Thursday, March 15, 2018

ஸ்டீபன் ஹாக்கிங் - 1

இளங்கோ பிச்சாண்டி
Via facebook
2018-03-1 4

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு!
அஞ்சலி செலுத்துவோம்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
நியூட்டன் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு, தாம் வாழ்ந்த காலத்தில்
உலகெங்கும் உள்ள மானுடத்தின் பேரன்பைப் பெற்றவர்
ஸ்டீபன் ஹாக்கிங்! 76  வயதில் மறைந்த இங்கிலாந்தின்
ஹாக்கிங் மானுடத்தை அறிவியலின் சிகரத்தில் உயர்த்தி வைத்தவர்.

பிரபஞ்சம் அநாதியானது என்று இந்து புத்த சமண
மதங்கள் கருதின. (அநாதி= ஆதியற்றது). யூத, கிறிஸ்துவ
இஸ்லாமிய மதங்களில் பிரபஞ்சம் என்பதே கிடையாது.
அவை வானமும் பூமியும் மட்டுமே என்று சுருக்கிக்
கொண்டவை.

பிரபஞ்சம் ஆதியும் அந்தமும் அற்றது  என்பதை
பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) ஏற்றுக்
கொள்ளவில்லை. மூவா முதலா உலகம் என்று
சமண இலக்கியமான சீவக சிந்தாமணி கூறுவதை
நவீன அறிவியல் ஏற்பதில்லை. "ஆதியும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்சோதி" என்று சைவ சித்தாந்தம்
கூறுவதையும் அறிவியல் ஏற்கவில்லை. மாறாக
பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு என்பதே
நவீன இயற்பியலின் கொள்கையாகும்.ஸ்டீபன் ஹாக்கிங்
இதையே வலியுறுத்தி வந்தார்.

பிரபஞ்சத்திற்கு மட்டுமல்ல, காலத்திற்கும் (time)
ஒரு தொடக்கம் உண்டு என்பதே ஹாக்கிங்கின்
கருத்தாகும். 13.8 பில்லியன் ஆண்டுக்கு முன்பு இந்தப்
பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பை  அடுத்துத் தோன்றியது
என்பதே அறிவியல் ஏற்றுக்கொண்ட கருத்தாகும்.

பிரபஞ்சம் தொடக்கமற்றது என்றும்
எப்போதும் உள்ளது என்றும் எடுத்துக் கொண்டால்
என்ன ஆகும்? இந்தக் கோட்பாடு வெப்ப இயக்கவியலின்
இரண்டாவது விதியை மீறும் (will violate the second law of
thermodynamics).

ஏனெனில் இவ்விதிப்படி, எந்தவொரு மூடிய அமைப்பிலும்
ஒழுங்கின்மையானது அதிகரித்துக் கொண்டே போகும்.
(entropy will increase with time).எனவே தொடக்கமேயற்ற
எப்போதும் உள்ள  பிரபஞ்சத்தில் தற்போது
ஒழுங்கின்மையானது உச்சத்திற்குப் போயிருக்க வேண்டும்.

ஒழுங்கின்மை உச்சத்திற்குப்  போவது என்றால் என்ன?
பகலில் சூரிய வெளிச்சம் இருப்பது போல இரவிலும்
இருக்க வேண்டும். அதாவது சூரியனின் மேற்பரப்பில்
உள்ள 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இரவிலும்
இருக்க வேண்டும். எந்தவொரு பொருளும் ஒரே
வெப்பநிலையில் இருக்க வேண்டும். இமயமலைக்கும்
எரிமலைக்கும் வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

அதாவது சூடு குளிர்ச்சி என்ற சொற்களுக்கெல்லாம்
அர்த்தமே இல்லாமல் போக வேண்டும். இப்படி
நிகழ்வதுதான் ஒழுங்கின்மை அதிகரிப்பு என்பது.

ஆனால் நமது பிரபஞ்சம் அப்படி இல்லை என்பதை
நாம் அறிவோம். எனவே பிரபஞ்சம் அநாதியானது
என்று எடுத்துக் கொண்டால், பூமியில் எந்த
உயிரினமும் வாழ முடியாது என்பதை நாம்
உணர வேண்டும்.  இதன் மூலம் மதங்கள் கூறுவது
தவறு என்றும் ஹாக்கிங் கூறுவதே சரியானது
என்றும் நம்மால் அறிய முடிகிறது.

பெருவெடிப்பின்போது ஆதி ஒருமை (singularity)
இருந்தது என்ற கருத்தில் ஒரு சிக்கல் உள்ளது.
ஏனெனில் அத்தகைய ஆதி ஒருமை நிலையில்
இயற்பியலின் எந்த விதிகளும் செல்லாமல்
போய்விடும். இதைத்தவிர்க்க கற்பனை நேரம்
(imaginary time) என்ற கருத்தாக்கத்தை ஹாக்கிங்
முன்வைத்தார்.

கற்பனை நேரம் என்று இருக்கும் பட்சத்தில்,
பெருவெடிப்பை இயல்பான விரிவாகக் (expansion)
கொண்டு செல்ல முடியும். இயற்பியலின் விதிகள்
எந்தச் சூழலிலும் செல்லுபடியாகும் என்று
நிரூபிக்க முடியும். எனவே ஹாக்கிங் கற்பனை
நேரம் என்ற கோட்பாட்டைச் செழுமைப் படுத்தினார்.

ரோகர் பென்ரோஸ் என்பவருடன் இணைந்து
கற்பனை நேரம் குறித்து பல்வேறு தேற்றங்களை
வெளியிட்டார்.

இயற்பியலில் அனைத்துக்குமான கொள்கை ஒன்றை
(Theory of everything) உருவாக்க தம் வாழ்நாள் முழுவதும்
ஐன்ஸ்டின் பாடுபட்டார். ஐன்ஸ்டின் போன்றே,
அனைத்துக்குமான கொள்கை ஒன்றை உருவாக்க
காலமெல்லாம் பாடுபட்டார் ஹாக்கிங். என்றாலும்
அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.

எதிர்கால அறிவியலாளர்கள் ஐன்ஸ்டின், ஹாக்கிங்
இருவரும் விட்டுச்சென்ற பணியை நிறைவேற்றுவார்கள்
என்று அறிவியல் உலகம் நம்புகிறது.

மகத்தான அறிவியலாளர் ஸ்டீபான் ஹாக்கிங்
மறைவுக்கு சிரம் தாழ்த்தி நியூட்டன் அறிவியல்
மன்றம் அஞ்சலி செலுத்துகிறது!
**********************************************************

https://m.facebook.com/story.php?story_fbid=2133424293553794&id=100006587319842

No comments:

Post a Comment