Friday, March 31, 2017

காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில் நான் பேசியதன் சுருக்கம

Marx Anthonisamy
Via Facebook
2017-03-31

இன்று மாணிக் சர்க்கார் முதலானோருக்கு காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில் நான் பேசியதன் சுருக்கம்:
**********************************************************************************
1.காயிதே மில்லத் அவர்களின் சிறப்புகளைச் சொல்லும்போது தாவூத் மியாகான் அவர்கள், அவர் அரசியல் சட்ட அவையில் பங்கேற்றது, முஸ்லிம் தனிநபர் சட்டம் இயற்றியதில் அவர் பங்கு முதலானவற்றைச் சுட்டிக் காட்டினார். என்னைப் பொருத்த மட்டில் அதை எல்லாம் காட்டிலும் காயிதே மில்லத் அவர்களின் சிறப்பு என்பது பிரிவினைக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு, சின்னா பின்னப் பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு யாருமே தலைமை கொடுக்கத் தயாரில்லாத நிலையில் அந்தத் தலைமையைத் தந்தவர் என்பதுதான் அவரது சிறப்பு. முஸ்லிம்கள் விஷயத்தில் மிகவும் நிதானமாகவும் நீதியாகவும் நடந்து கொண்ட மகாத்மா காந்தி உட்பட முஸ்லிம் லீக்கைக் கலைத்துவிடுமாறு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக்' எனும் பெயரில் முஸ்லிம் லீக்கை அமைத்தவர் காய்தே மில்லத் அவர்கள். அமைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. முஸ்லிம்கலின் எண்ணிக்கை வடநாட்டிலேயே அதிகம் என்ற போதிலும் சென்னையில்தான் அப்போது அதைக் கூட்ட முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களில் மூவர் தமிழர்கள். இன்றுவரை முஸ்லிம் இயக்கங்கள் தென்னாட்டில்தான் வலுவாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

2.அரசியல் நேர்மைக்கான இந்த விருது அளிப்பு தொடங்கப்பட்ட இந்த மூன்று ஆண்டுகளிலும் மூன்று முக்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் நேர்மையாளர்கள் இன்றளவும் கம்யூ கட்சிகளில்தான் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று. கம்யூனிஸ்டுகளும், பெரியாரியர்களும் இஸ்லாத்தையும், சிறுபான்மை மக்களையும் எப்போதும் அனுசரித்து வந்துள்ளனர். முதல் கம்யூ தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராய் ருஷ்யா சென்று லெனினை எல்லாம் சந்தித்து வந்தவர். அவர்தான் முஸ்லிம் மதத்தின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு அருமையான குறுநூலையும் எழுதியவர். தமிழிலும் பல பதிப்புகள் கண்ட நூல் அது. அமீர் ஹைதர் கான் உள்ளிட்ட பல முஸ்லிம்கள் கம்யூ கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதே போல பெரியாரும் முஸ்லிம் மதத்தையும், சமூகத்தையும் மிக நெருக்கமாக அணுகி வந்ததை நாம் அறிவோம்.

3. இன்று விருது வழங்கப்பட்ட திரு முகமது இஸ்மாயில் அவர்கள் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். முதன் முதலில் மைனாரிடி கமிஷன் அமைக்கப்பட்டது ஜனதா தள ஆட்சியில்தான். அடுத்து அதிகாரத்துக்கு வந்த இந்திரா காந்தி வேறு வழியின்றி கோபால்சிங் கமிஷனை அமைத்தாலும் அதன் அறிக்கையை வெளியிடவே இல்லை. வி.பி.சிங் ஆட்சியில்தான் அது வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதற்காகவே ஆட்சியை இழந்த கட்சி ஜனதா கட்சி. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், ச.ம.உ வாகவும் இருந்தவர் இன்று விருது பெறும் முகம்மது இஸ்மாயில் அவர்கள்.

4.மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு வருவதற்கு முன் டிவியைத் திறந்தபோது நேற்று டில்லியில் 300 கறிக்கடைகள் தாக்கி அழிக்கப்பட்ட செய்திதான் முதலில் வந்தது. மதத்தை விமர்சித்துப் பேசியதால் ஒரு பெண் கவிஞருக்கு கூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல் வந்துள்ளது இரண்டாவது செய்தி. மதவெறி பிடித்த சாமியார்கள் இன்று அரியணைகளில். விரைவில் ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ் 'ஷாகா'க்கள் நடத்தப்படும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள் எல்லோரும் ஒன்றாக, இன்னும் நெருக்கமாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

5. இங்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் மே.வங்கத்தில் ஆட்சி செய்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. இன்று அது அங்கே படு தோல்வியுற்றுள்ளது. மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பும் அருகில் உள்ளதாகத் தெரியவில்லை.   இது குறித்து ஆய்வு செய்வோர் ஒன்றைக் குறிப்பிடுகின்றனர். மே.வங்கம்தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் முஸ்லிம் வாக்களர்கள் இருக்கும் மாநிலம் (கிட்டத்தட்ட 30 சதம்). முஸ்லிம்கள் மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து அந்நியப்பட்டுள்ளதுதான் இன்றைய அதன் தோல்விக்குக் காரணம் என்கின்றனர். இது எப்படி நிகழ்ந்தது? இதை சீரியசாக எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி சுய பரிசோதனை செய்துள்ளதா? சுய விமர்சனம் செய்துள்ளதா?

6. இன்றுள்ள இடதுசாரி அணியினர், பெரியாரிய அணியினர் எல்லோரும் எந்த அளவு இன்றைய இந்துத்துவ ஆபத்து குறித்த பிரக்ஞையுடனும், தத்துவார்த்த மற்றும் வரலாற்றுத் தெளிவுள்ளவர்களாகவும் உள்ளனர் என்கிற கேள்வி என்னுள் எழுவதை இங்கு அதிக அளவில் கூடியுள்ள இடதுசாரித் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரும்பான்மை மதவாதத்தையும், சிறுபான்மை மதவாதத்தை யும் மிகத் துல்லியமாகவும் ஆழமாகவும் ஜவஹர்லால் நேரு போன்றோர் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பே வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். ஆனால் நம் தோழர்கள் கோவை ஃபாரூக் கொலை விஷயத்தில் செய்துள்ள எதிர்வினைகளைப் பார்க்கும் போது இடதுசாரிகளாகவும், பெரியாரியவாதிகளாகவும் இருந்தாலும் கூட அவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் கூட இரண்டு மதவாதங்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாதவர்களாக உள்ளதைக் காண முடிகிறது. அடிமட்ட அளவில் மட்டுமல்ல; மேல்மட்டங்களிலும் இப்படித்தான் நிலைமை உள்ளது. சிறுபான்மை மதவாதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படுத்தும் அழிவைக் காட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தும் அழிவே அதிகம்.  இடதுசாரிக் கட்சிகளும் பெரியார் இயக்கங்களும் மதவாதம் பற்றியும், சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் சிறுபான்மை மக்கள் பற்றியும் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாசிப்புகள், வகுப்புகள் முதலியன முக்கியம். இடதுசாரிகளும் பெரியாரியர்களும் இன்னும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தம்மை ஒடுக்கப்பட்ட மக்களுடனும், சிறுபான்மை மக்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. நான் சிறுபான்மை மக்கள் மத்தியில் பேசும்போதெல்லாம் மதச்சார்பின்மை என்கிற விஷயத்தில் நாம் இடதுசாரிகளையும் பெரியாரியர்களையும் தான் நம்பி இருக்க வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லித்தான் முடிப்பேன். இனி நான் இதையே சற்று மாற்றிச் சொல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இடதுசாரி இயக்கங்களும், பெரியாரிய இயக்கங்களும் இன்றைய கால கட்டத்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. உலகளவிலும் சரி இந்தியாவிலும் சரி வலதுசாரி, மதவாத பாசிச சக்திகள் மேலெழும் காலம் இது. இந்நிலையில் இடதுசாரிகளும் பெரியாரியர்களும் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அடித்தள மக்களைச் சார்ந்திருப்பதுதான் அவர்களுக்கும் நல்லது என்பதைத்தாந் சொல்லப் போகிறேன். ஆம் இந்த இயக்கங்களுக்கும் அதுதான் நல்லது.

8.இடதுசாரிகள் இந்நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என நான் சொல்லவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியைப்போல இப்போது சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு அமைப்பையும் இந்தியக் கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் உருவாக்கியுள்ளன. இந்த இரு இயக்கங்களும் முஸ்லிம் கைதிகள் தொடர்பாகச் சென்ற சில மாதங்களில் நடத்திய குறைந்த பட்சம் ஐந்து கூட்டங்களில் நானே பங்கு பெற்றுள்ளேன். ஆனால் இது மட்டும் போதாது. மதவாதம் குறித்தான அரசியல் தெளிவு இன்னும் நம் அணிகளுக்கு வேண்டியுள்ளது.

9.விருது பெற்றவர்களை வாழ்த்தி, வணங்கி விடை பெறுகிறேன்

No comments:

Post a Comment