Thursday, May 10, 2018

நமக்கு வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்வேர்ட் செய்வதால் என்ன பிரச்சனை?

Anirutha Brammarayan
Via Facebook
2018-05-10

அன்லிமிட்டட் இண்டர்நெட் கனெக்சன் இருக்கு. தினமும் ஒரு ஜிபியை முடித்தே ஆகவேண்டும். நமக்கு வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்வேர்ட் செய்வதால் என்ன பிரச்சனை?

எனக்கு நேரடியாக எந்த பாதிப்பும் வராது என எண்ணிக் கொண்டு எல்லா மெசேஜ்களையும் பார்வேர்ட் செய்பவரா நீங்கள்? 

உங்கள் குடும்பத்தினரின் கண் முன்னே நீங்கள் அடித்துக் கொல்லப்படலாம். அதுவும் எந்தத் தவறும் செய்யாமலே. ஒரு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்த குற்றத்திற்காக.

வாட்ஸ் ஆப் புரளிகளால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. ஆனால் பெரும்பாலானவை மறைமுக பாதிப்பு என்பதால் தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிறோம்.

* பழங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராது என்ற மெசேஜை நம்பி டயாபடிக் கீடோ அசிடோசிஸில் மரணமடைந்தவர்கள் ஏராளம்.

* அதேபோல பித்தப்பை கேன்சரால் வந்த மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி குடித்து பாழாப் போனவர்கள் நிறைய உண்டு.

* பணமதிப்பிழப்பின்போது வங்கியில் வரிசையில் நின்று மரணித்த உயிர்களுக்கும், மாரடைப்பில் இறந்து போன வங்கி ஊழியர் உயிர்களுக்கும் குஜராத் மாடல் வாட்ஸ் ஆப் புரளிகளே காரணம்.

* இது தவிர மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் விட்டிலிகோ எனும் வெண்குஷ்டம் வரும் என்ற புரளியை நம்பி தயிர் சாப்பிடுவதை விட்ட நண்பன் எனக்கு உண்டு. இத்தனைக்கும் அவன் பெரிய மென்பொருள் கம்பெனியில் லகரங்களில் சம்பளம் வாங்கும் பதவியில் இருப்பவன்.

உயிரிழப்பு தவிர இது போன்ற பாதிப்புகளை கணக்கிடவே முடியாது.

இவற்றை எல்லாம் விட உச்சமாக குழந்தைக்கு பாசமாக சாக்லெட் கொடுத்த மூதாட்டியை அடித்துக் கொன்ற காட்டுமிராண்டித்தனம் நேற்று நடந்துள்ளது. இது நமது நாட்டைப் பற்றிய பல Mythகளை உடைத்துள்ளது.

வெளிநாடுகளில் முன்பின் தெரியாத ஒருவர் மற்றொருவரைப் பார்த்தால் சாதாரணமாக சிரித்துக் கொள்வர். ஏர்போர்ட்களில் நுழைந்த உடனேயே இந்த வித்தியாசத்தை காணலாம். ஆனால் நம் ஊரில் சாலையில் நடந்து போகும் போது எதிரில் வருபவரைப் பார்த்து நீங்கள் சிரித்தால் உங்களை லூசு என நினைப்பர். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கடைக்காரர் முறைத்துக் கொண்டே தான் பொருள் தருவார். ஆட்டோக்காரர் முறைத்துக் கொண்டே தான் வண்டி ஓட்டுவார். பேருந்து கண்டக்டர் முறைத்துக் கொண்டே தான் டிக்கெட் தருவார். பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது கூட அருகில் நிற்பவரை முறைத்துக் கொண்டே தான் நிற்க வேண்டும். இந்த மெண்டல் தேசத்தில் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரித்தால் அடித்துக் கொல்லப்படும் காலமும் வரலாம். (இந்தியர்களின் இந்த குணத்திற்கு உளவியல் ரீதியாக சாதி வேறுபாடு  காரணமாக  இருக்கலாம் என்பது என் எண்ணம். தாழந்த சாதிக்காரனைப் பார்த்து நாம் சிரிப்பதா எனும் வியாதி தற்போது பல பரிமாணம் பெற்று இப்படிப் பரவியிருக்கலாம்)
அதேபோல கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் எல்லாம் அப்பாவிகள், சூதுவாது அறியாதவர்கள், வெகுளிகள் என்ற மித். மருத்துவத்துறையில் இருப்பதால் சொல்கிறேன். சிறுநகர மருத்துவமணைகளில் பில் செட்டில் செய்யப்படும் போது பணம் குறைவாக உள்ளது பிறகு தருகிறேன் என சொல்லி மீண்டும் தராமல் செல்பவர்களில் பலர் கிராமத்து மக்களே. அதேபோல ட்ரீட்மெண்ட் சரியாக தரவில்லை என பணத்தை குறைத்துக் கொடுப்பவர்களும் அவர்களே (ஊசி கூட போடல. நூறு ரூவா பீஸா?). 400 ஏக்கர் வைத்திருப்பவர் கூட பரம ஏழை போன்று சீன் போட்டு ஐம்பது ரூபாய்க்கு அழுவதும் அவர்களே. அதே நகரத்தில் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாரிக்கும் ஒருவர் மிக நேர்மையாக பில்களை செட்டில் செய்வார்.
சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போன்ற மிகப் பெரிய பொய் கிராமத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள் என்பதும். எல்லா இடங்களைப் போலவே அங்கும் அனைத்து மக்களும் கலந்து தான் உள்ளனர். அதைத்தான் 65 வயது மூதாட்டியை அடித்தேக் கொன்ற இரக்கமற்ற மிருக குணச் செயல் நிரூபிக்கிறது.

சாதி வேறுபாடு மிகுந்த உளவியல் ரீதியில் மனநல பாதிப்பு கொண்ட இந்தச் சமூகத்தில் வாழும் போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது. இந்த வெறிபிடித்த சமூகத்தற்கு மேலும் வெறியேற்றும் வகையில் பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள். அதனால் அடித்துக் கொல்லப்படும் மூதாட்டி உங்கள் அம்மாவாகவும் இருக்கலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=455593921525803&id=100012255961823

No comments:

Post a Comment