கு நாம் தான் காரணம்.

தேன் அல்ல

Dr.ஃபரூக் அப்துல்லா
நோய் தடுப்பு துறை மருத்துவர்
சிவகங்கை

No comments:

Post a Comment