Saturday, April 1, 2017

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவின் முழுமொத்த ஆளுமை

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவின் முழுமொத்த ஆளுமையும் அவரது திருமண வயதில் மட்டுமே மையம் கொண்டுள்ளது என்று கருதுபவர்கள் உண்மையில் அன்னையவர்களுக்கோ நபிகளாருக்கோ கண்ணியம் செய்யவில்லை.மாறாக,ஒரு மாபெரும் அறிவு மற்றும் அரசியல் ஆளுமையை தமது குறுக்கல்வாத கண்ணோட்டத்தில் அணுகி,ஒரு யுகப் புரட்சியின் தூலமான குறியீட்டையே சிதைத்து விட்டார்கள் என்றுதான் கொள்ள முடியும். வரலாற்று அறிவுப்புகளின் மீதும் நபி மரபுகளின் மீது தமது மட்டையடி பகுத்தறிவுவாத பார்வையினை ஏற்றிப் பார்பவர்கள், தமது பகுத்தறிவு ஒரு எல்லைக்குட்பட்டது,அதனால் அனைத்து உலகியல் விவகாரங்களையும் சிந்தாமல்.சிதறாமல் புரிந்து கொள்வது கடினம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

முறையற்ற விமர்சனங்களில் இருந்து இறைதூதரையோ அல்லது இறுதித் தூதினையோ பாதுக்காக்க முனைபவர்கள், இஸ்லாம் எனும் தெய்வீகநெறி கால,இடப் பரிமாணங்களை கடந்த ஒரு சமூகத் திட்டமாக இருந்தாலும் ,அந்த வாழ்வியல் நெறி உலகின் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,காலப் பிரிவில்தான் இறங்க முடியும்,அதுவே அல்லாஹ் பௌதீக உலகில் வைத்துள்ள நியதிகளுக்கு உட்பட்ட வகையிலான சாத்தியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தாரிகுல் பிஷ்ரியின் வார்த்தைகளில் சொல்வதனால் ஏழாம் நூற்றாண்டு மக்கத்து சமூகம் இஸ்லாத்தை ஏந்திக் கொண்ட ஒரு ''காலப் பாத்திரம்''. இறைதூதர் ஒரு மனிதர் என்ற வகையிலும் ,அல்லாஹ்வின் தூதர் என்ற வகையிலும் வாழ்வின் பல்வேறு பாத்திரங்களையும் ஏற்று வாழ்ந்த ஒருவர். எமது தகைமை பெற்ற உலமாவில் பலர் இதனை எமக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்.எனவே இஸ்லாத்தின் கோட்பாடுகளை புரிந்துகொள்ள,இஸ்லாத்தின் மூலாதாரங்கள் பற்றிய பனுவல்கள் மட்டுமன்றி, நபிகளார் இஸ்லாம் எனும் இயக்கத்தை கொண்டு நடாத்திய சமூக சூழல் குறித்த அறிவுப் பின்னணியும் எமக்கு அவசியம்...

ரசூல்(ஸல்) அவர்களின் மகத்துவம் காப்பதற்கு ஒருவருக்கு நல்லெண்ணம் மட்டுமே அடிப்படை தகுதியாகிவிடாது . கிரேக்க தத்துவத்தின் பாதிப்பில் இருந்து இஸ்லாத்தை காக்க முனைந்த முஹ்தசிலாக்களின் நல்லெண்ணம் மட்டும் அவர்களை வழிபிறழ்வில் இருந்து காத்திடவில்லை.ஹதீஸ்களை புனைந்துரைத்தவர்களின் நோக்கங்களில் ஒன்று மக்களை வணக்கவழிபாடுகளில் ஆர்வம் கொள்ள வைப்பது.கவாரிஜ்களின் நல்லெண்ணம் அவர்களை கலீபா அலி இப்னு அபுதாலிப்(ரழி) அவர்களின் கொலைக்குதான் இட்டுச் சென்றது.இப்படி பல்வேறு ''நல்லெண்ணம்'' கொண்டவர்களின் இஸ்லாத்துக்கு ஊறுவிளைவித்த செயல்பாடுகளை விரித்துக்கொண்டே செல்லலாம்.இஸ்லாம் குறித்த முறைப்படியான, நேர்த்தியான வாசிப்போ,நோக்கோ அற்றவர்கள் இந்த இஸ்லாத்தின் தூதிற்கு குந்தகம் மட்டுமே விளைவிப்பார்கள்.ஒரு நூலோ அல்லது செயல்பாடோ இறைதூதரின் கண்ணியம் காக்க முனைகின்றது என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே அதற்கு ஒரு ஏற்பினை வழங்கிட முடியாது.அல்லாஹ்வின் தூதர் அபூதர் அல்-கிப்பாரிக்கு சில பொறுப்புகளை வழங்க மறுத்ததன் பின்னணி நல்லெண்ணம் குறித்த விடயதானம் அல்ல.மாறாக அபூதர்(ரழி), அந்த குறிப்பிட்ட பொறுப்பினை சுமக்க தகுதியற்றவர் என்பதே காரணம். நீங்கள் அபூதர் அல்-கிபாரி(ரழி) அவர்களைவிட தூய எண்ணம் கொண்டவர்கள் என்றால்,நினைபதையெல்லம் செய்து கொள்ளுங்கள்........!

No comments:

Post a Comment