Monday, May 21, 2018

ஒரு முட்டாளை நேசிப்பதென்பது

#தீபுஹரி
2018-05-21

ஒரு முட்டாளை நேசிப்பதென்பது
நீங்கள் அஞ்சுவதைக் காட்டிலும் துயரமானது.

அவர்கள் நீங்கள் எண்ணுவதைவிட
விரைவாக புளிக்கக் கூடியவர்கள்.

நீங்கள் எண்ணுவதை விட விரைவாக
சலிப்பேற்படுத்தக் கூடியவர்கள்.

உங்கள் கற்பனைகளுக்கும் மேலாக
மந்தமானவர்கள்.

ஒரு கலவிக்காக உங்கள் உடல் மலர்ந்து நிற்கையில் அவர்கள் நிம்மதியாக உறங்கக்கூடியவர்கள்.

உங்கள் அதிகாலைக் காபியை ஒரு போதும் புன்னகையோடு தயாரித்திராதவர்கள்.

உங்களுடைய உள்ளங்காலில் ஒருபோதும் முத்தமிட்டிராதவர்கள்.

குளிர்ந்த பாதங்களில் தங்கள் முகத்தை
ஒருபோதும் அழுத்திக் கிடந்திராதவர்கள்.

எரிகிற ஊடலுக்கு நீரைப்போல தங்களை இறைக்கத் தெரியாதவர்கள்....

இருளும் கடலும் ஒன்றாகி, அச்சுறுத்துகிற ஓசை மட்டும் எஞ்சி நிற்கிற கடற்கரைகளில்
ஒரு நாளும் உங்களோடு நின்றிராதவர்கள்.

ஆசைகளை புதைத்துக் கொள்கிறவர்கள்,
நடனமாடாதவர்கள், வாகனங்கள் அலறுகின்ற சாலைகளில் பானி பூரி சாப்பிடாதவர்கள்,
கோவிலில் சிலைகளை கவனிக்க மறப்பவர்கள்.

லஞ்சம் வாங்குபவர்கள், ஒரு கவிதைக்கு அழத் தெரியாதவர்கள், இதுவரை ஒரு பூனையை வளர்த்திடாதவர்கள், மேல்விழுந்து விளையாட
ஒரு நாய்குட்டியை அனுமதிக்காதவர்கள்.

முன்னெச்சரிக்கை மிகுந்த கள்ளக்குரலில்
உங்களிடம் உரையாடுபவர்கள்.

நீண்ட அயர்ச்சியூட்டக்கூடிய
பட்டியல்களுக்குள் அடங்குபவர்கள்.

#தீபுஹரி

https://m.facebook.com/story.php?story_fbid=1655053351280673&id=100003280715330

No comments:

Post a Comment