Friday, November 11, 2016

பேரழிவு 2

(கொஞ்சம் பெரிய பதிவு)
உயர்திரு மோடி அவர்களுக்கு,

வணக்கம். வழக்கம் போல உங்களது உடல் மொழியில் கைகால்களை அசைத்துப்பேசி ஐநூறுகள் ஆயிரங்கள் செல்லாது என சொல்லிவிட்டீர்கள். அரசாங்க மருத்துவமனையில் செல்லும் என்று சொன்னீர்கள். பாவம்.. அங்கே இலவசம் என உங்களுக்கு யாரும் சொல்லவில்லை போல. ஒருவேளை குஜராத்தில் வாங்கலாம்.. தமிழ்நாட்டில் இலவசம் தான் மோடி சாப். சரி அது இருக்கட்டும்...

வங்கியில் வாங்கிய கடனை கட்டாத நிறுவனங்கள் என ஒரு நூறு நிறுவனங்களை பட்டியலிட்டார்கள். அதில் முதல் பத்து மட்டுமே  2.5 லட்சம் கோடி வட்டி மட்டுமே கட்டவேண்டும். மீதி தொண்ணூறு நிறுவனத்தின் வட்டி? அசல் எவ்வளவு ? நீங்கள் ஆட்சிக்கு வந்த உடனே வெளிநாட்டு கறுப்பு பணத்தை கொண்டுவாருங்கள்... என ஒராண்டு டைம் கொடுத்தீர்கள். பிறகு அருண்ஜெட்லி யாருமே பதுக்கவில்லை என்றார். பிறகு ஒரு பத்துபேரை நீதிமன்றத்தில் பிடித்து கொடுத்தீர்கள் அதில் கூட உங்கள் நண்பர் அம்பானி இல்லை அதானி இல்லை. அந்த பத்து பேரும் பொய்.  சரி போகட்டும். அதன் பிறகு நீங்களாக வந்து கட்டுங்கள்  ஏதோ ஒரு விமானம் ஏறும் போது சொன்னதாக நினைவு...ஒராண்டு டைம் கொடுத்தாக நினைவு.

அப்படியும் யாரும் கட்டவில்லை .இதற்கு இடையில் உங்கள் ஆகாத இந்தியா ரிசர்வ் வங்கி தலைவர் சொன்னார்.. வாரக்கடனை வாங்கினாலே போதும்.. அதற்கு ஒரு மசோத நிறைவேற்றுங்கள் என  உடனே  கூலிக்கு மாறடிக்கும் ஒரு எம்பியை பேச வைத்தீர்கள். நீங்கள் அது பற்றி பேசவே இல்லை.  இப்படியே கதைகள் ஓடியது. நீங்கள் அவர்களிடம் கடனை கேட்பது.. அவர்கள் உங்களை வைத்து விளம்பரம் செய்வதுமாய நாடகம் ஓடியது.

அப்புறம் கழிவறையில் யோசித்தீர்களே இல்லை விமானத்தில் யோசித்தீர்களோ தெரியவில்லை... பணத்தை செல்லாமல் செய்துவிடலாம் என்ற யோசனை. நல்ல யோசனை. ஆனால் பெரு முதலைகளுக்கு ஆண்டு கணக்கில் கெடு கொடுத்த நீங்கள்.. தேடப்படும் பொருளதார குற்றவளியின் மனைவியை கருணையோடு அனுப்பிய நீங்கள்... இந்த தேசத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கு கொடுத்த கெடு... நான்கு மணி நேரம் மட்டுமே.

இந்த தேசம் இரவு பனிரெண்டு மணி முதல் தொடந்து 36 மணி நேரங்களுக்கு திவாலாக இருந்திருக்கிறது. அதாவது எங்களிடம் இருக்கும் பணம் செல்லாது. உங்களிடம் இருக்கும் பணம் செல்லும். எங்கள் பணத்தை கொடுத்து உங்களிடம் இருந்து பணம் வாங்கவேண்டும். அதையும் எவ்வளவு கொடுக்க வேண்டுமென  நீங்கள் தீர்மானீப்பர்கள். எப்படி கொடுக்க வேண்டுமென நீங்கள் தீர்மானிப்பீர்கள்.

நூறு நிறுவனங்களை தட்டி கேட்க வக்கில்லா மத்தியரசு, அரசியல் அமைப்பு சட்டம், பாரளுமன்றம் எல்லாம் சேர்ந்து ஒரு சாமனியனை...  சீட்டு போட்டு சேகரித்து வைத்திருந்த பணத்தை , திருமணத்திற்கு உண்டியலில் சேகரித்த பணத்தை, அலமாரியில், அடுக்களையில் சேகரித்த பணத்தை புடுங்கி அதை அவனுக்கே பிச்சை போடுகிறது.. அதுவும் இன்சால்மெண்டாகா.. எப்படி கதை ?

தினமும் காலையில் எல்லா ஊர் மார்கெட்டிலும் ஒருவன் நிற்பான். அங்கே வருவான் ஒரு  பழைய விவசாயி.  உங்களை போன்றவர்களால் இன்று வீதியில் எறியப்பட்ட பிழைப்பற்றவன்... அவன் அந்த ஒருவனிடம் 900 ரூ கடன் வாங்கி... மாலைக்குள் கத்தி கத்தி வீதிகளில் சுற்றி சுற்றி எதையாவது விற்பான். பின்னர் மாலை 1000 மாக கொடுத்துவிட்டு வீடுதிரும்புவான்.. அவன் உழைப்புக்கு ஒரு 300 கிடைக்கலாம். நீங்கள் இவனுக்கு கொடுப்பவனை காலி செய்துவிட்டு... வா அம்பானியிடம் அதானியிடம் வாட்ச்மென் வேலை பாரு என்று அழைக்கிறீர்கள். கேட்டால் NIFT ல் பணம் பறிமாறு என்கிறீர்கள்.

நீங்கள் இப்பொழுது என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா... கறுப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை.... என ஒப்புக்கொண்டு மக்களே உங்கள் பணத்தையெல்லாம் கொடுங்கள்.. அதை வைத்து தான் என்னால் சமாளிக்க முடியும் என்பதை வேறுவிதமாய் சொல்லி... என்னிடம் இருக்கும் பணத்தை வாங்க முயற்சிக்கிறீர்கள். வாங்கியும் வீட்டீர்கள்  அதற்கு ஒரு கதை வசனம் தேசபத்தி என சுற்றிவலைக்கிறீர்கள்

உங்கள் பக்தாஸ்க்கு தெரியாது... இது உண்மையான நடவடிக்கை எனில்... முதலில் வாரக்கடன் உள்ள நிறுவனத்தை முற்றுகையிட்டு பணத்தை பறிமுதல் செய்து  வங்கியில் செலுத்தியிருக்கவேண்டும் . ஆனால் பாருங்கள்... அப்படி ஒன்று இருப்பதையே மறந்து இவர்கள் பக்கத்து வீட்டுகாரர் பீரோவில் இருக்கும்  ஒரு லட்சம் சீட்டு பணத்திற்கு வாய பிளக்கபோகிறார்கள்.

அப்புறம் மோடி ஜீ.... நீங்க இன்னும் இரண்டு மாதங்களில் எத்தனை கோடி பெறப்பட்டது என சொல்லவேண்டும்... அதை நீதிமன்றமே கேட்கும்... ஆனால் அப்போதும் நீங்கள் எங்களிடமிருந்து புடுங்கிய பணத்தின் கணக்கை கறுப்பு பணம் சொல்வீர்கள்.. அந்த நூறு பேர் முச்... இது எனக்கு புரிகிறது. ஆனால் பாருங்கள்.. படம் பார்த்து விசிலடிச்ச.. ரசிக கண்மணிகளுக்கு புரியவில்லை.சரி விடுங்கள்.

ஆனாலும் மோடி ஒரு சல்யூட் உங்களுக்கு வைக்கணும். உங்கள ஓட்டுபோட்டு உட்கார வச்சவன.. நான் ஒரு முட்டாள்னு அவன் வாயலே சொல்லவச்சீங்க பார்த்தீங்களா நீங்க கிரேட் பாஸ்.அப்புறம் என்னட்ட மூணு ஐநூறு நோட்டு இருந்துச்சு.. அதான் பேங்கல மாத்திட்டேன். நீங்கள் கறுப்பு பணம் மீட்புனு சொல்லும் போது இதையும் சேர்த்துங்க.

... உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு..அப்படினு ஒரு குறள் இருக்கு. அதற்கு என்ன அர்த்தம்னு  ஏதாச்சும் அமைச்சர்ட்ட கேட்டு வச்சிக்கோங்க.

நன்றி.

No comments:

Post a Comment