Saturday, August 12, 2017

காமராஜரின் கல்வித் திட்டத்தில் பெரியாரின் பங்கு

*காமராசருக்கும், அப்போது கல்வி அதிகாரியாக இருந்த நெ. த. சுந்தரவடிவேலு அவர்களுக்கும் நடந்த உரையாடல்*

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவேலும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வரநேரிட்டது, சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

*காமராஜர்: *

நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும், அதுதான் முக்கியம், நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது

சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க! ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்.

*சுந்தரவடிவேலு: *

இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்.

*காமராஜர்: *

அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா?

*சுந்தரவடிவேலு: *

நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு,
"இவ்வளவுக்கும் காரணம் காமராசர் தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான், அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார்.

*காமராஜர்: *

அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது, அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே.

இது. 1952-ல் ஆரம்பிச்ச பிரச்சனையா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கறதாச்சே. தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்? பெரியார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுக்கிட்டு பண்ணிகிட்டிருக்கார்.

அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிருக்கும்? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நெனச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக்கிறோம்.

அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு! அவராலேதான் நமக் கெல்லாம் பெருமை!

No comments:

Post a Comment