Sunday, February 25, 2018

பிறப்பின் அடிப்படையில் ஜெயா, லல்லு தீர்ப்பு

டான் அசோக்
Via facebook
2018-02-25

'உண்மை' என்று ஒரு மம்முட்டி படம்
பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. 
அதில் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் குண்டு வெடித்து முதல்வரும்,
சில அதிகாரிகளும் இறந்துவிடுவார்கள்.
அக்கொலையை புலனாய்வு செய்யும் அதிகாரிகள், முதல்வரை யார் கொன்றது என்கிற ரீதியில் ஆய்வுசெய்து கொண்டிருக்கும்போது அந்த குண்டுவெடிப்பு, முதல்வரைக் கொல்வதற்காக நடந்ததில்லை, உடன் வந்தபோலீஸ் அதிகாரியை கொல்வதற்காக நடந்தது என மம்முட்டி கண்டுபிடிப்பார்.  நிற்க. 

அப்படித்தான் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிந்தது. ஜெ மட்டும் உயிரோடிருந்திருந்தால் நிச்சயம் விடுதலை ஆகியிருப்பார்.  
ஜெயலலிதாவுக்கு வாய்தாமேல் வாய்தா வழங்கி வழக்கை இழு இழு என இழுக்க அனுமதித்து, அவரை  முதல்வராகவும் வலம்வர விட்ட சட்டம், ஒருவழியாக அவர் செத்தபின் சசிகலாவை போட்டுத்தள்ளுவதற்காக ஜெவையும் சேர்த்து போட்டுத்தள்ளிவிட்டது! 

இந்த வழக்கு மட்டும் நேர்மையாகவும்,
சரியான நேரத்திலும் நடந்திருந்தால் தமிழ்நாட்டை ஒரு குற்றவாளி மூன்று முறை ஆண்ட அவலம் நடந்திருக்காது. 
இன்று அந்த குற்றவாளி தீனிபோட்டு வளர்த்த அடிமைகளிடம் சிக்கி தமிழகம் சின்னாபின்னம் ஆகியிருக்காது. 

லாலுவும், ஜெவும் ஊழல் குற்றம் செய்தவர்கள் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.  ஆனால் இருவரையும் ஊடகங்களும், ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் பொதுச் சமூகமும் அணுகும் முறையில் எவ்வளவு வேறுபாடு பாருங்கள்.

நீங்கள் ஜெவாக இருந்து குற்றம் செய்தால் செத்தபின்தான் தண்டனை கிடைக்கும். அதுவும் சசிகலா என்கிற கேரக்டர் இல்லை என்றால் அதுகூட கிடைக்காது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னரும் பீச்சில் இடமும், சட்டசபையில் படமும் கிடைக்கும்.
ஐயன் லேடி, டிரைவாஷ் லேடி என்கிற பட்டங்கள் கூட கைபடாமல் ஃப்ரஷ்ஷாக அப்படியே இருக்கும்!

சசிகலாவாக இருந்து குற்றம் செய்தீர்கள் என்றால் ஜெ நிழலில் இருக்கும்வரை உங்களுக்கு தண்டனை கிடைக்காது. 
அந்த 'மனுவேலி' போய்விட்டால் தண்டனைதான்.
உடனே ஊழலின் ஊற்றுக்கண் என்கிற பட்டம்,
ஜெ தண்டனையின்போது உண்ணாவிரதம் இருந்தவன் எல்லாம் வெட்கமே இல்லாமல் உங்களை சினிமாவில் கிண்டல் செய்வான்.  மனசாட்சியே இல்லாமல், ஒன்றுமே தெரியாத பாப்பாவான ஜெவுக்கு நீங்கள்தான் ஊழலை ஊட்டிவிட்டீர்கள் என சொல்வார்கள்!!

லாலுவாக இருந்து குற்றம் செய்துவிட்டீர்கள் என வையுங்கள், மாட்டினீர்கள்.  நன்றாக ஆக்டீவாக இருக்கும்போதே தண்டனை கிடைக்கும்.  ஊழல்வாதி என ஊரெல்லாம் எழுதுவார்கள்.
சட்டசபையில் படம் இல்லை,
ஓரமாக ஒரு இடம் கூட கிடைக்காது.

அதனால் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஜெவாக இருந்து குற்றம் செய்தால் ஒட்டுமொத்த இந்திய அமைப்பும், ஊடகங்களும் உங்களை காப்பாற்றப் போராடும். 
லாலுவாக இருந்து குற்றம் செய்தால் ஒட்டுமொத்த இந்திய அமைப்பும், ஊடகங்களும் சேர்ந்து உங்களை மாட்டிவிடப் போராடும். அதேநேரம் ஆ.ராசாவாக இருந்து நல்லதே செய்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும், ஊடகங்களும் புனைவுகளை எழுதி உங்களை குற்றவாளியாக்கப் போராடும்.
பதவியை ராஜினாமா செய்து, வாய்தா வாங்கி ஓடாமல், தானே வாதாடி வெளியே வந்தாலும் கூட உங்களை குற்றவாளி எனும் அடைப்புக்குறிக்குள் நிரந்தரமாக வைத்திருக்கத் துடிக்கும். 

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பிறப்பின் அடிப்படையில் செயல்படும் இந்த அநீதியை விடவும் பெரிய ஊழல் உலகில் என்ன இருக்கிறது? இந்த மாபெரும் ஊழலை எதிர்த்தவர்கள்தான் அம்பேத்கரும், பெரியாரும். 

உண்மையான ஊழல் ஒழிப்பாளர்கள் அவர்கள்தான்.  இந்தியாவின் வளர்ச்சியை நிரந்தரமாக முடக்கும் இந்த மாபெரும் ஊழலை அழிக்கத்துடிக்காமல்,  பொருளாதார ஊழல்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை என எவனெல்லாம் முழங்குகிறானோ
அவனையெல்லாம் தாராளமாக
'ஃப்ராடுப் பயல்' என அழையுங்கள். 
ஃப்ராடுப்பயல்களால் மாற்றத்தை அல்ல,
ஒரு மயிரையும் கொண்டுவர முடியாது.

https://m.facebook.com/story.php?story_fbid=1452003551594102&id=100003534139817

No comments:

Post a Comment