Saturday, April 1, 2017

நோன்பும் நோக்கமும்.

நோன்பும் நோக்கமும்.

நோன்பு அல்லது ஒருபொழுது அல்லது விரதம் என்ற பெயரில் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என மூன்று மதங்களிலுமே மாதம் ஒருமுறையோ அல்லது ஆண்டின் சில நாட்களிலோ சில வேளை உணவை தவிர்க்கும் பழக்கம் இருக்கவே செய்கிறது.

ஓன்றை சட்டத்தின் பேரால் கட்டாயமென திணிப்பதை விட அதை மதம் அல்லது கடவுளோடு பிணைத்து விட்டால் அதை மற்றவர்கள் தானாகவே விரும்பி பின்பற்ற தொடங்கிவிடுவார்கள் என்ற உளவியலின் அடிப்படையிலேயே பல நல்ல பழக்கவழக்கங்களை மதப்பூச்சோடு நமது முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கின்றனர்.

நோன்பு அல்லது விரதமிருப்பதன் நோக்கங்களாக கீழ்க்கண்டவைகள் இருந்திருக்கக்கூடும் என நான் எண்ணுகிறேன்.

1. உடல்நலம் பேணுதல்
2. தேவைகளை குறைத்து மற்றவருக்கு உதவுதல்
3. வாழ்வின் இன்ப துன்பங்களை சமமாக ஏற்கப் பழகுதல்

ஆனால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் ஒருவனிடம் நீ கடவுளின் பெயரால் விரதமிருக்க வேண்டுமென்பது அறிவீனமில்லையா? சிறு குழந்தைகள் கூட சாப்பிடாமல் பசியால் துன்புற்று தன்னை நினைக்கவேண்டுமென்பது கடவுள் எனப்படுபவரின் விருப்பமாக இருக்க முடியுமா?

ஐஎஸ் தீவிரவாதிகள் இரு சிறுவர்களை நோன்பில்லாதக் காரணத்தால் கொன்றார்கள் என்பதை நினைக்கும்போது புத்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தனது பூஜைக்கு இடைஞ்சலாக இருந்த பூனை ஒன்றை கட்டிப்போட்டுவிட்டு தலைமை துறவி பூஜை செய்வாராம். சில நாட்களில் அந்த தலைமைத் துறவி இறந்துவிட்டார். பூனையும் இறந்துவிட்டது. அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வந்த துறவி எங்கோ தேடி திரிந்து ஒரு பூனையை கொண்டுவந்துதூணில் கட்டிப்போட்டுவிட்டு பின் பூஜை செய்தாராம்.

இப்படித்தான் இருக்கிறது மத பழமைவாதிகளின் போக்கு. இதற்கு தான் பெரியார்:
"யாரோ சொன்னார்கள் அல்லது வேதம் சொல்லிற்று என்பதற்காக அல்ல, ஏன் எதற்கு என்று எதையும் கேள்வி கேள், உனக்கு சரி எனப் படுவதை மட்டுமே ஏற்றுக்கொள்" - என்றார்.

மண்டையில் இருக்கும் புத்தியை கடவுள் எனும் கான்க்ரீட் போட்டு மொத்தமாய் அடைத்து விட்டவர்களிடம் சிந்திக்க சொல்லி கூவி கூவி நமது நா தான் வறண்டுப் போகிறது.

No comments:

Post a Comment