Sunday, March 19, 2017

மரண தண்டனை விசயத்தில் முஸ்லிம்கள் அமைதி காப்பது சரியா

தமிழ்நாட்டில் ஏழு கோடி மக்கள் இருக்கிறோம். அத்தனை பேரும் திரண்டு போராடி மூன்று தமிழர் தூக்கு தண்டனையை
நிறுத்தவில்லை. சில லட்சம் பேர்தான்
போராடினோம். அதுவே ஒரு வெகு மக்கள்
இயக்கமாக மாறியது. அதன்மூலம், தூக்குக்
கயிற்றின் பிடியிலிருந்து மூன்று பேரும்
மீண்டுள்ளனர்.

அதன்படி பார்த்தால், இந்தியாவில் 25
கோடி முஸ்லிம்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அஜ்மல் கசாப், அப்சல் குரு, யாகூப் மேமன் ஆகிய மூன்று முஸ்லிம்கள் தூக்கிடப்பட்டு
கொல்லப்பட்டுள்ளனர். 25 கோடி முஸ்லிம்களில் 25 லட்சம் பேர்
திரண்டிருந்தால் கூட நாடு முழுவதும் ஒரு அதிர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், திரளவில்லை. வலியை நேரடியாக உணரும் முஸ்லிம்களே திரளாதபோது மற்றவர்கள் எப்படி திரள்வார்கள்?

மரண தண்டனை விசயத்தில்
முஸ்லிம்கள் அமைதி காப்பதற்கு காரணம்
அவர்களின் அரசியலற்ற தன்மையாகும்.
வெறுமனே மதக் கண்ணோட்டத்துடன்
மட்டுமே பிரச்சனையை அணுகுவதுமாகும்.
'இஸ்லாம் மரண தண்டனையை
ஆதரிக்கிறது; எனவே அத்தண்டனையை
எதிர்ப்பது இஸ்லாத்தையே எதிர்ப்பது
போலாகும்' என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
இதுதான் சிக்கல்.

மரண தண்டனை வேண்டும் என
இஸ்லாம் சொல்வது இஸ்லாமிய
அரசமைப்பில் மட்டுமே. இந்தியா
போன்ற பன்மைச் சமூக அமைப்பில்
அல்ல. மேலும், தண்டனையை
பின்னுக்குத் தள்ளி, மன்னிப்பை முதன்மை
படுத்துகிறது இஸ்லாமிய தண்டனை முறை.
பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் குற்றவாளி
விடுதலையே ஆகி விடலாம். அத்துடன்
விசாரணை முறையும் நீதமாக இருக்க
வேண்டும். ஆனால், இந்திய மரண தண்டனை முறையில் இவை எதுவுமே இல்லை.  எல்லாமே நேர் எதிராக உள்ளது.

மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில்
இறந்தவர்களின் உறவினர்களே அஜ்மல்
கசாபை மன்னித்தாலும், இந்திய சட்டம்
மன்னிக்காது. விசாரணை அதிகாரியே
தம் தவறை ஒப்புக் கொண்டாலும்
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்காது.

ஒரே குற்றத்தில் பலர் சிக்கியிருந்தாலும்
வலிமை பெற்றவர்கள் மட்டும் தப்பித்துக்
கொள்ள முடியும். இத்தகைய அநீதியான
அரசமைப்பில் மரண தண்டனையை ஒரு
முஸ்லிம் ஆதரிப்பது மிகக் கேவலமான
செயலாகும். அது இஸ்லாத்துக்கும்
எதிரானதாகும்.

ஆனாலும், மத போதை தலைக்கேறிய
சில மூடர்கள் மரண தண்டனை வேண்டும்
என்று மார்க்கத்தின் பெயராலேயே அடம்
பிடிக்கின்றனர். இவர்களின் இந்த தவறான
வழிகாட்டுதல்தான் இந்திய முஸ்லிம்களை
குழப்பத்தில் ஆழ்த்தி, மரண தண்டனைக்கு
எதிராகத் திரளாமல் தடுக்கிறது.

இந்திய முஸ்லிம்களின் இத்தகைய
தவறானப் புரிதலும், குழப்பமும்,
அமைதியும் அவர்களுக்கு அவர்களே
வெட்டிக் கொள்ளும் சவக்குழியாகும்.
இந்துத்துவ பாசிசக் கும்பலும் அதைத்
தான் எதிர்பார்க்கிறது.

- Aloor Sha Navas

No comments:

Post a Comment