Wednesday, March 22, 2017

இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர்

எவிடென்ஸ் கதிர்
Via Facebook
2017-03-22

இசை ஞானி இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர்.
...........
கக்கன் நேர்மையானவர் ஆனால் தான் சார்ந்திருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதேபோன்றுதான் இளையராஜாவும். உலகம் வியக்கும் இசைஞானி தான் சார்ந்த சமூகத்திற்கு எதையும் செய்யவில்லை. ஏன்? தன்னுடைய அடையாளத்தைக்கூட வெளிப்படையாக சொல்லாமல் மறைத்துக் கொண்டவர். தீண்டாத மக்கள் என்று துவேசம் காட்டிய இந்து மதத்தையே துதிபாடியவர் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இதை வெறும் கருத்தியல் பார்வையோடு மட்டும் அனுக முடியாது. கள நிலைகளோடு அனுக வேண்டும்.

இளையராஜாவை யாரும் நெருங்க முடியாது, கர்வமானவர். எளிமையாக பழகமாட்டார் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர். அவர் விரும்பியது எல்லாம் மரியாதைதான், மாண்புதான். அது கிடைக்காத போது அது கிடைப்பதற்காக தன் திறனை வளர்த்துக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு வேலியும் அமைத்துக் கொண்டார். பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட வேலி கடைசியில் கர்வமானவர் என்கிற அடையாளமாக மாறிப்போனது.

உங்களால்தான் முடியும், நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று யாராவது பணிவாக அவரிடம் சொல்லிவிட்டால் பணம் அவருக்கு பொருட்டு அல்ல எதையும் செய்து கொடுப்பார். இதுதான் இளையராஜா. மந்திரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எல்லாம் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டு பணிவாக காட்டிக் கொண்டு கோடிக் கணக்கில் சம்பாதிப்பது போன்று இளையராஜா நடந்து கொள்ளவில்லை.  சினிமாவில் 1000 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தாலும் பெரிதாக அவர் பொருள் ஈட்டியதாக தெரியவில்லை.

இளையராஜா தலித் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்? என்று கேள்வி கேட்கின்றனர். தலித் சமூக மக்களுக்கு உரிமைகளை வாங்கிக் கொடுப்பது, அவர்களின் பொருளாதாரத்திற்கு போராடுவது என்பது சமூகப்பணியாக இருந்தாலும் இளையராஜாவின் ஆளுமை என்பது மிகப்பெரிய சொத்தாக நான் பார்க்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தன் இசையால் உலகத்தை ஆளுகிற போது எல்லோரும் வியந்து போகிறார்கள். தலித்துகள் என்றாலே இழிவாக பார்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஒருவன் தன் திறமையால் உலகத்தை ஆளுகிறபோது அவன் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் மீது பொது சமூகம் வைத்திருக்கக்கூடிய மோசமான சிந்தனை எல்லாம் உடைபடுகிறது. இதுதான் இளையராஜா செய்திருக்கிறார். தன் திறமையின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைவிட வேறு என்ன அவரிடம் எதிர்பார்ப்பது.

அவர் அடையாளத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்கின்றனர். இளையராஜாவுக்கு வயது 75. நினைத்து பாருங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா உலகில் இடைநிலை சாதியினரும் சூத்திரர்களும் கூட உள்ளே போகமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா அந்த இடத்திற்கு வருகிறபோது என்னவிதமான அவமானங்களை சந்தித்திருப்பார். எவ்வளவு ஒடுக்குதல் நடந்திருக்கும். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தாக்குபிடித்திருப்பதை உணர வேண்டும். நம்முடைய அப்பாவும் தாத்தாவும் அந்த காலத்தில் நம்மைப் போன்று வெளிப்படையாக தங்களது அடையாளத்தை சொல்லியிருக்கின்றனரா?

ஒடுக்கப்பட்டவரின் வெளிப்படை அடையாளம் என்பது கடந்த 20 ஆண்டு காலமாகத்தான் விவாதமாக மாறியிருக்கிறது. இளையராஜா சினிமா உலகத்திற்கு வாய்ப்பு கேட்டு உள்ளே வந்து 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அந்த எதார்த்த நிலையை உணர வேண்டும். அம்பேத்கர் வெளிப்படையாக சொன்னாரே, அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படையாக சென்னாரே, இமானுவேல்சேகரன் வெளிப்படையாக சொன்னாரே என்று உடனே எதிர் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் எல்லாம் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட்டவர்கள். மக்களை ஒன்றிணைக்க வெளிப்படை அடையாளம் அப்போது தேவைப்பட்டது. ஆனால் இளையராஜா இருந்தது இசைத்துறை. அதுமட்டுமல்ல அந்த கால கட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படையாக சொன்னது 1 சதவீதம் கூட கிடையாது. இந்த காலகட்டத்தில் கூட 90 சதவீத தலித்துகள் தங்களது அடையாளத்தை சொல்ல தயங்குகின்றனர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா எப்படி தன்னுடைய அடையாளத்தை சொல்லியிருக்க முடியும்?

இளையராஜாவுக்கு இடதுசாரிகள் தான் வாய்ப்புக் கொடுத்தனர். ஆனால் அவர்களை விமர்சிக்கிறார். இந்துத்துவாவை ஏற்றுக் கொள்கிறார் என்கின்றனர். இளையராஜாவின் அரசியல் சார்ந்த நிலைப்பாடு மீது எனக்கு இப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. அதுவேறு. ஏன் இளையராஜா இடதுசாரிகளை மட்டுமா விமர்சிக்கிறார். தலித் கட்சிகளை கூட அவர் கிண்டல் செய்திருக்கிறார். இளையராஜாவின் அரசியல் நமக்கு முக்கியமல்ல. அவரது இசையும் அந்த இசையில் கிடைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம் மட்டுமே முக்கியமாக பார்க்கிறேன்.

இளையராஜாவின் காலில் பிராமணர்கள் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பிராமணர்கள் மட்டுமல்ல சகல சாதியினரும் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். யாருடைய காலிலும் விழக்கூடாது என்று கொள்கை உள்ளவன் நான். எந்த மதம் தன்னை ஒதுக்கியதோ அதே மதத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு ஒதுக்கியவர்களை எல்லாம் விழ வைத்த தந்திரத்தையும் அவர் செய்திருக்கிறார்.

ஒருவேளை குங்குமமும் விபூதியும் மணிமாலையும் தன் உடம்பில் கிடந்தால் சாதியவாதிகள் தன்னை நெருங்க பயப்டுவார்கள் என்கிற தந்திரத்திற்காகக்கூட அவர் பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எவிடன்ஸ் கதிராகிய நான் மட்டுமல்ல பலரும் இந்த காலகட்டத்தில் நம் அடையாளத்தை வலுவாக சொல்லுவதற்கு காரணம் சாதிக்காக அல்ல. சாதி ஒழிப்பிற்காக. நீ என்னை தீண்டத்தகாதவன் என்று சொல்லுகிறபோது, ஆமாம் நான் தீண்டத்தகாதவன் தான் ஆனால் சமத்துவத்தை நேசிக்கக்கூடியவன் என்று அடையாளப்படுத்தத்தான் அந்த அடையாளம். இதேபோன்று இளையராஜாவும் சொல்ல வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கலாம். ஆனால் இளையராஜாவை கட்டாயப்படுத்த முடியாது. சொல்லலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட நபரின் முடிவு.

இளையராஜாவின் தந்தை கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டவர். பிரபல பத்திரிக்கை ஒன்றில் அதை வெளிப்படையாக பதிவு செய்துவிட்டு மறுநாள் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தன் தந்தை கிறிஸ்துவ மதத்தை தழுவியவர் என்கிற வார்த்தையை எடுத்து விடுங்கள் என்று கூறினார். அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் இது முக்கியமான பதிவு இதை ஏன் எடுக்க சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தயவுசெய்து எடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை நேரடியாக பார்த்த பத்திரிக்கையாளர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எனக்கு இளையராஜா மீது கோபம் வரவில்லை. அவரது நிலையை பார்த்து பரிதாபப்பட்டேன். அவரது இந்த நிலைக்கு காரணம் சுற்றியிருக்கக்கூடிய சாதிய சமூகம் தான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

No comments:

Post a Comment