Saturday, February 10, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 3

கோஹினூர் வைரமும் பாண்டிய நாட்டின் முத்துக்களும் - பகுதி 3
------------------------------------------------------------------------------------
இங்கிலாந்தின் Crown Jewels எனப்படும் அரச குடும்ப நகைகளில் கோஹினூர் வைரமும் ஒன்று. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற இந்த வைரம், உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்று. அதன் மதிப்பை இப்போதைய சூழலில் குத்துமதிப்பாகத்தான் அளவிட முடியும். அவ்வளவு விலை உயர்ந்தது. "நம்ம நாட்டு வைரம், இப்போது இந்தியாவில் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?" என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு.

ஆனால், கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை மதிக்க முடியாத சில முத்துகள் நம்மிடம் உண்டு. பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்தபோது, தங்களுக்குக் கிடைத்த அரிய முத்துகளை அன்னை மீனாட்சிக்கே காணிக்கையாக அளித்தனர். சில முத்துகள் கோழி முட்டை அளவுக்குப் பெரியவை. இந்த முத்துகள் இன்னமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையில் பாதுகாக்கப்படுகின்றன.

கோவிலின் அறங்காவலர், அறநிலையத் துறையின் ஆணையர், இந்த முத்துகள் இருக்கும் அறையைத் திறக்கும் உரிமை கொண்ட குடும்பம் ஆகிய மூவர் மட்டுமே இதனைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். வருடம் ஒரு முறை அந்த அறை திறக்கப்பட்டு, பொக்கிஷம் சரிபார்க்கப்பட்டு, அறை மீண்டும் மூடி சீல்வைக்கப்படுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்த முத்தை கண்ணால் கண்டவர்கள். வெகு சிலரே இது குறித்து அறிந்தவர்கள்.

மதுரையின் ஆட்சியராக ரௌஸ் பீட்டர் என்பவர்  (ஆகஸ்ட் 24, 1785 - ஆகஸ்ட் 6, 1828) இருந்துவந்தார். மதுரை மக்கள் மீது பெரும் அன்புகொண்டவர். இதனால் அவர் பீட்டர் பாண்டியன் என்றே அழைக்கப்பட்டார். ஒரு பெரும் மழைக் காலத்தில் அவர் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியில் சிறுமி ஒருவர் அழைப்பது கேட்டது. இந்த மழையில் யார் நம்மை அழைப்பது என்று எண்ணியவாறே வெளியில் வந்தார். அதே நேரத்தில் மழையில் ஊறிப்போயிருந்த அவரது வீடு இடிந்து விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோனார் பீட்டர். திரும்பிப் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. தன்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமி மீனாட்சி என்றே நம்பினார் பீட்டர். ஆகவே குதிரை வாகனத்தில் மீனாட்சி வரும்போது, குதிரை மீது ஏறுவதற்காக மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்)  செய்து கோவிலுக்கு அளித்தார் பீட்டர். சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில்  அம்மன்  தங்கக்குதிரையில் வீதியுலா வரும்போது, இன்னமும் அந்த பாதக் கொளுவிகளையே அணிகிறார்.

இது போன்ற அரிய பொக்கிஷங்கள் தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் இன்னமும் பாதுகாக்கப்படுவதற்கு, அறநிலையத் துறை மட்டுமே காரணம்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவுசெய்யப்படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம்பெற்றுவிட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இறைவன் - இறைவியின் திருமேனிகள் பட்டியலிடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. கோவில்களுக்குச் சொந்தமான உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாத்திட, களவு எச்சரிக்கை மணி, தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், சிசிடிவி ஆகியவை 8371 கோவில்களில் உள்ளன.  இதுதவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ள கோவில்களில் இருக்கும் திருமேனிகளைப் பாதுகாக்க  தமிழகம் முழுவதும் 19 பெரிய கோவில்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  பாதுகாப்பற்ற கோவில்களில் உள்ள திருமேனிகள், திருவிழாக் காலங்களில் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் இந்த மையங்களில் வைத்து பாதுகாக்கப்படும். இந்த பாதுகாப்பு மையங்களிலேயே பூஜைகளும் நடைபெறும்.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசாரணக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர்கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்பதில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது? இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர்வாகத்தை யாரிடம் கொடுப்பது? எச். ராஜாவிடமா?

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1184485488349843&id=100003652096964

No comments:

Post a Comment