Sunday, February 25, 2018

கொஞ்சமே கொஞ்சமாக உங்களுக்குள் சாதிய உணர்வு இருந்தாலும் தயவுசெய்து இந்தப் பக்கம் வந்துவிடுங்கள்

Don Ashok
Via facebook
2018-02-25

இனம், சாதி என பிறப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் ஆதிக்க மனநிலை முற்றிப்போனவர்களுக்கு தங்களைவிட தாழ்வாக அவர்கள் நினைக்கும் இனத்தைச் சேர்ந்த மனிதர்கள், மனிதர்களாகவே தெரிவதில்லை.  உலகில் நடந்த/நடக்கும் இனப்படுகொலைகளுக்கெல்லாம் இதுதான் அடிப்படை.  ஏதோ சாதாரண அரசுப் பணிக்கு செல்வதைப் போல அன்றாடம் வீட்டில் இருந்து கிளம்பிப் போய் யூதர்களை, யூதக்குழந்தைகளை கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு மாலை வீடு திரும்பி எதுவுமே நடக்காததைப் போல தங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடிய நாஜிப்படை ஆட்களுக்கும் இதே ஆதிக்க மனநிலைதான் அடிப்படை.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அந்த இனத்தின் பெண்களின் மீது கைவைக்கும்போது ஆதிக்கக்காரர்களுக்கு இருந்ததேயில்லை.  கருப்பினத்தவர்களை மிருகங்களைப் போல கப்பலில் கட்டிப்போட்டு கொண்டு போனபோதும் சரி, அவர்களை வைத்து மனிதக்காட்சி சாலைகளை நடத்தியபோதும் சரி, இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மூளைக்கு பதிலாக சாணியை சுமந்துகொண்டு ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என பெருமைபேசி குடிசைகளைக் கொளுத்தும்போது சரி, இதுதான் நிலைமை.

நாமெல்லாம் அமைதியான சராசரி குடிமக்கள்.  இது போன்ற நிகழ்வுகளுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என அமைதியாக இருக்கிறவர்களிடம் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.  சர்வசாதாரணமாக உங்கள் அப்பாவோ, அம்மாவோ, மாமாவோ நீங்களோ, "அவரு நம்மாளுதான்," “அவங்க நம்ம கம்யூனிட்டிதான்,”,“நம்ம கம்யூனிட்டிலேயே நல்ல பையனா பாருங்க,” எனப் பேசுவீர்கள் அல்லவா?  அப்படியென்றால் மேலே நடக்கும் அத்தனை வன்முறையிலும் உங்களுக்குப் பங்கு உண்டு.  அடுத்தடுத்த தலைமுறைக்கு சாதி எனும் அழிவு நோயைக் கடத்தும் டெங்கு கொசுக்களாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  அதிலும், ஒரு ஆபத்தும் விளைவிக்காத மிதவாத வார்த்தைகள் என்ற எண்ணத்தில் சர்வசாதாரணமாக உங்கள் குழந்தைகளின் முன் நீங்கள் பேசும் மேலுள்ள வாசகங்கள்,  உங்கள் குழந்தைகளின் முன்னால் நீங்கள் உடலுறவு கொள்வதைவிடவும் மோசமான விளைவுகளை அவர்கள் மனத்தில் ஏற்படுத்தும்.  அதைத்தான் எந்தக் கூச்சமும் இன்றி நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  உங்களைப் போன்ற யாரோ ஒருவரால் வளர்க்கப்படும் மகன்தான் பிற்காலத்தில் ஏதாவது சாதியத் தலைவனால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆதிக்கநோய் முற்றி ‘சாதி சைக்கோ,’ஆகிறான். 

நீங்கள் எதையெல்லாம் மிகவும் சாதாரணம் என நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கிறீர்களோ, வாழ்க்கை முறையாக மாற்றி வைத்திருக்கிறீர்களோ அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மேலுள்ள வன்முறைகள் கட்டியமைக்கப்படுகின்றன.   சாதியப் பிடிமானத்தில் படிநிலைகள் எல்லாம் கிடையாது. சாதியின் மீது கொஞ்சமே கொஞ்சம் பிடிப்பும், உங்கள் சாதிக்காரனைப் பார்த்தவுடன் மனதில் ஏதோ ஒரு மூளையில் பல்பு எரிந்தால்கூட நீங்கள் சாதிவெறியன்தான்.  உங்கள் கைகளிலும் ரத்தம் படிந்திருக்கிறது.  கலாச்சாரம், சாதி, மதம், சொந்தம், பந்தம், கவுரவம், மயிரு, மட்டை எனப் பலக் கருமாந்திரங்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நம் வாழ்வியலை மறுபரிசீலனை செய்து தலைகீழாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 
இங்கே இரண்டே இரண்டு இனம்தான்.  சாதி இருக்கிறது என்கிற ஐந்தறிவு சாதிவெறியர்களின் இனம்.  சாதி இல்லை, எல்லா மனிதனும் சமமே என்கிற ஆறறிவு ஆதிக்க மறுப்பாளர் இனம்.  எனவே இதுவரையிலும் கூட கொஞ்சமே கொஞ்சமாக உங்களுக்குள் சாதிய உணர்வு இருந்தாலும் தயவுசெய்து இந்தப் பக்கம் வந்துவிடுங்கள்.  உயிரோடிருக்கும்போதே பிணமாக நடமாடாதீர்கள்.

-டான் அசோக்

https://m.facebook.com/story.php?story_fbid=1620589898048969&id=815716175203016

No comments:

Post a Comment