Monday, February 19, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 6

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-16

மதுரைக் கோவில் நிர்வாகத்தை ஆதீனம் கவனித்தாரா? - பகுதி 6
----------------------------------------------
இந்து சமய அறநிலையத் துறை இருக்கக்கூடாது; முன்பைப் போலவே கோவில்கள் சமயப் பெரியார்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்பவர்களிடம், யார் அந்த சமயப் பெரியார்கள் என்று கேட்டால் பதில் இருக்காது. நெருக்கிக் கேட்டால் ஆதீனங்கள், மடாதிபதிகளைச் சொல்வார்கள்.

இந்த மடாதிபதிகளும் ஆதீனங்களும் தங்கள் மடங்களையும் ஆதீனங்களையும் எப்படி நிர்வாகம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மதுரை ஆதீனம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். திருஞானசம்பந்தர் துவங்கிய ஆதீனம் இதைவிடப் பெரிய சீரழிவைச் சந்தித்துவிட முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போதுதான், கூச்சமே இல்லாமல் ஒரு கும்பல், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை ஆதீனங்களிடம் விடவேண்டும் என்கிறது.

ஏற்கனவே ஆதீனங்கள்தான் மதுரைக் கோவிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்; அரசு அநியாயமாக அந்தச் சொத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. மீண்டும் சமயப் பெரியார்களிடம் அதை ஒப்படைப்பதே முறை என்கிறது இந்தக் கும்பல். ஆனால், உண்மை என்ன? மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனத்தின் சொத்தா? அவர்கள் எப்போதாவது நிர்வாகம் செய்திருக்கிறார்களா? பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துவக்கம் குலசேகர பாண்டியனது காலத்தில் ஆரம்பிக்கிறது.அந்த மன்னன், கோவில் வழிபாடுகளை நடத்த சில கௌட பிராமணர்களை நியமித்தார். ஆனால், கோவில் நிர்வாகம் நேரடியாக மன்னனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலை 14ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியன் காலம் வரை நீடித்தது. 

1310ல் மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுத்துவந்து, கோவிலைச் சூறையாடினான். பாண்டியர்கள் மதுரையை நீங்கினர். பிறகு குமார கம்பன்னர்கள் 1378ல் மதுரையை மீட்டு, கோவிலில் வழிபாடுகளைத் தொடரச் செய்தனர். அப்போது துவங்கி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மீண்டும் மன்னர்கள் கட்டுப்பாட்டிலேயே மதுரைக் கோவில் இருந்தது. குறிப்பாக திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரையும் மீனாட்சி அம்மன் கோவிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கடைசி அரசி மீனாட்சி சாந்தா சாகிபால் கொல்லப்பட்ட பிறகு உற்சவ மூர்த்திகள் மானாமதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவிலில் அரச ஆதரவின்மையால் வழிபாடுகள் குன்றின. பிறகு கிழக்கிந்திய கம்பனி மதுரையின் நிர்வாகத்தைக் கைப்பற்றியது.

இதற்கிடையில் மதுரையை சில காலம் ஆண்ட யூசுப் கான் கோவில் சொத்துக்களை எடுத்துக்கொண்டு ஆறாயிரம் சக்கரங்களை கோவில் நிர்வாகத்திற்காக வழங்கினார்.
கிழக்கிந்தியக் கம்பெனியைப் பொறுத்தவரை, மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் திருக்கோவில், கூடல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், தென்கரைக் கோவில், திருவேடகம் கோவில், குருவித் துறை கோவில் ஆகிய ஏழு கோவில்களையும் ஹஃப்தா தேவஸ்தானம் என்ற பெயரில் நிர்வகித்தது.

1801ல் மதுரை ஆட்சியராக உர்திஸ் பதவியேற்றார். அப்போது முதல் 1841 வரை மாவட்ட ஆட்சியர் வசமே கோவில் நிர்வாகம் இருந்தது. ஆனால், இந்துக் கோவில்களை ஏன் கிறிஸ்தவர்கள் நிர்வகிக்க வேண்டும் என பாதிரிமார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கவனிக்கவும், இந்துக்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிறிஸ்தவர்களே கிளர்ச்சி செய்தனர். இதனால் கோவில் நிர்வாகம் முத்து செல்லத் தேவர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது ஊழல் புகார்கள் எழவே, தனசிங் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீதும் புகார்கள் எழுந்தன.

அப்போதுதான் முதன்முதலாக கோவில் நிர்வாகம் 1859ல் மதுரை ஆதீனம் எனப்படும் திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் சரியில்லையென புகார்கள் எழுந்தன. இதையடுத்து 1864ல் ஆதினகர்த்தர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இருந்தபோதும் தினசரி நிர்வாகத்தை தாசில்தார் கவனித்துவந்தார்.

ஆனால், இதிலும் நிலைமை சரியில்லாத நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. அவர்கள் முத்து கரு.வெ. அழகப்பச் செட்டியாரை ரிசீவராக வைத்து கோவிலை நிர்வகித்தனர். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசுதான் கோவில் நிர்வாகத்தைக் கவனித்துவந்தது.

1937ல் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுதான் தமிழகத்திலேயே முதன் முறையாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச்சென்றார். தனிநபர்களின் வசம் கோவில் இருந்திருந்தால், குறிப்பாக மதுரை ஆதீனம் வசம் கோவில் இருந்திருந்தால் நித்யானந்தாவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமே தவிர, எளிய மக்கள் உள்ளேயே நுழைந்திருக்க முடியாது.

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீளும் வரலாற்றில் ஆதீனம் கோவிலை நிர்வாகம் செய்தது வெறும் 5 ஆண்டுகள்தான். அதிலும் ஆயிரம் புகார்கள்.

உண்மையில் திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகு, மதுரைக் கோவில் தன் மகோன்னத நிலையை எட்டியிருப்பது இப்போதுதான். ஒரு தீ விபத்தால் எல்லாம் மாறிவிடாது.
நமது திருக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை நமது வாழ்வின் அங்கம். அவற்றை ஒருபோதும் தனிநபர்களால் நிர்வகிக்க முடியாது.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சமூக நீதி செயல்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அறநிலையத் துறையில் பணியாற்றிவருகின்றனர். அறங்காவலர் குழுவில் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் இடம்பெற வேண்டுமென்கிறது சட்டம். இதைப் பலரால் சகிக்க முடியவில்லை. ஆகவேதான் மீண்டும் தங்களது தனியுரிமை கோலோச்ச வேண்டும் என்கிறார்கள்.

"ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்தலிங்கம் - பாலொளியாம்
மத்தனே கூடல் மதுரா புரிஉ மையாள்
அத்தனே ஆலவாயா"

#TNHRCE_TRUTH

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1189304057867986&id=100003652096964

No comments:

Post a Comment