Monday, February 19, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 7

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-17

கோவில்களை நிர்வகிக்கும் அரசு, தேவாலயங்களை, மசூதிகளை விட்டுவைப்பது சரியா? - பகுதி 7
---------------------------------
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து பேசும்போது ஒரு கேள்வி திரும்பத் திரும்ப கேட்கப்படும். அதாவது இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை கிறிஸ்தவர்களும் நிர்வகிக்கும்போது, இந்து வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை மட்டும் அரசு நிர்வகிப்பது ஏன் என்பதுதான் அந்தக் கேள்வி. மேல் பார்வைக்கு மிகவும் நியாயமான கேள்வியாக இது தோன்றும். இதற்கு பதிலைப் பார்ப்போம்.

முதலாவதாக, கோவில்கள் தோன்றிய காலத்திலிருந்தே அரசின் கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு வகையில்தான் அவை இருந்துவருகின்றன. மன்னர்களே கோவில்களைக் கட்டி அவை இயங்குவதற்கென இறையிலி நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். கோவில்கள் மீதும் சொத்துக்கள் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளைச் செலுத்தியே வந்திருக்கிறார்கள். தவிர, கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் வந்த பிறகும், பிரிட்டிஷார் நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகும் கோவில் சொத்துகள் கணக்கு வழக்கில்லாமல் கொள்ளை போவது குறித்து அரசிடம் பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்தே அரசு இதில் தலையிட ஆரம்பித்தது. விக்டோரியா அரசின் ஆட்சியின்போது இந்தியா வந்த ஒவ்வொரு சட்ட கமிஷன் முன்பாகவும் பொதுமக்கள் கோவில்கள் நிர்வகிக்கப்படுவது குறித்து புகார் தெரிவித்தனர்.

ஆகவே, இப்படி சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்: இந்துக் கோவில்களை அரசுகளே கட்டின. ஆகவே அரசுகளே அவற்றைப் பராமரிக்கின்றன. தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும்
முறையே கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்கள் கட்டினார்கள். அதனால், அவர்கள் பராமரிக்கிறார்கள். தவிர, இந்துக்கள் தங்கள் கோவில்களும் நிலங்களும் சூறையாடப்படாமல் தடுக்க வேண்டுமென்று அரசிடம் கேட்டார்கள். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேட்கவில்லை.

அப்படியானால், பிரிட்டிஷ் அரசாலும் முகலாய அரசாலும் கட்டப்பட்ட தேவாலயங்களையும் மசூதிகளையும் அரசு பராமரிக்கிறதா? கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்கனவே தங்கள் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டுவிட்ட நிலையில், அவற்றின் பராமரிப்பில் அந்தத் தேவாலயங்களும் மசூதிகளும் இல்லாமல், அவற்றை மட்டும் அரசின்வசம் எப்படிக் கொண்டுவர முடியும்? தனியாரால் கட்டப்பட்ட லட்சக்கணக்கான கோவில்கள் இப்போதும் அவர்களால்தானே பராமரிக்கப்பட்டுவருகின்றன. அதற்கு ஏதாவது கணக்கு வழக்கு உண்டா?

தவிர, இந்து கோவில் சொத்துக்களோடு ஒப்பிட்டால் கிறிஸ்தவ, இஸ்லாமிய கோவில் சொத்துக்களின் அளவு மிகவும் சிறியது. தவிர, இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மை மதம். இஸ்லாமும் கிறிஸ்தவமும் சிறுபான்மை மதங்கள். கிறிஸ்தவ, இஸ்லாமியக் கோவில்களை அரசே நிர்வகிக்கிறதென வைத்துக்கொள்ளலாம். அப்போது இம்மாதிரி ஒரு தீ விபத்து ஒரு மசூதியிலோ, தேவாலயத்திலோ ஏற்பட்டால், அது எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? அங்கு நடக்கும் ஒரு சிறிய திருட்டு எவ்வளவு பெரிய வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும்?

இதற்கெனவே காத்திருக்கும் இந்துத்துவர்கள், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவர்களே அம்மாதிரி செயல்களில் ஈடுபட்டு கலவரங்களை ஏற்படுத்தவும்கூடும். தவிர, ஒட்டுமொத்தமாக ஒரு துறையை ஏற்படுத்தி எல்லா வழிபாட்டுத் தலங்களையும் நிர்வகித்தால், கோவில் பணத்தை மசூதிக்கு செலவழிக்கிறார்கள் என்று கிளப்பிவிடவும் அதை நம்பவும் இங்கே ஆட்கள் உண்டு. (குறிப்பாக கருணாநிதி 2014லிலிருந்து இதே வேலையாகத்தான் இருக்கிறார் என்று யாராவது சொன்னால், அப்போது யார் முதல்வர் என்றுகூட கேட்காமல் நம்பவும் அதைப் பரப்பவும் ஆட்கள் உண்டு.) ஆகவேதான் கிறிஸ்தவ, இஸ்லாமிய கோவில்களின் சொத்துக்களை அரசு நிர்வகிப்பது பற்றிய கேள்வியே ஏழவில்லை.

#TNHRCE_TRUTH

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1189967214468337&id=100003652096964

No comments:

Post a Comment