Friday, July 21, 2017

காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

ரவி காளிடஸ்ஸ்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "

கே.ஜீவ பாரதி

*************************
ஆதார நூல்கள்

1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி

*****************

No comments:

Post a Comment