Saturday, April 1, 2017

மரண தண்டனை குறித்து...

மரண தண்டனை குறித்து...

1. உலகின் 198 நாடுகளில் 21
நாடுகள் மட்டுமே இன்றளவும்
மரண தண்டனை கொடுப்பதை
சட்ட பூர்வமாய் வைத்துள்ளன.
மூன்றில் இரண்டு நாடுகள் மரண
தண்டனையை ரத்து செய்து விட்டன.

2. மரண தண்டனை சமூக
குற்றங்களைக் குறைப்பதில்லை
என்பதை பல அறிவியல் ஆய்வுகள்
நிரூபிக்கின்றன. இதற்க்கான கள
ஆய்வுகள் மிகப் பெரிய அளவில்
நடத்தப்பட்டுள்ளன. மாறாக
கனடாவில் மரண தண்டனை
நிறுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப்
பின்னர் அதன் குற்ற விழுக்காடு
44 சதவீதம் குறைந்துள்ளது.

3. மரண தண்டனை விதிப்பது
நீதிபதிக்கு நீதிபதி மாறுகிறது.
நீதிமன்றத்துக்கு நீதிமன்றம்
மாறுகிறது. குற்றவாளிக்கு
கிடைத்திருக்கும் வக்கீலின் திறமைக்குத்
தகுந்தும் மாறுகிறது. இந்த மரண
விளையாட்டில் மரண தண்டனை
ஒரு லாட்டரி சீட்டு போல மரணப்
பரிசு சிலருக்குக் கிடைக்கிறது
சிலருக்கு கிடைப்பதில்லை. ஒரே
விதமான குற்றத்திற்கு சிலருக்கு
மரணப் பரிசு, சிலருக்கு வாழ்வு.
இத்தகைய நீதி வழங்களில்
அறிவியல் தன்மை எங்கே உள்ளது?

4. பெரும்பாலான மரண தண்டனைக்
குற்றவாளிகள் இந்தியாவில்
தலித்துகளாகவும், முஸ்லீம்களாகவும்
இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு
அல்ல. இதை தற்செயல் என்று
சொன்னால் அமெரிக்காவில் அதிகம்
மரண தண்டனை பெறுபவர்கள்
கறுப்பர்களாக இருப்பதும் தற்செயல்
என்று சொல்ல முடியுமா?

5. ஒரு மரண தண்டனை
நிறைவேற்றப் பட்டுவிட்டால்
அதை திரும்பவும் மாற்ற முடியாது.
செய்தது செய்தது தான். ஒரு வழிப்
பாதை அது. 2004 இல் டெக்சாசில்
மரண தண்டனை கொடுக்கப்பட்ட
கேமரன் டாட் வில்லின்காம் பின்னர்
நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டார்.
ஒரு வழிப் பாதையில் சென்ற
அவரை திருப்பி அழைத்து வர முடியுமா?

6. மரண தண்டனை எந்த ரூபத்தில்
இருந்தாலும் அது கொடூரமானதே.
சில நாடுகளில் சுட்டும், சில நாடுகளில்
தூக்கில் தொங்கவிட்டும் கொல்கிறார்கள்.
சில இடங்களில் தலையை
வெட்டுகிறார்கள். மிகுந்த மனிதாபிமான
முறையில் கொல்ல 2006 இல் ஏஞ்சல்
நீவாஸ் டைசுக்கு விஷ ஊசி குத்தப்பட்டது.
அவர் சாக 34 நிமிடங்கள் ஆயிற்று. அதுவும்
ஊசி இரண்டு முறை குத்த வேண்டியதாயிற்று.
அந்த சாவின் கொடூரத்தை நினைத்துப் பாருங்கள்.

7. 166 பேரைக் கொன்ற முகமத்
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.
அந்த வழக்கு நடத்த அரசுக்கு ஆன
செலவு 30 கோடி ரூபாய் என்று
அரசு தரப்பு சொல்கிறது. காவல்
துறையின் கணக்குப்படி செலவு 60
கோடி ரூபாய். இரண்டு தரப்புமே
மொத்த செலவை மிகக் குறைத்தே
சொல்கின்றன என்பதை கணிக்க
முடியும். கொல்லப்பட்ட
குடும்பங்களுக்கோ காயம்பட்ட
நபர்களுக்கோ அரசு தந்த இழப்பீடு
இதில் நூற்றில் ஒரு பங்கு கூட
இருக்காது.


8. மரண தண்டனை அதிகம்
கொடுக்கும் முன்னணி நாடுகள்
ஈரான், ஈராக் , சவுதி அரேபிய,
சீனா மற்றும் அமெரிக்கா. இந்த
நாடுகளில் உள்ள அரசுகள்
நியாயமான முறையில் வழக்கு
நடத்தி சரியான குற்றவாளியை
தண்டிக்கும் என்பதை நம்ப முடிகிறதா?

9. கொலம்பியா பல்கலைக் கழக
சட்டப் பேராசிரியர் ஜெப்ரி பாகன்
சொல்கிறார் " மரண தண்டனை
நிறைவேற்றுவதும், காட்சிப்
படுத்துவதும் ஒரு பழி வாங்கும்
உணர்வுக்கு மட்டுமே பயன்படுகின்றன.
உண்மையிலும் அவை குற்றத்தை
தடுப்பதில்லை". 2009 இல் குற்றவியல்
நிபுணர்களிடம் ( CRIMINOLOGISTS)
நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் மரண
தண்டனையால் கொலை குற்றங்கள்
நடப்பது குறையவில்லை என்ற
கருத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

10. மரண தண்டனை நிறைவேற்றுவது
அரசு. அரசு என்பது மக்களாகிய
நாம். மரண தண்டனையை
நிறைவேற்றுவது அரசு தானே
நமக்கென்ன என்று வாளாவிருக்க
முடியாது. நமது செயலற்ற தன்மை
மரண தண்டனையை நாம் ஆதரிப்பது
போல ஆகிவிடும். மிகப் பெரிய
குற்றங்களுக்கு ஜாமீன் இல்லாத ஆயுள்
முழுதும் வெளியில் வர முடியாத
தண்டனையே போதுமானது. குற்றவாளியை
கழுவில் ஏற்றுவது குற்றம்
இழைக்கப்பட்டவருக்கான இழப்பீடு
ஆகாது. வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு,
பொருளியல் பாதுகாப்பு போன்றவற்றை
இழப்பீடாய் தருவது குறித்து அரசு
சிந்திக்க வேண்டும்.

-துணைத் தளபதி மார்கோஸ்

No comments:

Post a Comment